Tuesday, October 28, 2014

குறுந்தொகை-143



தோழி கூற்று
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்

இனி பாடல்-
 
அழிய லாயிழை யழிபுபெரி துடையன்
   
பழியு மஞ்சும் பயமலை நாடன்
   
நில்லா மையே நிலையிற் றாகலின்
   
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
   
தங்குதற் குரிய தன்றுநின்
   
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.


                          -  மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

     உரை-

தெரிந்து அணிந்த அணைகலங்களையுடையாய் பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன் நம்மைப்போல இரங்குதலை மிக உடையவன், பழியையும் அஞ்சுவான் நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகில் நிலைபெற்றதாதலின் நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய நீதியையுடைய நெஞ்சையுடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல நினது அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை தங்குவதற்கு உரிமை உடையதன்று.ஆதலால் நீ வருந்தாதே!


      (கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.



( ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ )
 
 (‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு;)  

No comments: