Wednesday, February 10, 2021

கவி வீரராகவ முதலியாரும்..செழியனும் - 1 (குறுந் தொடர்)


 


புறக்கண் இல்லாமல் போனாலும் அகக்கண் ஒளி படைத்தோர் பலர் உண்டு புவியில்.புறக்கண் இழந்த புலவர்களும் இருந்தனர்.தொண்டை மண்டலத்தில்  உழலூர் என்னும் ஊரில் பிறந்தவர் கவி வீரராகவ முதலியார்.16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.


கண் பார்வை இழந்தவராக இருந்தாலும் அறிவு கூர்மையாக இருந்தது.தமது முதுகில் எழுதச் சொல்லி தமிழைக் கற்றாராம் இவர்."தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் கவி முத்தமிழையுமே" என்று இவர் கல்வி சிறப்பைப் பற்றி பாடியுள்ளார் ஒரு புலவர்.


கம்ப ராமாயணம் இவருக்கு முழுவதும் மனனம்.கம்ப ராமாயணத்தில்..இன்னசொல்  எங்கெங்கே வருகிறது எனக் கேட்டால் அது வந்த இடத்தைச் சொல்வாராம்.இன்ன உவமை எத்தனை இடங்களில் வருகிறது? என்றால், அந்த இடங்களைச்சொல்வாராம்.இவ்வாறு சொல்வதை அவதானம் என்பார்கள்.கம்ப ராமாயணம் அவதானம் செய்வதில் சிறந்து விளங்கிய வீரராகவ முதலியாரைப் பார்த்து கண் உடையவர்கள் அனைவரும் பாராட்டினார்கள்.


கண்ணினால் ஏட்டைப் பார்த்து மனனம் செய்தவர்களூம் இப்படி செய்ய முடியாத நினைவாற்றல் அவருக்கு.


கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு..கவி பாடும் ஆற்றலும் இவருக்கு உண்டாயிற்று.கருத்தை ஆழமாகவும், தெளிவாகவும் சொல்லும் கவிகளைப் பாடினார்."திருக்கழுக்குன்ற புராணம்",திருவாரூர் உலா,சந்திரவாணன் கோவை,சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், முதலிய நூல்களை இயற்றினார்.


அக்காலத்தில் இலங்கையின் வட பகுதியில் பரராச சிங்கம் எனும் அரசன் ஆட்சி செய்து வந்தான்.யாழ்ப்பாணத்தில் தமிழறிவில் சிறந்த மக்கள் உள்ளனர்..என் அகேள்விப்பட்டு..இவர் கடல் கடந்து இலங்கை சென்றார்.பரராச சிங்கத்துக்கு முன் கம்ப ராமாயணம் அவதானம் செய்து காட்டி..அவ்வரசனையும், அங்கிருந்த புலவர் பெரு மக்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.


அரசன் இவரது இணையற்ற புலமைத் திறமையைப் பாராட்டிப் பல பரிசுகளைத் தந்தான்.ஒரு யானைக் குட்டியையும், சில ஊர்ப் பகுதிகளையையும் வழங்கினான்."யானைக் கன்றும் வளநாடும் புலவர் பெற்றார்" என்பார்கள்.


அக்காலத்தில் சின்னச் சேலத்தில் செழியத்தரையன் என்று ஒருவன் இருந்தான்.அவ்வூரில்..மழையில்லாமல் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது.விளைச்சல் குறைந்ததால் பிற இடங்களிலிருந்து அரிசி வரவழைத்து உண்டனர்.தண்ணீர் இல்லையென்றால்..சில நாட்கள் குளிக்காமல் இருக்கலாம்.ஆனால்..தண்ணீர் குடிக்காமல் ஒரு வேளையாவது  இருக்க முடியுமா?      ஊரில் அனைத்துக் கிணறுகளும் வரண்டன.பக்கத்தில் இருந்த ஏரிகள் வற்றின.இந்த நிலையில் மக்களும், விலங்குகளும் நீரின்றி துன்புற்றன.மாடுகள்..ஆடுகள்..இறந்தன.மக்கள் கூட்டம் கூட்ட௳அய் ஊரைவிட்டு வெளியேறத் தொடங்கினர்.எங்கு பார்த்தாலும் மயானம் போன்ற காட்சி.அந்தப் பகுதி முழுவதும் பாலவனமாகியது.


மக்களின் துன்பத்தைக் கண்ட செழிய தரையன்..அதனைத் தீர்க்க ஒரு வழியைக் கண்டு பிடித்தான்.அது என்ன? அடுத்த பகுதியில்...