Saturday, October 18, 2014

குறுந்தொகை-135



தோழி கூற்று
(தலைவன் பிரியவெண்ணியிருப்பதை யறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “ஆடவர் மகளிர்க்கு உயிரென்று கூறியவராகிய தலைவர் இப்பொழுது நின்னைப் பிரிந்து செல்லார்’ என்று தோழி கூறி ஆற்றுவித்தது.)

பாலைத்திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ

இனி பாடல்-
 
வினையே யாடவர்க் குயிரே வாணுதல்
   
மனையுறை மகளிர்க் காடவ ருயிரென
   
நமக்குரைத் தோருந் தாமே
   
அழாஅ றோழி யழுங்குவர் செலவே.


                           -பாலைபாடிய பெருங்கடுங்கோ.

உரை-

தோழி.....தொழில்தான் ஆண்களுக்கு உயிர் ஆகும்.ஒளி பொருந்திய நெற்றியையுடைய இல்லின் கண் உறையும் மகளிர்க்கு கணவன்களே உயிர்  ஆவாரென்று நமக்கு எடுத்துக் கூறியவரும் அத் தலைவரே! ஆகவேஅழுதலை ஒழிவாயாக! அவர் செல்லுதலை தவிர்ப்பார்


    (கருத்து) தலைவர் உன்னைப் பிரியாராதலின் நீ வருந்தற்க.

No comments: