Tuesday, October 7, 2014

குறுந்தொகை- 126



தலைவி கூற்று
(தலைவன் மீண்டுவருவேனெனக் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்த பின்பும் அவன் வாராமையால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “கார்ப்பருவம் வந்துவிட்டது; முல்லைக் கொடிகள் அரும்பின; தலைவர் இன்னும் வந்திலர்” என்று கூறியது.)

முல்லைத் திணை - பாடலாசிரியர் ஒக்கூர் மாசாத்தி

இனி பாடல்-
 
இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
 
இவணும் வாரா ரெவண ரோவெனப்
 
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
 
தொகுமுகை யிலங்கெயி றாக

நகுமே தோழி நறுந்தண் காரே.

               -ஒக்கூர் மாசாத்தி.

  உரை-
(தோழி) இளமையது அருமையைப் பாராராகி .பொருளை விரும்பி என்னைப் பிரிந்து சென்ற தலைவர் இவ்விடத்தும் மீண்டு வந்திலர்.எவ்விடத்தில் உள்ளாரோ என்று நான் எண்ணியிருக்க, நறிய தண்ணிய கார் காலத்தில் மழையாற் பாதுகாக்கப்பட்ட பூவையுடைய முல்லைக்கொடியினது தொகு முகைகளை விளங்குகின்ற தன் பற்களாகக் கொண்டு நம்மைப் பிரித்துச் சிரிக்கும்.

(கருத்து) கார்காலம் வந்துவிட்டது; தலைவர் வந்திலர்.

 

     (தொகுமுகையாகலின் பல்வரிசையை ஒத்தன. முல்லைமலரால் நறுமையும் பெயலால் தண்மையும் உடைமையின் நறுந்தண் காரென்றாள்;)

No comments: