Friday, October 28, 2011

தமிழக அரசு ஏன் தடை செய்யக்கூடாது...




தினமணியில் படித்த தலையங்கம்.
ஏனோ உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள தோன்றியது.



அண்மையில் கேரள அரசு வெளியிட்ட ஒரு புள்ளிவிவரம் அம்மாநில மக்களின் உணவுப்பழக்கம் தொடர்பானது. அம்மாநிலத்தில் 80 விழுக்காடு மக்கள் அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் என்கிற புள்ளிவிவரம் நமக்குப் புதியதல்ல. ஆனால், அந்தப் புள்ளிவிவரம் தரும் தகவல்கள் தமிழர்களுக்கு மகிழ்ச்சி, அதிர்ச்சி இரண்டையும் சேர்த்துத் தருகின்றது.
கேரள மாநில மக்களுக்கு ஒரு நாளைக்கு மொத்தம் 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. இதில் 45 விழுக்காடு இறைச்சி கறிக்கோழி வகை. கறிக்கோழிக்காக மட்டும் கேரள மக்கள் 2009-10 நிதியாண்டில் ரூ. 2,844 கோடி செலவிட்டுள்ளார்கள். இதில் ரூ. 1,752 கோடி வெளிமாநில கறிக்கோழிகளுக்காகச் செலவிட்டது. அதாவது இதில் 90 விழுக்காடு கறிக்கோழி வணிகம் தமிழ்நாட்டுக்குரியது என்பதால், இவ்வளவு பெரிய வணிக வாய்ப்பை கேரளத்தின் மூலம் தமிழர்கள் பெறுகிறார்கள் என்கிற வகையில் மகிழ்ச்சி.
அடுத்ததாக, அதிர்ச்சியைத் தரும் தகவல் இதுதான்: கேரள மக்களின் ஒரு நாள் தேவையான 5,034 டன் இறைச்சியில் அந்த மாநிலத்திலிருந்து கிடைப்பது 264 டன் மட்டுமே. மீதி இறைச்சி (மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கறிக்கோழி) ஆகியவற்றில், கேரள மக்களின் பிரியமான அசைவ உணவான மாட்டிறைச்சி பெரும்பகுதியாக உள்ளது. இந்த மாட்டிறைச்சித் தேவையை அண்டை மாநிலங்கள்தான் முழுமையாகப் பூர்த்தி செய்கின்றன.
2009-10 நிதியாண்டில் அண்டை மாநிலத்திலிருந்து 61 லட்சம் மாடுகள் சுங்கச்சாவடிகள் வழியாக முறையாகவும், 18 லட்சம் மாடுகள் கடத்தப்பட்டும் கொண்டுவரப்பட்டன என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 79 லட்சம் மாடுகள் கேரள மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
கர்நாடக மாநிலத்தில் பல ஆண்டுகளாகவே, அடிமாடுகள் விற்பனைக்குத் தடை நிலவுகின்ற காரணத்தால், 90 விழுக்காடு மாடுகள் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குச் செல்கின்றன என்பதும், தமிழ்நாட்டில் மாடுகள் எண்ணிக்கை அண்மையில் வேகமாகக் குறையத் தொடங்கிவிட்டது என்பதும்தான் அதிர்ச்சியைத் தருகிறது. இப்போது தமிழ்நாட்டில் மாடுகளின் எண்ணிக்கை என்ன என்கிற சரியான கணக்கெடுப்பு தமிழக அரசிடம் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.
""கால்நடைகள், மீன்வளர்ப்பு, வேளாண்மை போன்ற துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும்'' என்று ஆகஸ்ட் 15, 2011-ம் தேதி தமிழக முதல்வர் கோட்டையில் கொடியேற்றி வைத்துப் பேசியதை மேற்கோள்காட்டித் தொடங்கும் கால்நடைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 2007-ம் கணக்கெடுப்பில் 111.89 லட்சம் மாடுகள் (2004 கணக்கெடுப்பைவிட 22 விழுக்காடு அதிகம்) 20 லட்சம் எருமைகள் (2004 கணக்கெடுப்பைவிட 21 விழுக்காடு அதிகம்) என்று புள்ளிவிவரம் தருகிறது. ஆனால், இப்போது கால்நடைகளின் எண்ணிக்கை, குறிப்பாக மாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றால், 2007-க்குப் பிறகு தமிழ்நாட்டில் கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கான தகவல் இல்லை என்கிற பதில்தான் கிடைக்கிறது.
கர்நாடக மாநிலத்திலிருந்து கேரளத்துக்கு அதிக அளவில் மாடுகள் கடத்தப்படுகின்றன என்கிற பிரச்னை எழுந்தபோது, அந்த மாநில அரசு எடுத்த முதல் நடவடிக்கை அடிமாடுகள் அண்டை மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதற்குத் தடை விதித்ததுதான். தற்போது கர்நாடக மாநிலத்திலிருந்து கள்ளத்தனமாக மாடுகள் கடத்தப்படலாமேயொழிய, சட்டப்படி கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால், கேரளத்தின் மாட்டிறைச்சி தேவை முழுக்க முழுக்கத் தமிழகத்தைச் சார்ந்துள்ளது. தமிழக மக்களோ விவசாயத்துக்கு மாடுகளை வளர்க்கும் வழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்து, தற்போது இருக்கின்ற மாடுகளையும் அதிக விலை கிடைக்கும் ஒரே காரணத்தால் அடிமாட்டு வியாபாரிகளுக்கு விற்று வருகின்றனர்.
பால் வணிகத்துக்காக கறவை மாடுகளை மட்டும் வைத்துக்கொண்டு, காளைகள் அனைத்தையும் கேரளத்துக்கு அனுப்பும் போக்கு எத்தகைய பிரச்னையைத் தமிழகத்துக்கு நாளை கொண்டு வந்து சேர்க்கும் என்பது தெரியவில்லை. தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள ஏழைகளுக்கு மாடு, ஆடு வழங்கும் திட்டத்தில், மாடு என்பது கறவை மாடு என்பதாகவே இருக்கிறது. கால்நடை மருத்துவமனைகளில் உறைவிந்து இருப்பதால், காளைகளே தேவையில்லை என்ற நிலைமையை நோக்கித் தமிழகம் செல்லுமேயானால் இதன் எதிர்வினைகள், மாடுகளுக்கான புதுப்புது நோய்கள்போல என்னவெல்லாம் நேருமோ யார் அறிவார்?
ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை.
ஒவ்வொரு உயிரினத்துக்கும் அதன் வாழ்விடம், உணவு, இனப்பெருக்க அளவு போன்றவற்றை இயற்கை சமநிலையில் வைத்திருக்கிறது. இதில் குறைவு அல்லது மிகை இரண்டுமே பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதிக்கும். இதனால், பிற உயிரினங்களைவிட எதனால் பாதிப்பு என்பதை உணர்ந்து துடிதுடித்து மடிவது மனிதனாகத்தான் இருக்கும்.
நம் பாரம்பரிய மாடுகளான, காங்கேயம், மணப்பாறை மாடுகளை ஏறக்குறைய நாம் இழந்துவிட்டோம் என்கின்ற நிலையில், தற்போது காளை மாடுகள் அனைத்தையும் கேரள மாநிலத்தின் இறைச்சித் தேவைக்காக இழப்பது சரியான செயல்தானா? ஏன் தமிழக அரசும், கர்நாடக அரசைப்போல அடிமாடுகள் விற்பனைக்குத் தடை விதிக்கக்கூடாது?





12 comments:

purushothaman.p said...

//ஆடுகள், மாடுகள், கோழிகள் வெறும் இறைச்சிக்காக வளர்க்கப்படும்போது இவற்றின் உணவுக்காக அழிக்கப்படும் தாவரங்கள், புவிவெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், இறைச்சி உணவுத் தேவை குறையக் குறைய புவிவெப்ப அபாயமும் குறையும் என்று இயற்கை ஆர்வலர்கள் சொல்லிக்கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில் யாருமே இல்லை.//

இந்த டுபாக்கூர் கான்செப்ட்டை கொடுத்த ஒலகமகா சுற்று சூழல் விஞ்ஞானி யாருங்கோவ்? ஏனெனில் உலகின் 90%மான தாவர வகைகள் தாவரங்களை மனிதனாலோ, கால்நடைகளாலோ உண்ண இயலாதவைகளே என்னும் போது இது எவ்வாறு சாத்தியமாகும்?

சைவ உணவு Vs அசைவ உணவு என்பதில் சைவ உணவுக்காரர்கள் கிளப்பிவிடும் டுபாக்கூர் கதை இது...

Robin said...

தவறான தகவல்கள் நிறைந்த பதிவு!

கோழியையும் ஆட்டையும் உணவாக உண்ணும்போது மாட்டை உண்பதில் என்ன தவறு?

அருள் said...

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் என்கிற கோரிக்கையுடன் மதவாதம் கலக்கப்பட்டுள்ளது. மாட்டு மாமிச உணவால் சுற்றுச்சூழல் பதிக்கும் என்கிற கருத்து இந்திய சூழலுக்கு பொருந்தாது. மேலைநாட்டினர் தொழிற்சாலை மாடு வளர்ப்பு முறைக்கு மிக அதிக ஆற்றலையும் இடுபொருட்களையும் இரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். அதுவே சுற்றுச்சூழல் பதிப்பிற்கு காரணமாகும்.

உண்மையில், இயற்கை முறையில் வளர்க்கப்படும் ஆடு, கோழி, மாட்டுக்கறியை உண்பதால் சுற்றுச்சூழலுக்கு தீமை இல்லை.

http://www.worldwatch.org/global-meat-production-and-consumption-continue-rise

SURYAJEEVA said...

உங்கள் நோக்கம் உயரிய நோக்கமே, ஆனால் தடை சொல்ல வேண்டும் என்றால் அனைத்து இறைச்சிக்கும் தடை என்று நீங்கள் சொல்லி இருந்தீர்களே ஆனால் நான் வரவேற்றிருப்பேன்... ஆனால் நீங்கள் மாடு மட்டும் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது... மொத்த மாமிச உணவையும் திருவள்ளுவர் வழி படி தடை செய்கிறோம் என்று சொல்ல சொல்லலாமே

Karthikeyan Rajendran said...

சபாஷ், கோவிலுக்கு காணிக்கையாக கொடுக்கும் மாடுகும் கூட சமயத்தில் இது போல விற்க படுகிறது..........

நிவாஸ் said...

மாடுகளை உண்ணலாம் என்றால் மனிதர்களையும் உண்ணலாமா?

மட்டை உண்ணும் போது மனிதனை ஏன் உண்ணக் கூடாது என்பதுதான் என் கேள்வி?

தமிழன் மாடுகளை உண்ணக்கூடாது என்பது மதத்தின் அடிப்படியிலோ அல்லது சூழ்நிலை பதிப்பு என்ற கதையிலோ அல்ல

தமிழனைப் பொறுத்தவரை விவசாயம் என்பது உயிர், அதன் உயிர்நாடிதான் மாடுகள், ஒரு காலகட்டத்தில் மாடுகள் குடும்ப நபரைப் போல் பாவிக்கப்பட்டதுண்டு.

அவை இறந்தால் துக்கம் அனுசரிப்பதும், முறையாக சடங்குகள் செய்து புதைப்பதும் தமிழர் பண்பாடு

அதற்க்காகத்தான் மட்டுப் பொங்கல் என்ற ஒன்றை உருவாக்கி அவைகளை அழுகுபடுத்தி நன்றி சொல்லி கொண்டாடினான் தமிழன்

இதுவே தமிழர் மாடுகளை உண்ணாதர்க்கு முக்கிய காரணமே அன்றி வேறெதுவும் இல்லை

இக்காலகட்டத்தில் விவசாயமும் இல்லை, பெரும்பாலான வீடுகளில் மாட்டை பயன்படுத்துவதும் இல்லை, மட்டுப் பொங்கல் மட்டுமே உள்ளது அதுவும் இந்த நாகரிக மோகத்தில் இன்னும் எத்தனைக் காலம் நிலைத்திருக்குமோ தெரியவில்லை

வாழ்க தமிழர் பண்பாடு

அருள் said...

நிவாஸ் said...

//இதுவே தமிழர் மாடுகளை உண்ணாதர்க்கு முக்கிய காரணமே அன்றி வேறெதுவும் இல்லை//

என்னது??? தமிழன் மாட்டுக்கறி சாப்பிட்டது இல்லையா? மாட்டுக்கறி உண்பது தமிழ் பண்பாட்டிற்கு எதிரானதா?

உங்கள் கட்டுக்கதைக்கு எல்லையே இல்லையா?

நிவாஸ் said...

@அருள்

அன்பு சகோ,

சாப்பிட்டதில்லை என்றோ? சாப்பிடுவதில்லை என்றோ நான் சொல்லவில்லையே?

ஏன் சாப்பிடக் கூடாது என்பதற்கு மட்டுமே காரணம் சொன்னேன்

நீங்கள் எந்த பகுதியை சார்ந்தவரோ எனக்கு நிச்சயமாக தெரியாது, நீங்கள் எதற்கு உன்ன வேண்டும் என்ற கருத்தில் நிற்கிறீர்கள் என்றும் எனக்கு தெரியவில்லை

ஆனாலும் எங்களது கிராமப் புறங்களுக்கு வந்து அடிமாட்டிர்க்கு வேண்டும் என்று கேட்கச் சொல்லுங்கள் அல்லது கேட்டுப் பாருங்கள் தெரியும்.

நாங்கள் தமிழர் என்று எங்களுக்கு நம்பிக்கை உண்டு

உங்களுக்கு எப்படி?

அருள் said...

நிவாஸ் said...

//நாங்கள் தமிழர் என்று எங்களுக்கு நம்பிக்கை உண்டு. உங்களுக்கு எப்படி?//

நான் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவன். இப்போது சென்னையில் இருக்கிறேன். இரண்டு ஊர்களிலுமே மாட்டுக்கறி கடைகள் உள்ளன. மாட்டுக்கறி பிரியாணியும் உண்டு. இதனை சாப்பிடுகிறவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்.

மாட்டுக்கறி சாப்பிடுவது தமிழ் பண்பாட்டிற்கோ, மரபிற்கோ எதிரானது என்று எப்படி கூறுகிறீர்கள்? அப்படியானால் மாட்டுக்கறி உண்பவர்கள் தமிழர்கள் இல்லையா?

மாட்டுக்கறி உண்பது தவறு என்றால் - ஆடு, கோழி, மீன் தின்பது தவறில்லையா? அவையும் தவறென்றால் - அசைவ உணவு உண்பவர்கள் எவரும் தமிழர் இல்லை என்று கூறுவீர்களா?

அருள் said...

நிவாஸ் said...

// //ஒரு காலகட்டத்தில் மாடுகள் குடும்ப நபரைப் போல் பாவிக்கப்பட்டதுண்டு. அவை இறந்தால் துக்கம் அனுசரிப்பதும், முறையாக சடங்குகள் செய்து புதைப்பதும் தமிழர் பண்பாடு // //

நீங்கள் சொல்கிற இந்த தகவல்கள் பசுமாட்டிற்கு மட்டுமா? அல்லது எருமை மாட்டிற்கும் பொருந்துமா?

நிவாஸ் said...

//நான் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவன். இப்போது சென்னையில் இருக்கிறேன். இரண்டு ஊர்களிலுமே மாட்டுக்கறி கடைகள் உள்ளன. மாட்டுக்கறி பிரியாணியும் உண்டு. இதனை சாப்பிடுகிறவர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்.//

நானும் அதே பகுதியை சேர்ந்தவன்தான், கடி இருக்கு என்பதற்காக அனைத்து தமிழர்களும் மாட்டை உண்பார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்.

தமிழ் பேசுபவர்கள் அனைவரும் தமிழர் என்றால், ஆங்கிலம் பேசும் அனைவரும் ஆங்கிலேயரே என்பது போல் பொருளாகுமே

சிலர் மதக் கோட்பாடுகளின் அடிப்படியிலும் உண்ணுகின்றனர், தவிர்க்கின்றனர், அதை எப்படி நாம் அனைவரும் உண்கிறார்கள் என்று ஏற்றுக் கொள்ளமுடியும்

இதை அறியாத ஒரு சிலர் உண்கிறார்கள் என்பதற்காக அது எப்படி அனைவருக்கும் பொருந்தம். ஆயுத பூஜை இந்துக்கள் பண்டிகை ஆனால் எந்த மத வேறுபாடும் பார்க்காமல் முஸ்லீம்கள் ஆனாலும் சரி, கிறிஸ்த்துவர் ஆனாலும் சரி அனைவரும் இதை அனுமதிக்கிறார்கள் அவர்கள் எல்லோரும் இந்துக்களா என்ன?


சமயத்தால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்தான் அதற்காக மனிதனை சமைத்து சாப்பிட முடியுமா? தாய்லாந்தில் மனிதகறிகளை இறந்து பிறந்த குழந்தைகளை உன்கிறார்கலாம், பிலிப்பைனில் பூனைக்கறியும், நாய்க் கறியும் பிரபலம், அதற்காக அவர்கள் மனிதரில்லையா?

பண்ணப்டு வகுக்கப் பட்டது, அதை சிலர் மாற்றி அமைத்துக் கொண்டதற்காக அவர்கள் அந்த இனத்தை செய்ந்தவர் இல்லை என்றாகிவிடாது

அதேவேளை அவர்கள் புதிதாக ஏற்றுக் கொண்ட பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் அந்த இனத்தின் உண்மையான பண்பாடு என்றும் சொல்லிவிட முடியாது.

எங்கள் வீட்டில் நாங்கள் வளர்த்தது பசு, எருமை, காளை மூன்றும் தான், எங்கள் கிராமங்களில் இன்னமும் அவைகள் குடும்ப நபர்கல்போல்தான் பாவிக்கபடும், சூழ்நிலை காரணமாக அவற்றை பிரிய நேரும்போது வரும் வலி அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே தெரியும்.

இந்துக்களை இருந்து மதம் மாறியவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை, அனால் அது தமிழர் பண்பாடு என்பாது பலருக்கு தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை அதற்காக அவர்களை தமிழர் இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?

தமிழை பேசுபவர் என்பதற்காக தமிழராகிவிட முடியாது, பழக்க வழக்கங்களை மாற்றிக் கொண்டர்கள் என்பதற்காக தமிழர் இல்லை என்றும் சொல்லிவிடமுடியாது. அதற்க்க தமிழர் பண்பாட்டை இது இல்லை என்று ஒத்துக்கொள்ளவும் முடியாது

நீங்கள் கேட்க்கும் கேள்விகள் பல எப்படி இருக்கிறது தெரியுமா

மாடு என்பது அசைவம்தானே அது தரும் பால் எப்படி சைவமாகும் என்பதுபோல் உள்ளது. அதை நீங்கள் எப்படி நினைத்து குடிக்கிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்தது பாலைப் பொறுத்தது அல்ல

அருள் said...

நிவாஸ் said...

//அனைத்து தமிழர்களும் மாட்டை உண்பார்கள் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்//

அனைத்து தமிழர்களும் மாட்டை உண்பார்கள் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.

மாட்டுக்கறி சாப்பிடும் தமிழர்களும் இருக்கிறார்கள், மாட்டுக்கறி சாப்பிடாத தமிழர்களும் இருக்கிறார்கள். பன்றிக்கறி சாப்பிடும் தமிழர்களும் இருக்கிறார்கள், பன்றிக்கறி சாப்பிடாத தமிழர்களும் இருக்கிறார்கள். இதுபோல எல்லா கறியையும் கூறலாம். இதுதான் உண்மை.

காட்டு மான்கறி சாப்பிடுவது சட்டப்படி குற்றம். மாட்டுக்கறிக்கு அப்படி ஒரு நிலை இல்லை.

இதை சாப்பிடலாம், இதை சாப்பிடக்கூடாது - என்கிற அடிப்படையில் தமிழர்களை அடையாளப்படுத்த முடியாது.

எந்த ஒரு இசுலாமியரும் பன்றிக்கறி சாப்பிடமாட்டார். அதுபோல தமிழர்களை மாட்டுக்கறி சாப்பிடாத சமூகம் என்றோ, மாட்டுக்கறி விலக்கப்பட்ட சமூகம் என்றோ கூற முடியாது என்பதே எனது கருத்து.

நான் ஒருபோதும் மாட்டுக்கறியோ, பன்றிக்கறியோ சாப்பிட்டது இல்லை. இதற்கு தமிழ் பண்பாட்டுக் காரணம் எதுவும் இல்லை. சில தமிழர்கள் நாமம் போடுகிறார்கள், சில தமிழர்கள் பட்டை போடுகிறார்கள், சில தமிழர்கள் சிலுவை அணிகிறார்கள் - இதை எல்லாம் எப்படி தமிழ் அடையாளத்தோடு சேர்க்க முடியாதோ அதுபோல மாட்டுக்கறியை தமிழர் பண்பாட்டுடன் சேர்க்க முடியாது.