Friday, October 17, 2014

குறுந்தொகை -134



தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்டப் பிரிந்த காலத்தில் வருந்திய தலைவியைத் தோழி ஆற்றுவிப்ப அத்தோழியை நோக்கி, “தலைவன் பிரியாமல் இருப்பின் அவனது நட்பு நன்று; பிரிவுண்மையின் வருத்தம் உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கோவேங்கை பெருங்கதழ்வன்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மொடு
   
பிரிவின் றாயி னன்றுமற் றில்ல
   
குறும்பொறைத் தடைஇய நெடுந்தாள் வேங்கைப்
   
பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக்

கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி
   
நிலங்கொள் பாம்பி னிழிதரும்
   
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே.

                           -கோவேங்கைப் பெருங்கதழ்வன்.

உரை-

தோழி...ஒன்று கூறுவேன்..கேட்பாயாக...குறிய கற்களினிடத்தே பருத்து வளர்ந்த உயர்ந்த அடியையுடைய வேங்கை மரத்தினது மலர்களையுடைய அசைந்த கிளைகள், அம்மலர்களை நீங்கித் தனிக்கும்படி அடித்து கற்களை அலைத்து
ஒலிக்கும் விரைந்து வீழும் அருவியானது நிலத்தைத் தனக்கு இடமாக ஊர்ந்து கொள்ளும் பாம்பைப்போல இறங்குதற்கிடமாகிய ஒன்றற் கொன்று குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டுக்குத் தலைவனோடு மணந்ததால்
உண்டான தொடர்பு ,தலைவனுக்கு நம்மோடு பிரிவு இல்லாவிடில் நிச்சயமாக நன்றாகும்.அதுவே என் விருப்பம்.
   

     (கருத்து) தலைவன் பிரிவை நான் ஆற்றேனாயினேன்.



     (அருவியின் அருகில் வளர்ந்ததாதலின் வேங்கை பருத்தும் உயர்ந்தும் பூக்கள் மலிந்தும் விளங்கியது. அருவி தாக்குதலால் பூக்கள் உதிர்ந்தன; அதனால் சினை தனிமை யுற்றது. கதழ்வீழ் அருவி - கதழ்ந்து வீழும் அருவி;)

No comments: