Tuesday, October 4, 2011

செய்யும் தொழிலே தெய்வம்...அதை போற்றுவோம்..




கல்விக்கு கடவுள் சரஸ்வதி என்பர் ஆன்மீகவாதிகள்..பாரதியாரும் 'பாஞ்சாலி சபதத்தை' அவரது எழுத்துக்களில் வடித்தபோது முதலில் சரஸ்வதியை வணங்குகிறார்.
'வெள்ளைக் கமலத் திலே அவள்
வீற்றிருப்பாள், புக ழேற்றிருப்பாள்
கொள்ளைக் கனியிசை தான் நன்கு
கொட்டுநல் யாழினைக் கொண்டிருப்பாள்

கள்ளக் கடலமுதை - நிகர்
கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே
பிள்ளைப் பருவத்திலே -எனைப்
பேணவந்தாளருள் பூணவந்தாள்...

என்று எழுதியுள்ளார்...

ஆன்மிகவாதிகள் ஆனாலும் சரி, பகுத்தறிவாளராயினும் சரி..கல்வி அறிவு முக்கியம் என்பதை மறுக்கமாட்டார்கள்.ஆகவே அப்படிப்பட்ட கல்விக்கு ஒதுக்கப் பட்ட நாள் இது எனக் கொள்வோம்.அதைப் போற்றுவோம்..
அதைத் தவிர்த்து..கல்வி அறிவு பெற்றோரும் சரி..அற்றோரும் சரி..வாழ..ஏதேனும் தொழிலை மேற்கொண்டிருப்பர்.அத் தொழிலை வழிபட வேண்டிய தினம்..அத் தொழிலுக்கு நன்றி சொல்ல வேண்டிய தினம்.அதை மனதாரச் செய்வோம்..
மேலும்..நமக்கு அன்றாடம் பயன்படும் பொருள்களுக்கும்..அவை அஃறிணை ஆனாலும்..அவற்றையும் தொழுவோம்..ஆகவேதான் இத் தினம் ஆயுத பூஜை என்று கொண்டாடப்படுகிறது.
உதாரணமாக..நாம் தினமும் அலுவலகம் செல்ல பயன்படும் நமது ஊர்தி..சைக்கிள், ஸ்கூட்டர் ஆகியவற்றிற்கு பூ போட்டு,சந்தனம் இட்டு வணங்குவோம்.
நமக்கு படி அளக்கும் அரிசி படி,பணம் வைக்கும் கப்போர்ட்,சமைக்கும் கேஸ் அடுப்பு,கணிணி போன்ற அனைத்தையும் வணங்கி நன்றி சொல்வோம்..
அவற்றிற்குத் தேவையா? என வினவுவோர்க்கு...என் அனுபவத்தில் நடந்த ஒரு விஷயம் கூற ஆசை..
சில ஆண்டுகளுக்கு முன்..என் வீட்டு ஃப்ரிட்ஜ் பழுதுபட்டு வேலை செய்யவில்லை.நீண்ட நாட்களாக எங்களுக்கு சேவை செய்தது அது.அதை எக்சேஞ்ச் செய்ய வேண்டுமானால் அது வேலை செய்யும் நிலையில் இருக்க வேண்டும்..அப்படியானால் புது ஃப்ரிட்ஜ் 2000 ரூபாய் குறைக்கிறோம் என்றார்கள் கடையில்.ஆனால் என் வீட்டு ஃப்ரிட்ஜோ முற்றிலும் வேலை செய்யவில்லை.ஆனால் கடைக்காரரிடம் ஃப்ரிட்ஜ் வேலை செய்கிறது எனச் சொல்லிவிட்டேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள்...அந்த கடையிலிருந்து மெக்கானிக் வந்த தினம்...அவர் ஃப்ரிட்ஜை நோட்டம் விட்ட போது அது வேலை செய்தது..இன்றைக்கும் எனக்கு அந்நிகழ்ச்சி அதிசயமாக இருக்கிறது.அதற்கு பிரியாவிடை கொடுத்தும்..என்னால் இன்றளவும் ஒரு உறவை பிரிந்த துயரமே!இதை என் மூட நம்பிக்கை என நீங்கள் கூறினாலும் எனக்குக் கவலையில்லை.
இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்...நாம் அப்படி நமக்கு பயன்படும் பொருள்கள் எல்லாவற்றையும் வனங்கி இன்று தொழுவோம் என்பதற்கே..
பத்து ரூபாய்க்கு சில்லறை கொடுக்கும் பேருந்து நடத்துநருக்கு நன்றி எனச் சொல்லும் நாம்..அப்பணத்தை சம்பாதிக்கும் நம் தொழிலுக்கு நன்றி எனச் சொல்வதில் தப்பில்லை.
நம் வாழ்வை வளமாக்கும்..அனைத்தையும் எண்ணி ..இன்று அவற்றை வணங்குவோம்.

2 comments:

aotspr said...

அருமையான பதிவு......
உங்கள் பகிர்வுக்கு நன்றி.....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கண்ணன்