Wednesday, October 8, 2014

குறுந்தொகை -127


தோழி கூற்று
(தலைவன் தலைவியின்பால் பாணனைத் தூதாக விட்டுத் தான் பின் நிற்பத் தோழி அவனை நோக்கி, “நின்பாணன் பொய்யனாயினன்; அதனால் பாணர் யாவரும் பொய்யர் போலுமென எண்ணுவே மாயினேம்” என்று கூறி வாயில் மறுத்தது.)

மருதம் திணை - பாடலாசிரியர் ஓரம் போகியார்

இனி பாடல்-

 
குருகுகொளக் குளித்த கெண்டை யயல
   
துருகெழு தாமரை வான்முகை வெரூஉம்
   
கழனியம் படப்பைக் காஞ்சி யூர
   
ஒருநின் பாணன் பொய்ய னாக

உள்ள பாண ரெல்லாம்
   
கள்வர் போல்வர்நீ யகன்றிசி னோர்க்கே.

                      -ஓரம் போகியார்
   
உரை-

நாரை கவர்ந்து கொள்ள அதன் வாயினின்று நிருட் குளித்த கெண்டை மீன் அயலாதாகிய நிறம் பொருந்திய தாமரையின் வெள்ளிய அரும்பை .அஞ்சும் வயல் பக்கங்களையுடைய காஞ்சி மரங்கள் வளர்ந்த ஊரையுடைய தலைவ.. நின் பாணன் ஒருவன் பொய்யனானமையால் மற்றுள்ள பாணர்கள் அனைவரும்.நீ அகன்றதால்தனித்திருக்கும் மகளிருக்கு பொய்யரைப் போலத் தோன்றுவர்.                                                

   
 (கருத்து) நின் தூதுவனாகிய பாணன் பொய்யன்.

     (வி-ரை.) குருகு - கொக்குமாம். குளித்தல் - மறைதல். உரு - அச்ச முமாம். தாமரை - இங்கே வெண்டாமரை.

     (நாரையாற் கௌவப்பட்டுத் தப்பி நீருட் குளித்த கெண்டை மீண்டும் நீரின்மேல் எழும்போது தாமரை முகையை அந்நாரையென்றே கருதியது; “அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்ற பழமொழி இங்கே நினைத்தற்குரியது.)

       (“தலைவன் நினை மறப்பானல்லன்; அவர் தூய ஒழுக்கமுடையவன்” என்று அப்பாணன் தலைவிபாற் கூறிய பொய்க் கூற்றுக்களைக் கேட்ட வளாதலின் ஒரு நின்பாணன் பொய்யனாக வென்றாள். நின்பாணன் கூறுவனவெல்லாம் பொய்யென்னும் தன் கருத்தையே சமற்காரமாகப் புலப்படுத்தி வாயில் மறுத்தாள்.)

No comments: