Tuesday, October 28, 2014

குறுந்தொகை-144



செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை -பாடலாசிரியர் கோடங்கொற்றன்

இனி பாடல்-
 
கழிய காவி குற்றுங் கடல
   
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
   
பிரிவி லாய முரியதொன் றயர
   
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்

பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
   
சென்மழை தவழுஞ் சென்னி
   
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

                   - கோடங்கொற்றன்

     உரை-

கழியினிடத்து மலர்ந்த காவிமலர்களைப் பறித்தும், கடலிலுள்ள வெள்ளிய தலையையுடைய அலையின்கண் விளையாடியும் மிக தன்னுடன் என்றும் பிரிதலில்லாத ஆயத்தார் தத்தமக்கு உரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கும் உடம்படாளாகி விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய வானத்தளவும் உயர்ந்த விளக்கத்தையுடைய குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டில் அப்பாலை நிலத்தில்
பருக்கைக்கற்கள் தன் பாதத்தின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி போயினள்.



     (கருத்து) தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.

No comments: