Sunday, March 15, 2009

பூவா...தலையா...(சிறுகதை)

தன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல்.

அங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர்.

ஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு முதலில் விளையாடுவது என்பதைத் தீர்மானித்தான்.

இரு சிறுவர்கள் நடுவர்களாக நிறுத்தி வைக்கப் பட்டனர்.பூவா தலையாவில் வென்ற குழுத்தலைவரான சிறுவன் மற்றவனிடம்..'டேய்..நீ சச்சின்..நான் சேவாக், நாம தான் ஆரம்ப ஆட்டக்காரர்கள்' என்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உமாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் தன் பையனும் இடம்பெறும் நாள் வராதா...அவன் மனம் ஏங்கியது.

கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன.இந்தக் கேள்வி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது.

உமா...அந்த நாளை நினைத்தாள்.

நந்திதா மகப்பேறு மருத்துவ நிலையம்

'பாராட்டுக்கள்...'உமாவை பரிசோதித்துவிட்டு வந்த மருத்துவர் கூறினார்..'இரண்டு மாதம் முடிந்துவிட்டது.'

உமாவிற்கும்..அவள் கணவன் சிவாவிற்கும் பகீரென்றது.

சுவரில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை உதட்டில் விரலை வைத்து 'சூ...சப்தம் போடாதீர்கள்' என்றது.

எதை வேண்டாம்...வேண்டாம் என கல்யாணமாகி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார்களோ அது நடந்துவிட்டது.

'மாதம் தவறாமல் பரிசோதனைக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்க' என்ற மருத்துவரிடம் 'சரி' என்பது போல தலையை அசைத்தான் சிவா.

பின் உமாவிடம் சில ஆலோசனைகளைக் கூறினார் மருத்துவர்.

அவர்கள் திரும்பிவரும்போது வழக்கத்துக்கு விரோதமாக எதுவுமே பேசாமல் வந்தனர்.

வீட்டை அடைந்ததும்..உமாவை இறக்கிவிட்டுவிட்டு 'நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்' என அவள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்..

வீட்டுக்குள் சென்று..சோர்வுடன் அமர்ந்த உமாவின் கைகள் அனிச்சையாகத் தொலைக்காட்சியை இயக்கியது.

'பொதிகை' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் மகப்பேறு பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.

'இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டமாகத்தான் இருக்கும்' அவர் சொன்ன இந்த வரிகளைத் தவிர வேறு ஏதும் அவள் காதுகளில் விழவில்லை.

சிவா வண்டி திரும்பும் ஓசை கேட்டது.

அவள் எழுந்து விளக்குகளைப் போட்டாள்.குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காபி போடத் தயாரானாள்.சிவா எப்போதும் வெளியே சென்று வந்தால் காபி சாப்பிடுவது வழக்கம்.

நேரே சமையலறைக்கு வந்தவன் 'உமா..இப்போது நமக்குத் தேவையா?' என்றான்.

இன்னும் இரண்டு வருடங்களாவது தள்ளிப் போடணும்னு நினைச்சோம்...என்றவளின் குரல் தழுதழுத்தது.

'நான் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே..' என்றான். 'கலைச்சுடலாம்' என்றான்.பின்னர் மெதுவாக 'என்னுடைய மருத்துவ நண்பன் ஒருவனிடம் சொல்லி இந்த மாத்திரைகளை வாங்கி வந்தேன்.மூன்று வேளை சாப்பிட்டால் போதும்...'

இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டம் தானே என அவளும் இதற்கு சம்மதித்தாள்.

எட்டு மாதங்கள் கழித்து...கைகளையும்..கால்களையும் ஆட்டி...அழுது..சிரித்து.. பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டிய அந்த உயிர் சிதைந்தது.

பத்து வருடங்கள் பறந்துவிட்டன..

கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

'அன்று அப்படி சம்மதித்தது தவறோ...?' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? எந்தக் குழந்தையும் தவழ்ந்து விளையாடாத காலி மைதானமாகவா ஆகவேண்டும் வீடு..

நீண்ட நேரம் யோசித்தாள்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒரு விளம்பரம்..

'சென்னை அருகே இருந்த குழந்தைகள் குருகுலம் ஒன்று பற்றிச் சொல்லிவிட்டு...வர இருக்கும் பண்டிகையை நாம் இவர்களுடன் கொண்டாடுவோம்' என்றார் அந்தப் பிரபல நடிகர்.

அவர் நடுவில் இருக்க..அவரது வலப்புறமும்..இடப்புறமும் நிற்கும் குழந்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தது ஒளிக்கருவி.

திடீரென..இதில் ஒரு முகம் உமாவிற்கு பிடித்துப் போயிற்று.எவ்வளவு அகன்ற கண்கள்...தான் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் கைகளை...இங்கும்..அங்கும் வீசிக்கொண்டு அவன் என்ன செய்கிறான்..?

கிரிக்கெட்டா விளையாடுகிறான்?

ஓங்கி அவன் பந்தை அடிப்பதுபோல இருந்தது உமாவிற்கு.

உமா ஒரு முடிவிற்கு வந்தாள்.

பூவா...தலையா...போட்டாயிற்று..

அவளது வீட்டில் விளையாட..தொடக்க ஆட்டக்காரன் ஒருவனைத் தேர்வு செய்துவிட்டாள்

12 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கதை நன்று!
ஒன்றைப் பார்த்தால் தான் இன்னொன்று கிளிக் ஆகும்.

narsim said...

ந...ச்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி narsim

மணிகண்டன் said...

super.

சின்னப் பையன் said...

super

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
மணிகண்டன்
ச்சின்னப் பையன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

வாவ்.... கலக்கலாய் இருக்கிறது காபி சாரி கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நவநீதன்

மங்களூர் சிவா said...

மிக அருமையான சிறுகதை.

மருத்துவரை ஆலோசிக்காமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்வோருக்கு ஒரு படிப்பினையும் கூட.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா