Sunday, October 5, 2014

குறுந்தொகை-124


தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து தனியே செல்ல விரும்பிய தலைவன், “பாலை நிலம் இவளை வருத்தற்கு உரியதன்று: இன்னாமையையுடையது” என்று கூற, “தலைவரைப் பிரிந்தாருக்கு வீடுமட்டும் இனிமையையுடையதோ?” என்று வினவு முகத்தால் தலைவியையும் உடன்கொண்டு செல்லும்படி தோழி அறிவித்தது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் பாலைபாடிய பெருங்கடுங்கோ

இனி பாடல்
 
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
   

ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
   
டின்னா வென்றி ராயின்
   
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே


                         -பாலை பாடிய பெருங்கடுங்கோ
   உரை- உப்பு வணிகர் பலர் கூடிக் கடந்து சென்ற பக்கத்தையும், விரிந்த இடத்தையும் பெற்ற. குடியிருந்த ஊர் பாழாகப் போனதைப் போன்ற தோற்றத்தையுடைய ஓமை மரங்கள் வளர்ந்த பெரிய பாலை நிலங்கள் இன்னாமையையுடையன என்று கூறித் தனியே செல்ல கருதினீராயின் ,தலைவரைப் பிரிந்த தனிமையையுடைய மகளிருக்கு வீடுகள் இனிமை தருவனவோ? (இல்லை)


     (கருத்து) தலைவியையும் உடன்கொண்டு செல்லுதல் வேண்டும்.

     (வி-ரை.) தலைவியை உடன்கொண்டு செல்லவேண்டுமென்று விரும்பிய தோழியை நோக்கித் தலைவன், “யான் செல்லும் வழியிலுள்ள பாலைநிலம் இன்னாமையை யுடையது” என்று கூற அது கேட்ட தோழி கூறியது இது. “பாலை நிலம் இன்னாதென்றீர்: தலைவர் பிரிந்த மனை, மகளிர்க்கு இனிமையைத் தருவனவோ? இன்னாமையை யன்றோ தருவன? இவளைப் பிரிந்து சென்றால் இம்மனை இவளுக்குப் பாலையினும் இன்னாமையை உடையதாகும்; ஆதலின் இவளை உடன்கொண்டு செல்லுதலே நன்று’’ என்று தோழி கூறினாள்.

No comments: