Monday, October 13, 2014

குறுந்தொகை-130



தோழி கூற்று
(தலைவன் பிரிந்திருக்கும்போது வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் இவ்வுலகில் எங்கேனும் ஓரிடத்தில் இருப்பார்; அவரைத் தேடித் தருவேன்” என்பதுபோலத் தோழி கூறியது.)

பாலைத்திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-

 
நிலந்தொட்டுப் புகாஅர் வான மேறார்
 
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
 
நாட்டி னாட்டி னூரி னூரிற்
 
குடிமுறை குடிமுறை தேரிற்

கெடுநரு முளரோநங் காத லோரே.

              -வெள்ளிவீதியார்

உரை-

   நம்முடைய தலைவர் சித்தி பெற்ற சாரணரைப்போல பூமியைத் தோண்டி உள்ளே புகார்.ஆகாயத்தின் கண் ஏறார்.குறுக்கிடுகின்ற பெரிய கடலின் மேல் காலினால் நடந்து செல்லார்.நாடுகள் தோறும், ஊர்கள் தோறும் முறையாகக் குடிகள் தோறும் ஆராய்ந்தால் அகப்படாமல் தப்புவாரும் உள்ளாரோ ?(இல்லை)

 
          (கருத்து) தூதுவிட்டுத் தலைவரைத் தேடித் தருவேன்.



    “நம் தலைவர் இவ்வுலகத்தில் ஏதேனும் ஒரு நாட்டிலுள்ள ஓரூரில் ஒரு குடியில் இருப்பர்; சாரணரைப் போல இவ்வுலகுக்குப் புறம்பே செல்பவரல்லர்; ஆதலின் எல்லா நாட்டிலும் உள்ள ஊர்கள் யாவற்றிலும் அமைந்த குடிகளையெல்லாம் தேடின் அகப்படாமற் போதற்கு நியாய மில்லை; அங்ஙனம் தேடித் தருவேன். நீ வருந்தற்க” என்று தோழி, தலைவியை ஆற்றுவித்தாள்.

   
(வரலாறு

     இச்செய்யுளைப் பாடிய வெள்ளி வீதியார் தம்முடைய கணவனைத் தேடித் திரிந்தார் என்றதொரு செய்தி,)
  

No comments: