Wednesday, August 15, 2018

நாடகப்பணியில் நான் - 29

எனது சௌம்யா குழுவின் நான்காவது நாடகம் ஒரு "trend setter"  என பத்திரிகைகளாலும், சபாக்களாலும் பாராட்டப்பட்டது,
அப்படி என்ன நாடகத்தில் என் கிறீர்களா?

இந்நாடகத்தின் கதையினையே சுருக்கமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன்..

மணி...ஒரு மேல்வகுப்பினைச் சேர்ந்தவன்.மருத்துவம் படிக்க வேண்டும் என்ற லட்சியத்தை உடையவன்.ஆனால், அதிக மதிப்பெண்கள் பெற்றும் , அவன் சார்ந்த ஜாதியால் அவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அவன் தன் பெயரை திராவிடமணி என் மாற்றிக்கொண்டு ராணுவத்தில் சேர்ந்துவிடுகிறான்.
அவனுடன், இந்திரஜித், நரசையா,அஞ்சையா,ஐசக் என்பவர்கள் ராணுவ வீரர்களாக உள்ளனர்.இந்திரஜித்தும், திராவிடமணியும் முன்னமேயே நண்பர்கள்.ஆனால் திராவிடமணி விரும்பிய ஒரு பெண்ணினால் விரோதிகளாக ஆயினர்.

ஆனால் ராணுவத்தில் மேஜர் திராவிடமணியின் கீழ் இந்திரஜித் வேலை செய்ய நேரிடுகிறது.

அச்சமயம் அவர் தங்கியுள்ள பகுதியில் ஒரு பெண் வருகிறாள்.அவள் பார்க்க திராவிடமணியின் காதலி போலவே தெரிகிறாள்.ஆனால், இந்திரஜித் அந்தப் பெண்ணை நம்பவில்லை.

ஆனால், திராவிடமணி அப்பெண்ணை நம்புகிறார்.அதனால் ராணுவ ரகசியங்களை அவளிடம் கூறுகிறார்.அப்பெண் அந்த ரகசியங்களுடன் ஹெலிகாப்டரில் பறக்கிறாள்.அவள் பாகிஸ்தான் உளவாளி.

அவளிடம் ரகசியங்களைக் கூறியதால், திராவிடமணி எவ்வளவு கூறியும் கேட்காது இந்திரஜித் அவரை சுட்டுவிடுகிறான். அதே சமயம் அந்தப் பெண் சென்ற ஹெலிகாப்டர் வானில் வெடிக்கிறது.

திராவிடமணி அப்பெண் பாகிஸ்தான் உளவாளி என்று தெரிந்துதான் அந்த ஹெலிகாப்டரில் பாம் செட் செய்துள்ளார் என இந்திரஜித்திற்குத் தெரியவர இந்திரஜித் மனம் வருந்துகிறான்.

அவர்கள் பெயர்களைப் பாருங்கள்..

இந்திரஜித், நரசையா,திராவிடமணி.ஐசக், அஞ்சையா
அவர்கள் பெயரின் ஆங்கில முதல் எழுத்துகள் I N D I A

பரத் எழுதியிருந்த இந்நாடகத்தின் பெயர் "உயிருள்ள இறந்த காலங்கள்"

இந்நாடகம் பற்றி மேலும் விவரங்கள் அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: