Wednesday, October 22, 2014

குறுந்தொகை-138



தோழி கூற்று
(முதல்நாள் உரிய இடத்தே வந்து தலைவியைக் காணாத தலைவன் மறுநாள் கேட்கும் அணிமையில் நிற்பதை அறிந்த தோழி, “நேற்றிரவு தலைவரது வரவை எதிர்நோக்கித் துயிலாமல் இருந்தேம்; அவர் வந்திலர்” எனக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கொல்லன் அழிசி

இனி பாடல்-

 
கொன்னூர் துஞ்சினும் யாந்துஞ் சலமே
   
எம்மி லயல தேழி லும்பர்
   
மயிலடி யிலைய மாக்குர னொச்சி
   
அணிமிகு மென்கொம் பூழ்த்த

மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.



                 -கொல்லன் அழிசி.

    உரை-

எமது வீட்டின் அயலதாகிய ஏழிற்குன்றத்தின் மேலுள்ள மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்தையுடைய நொச்சியினதுஅழகு மிக்க மெல்லிய கொம்புகள் உதிர்த்த நீலமணி போன்ற மலர்களின் ஓசையை மிகக் கேட்டு பெரிய ஊரிலுள்ளோர் தூங்கினாலும் நாங்கள் தூங்கமாட்டோம்.

   

     (கருத்து) நேற்றுத் தலைவரை யாம் எதிர் நோக்கியிருந்தோம்.

   
     தலைவன் கேட்கும் அண்மையில் இருப்பதை அறிந்த தோழி, “ நேற் றிரவு நாம் துயிலாமல் தலைவரது வரவை எதிர்நோக்கி இருந்தோம். ஊரினர் யாவரும் துயின்றனர். நாங்கள் தூங்கவில்லை..வீட்டுக்கு அருகிலுள்ள ஏழிற் குன்றத்தின்மேல வளர்ந்த நொச்சியின் மலர் உதிரும் ஓசையும் எம் காதில் விழுந்தது. தலைவர் வந்தால் நாம் நன்கு அறிந்திருப்போம். அவர் வந்திலர்” என்று கூறியது. 

No comments: