Saturday, October 25, 2014

குறுந்தொகை-141



தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைப் பெருங் கொல்லன்.

இனி பாடல்-
 
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
   
செல்கென் றோளே யன்னை யெனநீ
   
சொல்லி னெவனோ தோழி கொல்லை
   
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த

குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
   
ஆரிரு ணடுநாள் வருதி
   
சார னாட வாரலோ வெனவே.

                            -மதுரைப் பெருங் கொல்லன்.

  உரை-

(தோழி) மலைப்பக்கத்தையுடைய நாட...கொல்லையிலுள்ள நெடிய கையையுடைய யானையினது கடிய பகையினால்
வருந்திய குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும்..வருதற்கரிய இருளையுடைய நடு யாமத்தில் வருகின்றாய்.அப்படி வருதலை ஒழிப்பாயாக!வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை விளைந்த தினையிடத்துப் படாமற் கடியும் பொருட்டு நம் தாய் செல்வீராக என்றாள்.என தலைவனுக்குக் கூறின் குற்றம் என்ன? (நீ சொல்வதில் தவறில்லை)
   
   
     (கருத்து) தலைவரை இனிப் பகலில் சந்திக்க வரும்படி நீ சொல்ல வேண்டும்.

No comments: