Tuesday, October 21, 2014

குறுந்தொகை-137



தலைவன் கூற்று
(தலைவியைப் பால்வயத்தனாகிக் கண்டு அளவளாவிய தலைவன், “நின்னை யான் பிரியேன்” என்று கூறி, அவள் பிரிவென்ப தொன்றுண்டென்று ஓர்ந்து அஞ்சுமாறு செய்தது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் பெருங்கடுங்கோ.
   
இனி பாடல்-

 
மெல்லிய லரிவைநின் னல்லகம் புலம்ப
   
நிற்றுறந் தமைகுவெ னாயி னெற்றுறந்
   
திரவலர் வாரா வைகல்
   
பலவா குகயான் செலவுறு தகவே.

                      - பாலை பாடிய பெருங்கடுங்கோ.
உரை-

மென்மைத் தன்மையையுடைய அரிவையே! நின் நல்ல நெஞ்சம் தனிமையால் வருந்த நின்னைப் பிரிந்து சென்று, சென்ற இடத்தே மனம் பொருந்தி இருப்பேனாயின் ,நான் அங்ஙனம் செல்வதற்கு தக்க வினையின் கண் என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பலவாகுக



 (கருத்து) நின்னைப் பிரியேன்; பிரியின் அறப்பயனை இழந்தவனாவேன்.

 
 


No comments: