Thursday, October 2, 2014

குறுந்தொகை - 122




தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில் மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்திக் கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் ஓரம்போகியார்

இனி பாடல்-

 
பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
   
குண்டுநீ ராம்பலுங் கூம்பின வினியே
   
வந்தன்று வாழியோ மாலை
   
ஒருதா னன்றே கங்குலு முடைத்தே.

என்பது தலைமகள் பொழுதுகண்டு அழிந்தது.

                        -ஓரம்போகியார்

 உரை-

பசிய கால்களையுடைய கொக்கினது புல்லிய புறத்தைப் போன்ற, ஆழமாகிய நீர்நிலையில் வளர்ந்த ஆம்பலின் மலர்களும் குவிந்தன.
இப்பொழுது மாலை நேரம் வந்தது.அது வாழ்வதாக!இங்ஙனம் வந்தது மாலையாகிய தான் ஒன்று மட்டும் அன்று.தன்பின் வரும் யாமத்தையும் உடையது.இனி என் செய்வேன்!


     (கருத்து) இராக்காலம் வந்து விட்டது; இனி யான் மிக்க துன்பத்தை அடைவேன்.

     .

 மாலை வந்ததனால் துன்புற்ற தலைவி, “இம்மாலையோடு என்துயர் ஒழிந்திலது; இதன்பின் வருவது கங்குல்; அதுவும் என்துயரை மிகுவிப்பதாகும்” என வருந்தினாள்.

   (மாலை - இரவின் முதல் யாமம்; கங்குல் - இடையாமம்.)

No comments: