Sunday, August 12, 2018

நாடகப்பணியில் நான் - 26

"புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம் வெற்றி நாடகமா? என சொல்வதாகச் சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது சொல்கிறேன் படியுங்கள்...

நாடகம் பார்த்த அனைவருமே நாடகத்தைப் பாராட்டினர்.இம்முறை கோபு பாபு இசை.லைட்டிங்க் கோம்ஸ், அரங்க அமைப்பு எக்ஸலன்ட் மணி.மணிபாரதி,ஷங்கர், நாராயணன், ராம்கி, கமலா காமேஷ் உட்பட அனைவரின் அற்புத நடிப்பு.

ஆனால்..உடனடியாக தேதிகள் வரவில்லை.

நாடகம் பார்த்த கோமல்சுவாமிநாதன் அவர்கள் என்னிடம் "ராதா! இந்த நாடகத்திற்கு ஆதரவு இல்லையெனில் நீ இனிமேல் நாடகமே போடவேண்டாம்' என்றார் ஆதங்கத்துடன்.

டி எஸ் சேஷாத்திரி அவர்கள் நாடகக்குழு ஆரம்பித்ததும் உதவி செய்தார் என முன்னமே சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் செய்த உதவி...அவர் நாடகம் நடந்த சபாக்களில் எல்லாம் என் நாடகத்தைப் புகழ்ந்து கூறி ..ஆதரவு அளிக்கச் சொன்னார்.கிட்டத்தட்ட் ஒரு பி ஆர் வோ வேலையைச் செய்தார்

இந்நிலையில், குமுதம் அலுவலகத்தில் ஜ ரா சுந்தரேசன் அவர்களை சந்தித்து நாட்கத்தை விமரிசிக்க முடியுமா? என்றேன்.அவர் நாடகத்தில் வரும் ஜோக் ஒன்றைக் கூறு..என்றார்.சொன்னேன்,.

அடுத்த இதழ் குமுதத்தில் அதை வெளியிட்டு , "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகத்திலிருந்து என எழுதினார்.

"இதயம் பேசுகிறது" இதழில் துணை ஆசிரியராய் இருந்த தாமரைமணாளன், நாடகம் பற்றி எழுதினார்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.தேதிகள் குவியத் தொடங்கின.இந்நாடகத்திற்கு மட்டும் தான்  சபா காரியதரிசிகளே என் வீடு தேடி வந்து தேதி கொடுத்தனர்.இது மிகை அல்ல.உண்மை.

நாடக வெற்றிக்கு  பரத்,ஸ்ரீனிவாசன், சேஷாத்திரி, கோமல்,கச்சாலீஸ்வரர் ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உதவியை நன்றியுடன் இப்போது நினைக்கின்றேன்.

நாடகம் கிட்டத்தட்ட 115 முறை மேடையேறியது.

பின்னாளில், நடிகர் திலகம் நடிக்க "ஆனந்த கண்ணீர்" என்ற பெயரில்  திரைப்படமாய் வந்தது.

இப்போது சொல்லுங்கள்..இது வெற்றி நாடகமா? இல்லையா ? என்று.

எங்கள் அடுத்த நாடகத்தையும் பரத் எழுத செட்டில் புதுமையைச் செய்தோம்.அது என்ன?
அடுத்த பதிவில்

(தொடரும்)

No comments: