Monday, October 20, 2014

குறுந்தொகை-136



தலைவன் கூற்று
(“நீ காம நோயுறல் தகாது” என்று பாங்கனை நோக்கித் தலைவன், “காமம் யாவரிடத்தும் இயல்பாக உள்ளதே; ஆயினும் அது வெளிப்படற் குரியதொரு காலத்தை யுடையது” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மிளைப்பெருங் கந்தன்

இனி பாடல்-

 
காமங் காம மென்ப காமம்
   
அணங்கும் பிணியு மன்றே நுணங்கிக்
   
கடுத்தலுந் தணிதலு மின்றே யானை
   
குளகுமென் றாண்மதம் போலப்

பாணியு முடைத்தது காணுநர்ப் பெறினே.


                               -மிளைப்பெருங் கந்தன்.

   உரை-

காமம், காமம் என்று உலகினர் அதனைக் குறை கூறுவர்.அக்காமமானதுபுதியதாகத் தோற்றும் வருத்தமும் நோயும் அன்று.நுண்ணிதாகி கடுத்தலும் மிகுதலும் குறைதலும் இலது.யானை தழையுணவை மென்று தின்று அதனாற் கொண்ட மதத்தைப் போல கண்டு மகிழ்வாரைப் பெற்றால் அக்காமம் வெளிப்படும் செவ்வியையும் உடையது.
   


  (கருத்து) காமம் இயல்பாகவே ஒருவரிடம் இருந்து உரிய காலத்தில் வெளிப்படுவது.

     (தலைவன் ஒரு தலைவியைக் காமுற்றா னென்பதை யறிந்த பாங்கன், “பேரறிவுடைய நீ காம நோயை அடைதல் நன்றோ?” என்று இடித்துரைக்க, அவனை நோக்கித் தலைவன் கூறியது இது.)

No comments: