Tuesday, October 14, 2014

குறுந்தொகை-131



தலைவன் கூற்று
(தலைவியைப் பிரிந்துவந்த தலைவன் தான் மேற்கொண்ட முயற்சி முற்றுப்பெற்றபின் தலைவிபால் மீள எண்ணி, “தலைவியின் ஊர் நெடுந்தூரத்தில் உள்ளது; “அவள்பாற் செல்வதற்கு என் நெஞ்சம் மிக விரைகின்றது” என்று கூறியது.)

பாலைத்திணை - ஓரேருழவனார்

இனி பாடல்-


ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட்
   
பேரமர்க் கண்ணி யிருந்த வூரே
   
நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே
   
ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்

தோரே ருழவன் போலப்
   
பெருவிதுப் புற்றன்றா னோகோ யானே.

                       -ஓரேருழவனார்

உரை-

அசைகின்ற மூங்கிலை ஒத்த அழகினையும் பருமையையும் உடைய தோளையும் ,பெரிய அமர்த்தலையுடைய கண்களையும் பெற்ற தலைவி இருந்த ஊர், நெடுந்தூரத்தில் உள்ளது.எனது நெஞ்சானது ஈரம் உண்டாகிய செவ்வியையுடைய பசிய புனத்தையுடைய ஒற்றை ஏரையுடைய உழவனைப் போல பெரிய விரைவை அடைந்தது.அதனால் வருந்துகிறேன்.



       (கருத்து) யான் கூறிவந்த பருவம் வந்தமையின் என் நெஞ்சம் தலைவியை அடைய அவாவுகின்றது.

        (ஓரேர் உழவன், ஈரம் வீண்படாமல் உழுதற்கு விரைதலைப் போல என் நெஞ்சம் தலைவியை உரிய பருவத்தே கண்டு அளவளாவ விரைகின்ற தென்றான்.)

No comments: