Monday, October 27, 2014

குறுந்தொகை-142


தலைவன் கூற்று
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்கும் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கபிலர்


இனி பாடல்-

 
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
   
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
   
தானறிந் தனளோ விலளோ பானாட்
   
பள்ளி யானையி னுயிர்த்தென்

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

                       -கபிலர்

     உரை-

நடு இரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போல பெரு மூச்சு விட்டுக் கொண்டு என் நெஞ்சம் ,நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் அவளிடத்திலேயே இருக்கின்றது.சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையைக் கட்டி, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஓட்டுகின்ற, பூவைப் போன்ற கண்களையுடைய பேதையாகிய அத்தலைவி இதனை அறிவாளோ? மாட்டாளோ?


     (கருத்து) என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.

 . (தனது நெஞ்சம் அவளிடத்தே பொருந்தியிருப்பதை அறியாமையின், ‘பேதை’ என்றான்.)

No comments: