Monday, August 6, 2018

நாடகப்பணியில் நான் - 22

எந்த ஒரு செயலுக்கும் ஆரம்பம் என்று ஒன்று இருக்கும் போது முடிவு என்று ஒன்றும் இருக்கும் அல்லவா?

அப்படி எனது சபாவும் மூடு விழாவினைக் கண்டது.

அது எப்படி என்று பார்ப்போம்...

அந்தச் சமயத்தில் ஜேசுதாஸ் அவர்களின் மெல்லிசை நிகழ்ச்சி பரவலாக எல்லா இடங்களிலும் , எல்லா சபாக்களிலும் நடந்து வந்தது.மக்கள் அனைவரின் ஆதரவும் அமோகமாக இருந்தது அந்நிகழ்ச்சிகளுக்கு.

நானும் திரு டி வி கோபாலகிருஷ்ணன் மூலமாக ஜேசுதாஸின் மெல்லிசை நிகழ்ச்சியை அம்பத்தூரில் நடத்த தேதி வாங்கினேன்.

அம்பத்தூரில் நாடகங்கள் நடத்திவந்த அரங்கின் மேடையும், கொள்ளளவும் குறைவாக இருந்ததாலும், ஜேசுதாஸிற்கு அந்த நாளிலேயே 15000 சன்மானமாய் இருந்ததாலும், வெளியே திறந்தவெளி ஒன்றை அடைத்து, மேடையும் அமைத்து அதில் நிகழ்ச்சி நடத்தத் தீர்மானித்தேன்.இந்நிகழ்ச்சி மூலம் சபாவின் பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம் என எண்ணினேன்

எதிர்பார்த்ததிற்கு மேல் செலவு.டிக்கெட்டுகளும் விற்க ஆரம்பித்தேன்.பெரிய போஸ்டர்கள் அம்பத்தூரை அலங்கரித்தன.

அப்போதுதான்..நாம் நினைப்பதெல்லாம் நடப்பது இல்லை என இயற்கை எனக்கு உணர்த்தியது.

ஒரு அரசியல்கட்சி மலையாளிகள் என்ற பிரச்னையை அப்போது  கையில் எடுத்தது..அதற்குஜேசுதாசின் நிகழ்ச்சிகளும் விதி விலக்கல்ல.அவர் நிகழ்ச்சிகளில் விஷமிகள் புகுந்து கலவரத்தை ஏற்படுத்தினர்.

இதனால் ஜேசுதாஸ் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை கேன்சல் செய்தார்.அதில் நானும் ஒருவன்.

இதன் மூலம் சபாவிற்கு மாபெரும் பின்னடைவு.சேமிப்பு எல்லாம் போயிற்று.தொடர்ந்து சில மாதங்களில் சபா நடத்தமுடியாமல் போயிற்று.

ஒருநாள்..

சபா நிர்வாகிகள் கூடி சபாவின் மூடுவிழாவினைத் தீர்மானித்தோம்.

எந்த ஒரு நேரத்திலும் அகலக்கால் வைக்கக்கூடாது என அந்நிகழ்ச்சி எனக்கு ஒரு படிப்பினையைத் தந்தது.

(தொடரும்)  

No comments: