Friday, October 24, 2014

குறுந்தொகை-140


தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்த காலத்தில் அவனுடைய பிரிவினால் துன்புற்ற தலைவியை நோக்கி, “நீ ஆற்றாமல் இருக்கின்றாய்” என்று தோழி இரங்க, “இவ்வூர் இப்பொழுது நான்
படுந்துன்பத்தை எங்ஙனம் அறிந்தது?” என்று முன்னிலைப் புறமொழியாகத் தலைவி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்முல்லை

இனி பாடல்-
 
வேதின வெரிநி னோதி முதுபோத்
   
தாறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
   
சுரனே சென்றனர் காதல ருரனழிந்
   
தீங்கியான் றாங்கிய வெவ்வம்

யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே.


                           -அள்ளூர் நன்முல்லை.

  உரை-  

தலைவன், கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓந்தியானது வழிச் செல்லும் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளுமாறு தங்குகின்ற பாலைநிலத்திற் சென்றனர்.வலிமை இழந்து, அவர் பிரிந்த பிறகு இங்கு இருந்து நான் பொறுத்துக் கொண்டுள்ள துன்பத்தை இரங்குதலையுடைய இவ்வூர் எவ்வாறு அறிந்தது.



     (கருத்து) தலைவர் பிரியுங் காலத்து அவரைச் செல்லாதவாறு செய்யாமல் இப்பொழுது என்னை, “நீ ஆற்றுகின்றிலை” என்று கூறிப் பயனில்லை.

    (ஓந்தி- சுமைதூக்கி)

   


No comments: