Wednesday, October 8, 2014

குறுந்தொகை-128



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியை வழக்கமாய் சந்திக்கும் இடத்தில் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்பதற்கு அரியவள்; நீ துன்புற வேண்டியதுதான்” என்று கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-
.  
குணகடற் றிரையது பறைதபு நாரை
   
திண்டேர்ப் பொறையன் றொண்டி முன்றுறை
   
அயிரை யாரிரைக் கணவந் தாங்குச்
   
சேய ளரியோட் படர்தி

நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.

                 -பரணர்

உரை-

(நெஞ்சே! கீழ்கடல் அலைக்கு அருகில் உள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப் பெற்ற நாரை,திண்மையாகிய தேரையுடைய சேரனது, மேற்கடற்கரையில் அமைந்த தொண்டி என்னும் பட்டினத்தின் கடல் துறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும் பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்தில் உள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்.நீ வருத்ததையுடைய துன்பத்திற்குக் காரணமாகிய உழ்வினையுடையை


   (கருத்து) இனித் தலைவியை நான் அடைய முடியாது

   

No comments: