Wednesday, October 31, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி - 2)



 ‘சாம்பு’ நாடகம் பிறந்த பின்புலத்தை விவரிக்கிறார் ‘சாம்பு’ என்.எஸ். நடராஜன். அவர் 1972-இல் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சில பகுதிகள்: 

திருவல்லிக்கேணி பைன் ஆர்ட்ஸ் கிளப் மிகச் சிறந்த முறையில்  நாடகங்கள் நடத்திப் பேரும், புகழும் அடைந்ததற்கு முக்கிய காரணம் திரு.தேவன் எழுதிக் கொடுத்த ‘மைதிலி’, ‘கோமதியின் காதலன்’, மிஸ் ஜானகி’, ‘துப்பறியும் சாம்பு’, ‘கல்யாணி’, ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’, ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’, ‘பார்வதியின் சங்கல்பம்’ நாடகங்கள் தாம். இந்த நாடகங்கள் சுமார் 500 தடவைகள் நடிக்கப்பட்டு ரசிகர்களால்  வெகுவாகப் பாராட்டப்பட்டவை. 

  அவர் எழுதிய உன்னதப் படைப்பான ‘துப்பறியும் சாம்பு’ தொடர்கதையை நாடகமாக்க முடியுமா என்ற ஐயம் தேவனுக்கு ஏற்பட்டு அவர் என்னிடம் யோசனை கேட்டார். நாங்கள் நீண்ட விவாதத்திற்குப் பிறகு, அதை நாடகமாக்க முடியும் என்று முடிவெடுத்தோம். ஆனால் அவர் எனக்கு ஒரு நிபந்தனை விதித்தார். அதாவது, ‘சாம்பு’ பாத்திரத்தை நானே ஏற்று நடிக்க வேண்டுமென்பதுதான் . அதற்கு முதலில் நான் சம்மதிக்கவில்லை. காரணம், அந்த நாடகத்தை நல்ல முறையில் அரங்கேற்ற வேண்டுமானால், பயிற்சியாளன் என்ற முறையில் நான் அவர் எழுத்தோவியத்திற்கு உயிர் ஊட்டவேண்டும். அப்படியிருக்க, நானே பயிற்சியாளனாகவும், கதாநாயகனாகவும் பணியாற்ற முடியுமா என்று திகைத்தேன் ஆனால் அவர் என்னை ஊக்குவித்து அவர் விருப்பத்தைச் சாதித்துக் கொண்டார். எனக்குச் ‘சாம்பு’ என்ற பட்டமும் பெறக் காரணமாக இருந்து, நான் ‘சாம்பு’ நடராஜன் ஆனேன்

(நன்றி - http://s-pasupathy.blogspot.com)

அடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி -1)



நாகராஜனுடன் இணைந்து திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ் ஆரம்பித்த சாம்பு நடராஜ ஐயர், ஒரு காலகட்டத்தில்
என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு குழுவினை ஆரம்பித்தார்,

இவரது குழுவில் ஜெயசங்கர், வீரராகவன் ஆகியோர் நடித்தனர்.

பின்னர் வீரராகவன், தன் உறவினர் சுந்தரராஜன் என்பவரை நடராஜனுக்கு அறிமுகப்படுத்த, அவரும் இக்குழுவில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த சுந்தரராஜன் தான் கே பாலசந்தரின் ராகினி ரெக்ரியேஷன்ஸ் குழுவில் மேஜர் சந்திரகாந்த்..நாடகத்தில் மேஜராக நடித்தவர்.பின்னாளில் மேஜர் என்ற அடைமொழி அவர் பெயருடன் சேர்ந்து "மேஜர்" சுந்தர்ராஜன் என அழைக்கப்பட்டு, திரையுலகிலும் புகழ் பெற்றவர் ஆவார் .

என் எஸ் என் தியேட்டரில் மேஜர் சுந்தரராஜன் நடிக்க ஆரம்பித்தார்.இவர் நடித்த "டைகர் தாததாச்சாரி" நாடகம் பெரிதும் பேசப்பட்ட நாடகம் ஆனது

நடராஜன் , மூப்பின் காரணமாக  நாடகத்துறையில் இருந்து ஓய்வு பெற அக்குழுவின் பொறுப்பை சுந்தரராஜன் ஏற்றார்.குழுவின் பெயரையும் "பத்மம் ஸ்டேஜ்" என்று மாற்றினார்.இவரது குழுவில் ஸ்ரீகாந்த், சிவகுமார் ஆகியோர் நடித்தனர்

அப்பாவி,சந்ததி,சொந்தம், கல்தூண்,அச்சாணி, தீர்ப்பு ஆகியவை இவர்கள் மேடையேற்றிய சில நாடகங்கள்

பின்னர் வியட்நாம்வீடு சுந்தரம் இக்குழுவிற்காக "ஞானஒளி" நாடகத்தை எழுதினார்.

இந்நாடகமே , பின்னர் மேஜர் ஏற்ற வேடத்தை சிவாஜி ஏற்க திரைப்படமானது (வீரராகவன் ஏற்ற இன்ஸ்பெக்டர் வேடத்தை மேஜர் திரையில் ஏற்றார்)

நாகராஜனும், நடராஜனும் நாடக உலகிற்கு பல திறமையுள்ள நடிகர்களை உருவாக்கித் தந்தனர் எனலாம் 

Tuesday, October 30, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி -2)



------------------------------
கே எஸ் நாகராஜன்
______________________

பின்னர் கலாநிலையம் சார்பில் கிட்டத்தட்ட  70 நாடகங்களை நாகராஜன் மேடையேற்றினார்.இவரது "குறிஞ்சி மலர்" (நா.பார்த்தசாரதி எழுதியது) நாடகத்தில் 113 கலைஞர்கள் நடித்தது பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

அனுராதா ரமணனின் இம்சைகள் என்ற நாடகம்,
கல்கிதாசனின் "அம்பிகையின் கல்யாணம்" நாடகம் இவர்களின் வெற்றி நாடகங்களாகும்.

பல பிரபலங்களின் நாவல்கள், சிறுகதைகளை மேடைநாடகமாக்கி மேடையேற்றிய  குழு கலாநிலையம் என்றால் மிகையல்ல.

இவர்கள் மேடையேற்றிய ஹனிமூன் இன் ஹைதராபாத் என்ற நாடகத்தியே பின்ன எஸ் வி சேகர் வாங்கி சின்ன மாப்பிள்ளை/பெரிய மாப்பிள்ளிய எனும் நாடகமாக்கினார்.

1996க்குப் பிறகு நாகராஜனின் மகன் கே எஸ் என் சுந்தர் கலாநிலையம் பொறுப்பினை ஏற்றார்

சுந்தர், 1958ஆம் ஆண்டே ,அவருக்கு பத்து வயதாய் இருந்த போதே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தை நடராஜன் போட்டபோது அவர் சாம்புவாய் நடிக்க, சுந்தர் சாம்புவின் மகன் சுந்துவாய் நடித்தார்.

சுந்தர் கலாநிலையத்திற்காக எழுதியுள்ள சில நாடகங்கள், "காதல் கல்யாண வைபோகமே", வி ஆர் எஸ் ஸோ வி ஆர் எஸ், ஆயிரம் காலத்துப் பயிர், யார் பையன், அனுபவ ஆராதனை.

தவிர்த்து வேறு சில குழுக்களுக்கும் இவர் நாடகங்கள் எழுதிக் கொடுத்துள்ளார்.

கே எஸ் நாகராஜன் அவர்களின் நூறு வயது பூர்த்தியானதை  சென்னையில் சபாக்களும், நாடகக் கலைஞர்களும் பிரம்மாண்டமாய்க் கொண்டாடினர்.இன்றும் அவர் தன் 106 வயதிலும் நாடகங்களில் ஆரவ்ம் காட்டி வருவருவது எந்த ஒரு கலைஞனுக்கும் கிடைக்காத வாய்ப்பு இது.

இந்த நேரத்தில் மற்றொன்றும் கூற ஆசைப்படுகிறேன்.1973ல் நான் எழுதி மேடையேறிய "தேவை ஒரு மாப்பிள்ளை" எனும் என் முதல் நாடகத்தில் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் குடியிருந்த அவர் வீடு தேடிச் சென்று வாய்ஸ்த்துக் காட்டி..அவர் சொன்ன மாற்ரங்களை செய்து மேடையேற்றினேன்.நான் நாடக ஆசிரியராய் ஆக பிள்ளையார் சுழி அவர்தான்.

Monday, October 29, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி-1)



---------------------------------------------------
சாம்பு நடராஜன்/ கே எஸ் நாகராஜன்
-----------------------------------------------------------


சாம்பு நடராஜ ஐயர், கே எஸ் நாகராஜன் மற்றும் ஒய் ஜி பார்த்தசாரதி ஆகிய மூவரும் சென்ற நூற்றாண்டில் 1950க்கு பிறகு நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு சிறப்பானது.

அதில், சாம்பு நடராஜ்ன மற்றும் கே எஸ் நாகராரான் ஆகியோர்..
திருவல்லிக்கேணி இளைஞர்கள் சிலருடன் சேர்ந்து 1946ல் Triplicane Fine Arts  என்ற குழுவைத் தொடங்கினர்.

இருவரும் சேர்ந்து பல நாடகங்களைத் தயாரித்தனர்.முன்னதாக கே எஸ் நாகராஜன் பம்மல் சம்பந்த முதலியாரின் "வேதாள உலகம்""மனோகரா" ஆகிய நாடகங்களில் நடித்தவர்.அரசுப்பணியில் இருந்தபடியே நாடகப்பணியும் ஆற்றினார்,

தேவன், சாண்டில்யன், சாவி, வித்துவான் லட்சுமணன்.மெரினா, கல்கிதாசன், அனுராதா ரமணன்,சுஜாதா ஆகியோர் எழுதிய நாடகங்களை இருவரும் மேடையேற்றினர்.மெரினாவின் தனிக்குடித்தனம், ஊர் வம்பு,கால்கட்டு, வடபழனியி வால்மீகி, ஆகிய நாடகங்களும், சாவியின் வாஷிங்டனில் திருமணம் நாடகம் இன்றளவும் பேசப்படும் நாடகங்களாக உள்ளன.

வீரராகவன், (மேஜர்) சுந்தரராஜன், பூர்ணம் விஸ்வநாதன்.ஜெமினி மகாலிங்கம், மணக்கால் மணி, கூத்தபிரான், சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோர் இவர்களால் உருவாக்கப்பட்ட சில பிரபல நடிகர்களாவர்கள் .(கூத்தபிரான் பற்றி தனியாக பதிவு வருவதால்..இதில் அதிகம் குறிப்பிடவில்லை)

(அடுத்த வீட்டு ஜன்னல் 4 (பகுதி 2) தொடரும்.  

Sunday, October 28, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-2)



நாடகங்கள் மீது தணியாத மோகம் கொண்டவர் வரதராஜன்

1994ல் யுனைடெட் விசுவல்ஸ் எனும் குழுவினைத் தொடங்கி கிட்டத்தட்ட 23 நாடகங்களைத் தயாரித்துள்ளார்

நடுத்தர வர்க்கத்தின் பிரச்னைகளை அழகாக அதேசமயம் விரசமில்லா நகைச்சுவையுடன் எடுத்துச் சொல்லும் நாடகங்கள் இவரின் தனி முத்திரை எனலாம்

இவரது குழுவின் முதல் எழுத்தாளர் சிறகு ரவிசந்திரன்."ஜோடி பொருத்தம்" இவர் எழுதியதே.வேதம்புதிது கண்ணன் இவருக்காக 8 நாடகங்களை எழுதியுள்ளார்.அடுத்து இவருக்கு அதிக நாடகம் எழுதியவர் சந்திரமோகன் ஆவார்

 எல்கேஜி ஆசை, மற்றும் பலர், ஆசைக்கும் ஆஸ்திக்கும்,மெகா சீரியல்,வாஸ்து வாசு,பிளாஸ்டிக் கடவுள்,ரீல் (ரியல்) எஸ்டேட், காசளவு நேசம்,
ஐபிஎல் குடும்பம். நேரடி ஒளிபரப்பு  ஆகியவை இவரின் நாடகங்களில் சில

சோ அவர்கள் வரதராஜனின் கலை ஆர்வத்தைக் கண்டு, "என்று தணியும் இந்த சுதந்திரத் தாகம்' என்ற தன் பிரபல நாடகத்தை மீண்டும் இவர் அரங்கேற்றம் செய்ய அனுமதித்தார்.சோ தனது நாடகத்தில் ஏற்ற நாரதர் வேடத்தை வரதராஜனும் ஏற்று பிரமாதப்படுத்தினார்.

பின்னர் "துக்ளக்" சத்யா இவருக்காக "இது நம்ம நாடு" என்ற முழுநீள அரசியல் நையாண்டி நாடகத்தை எழுதினார்.

பிரபல பத்திரிகையாளரும், விமர்சகருமான வீஎஸ்வீ அவர்கள் எழுதிய ஸ்ரீதியாகராஜரை இவர் நாடகமாக்கினார்.பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் இசையமைக்க வரதராஜன் தியாகராஜராக நடிக்க "ஸ்ரீதியாகராஜர்" நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாக அமைந்தது.சந்திரமோகனும் இந்நாடகத்திற்கு வசனம் எழுதுவதில் உதவினார்

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இந்நாடகம் அமைந்தது.

அடுத்து "துக்ளக் தர்பார்" எனும் நாடகத்தை அரங்கேற்றி..அந்நாடகத்தில் "சோ" அவர்கள் வருவது போல ஒரு பாத்திரத்தைப் படைத்து அமர்க்களப் படுத்தினார்..(துக்ளக் சத்யா..கதை,வசனம்).நாடகம் பார்த்தோர் மீண்டும் சோ உயிர் பெற்று வந்து விட்டாரோ என் எண்ணும்படி ரமேஷ் என்பவர்க்கு அப்பாத்திரத்தை வழங்கினார்.அந்நடிகர் இப்போது.."சோ" ரமேஷ் எனும் பட்டப்பெயருடன் நடித்து வருகிறார்.
 
தன் மனைவி உஷா நினைவாக ஒரு டிரஸ்ட் அமைத்து..இவர் மற்ற கலைஞர்களின் நாடகங்களுக்கும் அதன் மூலம் ஆதரவு அளித்து வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய செயல்

இவர் டிவி செய்தி வாசிப்பில் ஒரு சுவாரசியமான நிகழ்ச்சியை சொல்லலாம்.1983ல் கபில்தேவ் தலைமையில் இந்தியா கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற நிகழ்ச்சியை செய்தியில் வாசித்தவர் இவர்.தவிர்த்து அப்போட்டியில் இவர் செய்தி வாசித்த நாட்களில் எல்லாம் இந்தியா வென்றது.இவர் வாசிக்காத இரண்டு நாட்கள் போட்டியில் இந்தியா தோற்றது.

தொலைக்காட்சியில் "கல்யாணத்துக்கு கல்யாணம்"."சொல்லடி சிவசக்தி" ஆகிய தொடர்களை தயாரித்து இயக்கியுள்ளார் இவர்.

பற்பல சாதனைகளை படைத்து வரும் இவர் மேன்மேலும் தமிழ் நாடகமேடைக்கு தொண்டு ஆற்றிட அனைத்து கலைஞர்கள் சார்பிலும் வாழ்த்துகள்   




அடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-1)



பேங்க் ஆஃப் இந்தியாவில் பணி புரிந்த வந்த ஸ்ரீனிவாசன் (சீனா) என்பவரின் கிரியேட்டிவ் எண்டெர்டைனெர்ஸ் குழுவில் , "என் கேள்விக்கு என்ன பதில்" நாடகம் மூலம் மகேந்திரன் இயக்கத்தில் அறிமுகம் ஆனார் வரதராஜன்
அடுத்து யூ ஏ ஏ குழுவிற்காக "தேடினேன் வந்த்து" என்ற வெங்கட் நாடகம் மூலம் பிரதான பாத்திரத்தில் நடித்தார்.
பின்னர் கிரியேட்டிவ் என்டெர்னெயினர்ஸ் குழு மேடையேற்றிய "கிரேசி" மோகன் எழுதிய "36 பீரங்கி லேன்". வேதம் புதிது கண்ணன் எழுதிய "சொல்லடி சிவ சக்தி""அவனுடைய செல்லம்மா" ஆகிய நாடகங்களில் நடித்தார்.
தமிழ்நாடகமேடையேறிய அதே காலகட்டத்திலேயெ டிவியிலும் நுழைந்தார்
1977 தொடங்கி 1996 வரை சென்னைத் தொலைக்காட்சியிலும் பின்னர் எட்டு ஆண்டுகள் சன், விஜய்,ராஜ் போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் பணி புரிந்தார்
1986 முதல் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.1994 முதல் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் தொடர்ந்து நடித்து..தன் நடிப்புத் திறமையில் சிகரத்தைத் தொட்டார்.இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக டிவியில் தோன்றிவருவதால் டிவி வரதராஜன் என அனைவராலும் அறியப்பட்டவர் ஆனார்.
மேடை நாடகங்களில் தணியாப் பற்றுக் கொண்ட இவர் 1994ல் யுனைடெட் விசுவல்ஸ் என்ற குழுவினைத் தொடங்கினார்.
அக்குழுப் பற்றியும்,அதன் சாதனைகள் பற்றியும் அடுத்த பகுதியில்

Friday, October 26, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை -2 (பகுதி 2)



சேகரின், "நாடகப்பிரியா" வின் முதல் நாடகத்தை பிரபல் situation comedy king என்று அழைக்கப்பட்ட கே கே ராமன் எழுதினார் .நாடகம் "கண்ணாமூச்சி:"

 கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்
ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிறது
ஒன் மோர் எக்சார்சிஸ்ட்  ஆகிய நாடகங்களை கிரேசி மோகன் எழுதினார். இவரால் அறிமுகமானமோகன் இந்நாடகங்களுக்குப் பின்னரே கிரேசி மோகன் என அழைக்கப்பட்டார் என்பது இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று

சோ அவர்களின் "சாதல் இல்லையேல் காதல்" நாடகப்பிரியா அரங்கேற்றியது.

தவிர்த்து "மகாபாரதத்தில் மங்காத்தா" "காதுல பூ" காட்டில மழை" "1000 உதை வாங்கிய அபூர்வ சிகாமணி' "எல்லாமே தமாஷ்தான்" "அதிர்ஷ்டக்காரன்" "யாமிருக்க பயமேன்" பெரிய தம்பி, "சி எம்..பி எம்" (இந்நாடகமே ஹனிமூன் இன் ஹைதராபாத் என மீண்டும் அரங்கேறியது) தத்துப்பிள்ளை,"அல்வா" ஆகிய நாடகங்கள் மக்களை மகிழ்வித்த சில.

இவர் நாடகங்களை இவரைத் தவிர்த்து..வெங்கட், ஜிகே, கோபு பாபு ஆகியோரும் எழுதியுள்ளனர்

சபாக்களின் "வசூல் சக்கரவர்த்தி" என்ற பட்டமும் சேகருக்கு உண்டு

அதிர்ஷ்டக்காரன் என்ற நாடகம் கிருஷ்ண கிருஷ்ணா என்ற பெயரில் திரைப்படமானது.

வறுமையின் நிறம் சிவப்பு , நினைத்தாலே இனிக்கும் படங்கள் மூலம் இயக்குநர் கே பாலசந்தர் இவரை வெள்ளித்திரை நடிகனாக்கினார்.

விசுவின் இயக்கத்தில் 15 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தொலைக்காட்சிக்கான இவரது நாடகங்கள் வண்ணக்கோலங்கள் பாகம்-1, பாகம் -2, நம் குடும்பம், டேக்சி ஆகியவை

மத்திய அரசு தணிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் சில காலம் இவரை நியமித்தது

இவரது சில நாடகங்கள் ஆடியோ வடிவிலும், யூ டியூபிலும் கிடைக்கிறது

இவரது நாடகங்களை நூல் வடிவில் அல்லையன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர்களுக்காக ஒரு சங்கத்தை வாத்தியார் ராமனுடன் இணைந்து உருவாக்கியவர் இவர்.இன்று அந்த சங்கத்தின் தலைவராக காத்தாடியும், செயலராக தம்பி பார்த்தசாரதியும் உள்ளனர்

இவற்றையெல்லாம் தவிர்த்து..விளம்பரமே இல்லாமல் சேகர்..பல மாணவர்களுக்கு ஆண்டு தோறும் கல்லூரி கட்டிணம் செலுத்தி வருகிறார்.

பல ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார்.

அவரும் , நாடகப்பிரியாவும் நீண்ட காலம் கலைச்சேவையும், சமூக சேவையும் செய்ய வாழ்த்துவோம்

(அடுத்த பதிவு அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை-3 தொடரும்)

(இப்பதிவிற்கு சம்மந்தமில்லா கமென்டுகள் நீக்கப்படும்)

Thursday, October 25, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 2 (பகுதி 1)



எஸ் வி சேகர்

நகைச்சுவை நாடகங்கள் என்றாலே மக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.
குறிப்பாக கிரேசி மோகன், எஸ் வி சேகர் நாடகங்கள் இதனாலேயே வெற்றியடைகின்றன

நரசிம்ம ராவ்களையும், மன் மோகன் சிங் போன்றவர்களையும் கூட சிரிக்க வைக்கும் இவர்கள் நாடகங்கள்

சேகரின் நாடகங்களில் நகைச்சுவையுடன்..அவ்வப்போது நடைபெறும் அரசியல் நிகழ்வுகளும் நையாண்டியாய் சொல்லப்படும்

சேகரின் குறிக்கோளே..நாடகம் நடக்கும் 100 நிமிட நேரத்தில்  ரசிகர்களை 200 முறை சிரிக்க வைக்க வேண்டும் என்பதே

சேகர், தன் மனதில் நினைப்பதை சொல்வதில் யாருக்கும் பயப்பட மாட்டார்.அதுவே அவர் பலமும், பலஹீனமும் எனலாம்.

அந்த பலம்தான் அவருக்கும் மைலாப்பூர் எம் எல் ஏ பதவியை வாங்கித் தந்தது.அந்த பலஹீனம்தான் கட்சி மேலிடத்தில் அவர்மீது அதிருப்தியை ஏற்படுத்தியது எனலாம்

1960 ஆம் ஆண்டு அவரின் நாடகப்பணி ஆரம்பித்தது எனலாம்.70களில் அவரது தந்தை எஸ் வி வெங்கட்ராமனின் கற்பகம் கலா மந்திர் நாடகக்குழுவில் அவரை மேடை நிர்வாகியாகவும், ஸ்பெஷல் ஒலி பரப்பாளராகவும் ஆக்கியது எனலாம்

பின் வி கோபாலகிருஷ்ணனால் இவர் நடிகராக ஆக்கப்பட்டார்.

1973ல் தன் சொந்த நாடககுழுவான நாடகப்பிரியாவை ஆரம்பித்தார்

1985ஆம் ஆண்டு இவரின் எட்டு நாடகங்கள் காலை 7 47க்குத் தொடங்கி இரவு 1 49 வரை தொடர்ந்து நடந்து லிம்கா புக் ஆஃப் ரிகார்டில் இடம் பெற்று சாதனை புரிந்தது

மைலாப்பூர் அகடெமியில் நகைச்சுவை நடிகருக்கான விருதினை தொடர்ந்து 3 ஆண்டுகள் பெற்றார்

தமிழக அரசின் கலைமாமணி, கலைவாணர் விருதுகளும் இவருக்குக் கிடைத்துள்ளது.

தவிர்த்து பல சபாக்கள் இவருக்கு சிறப்புப் பட்டங்கள் அளித்து கௌரவித்துள்ளனர்

கிட்டத்தட்ட இதுவரை இக்குழு 25 நாடகங்களை அரஙேற்றியுள்ளது. அவை 7000 காட்சிகளுக்கும் மேல் நடைபெற்றுள்ளன

யூ எஸ் ஏ., யூரோப்,சவுத் கொரியா,சிங்கப்பூர், மலேசியா மற்றும் அரேப் நாடுகள் என பல நாடுகளிலும் இவரது  நாடகங்கள் நடந்துள்ளன

அடுத்த பதிவில் இவரது நாடகங்கள் பற்றிப் பார்ப்போம்

(அடுத்தவீட்டு ஜன்னல் 2 பார்வை அடுத்த பதிவிலும் தொடரும்)

Wednesday, October 24, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி 3)



காத்தாடியின் குழுவில் அவருடன் நடித்து வந்த, T D சுந்தரராஜன், டெல்லி கணேஷ், ராமபத்ரன், மணக்கால் மணி, சுந்தரராஜன்(ரெயில்வேஸ்), பம்மல் பாச்சா, மேகலா, ஸ்ரீ லலிதா, எஸ் என் பார்வதி என அனைவரும் மிகவும் திறமைசாலிகளாய் திகழ்ந்தனர்

பின்னர்

எஸ்.லட்சுமி நாராயணன் . சென்னை டெலிஃபோன்சில் அதிகாரியாய் பணிபுரிந்து வருபவர்.

அவர், காத்தாடிக்கு  நாடகங்கள் எழுத ஆரம்பித்தார் எஸ் எல் நாணு என்ற பெயரில்..

அவரின் சில நாடகங்கள்..

"நீங்க யார் பக்கம்" 'அப்பா..அப்பப்பா', சூப்பர் குடும்பம், ஐக்கிய முன்னணி, பிள்ளையார் பிடிக்க, வாட்ஸ் அப் வாசு, நினச்சது ஒன்னு,  நீயா நானா,வீடு வரை உறவு ,நன்றி மீண்டும் வாங்க,ஏ டி எம்.,ஜுகல் பந்தி ஆகியவை அவற்றில் சில

நாணுவும் உடன் நடித்தார்.அவரைத் தவிர்த்து எஸ்பி ஐ முரளி, ஸ்ரீனிவாசன், லாவண்யா வேணுகோபால் ஆகியோர் இன்று காத்தடியுடன் நடித்து வருபவர்கள்

இவரது நாடகக்குழு 53 ஆண்டுகளில் 47க்கும் மேற்பட்ட நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.கிட்டத்தட்ட 7500 முறை இவரது நாடகங்கள் நடந்துள்ளன.

கலைமாமணி, நாடகக் கலா சிரோன்மணி,நாடக சூடாமணி, நாடக ரத்னம் ஆகியவை இவர் வாங்கியுள்ள கணக்கில்லா விருதுகளில் சிலவாகும்

சங்கீத நாடக அகடெமி இவருக்கு சமீபத்தில் அம்ரித் விருது வழ்னகியுள்ளது 

மேடை நாடகங்களைத் தவிர்த்து இதுவரை காத்தாடி 70படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

நட்புக்கு முதலிடம் கொடுப்பவர் காத்தாடி.அதற்கான ஒரே ஒரு உதாரணம்..

இவருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் குழுவினை ஆரம்பித்த இவர் நண்பர் Bobby  மறைந்தாலும், இன்னமும் அறிவிப்புகளில் நாடகத் தயாரிப்பாளர்கள் பெயர் சொல்லும் போது அவரையும் சேர்த்தே சொல்லுவார்

தன் குழுவினைத் தவிர பிறக் குழுவினருக்கும் அவ்வப்போது ஆபத்பாந்தவனாய் நடித்து உதவுவார் காத்தாடி.

ஸ்ரத்தா குழுவினருடன் இவர் இணைந்துள்ளார்.அந்த நாடகங்களிலும் சிலவற்றில் நடித்துள்ளார்.

ராதுவின், கல்யாணத்தில் கலாட்டா நாடகத்திலும் நடித்துக் கொடுத்துள்ளார்

சமீபத்தில் கோமல் சுவாமிநாதனின் மகள் தாரிணி கோமல் , தன் தந்தை பெயரில் கோமல் தியேட்டர்ஸ் என்ற குழுவினைத் தொடங்கி, பிரபல் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மேடையேற்றினார்

அவற்றில் ஒன்று தி ஜானகிராமனின் "விளையாட்டு பொம்மைகள்" சிறுகதை.அதில் காத்தாடி நடித்துக் கொடுத்தார்.

இமாலய நடிகரான அவரின் நடிப்பு இந்நாடகத்தில் சிகரத்தைத் தொட்டது எனலாம்.

நகைச்சுவை நடிகன் ஒருவனால் எந்த பாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க முடியும் என நான் அடிக்கடி என் குழுவினருக்குக் கூறுவேன்.

அது, எந்த அளவிற்கு உண்மை என்பது இந்நாடகத்தில் காத்தாடியின் நடிப்பைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்

காத்தாடி மேன் மேலும் பறந்திட நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோமாக

(அடுத்த பகுதி..அடுத்தவீட்டு இரண்டாம் ஜன்னல் பார்வை) 

Tuesday, October 23, 2018

அடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி -2)



(காத்தாடி ராமமூர்த்தி...தொடர்ச்சி)

1965ஆம் ஆண்டில் ஒருநாள், நண்பர்கள் சிவாஜி சதுர்வேதி,T D சுந்தரராஜன்,Bobby ரகுநாதன் ஆகியோருடன் இணைந்து ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினைத் தொடங்கினார் காத்தாடி.

தி ஹிந்து பத்திரிகையில் வேலை செய்து வந்த கோதண்டராமன் என்பவர் நண்பர் ஒருவர் மூலம் காத்தாடிக்கு அறிமுகமானார்.

அந்த கோதண்டராமன்தான் , அனைவராலும் பின்னாளில் அறியப்பட்ட situation comedy மன்னன் கே கே ராமன் ஆவார்.அவர் ஸ்டேஜ் கிரியேஷன்ஸிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தார்.அந்நாடகம் "இணையில்லா ஜோடிகள்" (Matchless Matches)

மாபெரும் வெற்றி நாடகமாக அது அமைய, பின்னர் அவர் எழுத்தில், "Good bye to Love", Runaway Husband" படி தாண்டிய பதி ஆகிய நாடகங்களை ராமமூர்த்தி அரங்கேற்றினார்.

இந்நிலையில் விசுவின் நட்பு கிடைக்க..காத்தாடியின் குழுவிற்கு விசு நாடகங்கள் எழுதினார்.முதல் நாடகம் "டௌரி கல்யாண வைபோகமே".விசு இயக்கிய முதல் நாடகமும் இதுதான்.அடுத்து, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இருவர் சாம்ராஜ்ஜியம்தான்.

:சிரித்துக் கொண்டே அழுகின்றேன்", சத்தியவான் சாவித்திரி", "பட்டினப்பிரவேசம்" ஆகியவை சில முக்கியமான நாடகங்களாகும்.

பட்டினப்பிரவேசம் நாடகத்தை இயக்குநர் கே பாலசந்தர் பலமுறை சென்று பார்த்தார்.பின்னர் அதை திரைப்படமாக்க எண்ணினார்.

இந்நாடகத்தில் தான் டில்லி கணேசன் நாடக உலகிற்கு அறிமுகமானார்.அவர் மேடையில் ஏற்ற வேடத்தையே திரைப்படத்திலும் அவருக்கு அளித்தார் கேபி.தவிர்த்து அந்நாடகத்தில் இன்னசெண்ட் தண்டபாணியாக நடித்த காத்தாடியும் திரையில் அவ்வேடத்தை ஏற்றார்

பின்னர் காத்தாடி குழுவினருக்காக கிரேசி மோகன் அய்யா அம்மா அம்மம்மா என்ற நாடகத்தை எழுதினார்.

இந்நிலையில் திருவல்லிக்கேணியில் வசித்து வந்த நாடக உலக ஜாம்பவான்களில் ஒருவரான நடராஜன் , காத்தாடியை தொலைபேசியில் அழைத்தார்.

இந்த நடராஜன் , தேவரின் "துப்பறியும் சாம்பு" கதையை நாடகமாக்கி புகழ் பெற்றவர்.மக்களால் "சாம்பு" நடராஜ ஐயர் என ஆழைக்கப்பட்டவர்.அவர் தொலைபேசியில் காத்தாடியிடம் "சாம்பு நாடகத்தை மீண்டும் நடத்த இருப்பதாகவும், மூப்பின் காரணமாக தான் நடிக்க முடியாது என்றும், சாம்பு வேடத்தை காத்தாடி நடத்தித் தர வேண்டும்" என்றும் கூறினார்.

காத்தாடியும் சம்மதித்தார்.நாடகம் நடந்து முடிந்த அன்று நடராஜ ஐயர், காத்தாடியை அன்புடன் அணைத்து, "என்னை விட அருமையாக அப்பாத்திரத்தில் நடித்தாய்" என பாராட்டினார்

பின்னர் அந்த சாம்புவின் மைந்தனாக "Son of Sambu"என்ற நாடகத்திலும் காத்தாடி நடித்து பாராட்டினைப் பெற்றார்.

(ஜன்னல் பார்வை 1 மேலும் தொடரும்)

Monday, October 22, 2018

அடுத்தவீட்டு ஜன்னல் - 1

(நம் வீட்டில் ஆயிரம் குற்றம் ,குறைகளை வைத்துக் கொண்டு..அடுத்தவீட்டு ஜன்னல் வழியே..அந்த வீட்டு வம்புகளை அறியும் ஆவல், சாதாரணமாக அனைவருக்கும் உண்டு.ஆனால்..இத்தொடர்..மற்ற நாடகக் குழுக்களின் சாத்னையாள நண்பர்களைக் குறித்த விவரங்களை அளிப்பது.பல இளைஞர்களுக்கு இது பலனளிக்கும் என்று எண்ணுகின்றேன்)




காத்தாடி ராமமூர்த்தி....

1953ஆம் ஆண்டு கும்பகோணத்தில் பாணாத்துறை உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பை முடித்த சுந்தரேச ராமமூர்த்தி, மேலே படிக்க சென்னை வந்தார்.

விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தார்..

கல்லூரியில், முதலாம் ஆண்டு முடிவில் ஆண்டு விழாவில், அமரர் தேவனின் "கோமதியின் காதலன்" நாடகம் நடந்தது.அதில் வரும் வில்லன் பக்கிரிக்கு அடியாள் வேடத்தில் நடித்தார் ராமமூர்த்தி.

அவருடன், கல்லூரித் தோழர்களான ஜெயஷங்கர், அம்பி (சோ அவர்களின் சகோதரர்) ஆகியோரும் அந்நாடகத்தில் நடித்தனர்


பின் ஒருநாள் ராமமூர்த்தி ஆர் ஆர் சபாவின் செயலாளராய் இருந்த நடேச ஐயரை சந்தித்தார்.அப்போது, பிரபல எழுத்தாளர் பகீரதன் தனது "தேன்மொழியாள்" நாவலைப்பற்றி அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.பகீரதன்.

உடனே, நடேச ஐயர், ராமமூர்த்தியிடம் "தேன்மொழியாள்' நாவலை நாடகம் ஆக்க முடியுமா? என்று பார்" என்றார்.

ராமமூர்த்தியும், அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் . குழந்தைகள் நிகழ்ச்சிகள் தயாரித்து, அனைவராலும் "ரேடியோ அண்ணா" என்று அழைக்கப்பட்ட கூத்தபிரானிடம் (இயற்பெயர் நடராஜன்) இதைச் சொல்ல..அவர் இயக்கத்தில் தேன்மொழியாள் மேடை நாடகமாக்கப்பட்டது.

"சோ" இந்நாடகம் மூலமே மேடைக்கு அறிமுகமானார்.தவிர்த்து இந்நாடகத்தில் அவரின் பாத்திரத்திற்குப் பெயர்"சோ'. அதுவே பின்னாளில் அவரின் பெயராகவும் ஆனது

ராமமூர்த்தி, இந்நாடகத்தில் பண்ணையாருக்கு உதவியாளராக நடித்தார்

1959ல் சோவின் "If I Get it"( என்னிடம் கிடைத்தால்) என்ற நாடகம் மேடையேறியது

அதில் வந்த மூன்று பாத்திரங்கள்

இடும்பன் என்ற பத்திரிகை ஆசிரியர்
ஆட்டாம்பாம் என்ற உதவி ஆசிரியர்
கார்ட்டூனிஸ்ட் காத்தாடி

இதில் கார்ட்டூனிஸ்ட் காத்தாடி பாத்திரத்தில் ராமமூர்த்தி நடித்தார்.

இந்நாடகத்திற்குப் பின்னர் அவர் "காத்தாடி"ராமமூர்த்தி என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

பின் சம்பவாமியுகே யுகே நாடகத்தில் காசி என்ற பாத்திரத்தில் நடித்தார்

(ஜன்னலின் முதல் பார்வை தொடரும்)

Sunday, October 21, 2018

நாடகபப்ணியில் நான் - 93

எங்கள் நாடகத்திற்கு..நடிகர்களுக்கு கிடைத்த விருதுகள் சில...

சிறந்த நாடகத்திற்கான மயிலாப்பூர் அகடெமி விருது

1)புதியதோர் உலகம் செய்வோம்
2) உயிருள்ள இறந்த காலங்கள் (சான்றிதழ்)
3) குடும்பம் ஒரு சிலம்பம்
4)இறைவன் கொடுத்த வரம் (கருத்துள்ள நாடகம்)

புதியதோர் நாடகத்தில் நடித்த ஏ எஸ் ராதாகிருஷ்ணனுக்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

உயிருள்ள இறந்த காலங்கள் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான சான்றிதழ்

குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்தில் நடித்த காவேரிக்கு சிறந்த நடிகைக்கான விருது

இறைவன் கொடுத்த வரம் நாடகத்தில் நடித்த பி டி ரமேஷிற்கு சிறந்த நடிகருக்கான விருது.ஃபாத்திமா பாபுவிற்கு சிறந்த நடிகைக்கான விருது.(இவ்விருவருக்கும் இதே நாடகத்திற்குகோடை நாடக விழாவில் சிறந்த நடிகர்/
நடிகைக்கான விருது)

ரமேஷிற்கு நூல்வேலியில் நடித்ததற்கான கோடை நாடகவிழாவில் சிறந்த நடிகருக்கான பரிசு

சொல்லக் கொதிக்குது நெஞ்சம், என்று தணியும், கறுப்பு ஆடுகள்,காத்தாடி ஆகிய நாடகங்களில் நடித்த ஜெயசூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான விருது நான்கு நாடகங்களுக்கும்

கரூர் ரங்கராஜனுக்கு பாரதரத்னா வில் நடித்தமைக்கான சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகத்தில் நடித்தமைக்கு சிறந்த நடிகருக்கான விருது

எனக்கு..நடிப்பிற்கு..பாரத ரத்னா, மாண்புமிகு நந்திவர்மன்,என்றும் அன்புடன் நாடகங்களுக்கானகோடை நாடக விழா விருதுகள்

பாரதரத்னா,சொல்லக் கொதிக்குது நெஞ்சம், கறுப்பு ஆடுகள், மழையுதிர்காலம் ஆகிய நாடகங்களுக்கு சிறந்த எழுத்தாளர் விருது..கோடை நாடக விழாவில்

சொல்லக்கொதிக்குது நெஞ்சம் சிறந்த நாடகம், இயக்கத்திற்கான விருது

காயத்ரி மந்திரம் நாடகம் சிறந்த நாடகத்திற்கான பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் விருது

சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் குடும்பம் ஒரு சிலம்பம் நாடகத்திற்கு சிறந்த நாடகத்திற்கான விருது

எனக்கு மைலாப்பூர் அகடெமியினரின் சிறந்த ஆல்ரவுண்டர் விருது கறுப்பு ஆடுகள் நாடகத்திற்கு

வெடெரன் விருது மைலாப்பூர் அகடெமியினரால்

எக்செல்லன்ஸ் விருது ராதுவின் நாடக அகடெமி சார்பில்

டி கே எஸ் கலைவாணன், டி கே ஷ்ண்முகம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் அளித்த "நாடகச் செல்வம்" விருது

பாரத ரத்னா நாடகத்திற்கு இலக்கியச் சிந்தனை விருது

கடைசியாக...

சாதாரணமாக ஒர் மேடை நடிகன் மேடையில் நடித்துக் கொண்டிருக்கும் போதே உயிர் போக வேண்டும் என்பான்..

அதில் எனக்கு உடன்பாடில்லை..

அவன் நேசிக்கும் மேடை ஏன் அப்பழியை ஏற்க வேண்டும்?

ஆகவே..

நான் விரும்புவது..

உடலில் நாடகப்பணியாற்றிடும் தெம்பு இருக்கும் நேரத்திலேயே..முடிவும் வந்துவிட வேண்டும் என்பதே!

இத்தொடரை விரும்பிப் படித்து தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

(முற்றும்)



Saturday, October 20, 2018

நாடகப்பணியில் நான் - 92

1979ல் ஆரம்பித்த என் சௌம்யா குழு அடுத்த ஆகஸ்டில் தனது 40 ஆவது ஆண்டை பூர்த்தி செய்கிறது

என்னுடன் பணியாற்றியவர்கள் கூறித்து இதுவரை எழுதிவிட்டேன்

 இந்நாள் வரை எனது நாடகங்களில் நடித்த  மேலும் சிலநடிகர்கள்..

சக்தி, வாசுதேவன்,மகேஸ்வரி, கற்பகம், ராஜஸ்ரீ, ஸ்ரீராம், ரமணி, கிரீஷ் வெங்கட், அம்பி நாகராஜன், பிரகாஷ், நரேன் பாலாஜி,விஜயஸ்ரீ,நியூக்ளியர் ஸ்ரீனிவாசன், ரவிகுமார்,ராம்பிரசாத்..இப்படி பட்டியல் நீள்கிறது..

ஆபத்பாந்தவனாக உதவிய மற்ற குழுவினைச் சேர்ந்த எம் பி மூர்த்தி, தில்லை ராஜன், ஷங்கர்..(இப்பட்டியலும் நீண்டது)

சௌம்யா குழுவில் நடித்தவர்கள் 40 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கானோர்.

எனது ஸ்கிரிப்டை மேடையேற்றிய மற்ற கீதாஞ்சலி, குட்வில் ஸ்டேஜ், ஜெய கீர்த்தனா கிரியேஷன்ஸ், பிரசித்தி கிரியேஷன்ஸ்

ஆகிய அனைவருக்கும் நன்றிகள்

தொழில் நுட்பக் கலைஞர்கள் வரிசையில்..

நாற்பது ஆண்டுகளாக சீன் செட்டிங்க்ஸ் எக்செல்லன்ட் மணியும் அவருக்குப் பின் அவர் பணியைத் தொடர்ந்த சைதி குமார் மற்றும் ஷண்முகம் ஆகியோர்

ஆரம்ப காலங்களில் ஒலி/ஒளி அமைப்பு  கோம்ஸ் அதன் பின்னர் கலைவாணன் (கலைவாணர் எலக்ட்ரிகல்ஸ்)பின் கிச்சா (கிருஷ்ணன்)

ஒப்பனை நேரு,ராதா முதல் சில நாடகங்களுக்கு பின்னர் வேணுவும் அவர் உதவியாளராய் இருந்த பெரம்பூர் குமாரும்.

வேணுவிற்குப் பின் இன்றுவரை தொடர்ந்து பெரம்பூர் குமார் எங்களது குழுவின் ஆஸ்தான ஒப்பனைக் கலைஞராகத் திகழ்கிறார்

இவர்கள் அனைவருக்கும் எனது நன்றி

கடந்த 40 ஆண்டுகளாக எங்கள் குழு நாடகம் நடத்த சந்தர்ப்பம் அளித்து வரும் அனைத்து சபாக்களுக்கும் என் நன்றி

ஊடகங்களில்..எங்களது நாடகங்களை விமர்சனம் செய்த கார்த்திக், சேரா , சாருகேசி(தினமணி), வீயெஸ்வி (விகடன், அமுத சுரபி, தமிழ் இந்து), கீழாம்பூர் (தினமணி, கலைமகள்) பாலகோபால் (தினமலர்)., மக்கள் குரல் (ராம்ஜி), ராமமூர்த்தி (இந்தியன் எக்ஸ்பிரஸ்) , பாலசுப்ரமணியம், கௌசல்யா சந்தானம், கீதா வெங்கட்ரமணன் (தி ஹிந்து) மற்றும் அனைத்து விமர்சகர்களுக்கும் நன்றி

(அடுத்த பதிவுடன் முற்றும்)


Friday, October 19, 2018

நாடகபப்ணியில் நான் - 91



என் எண்ணம்-எழுத்து- இயக்கத்தில் ஜெய கீர்த்தனா கிரியேஷன்ஸிற்காக நான் எழுதிய நாடகம் "என்னுயிர் நின்னதன்றோ"

இதில் அம்பி ராகவன் , கிரீஷ் வெங்கட், சுரேஷ், அஷோக் ஆகிய இளைஞர்களுடன் ரமணன் தந்தை வேடத்தில் நடித்தார்.

அண்ணன் தம்பிகளிடையேலான பாசத்தை மையமாகக் கொண்ட நாடகம்.

அண்ணன் பாரதிக்கு  உடல்நலம் சரியில்லாமல் போகும், அப்போது தம்பி கூறுவாந் "அண்ணா! உன்னைக் காலால் மிதிக்கிறேன் வாடான்னு அன்னிக்கு பாரதி சொன்னான்..ஆனா..இன்னிக்கு நான் சொல்றேன்..என் அண்ணனுக்காக அந்தக் காலனை நான் காலால் மிதிப்பேன் அண்ணா" என்று.இக்காட்சியில் ராகவனின் நடிப்பும், அண்ணனாக நடித்த கிரீஷ் வெங்கட் நடிப்பும் ரசிகர்களிடையே கைதட்டல்களை வாங்கிக் கொடுக்கும்.

இது போல பல உயிர்ப்புள்ள வசனங்கள் நாடகத்தை வெற்றி நாடகமாக ஆக்கின.

நான் எழுதிய 26ஆவது நாடகம் இது.

Thursday, October 18, 2018

நாடகப்பணியில் நான் - 90

வார்த்தை தவறிவிட்டாய் என்ற நாடகத்தில் பல புது நடிகர்கள் நடித்தனர்.

அவர்களுடன் நான், மணிபாரதி நடித்தோம்.உடன் ஷீலா கோபி என்றநடிகை , அம்மா, மகள் என இரு வேடத்தில் நடித்தார்.

அடுத்து எங்களது நாடகம் "பாரத ரத்னா" .இந்நாடகத்தில் கரூர் ரங்கராஜன் முக்கிய வேடம் ஏற்றார்.நானும் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடித்தேன்

தவிர்த்து,"ரசா" சுந்தர், சுவாமிநாதன் ஆகியோர் நடித்தனர்.

மாபெரும் வெற்றி நாடகமாக இது அமைந்ததுடன், பல விருதுகளையும் பெற்றுத் தந்தது.

அடுத்து அரங்கேறியது "சொல்லக் கொதிக்குது நெஞ்சம்".கரூர் ரங்கராஜன், முத்து சுப்பிரமணியம், நான் ஆகியோர் முக்கியப் பாத்திரத்தில் நடித்தோம்.

தலித் பிரச்னை, விவசாயிகள்  பிரச்னை, நதி நீர் பிரச்னை ஆகியவற்றை மையமாகக் கொண்ட கிராமத்து கதை இந்நாடகம்.

இந்நாடகமும் பல பரிசுகளை வென்றது 

Wednesday, October 17, 2018

நாடகப்பணியில் நான் - 89

"வேதம் புதிதல்ல" இது 90ல் அரங்கேறிய எங்கள் நாடகம்.

நண்பன் செய்த நம்பிக்கைத் துரோகம்..இதுவே இந்நாடகத்தின் ஒன்லைன்.

வழக்கம் போல மணிபாரதி, ராம்கி, நான் , காவேரி ஆகியோர் நடித்தோம்.

காவேரிக்கு, அன்னை, மகள் என இரு வேடங்கள்.இரண்டையும் வேறுபடுத்தி மிக அருமையாக நடித்தார்.

எனக்கு இளைஞன்..பின்னாளில் கோவில் குருக்கள் வேடம்

மணிபாரதிக்கு இளைஞன்..பின்னாளில் பாதிரியார் வேடம்

இந்நாடகத்தில் கதாநாயகனாக ஒருவரை அறிமுகப்படுத்தினோம்.அவர் பெயர்..

ராஜேந்திரன்...

ஆம்..பின்னாளில் பெரிய நாடக நடிகராகவும், திரைப்பட கலைஞராகவும், டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கத்தின் தலைவராகவும் திகழ்ந்த ராஜேந்திரன் தான்..

நாடகத்தின் வெற்றிக்கு மாபெரும் பங்கு இவருக்கும் உண்டு

நான்...சௌம்யாவின் சாதனைகளை அசைப் போடும்போதுதான் எவ்வளவு கலைஞர்கள் என் குழுவில் நடித்துள்ளனர் என்ற வியப்பினை ஏற்படுத்தியது.

நாடகப்பணியில் என் பங்கு சிறிதானாலும்...என் குழுவின் மூலம் நடிகர்கள் ஆனவர்கள், என் குழுவில் நடித்தவர்கள் என எவ்வளவு  நடிகர்கள்...

மனம் மகிழ்கிறது

Tuesday, October 16, 2018

நாடகப்பணியில் நான் - 88



வெங்கட் எழுதிய "குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகம் சௌம்யா அடுத்ததாக அரங்கேற்றம் செய்தது.

வெங்கட்டுக்கே உரிய தனிப் பாணியில் உருவான குடும்பக் கதை.அருமையான வசனங்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தினைச் சொல்ல ஆசைப்படுகின்றேன்.

வெங்கட், விசு, வேதம் புதிதல்ல கண்ணன் இவர்கள் எழுதும் ஸ்கிரிப்டுகளைப் படித்தால்...ஒவ்வொன்றிலும் எவ்வளவு விஷயங்கள் இருக்கும் தெரியுமா? புதிதாக எழுதுபவர்களுக்கு..இவர்கள் எழுத்துகள் தங்கச் சுரங்கம் போல.படிக்கப் படிக்க பல புது கற்பனைகள் உருவாகும்.

"குடும்பம் ஒரு சிலம்பம்" நாடகமும் அப்படியே.

இந்நாடகத்தில், காவேரி முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்தார்.தவிர்த்து ரமேஷ், ராம்கி, கோவை காமாக்ஷி, நான், மணிபாரதி என நடிகர் பட்டாளம்.இயக்கம் வெங்கட்.பின், நாடகத்தின் வெற்றிக்குக் கேட்கவா வேண்டும்?

ரமேஷ்(இவரும் பி டி ரமேஷ்..சௌம்யாவின் ஆஸ்தான ந்டியக்ர் ரமேஷ் அல்ல) நடிக்க இயலாமல் போயிற்று சில காட்சிகள் முடிந்த நிலையில்.

அப்போது, ஆபத்பாந்தவனாக , வெங்கட் தேர்ந்தெடுத்த நடிகர் சுந்தர் பிரசாத்.. இவரும் ஒரு அருமையான நடிகர்.இவர் ஏன் இன்று நடிப்பதை நிறுத்தி விட்டார் எனத் தெரியவில்லை.
ராம்கியின் சிறந்த நடிப்பும் நாடகத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது

நாடகம் சிறந்த நாடகமாக மைலாப்பூர் அகடெமி விருதினைப் பெற்றது.தவிர்த்து காவேரி சிறந்த நடிகையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தவிர்த்து, சிவகாசி ஃபைன் ஆர்ட்ஸ், அந்த ஆண்டு (1989) வந்த  நாடகங்களில் சிறந்த நாடகமாக இதைத் தேர்ந்தெடுத்தனர்.

Monday, October 15, 2018

நாடகப்பணியில் நான் - 87



எனது அடுத்த காயத்ரி மந்திரம் நாடகத்தில் நடித்தவர்கள்

மணிபாரதி, ரமேஷ், நான், மற்றும் பிரேமா என்ற நடிகை.

பிரேமா...டி எஸ் சேஷாத்ரி நாடகத்தில் நடித்து வந்தவர்.தவிர்த்து அவ்வப்போது யூஏஏ நாடகங்களிலும் நடித்துள்ளார்.

எனது , "காயத்ரி மந்திரம்" நாடகத்தில் காயத்திரியாக நடித்தார்.நாடகத்தில் முக்கியப் பாத்திரம் .மிகச் சிறந்த நடிப்பு.

அவரைத் தவிர்த்து, ரிசர்வ் பேங்கில் வேலை செய்து வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவரும் குணசித்திர வேடம் ஒன்றை ஏற்றார்.நாடகவெற்றிக்கு இவரும் ஒரு காரணம் எனலாம்.

பிரேமாவின் மகள் தேவிலலிதா என்பவர் நாயகியாக இந்நாடகம் மூலம் அறிமுகமானார்.

பின்னர், இவர் சில திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றார்

பாலாஜி ஃபைன் ஆர்ட்ஸ் அந்த ஆண்டு மேடையேறிய நாடகங்களில் இந்நாடகத்தை சிறந்த நாடகமாக தெர்ந்தெடுத்தது.

சிறந்த நாடகங்களுக்கான சுழல் கோப்பையினை பெற்றோம்.இதில் என்ன விஷேசம் எனில்..அக்கோப்பையை 'சௌம்யா" குழு வினர் தான் ஆண்டு தோறும் சிறந்த நாடகங்களுக்கு அளிக்க ஸ்பான்சர் செய்தது.

இந்நாடகமும் ஒரு வெற்றி நாடகமாக சௌம்யாவிற்கு அமைந்தது .

Sunday, October 14, 2018

நாடகப்பணியில் நான் - 86

அடுத்து அரங்கேறிய "இதயம் வரை நனைகிறது" என்ற நாடகத்தில் என்னுடன் நடித்த மற்ற கலைஞர்கள்..

மணிபாரதி, பி டி ரமேஷ்..இவர்கள் இருவரைத் தவிர்த்து..காவேரி என்ற நடிகையும் நடித்தார்

சிறந்த நடிப்பாற்றலைக் கொண்ட காவேரி, இந்நாடகத்திற்குப் பிறகு எங்களின் பல நாடகங்களில் நடித்தார்.

தவிர்த்து, இந்நாடகத்தில் நகைச்சுவை வேடத்தை பிரபல நகைச்சுவை நடிகர் எம்.ஆர்.கே., ஏற்றார்.

எனது மற்ற நாடகங்களைவிட இந்நாடகத்தில் நகைச்சுவை அதிகம்.

இந்நாடகமும் மாபெரும் வெற்றியினை ஈட்டித் தந்தது.

ஆனாலும், தொடர்ந்து எங்கள் குழுவின் நாடகங்களைப் பார்த்து வந்த ரசிகர்கள் எங்களிடம், "தொடர்ந்து நீங்கள் குடும்பப்பாங்கான நாட்கங்களையே போடுங்கள்' என்றனர்.

அப்போதுதான், ஒரு சில நாடகங்கள் ஒரு சிலக் குழுவினரே போட வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதை நான் உணர்ந்தேன்.

அது முதல் இன்றுவரை அதை நான் கடைப்பிடித்து வருகின்றேன் 

Saturday, October 13, 2018

நாடகப்பணியில் நான் - 85


எனது புயல் கடந்த பூமி நாடகத்தில் நடித்தவர்கள்..

மணிபாரதி, பி டி ரமேஷ் ஆகியோருடன் சுவாதி என்ற நடிகையும் பிரதான பாத்திரமேற்று நடித்தார்.

நாடகம்  ஒரு சிறிய சஸ்பென்ஸைக் கொண்டது.சௌம்யா குழுவிற்காக எழுதி வந்த பரத், தனக்கென தனிக் குழுவினை ஆரம்பித்ததால், சௌம்யாவிற்காக எழுத நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அதனால்  நான் எழுதுகோலை கையில் ஏந்தினேன்.

முன்னதாக சபா நடத்திய போது, ஆண்டுவிழாவிற்காக நான் "தேவை ஒரு மாப்பிள்ளை" என்ற நாடகத்தை எழுதியிருந்தாலும், எனது முதல் அதிகாரப்பூர்வமான நாடகம் "புயல் கடந்த பூமி" எனலாம்.

நாடகத்தில் மணிபாரதி எதற்காக அப்படி நடந்து கொள்கிறார்?அவரின் செயல்கள் ஏன் மர்மமாக உள்ளன? என்பது ஆவலைத் தூண்டுகிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் தன் விமரிசனத்தில் எழுதியிருந்தது

மேலும் இந்நாடகத்தில் நகைச்சுவைப் பாத்திரத்தை ஓமகுச்சி நரசிம்மன் ஏற்றார்.அவரால் நடிக்க இயலாமல் போன நாட்களில் பொன்மலை சுந்தர் நடித்துக் கொடுத்தார்.

நாட்கம் மாபெரும் வெற்றி நாடகமாக சபாக்களில் வலம் வந்து, என்னை நாடக ஆசிரியராக அங்கீகரித்தது.அதன் பின் இந்நாள் வரை 25க்கும் மேற்பட்ட நாடகங்களை நான் எழுதிவிட்டேன்.

ஆனாலும், முதல் குழந்தைக்கு சற்று செல்லம் அதிகம்தானே.எனது "புயல் கடந்த பூமி"யும் எனக்கும் அப்படியே 

Friday, October 12, 2018

நாடகப்பணியில் நான் - 84



என்னுடைய குழுவின் "உயிருள்ள இறந்த காலங்கள்" நாடகம் பல விதங்களில் ஒரு Trend setter ஆக அமைந்தது.

என் நண்பர் பரத் எழுதிய நாடகம் இது.

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நடைபெறுவது போன்ற  நிகழ்ச்சிகளைக் கொண்டது இந்நாடகம் என முன்னமேயெ சொல்லியுள்ளேன்.

பனி படர்ந்த மலையடிவாரத்தில், ராணுவ வீரர்களுக்கான டென்ட், வெடிக்கும் எலிகாப்டர் என தன் திறமை முழுதும் காட்டி அசத்தியிருந்தார் அரங்க அமைப்பாளர் எக்செலன்ட் மணி.

அவருக்கு இணையாக கோம்ஸ் ஒளி அமைப்பு.

ராணுவ வீரர்களுக்கான ஒப்பனையை திறம்படச் செய்திருந்தார் ஒப்பனைக் கலைஞர் வேணு.அவருடன் ஒல்லியாய் ஒரு உதவியாளரும் வருவார்.அந்த உதவியாளர் உதவி இல்லாமல் இன்றைய குழுக்கள் நாடகங்கள் நடத்த முடியா நிலை உருவாகியுள்ளது.அந்த அளவு திறமையை வளர்த்துக் கொண்டு இன்று தனி ஒருவனாக உலாவரும் ஒப்பனைக் கலைஞர் பெரம்பூர் குமாரே அவர்.

அவரது திறமைக்குச் சான்று ஒன்று...தெய்வத்துள் தெய்வம் என்ற மகாபெரியவாளின் நாடகத்தில் அவராகவே மூன்று கலைஞர்களுக்கு ஒப்பனைச் செய்தது.

அடுத்து மணிபாரதி, ராம்கி, சுவாமிநாதன், ஊட்டி குமார் இவர்களுடன் நானும் நடித்தோம்

இந்தியப் பெண்ணாகவும், பாகிஸ்தான் உளவாளியாகவும் பாலா என்றொரு நடிகை நடித்தார்.அவர் நடிக்க இயலா சில நாட்களில் குட்டி பத்மினி அப்பாத்திரம் ஏற்று நடித்து உதவினார்.

மைலாப்பூர் அகடெமி அந்த ஆண்டுக்கான சிறந்த நாடகம் என சான்றிதழ் வழங்கியது.

இந்நாடகத்தில்தான் இன்றும் எங்கள் ஆஸ்தான நாயகனாக விளங்கும் பி டி ரமேஷ் அறிமுகமானார்.அறிமுக நாடகத்திலேயே சிறந்த  நடிகருக்கான மைலாப்பூர் அகடெமியின் சான்றிதழைப் பெற்றார்.

பரத் அவர்களின் திறமையை பளீச்சிட வைத்த நாடகம் இது என்றால் மிகையில்லை எனலாம்.

Thursday, October 11, 2018

நாடகப்பணியில் நான் - 83



எங்களது நெஞ்சங்கள் வாழ்த்தட்டும் என்ற பரத் எழுதிய நாடகம்..முழுக்க முழுக்க எங்களது குழுவில் நடித்து வந்த ராம்கி என்ற நடிகரின் திறமையை வெளிக் கொண்ர வேண்டும் என்ற எண்ணத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட நாடகத்தின் அனைத்துக் காட்சிகளிலும் வரும் வீரபாகு என்ற பாத்திரம்.

ராம்கியும் அப்பாத்திரத்தை உணர்ந்து திறம்பட நடித்தார்,

இந்த இடத்தில் ஒன்றை சொல்ல ஆசைப்படுகின்றேன்..

ராம்கியின் திறமைக்கு..அவர் கலையுலகில் பிரகாசமாக இருக்க வேண்டியவர்.

அவரை கலையுலகு சரியாக பயன் படுத்த வில்லையா? அல்லது அவர் தன் திறமையை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையா? என்பது இதுவரை எனக்கு புரியாத புதிராகவே உள்ளது

இந்நாடகத்தில் அவரைத் தவிர முக்கியப் பாத்திரங்களில் நான், மணிபாரதி மற்றும் கல்யாணி என்றநடிகை ஆகியோரும்   இருந்தோம்
நாடகம் வெற்றி நாடகமாக அமைந்ததுடன் வீயெஸ்வி தனது விமர்சனத்தில்..விமர்சனம் எழுத அழகிய தலைப்பினைக் கொடுத்த குழுவினரை நெஞ்சம் வாழ்த்துகிறது எனவும் குறிப்பிட்டார்

Wednesday, October 10, 2018

நாடகப்பணியில் நான் - 82


எங்களது அடுத்த "புதியதோர் உலகம் செய்வோம்" நாடகம்..சௌம்யாவின் எதிர்காலத்தையேத் தீர்மானித்தது என்றால் மிகையில்லை.அந்த நாடகத்தில் என்னுடன் பங்காற்றியவர்கள்

பரத் எனும் சேதுராமன்
----------------------------------------
அந்த நாடகத்தை எழுதியவர் பரத்.அவரது இயற் பெயர் சேதுராமன்.இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஊழியர்.இவருக்கு இது முதல் நாடகம். தாயை இழந்த கூட்டுக் குடும்பத்தின் கதை.தாயுமானவனாய் தந்தை.

மணிபாரதி-
-------------------- இந்நாடகத்தில் தந்தையின் பாத்திரத்தை  ஏற்ற நடிகர் மணி.பாரதி.எனது குழுவில் இந்நாட்கம் மூலம் இணைந்தவர்.எல் ஐ சி யில் பணியாற்றியவர்.திரைப்படங்களிலும் நடித்தவர்.பாலைவனச் சோலை, தூங்காதே தம்பி தூங்காதே, நினைவெல்லாம் நித்யா, துடிக்கும் கரங்கள் ஆகியவை இவர் நடித்த சில படங்கள்.இவர் சௌம்யாவின் ஆஸ்தான நடிகராக ஆனார் இந்நாடகத்திற்குப் பின்.

குட்டி பத்மினி
---------------------
இந்நாடக்ம அரங்கேறி சில காட்சிகள் வரை கமலா லாமேஷ் நடித்தார்.பின்னர் அவர் நடிக்க இயலவில்லை.அந்த கால கட்டத்தில் ஆபத்பாந்தவராக வந்தவர் குட்டி பத்மினி.இந்நாடகம் நடந்து முடியும் வரை அனைத்துக் காட்சிகளிலும் இவரே நடித்தார்

ஊட்டி குமார்_
---------------------கரீமுதீன் என்ற இவர் என்னுடன் ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்.தன் பெயரை ஊட்டி குமார் என மாற்றிக் கொண்டு இந்நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.

மற்றபடி முதல் நாடகத்தில் நடித்த நண்பர்களும் இதில் நடித்தனர்

இந்நாடகத்திற்கு ஒளி அமைத்தவர் கோம்ஸ் ஆவார்.
இவரின் ஒளி அமைப்பு, மேடையில் சிலுவை மேலிருந்து இறங்கும் காட்சி ஆகியவை சிறப்பு

நாடகத்திற்கு இசை அமைத்தவர்கள் கோபு- பாபு ஆவர்

நாடகம் மாபெரும் வெற்றி நாடகமாகத் திகழ்ந்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க இந்நாடகம் "ஆனந்தக்கண்ணீர்" என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்தது

Tuesday, October 9, 2018

நாடகப்பணியில் நான் - 81

இப்பதிவு முதல்..நான் நாடகப்பணியாற்றிட என்னுடன் பணியாற்றிய முக்கியக் கலைஞர்கள் பற்றிய சிறு குறிப்புகளைக் கொடுக்க இருக்கின்றேன்.

சௌம்யா குழுவில் இது வரை 100க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர்

இவர்கள் எல்லாம் இல்லையெனில் சௌம்யா குழு இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருக்குமா? என்பதே சந்தேகம்.இவர்களில் முக்கியக் கலைஞர்கள்
 பற்றிய சிறு குறிப்புகளைத் தர இருக்கின்றேன்.

எங்களது முதல் நாடகமான "யாரைத்தா கொல்லுவதோ" என்ற கே கே ராமன்- சாரதி ஸ்கிரிப்டில் நடித்தவர்கள்

ஒருவிரல் கிருஷ்ணா ராவ் - திரைப்பட நகைச்சுவை நடிகரான இவர் ஒரு விரல் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதுமுதல் இவர் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என அழைக்கப்பட்டார்.

இந்நாடகத்தில் ஒரு வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்தார்

கமலா காமேஷ் - என் நண்பரும், இசையமைப்பாளருமான காமேஷின் மனைவி.இதற்கு முன் சில குழுக்களில் நடித்து வந்தவர் இந்நாடகத்திலும் நடித்தார்.அவர் நடிக்க இயலா சில காட்சிகளில், பூர்ணிமா என்ற நடிகை நடித்தார்.

விஜய ஷங்கர்- என்னுடன் ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்.இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார்

பி எஸ் நாராயணன் - ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்து வந்தவர்.இந்நாடகத்திலும் நடித்தார்.

ராம்கி- ராமகிருஷ்ணன் என்னும் இவர், உயர்நீதி மன்றத்தில் வேலை பார்த்தவர்.இந்நாடகம் மூலமே நாடகத் துறையில் ராம்கி என அழைக்கப்பட்டார்

ஏ எஸ் ராதாகிருஷ்ணன் - செகரடேரியட் ஊழியர். நகைச்சுவை வேடம் ஒன்று ஏற்றூ நடித்தார்.

டி வி வி ராமானுஜம், மணிமோகன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்

இவர்களுடன் நான் ஒரு முக்கிய ஜோசியக்காரன் வேடத்தில் நடித்தேன்

அடுத்த நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்த பதிவில்.

Monday, October 8, 2018

நாடகப்பணியில் நான் - 80



பள்ளி நாட்களிலிருந்து நான் நடித்து வந்தாலும், 1979ல் சௌம்யா நாடகக்குழுவினை ஆரம்பித்து 40 ஆண்டுகளாக .வங்கிப் பணியிடையே நாடகப்பணியும் ஆற்றி வருகின்றேன் நான்.

 26 நாடகங்களை மேடையேற்றியுள்ளேன் நான்.
என் நாடகத்தில் நடித்த பலரைப் பற்றி சிறு  குறிப்புகளை எழுத இருக்கின்றேன்.

இந்நிலையில்..இளைஞர்களை அதிகம் தமிழ் நாடகங்களில் புகுத்த வேண்டிய நேரம் இது என்பதை உணர்ந்து...என் நாடகங்கள் உட்பட சில நாடகங்களில் நடித்து வரும் கிரீஷ் வெங்கட்,அம்பி நாகராஜன் இருவருக்கும் நாடகக்குழு ஒன்றினை ஆரம்பிக்கும் ஆரவம் இருப்பதை அறிந்து அவர்களை ஊக்குவித்தேன்.

பிரசித்தி கிரியேஷன்ஸ் என்ற நாடகக் குழுவினை அவர்கள் ஆரம்பித்தனர்.

முதல் நாடகமாக நான் எழுதிய "பௌர்ணமி நிலவில்" நாடகத்தை அவர்களே இயக்கி மேடையேற்றினர்.

நாடகம் பார்த்த அனைவரின் பாராட்டுதல்களுடன் நாடகம் தமிழ் மேடைகளில் நடைபெற்று வருகிறது.

நாடகத்தில் நடித்த அனைவரும் இளைஞர்கள்.அவர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்

Sunday, October 7, 2018

நாடகப்பணியில் நான் - 79



"இறைவன் கொடுத்த வரம்' நாடகம், ஃபாத்திமா பாபுவிற்கும், பி டி ரமேஷிற்கும் சிறந்த நடிகர்களுக்கான விருதினை கோடை நாடக விழாவில் பெற்று தந்தது.

தவிர்த்து.. மைலாப்பூர் அகடெமி 2016ஆம் ஆண்டு மேடையேறிய நாடகங்களில் இந்நாடகத்தை சிறந்த கருத்துள்ள நாடகத்திற்கான விருதினை அளித்தது.ஃபாத்திமா பாபுவிற்கு சிறந்த நடிகைக்கான விருதினையும், ரமேஷிற்கு சிறந்த நடிகனுக்கான விருதினையும் அளித்தி கௌரவித்தது.

இனி இந்நாடகத்தில் வந்த முக்கியமான வசனங்கள் சில...

1) வாழ்க்கையில நாம சந்திக்கற ஒரு சிலரை நாம கண்ணால மட்டும் பார்க்கறதில்ல.இதயத்தாலும் உணரச் செய்கிறோம்

2)நம்ம புள்ளைங்களுக்கு றெக்கை முளைக்கிறது அவங்க பறக்கத்தான்.அந்த றெக்கையின் நிழல்ல பெத்தவங்க சுகம் காணலாம்னு நினைக்கறது தப்பு

3)ஒரு தாய் மனைவியாக முடியாது.ஆனா ஒரு மனைவி நிச்சயமாக தாயாக முடியும்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்ட உயர்ந்த உறவு மனைவி ஒருவனுக்கு.அதனால தன் மனைவி சொல்றதைக் கேட்கறது தப்பில்லை.ஆனா மனைவி எதைச் சொன்னாலும் கேட்காதீங்கன்னு தானே சொல்றோம்.

4)மனைவி அமைவது,கணவன் அமைவது இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்லுவாங்க.ஆனா , உண்மையிலேயே ஒருவனுக்கு நல்ல பெற்றோர் அமைவதுதான் வரம்.எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்,தன் வாழ்வில் நேரம், பணம்,unconditional அன்பு என அவங்க செய்யற தியாகத்தை ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்க?


5)பிள்ளைங்க பெத்தவங்களை வயசான காலத்தில பார்த்துக்கணும்னு நினைக்கிறது கட்டாயம் இலலை.நம்ம மூலமா அவங்க வந்திருந்தாலும்..அவங்க...அவங்க..அவங்க அவங்க வாழ்க்கையை வாழ பிறந்தவங்க! அவ்வளவுதான்.அவங்க நம்மை கவனிக்க பிறந்த பிறப்பல்ல.நம்ம வாழ்க்கை நம்ம இரண்டு பேரோடத்தான்.என் வாழ்க்கையில நீ எனக்கு நிழலா இருந்திருக்க.இளமையில் தன் துணையோட அவசியத்தைவிட முதுமையில் அதிகம் தேவை புரிஞ்சுக்கிட்டேன்

Saturday, October 6, 2018

நாடகப்பணியில் நான் - 78



அடுத்து என் எண்ணம்-எழுத்து- இயக்கத்தில் உருவான நாடகம் "இறைவன் கொடுத்த வரம்" நாடகம்.

ஒரு ஆதர்ச தம்பதியினர் கதை.

கணவன்-மனைவி இருவருக்குமே நடிப்பிற்குத் தீனிப் போட்ட நாடகம்.

கணவனாக பி டி ரமேஷ் நடித்தார்.சௌம்யாவின் ஆஸ்தான நாயகன்..ஆகவே..அவரை விட்டால் அப்பாத்திரத்திற்கு வேறு யாரும் என் கண்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் மனைவி பாத்திரத்தில் நடிக்க ஒரு திறமையான நடிகை வேண்டும்.நடிப்புக்கு சரியான தீனி போடும் பாத்திரம்.

என் மனதில் அப்பாத்திரத்திற்கேற்றவர்கள் என ஒரு சிலரை எண்ணியிருந்தேன்.

அவற்றில் ஒருவர் ஃபாத்திமா பாபு.

அவரை அணுகி அவரிடம் பாத்திரம் குறித்து சொல்லிவிட்டு ஸ்கிரிப்டைக் கொடுத்துவிட்டு வந்தேன்.

அடுத்த நாளே அவர் எனக்குத் தொலைப்பேசி, அந்த பாத்திரத்தை தானே நடித்துக் கொடுப்பதாகக் கூறினார்.

மற்றும்..ஸ்ரீராம்,கிரீஷ் வெங்கட்,ரமணன், விஜயஸ்ரீ ,நரேன் பாலாஜி ஆகியோரும் நடித்தனர்.இவர்களில் ஸ்ரீராம் எனது "என்று ம் அன்புடன்" நாடகத்தில் அறிமுகமான அற்புத நடிகர்.சிறப்பாக இந்நாடகத்திலும் நடித்துக் கொடுத்தார்

நாடகம் மாபெரும் வெற்றி..
ரமேஷும், ஃபாத்திமா பாபுவும் அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறி விட்டனர் எனில் மிகையில்லை.

அந்நாடகம் பற்றி மேலும் பல விஷயங்களை அடுத்தபதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, October 5, 2018

நாடகப்பணியில் நான் - 77

"என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்.

1) அப்பா - இவன் சின்னப்பையனா இருந்தப்போ..ஆஃபீஸ் போயிட்டு வரும் எனக்கு உடம்பு ரொம்ப வலிக்கும்.அப்ப இவன் மிதி மிதின்னு மிதிச்சு என் வலியைப் போக்குவான்.தலையிலிருந்து கால் வரை உருளுவான்.அப்போ அது அவனுக்கு விளையாட்டு.எனக்கோ சுகம்.ஆனா, இன்னிக்கு..இப்ப என் உடம்புல வலியில்லை.மனசுல வலி.அன்னிக்கு என்னை மிதிச்சு வலியைப் போக்கியவன், இன்னிக்கு மதிச்சு வலையைப் போக்க முன் வரல்லே

2)மனுஷனுக்கு உடம்பு ஆரோக்கியமா இருக்கறப்போ தன்னம்பிக்கை இருக்கு.உடம்பு பலவீனமானதும்..மனசும் பலவீனமாயிடுது

3)Father is the person who lost everything to make the son win

4)மகன் - என் வாழ்நாள் பூரா என்னோட இருக்கப்போற உறவை என் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கற உரிமைக் கூட எனக்கு இல்லையா

மாமா- உன் வாழ்க்கையா.உன்னோட அந்தஸ்து, செல்வாக்கு, பணம் ,கௌரவம் அத்தனைக்கும் அஸ்திவாரமான அசுர உழைப்பு உங்கப்பாவோடது

5)கோழி மிதிச்சு, குஞ்சுகள் முடமாகாது..உண்மைதான்...ஆனா இன்னிக்கு குஞ்சுகள் மிதித்து கோழிகள் முடமாகின்றன

6)இனிமே யாரையாவது நல்லவன்னு சொல்லணும்னா அவன் பேரு நல்லவனாயிருக்கணும்

7) ஆடி அடங்கும் வாழ்க்கை..ஆறடி நிலம்தான் சொந்தம்னு சொல்லுவாங்க.ஆனா..இன்னிக்கு..அடங்கி முடிஞ்சதும் ஒரு கையளவு சாம்பல்தான் மிச்சம்.அதையும் கடல்ல கரைச்சுடறோம்

8) கோபம் எப்பவுமே தன் பக்க நியாயங்களையே யோசிக்கும்.எதிராளியோட நியாயத்தைப் புரிஞ்சுக்காது

9) தன்மானத்துக்காக எதையும் இழக்கலாம்.ஆனா..எதுக்காகவும் தன் மானத்தை இழக்கக் கூடாது

10) உங்கள் பெற்றோரை அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குகள்.இறந்தபின் அவர்கள் கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை

11) கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இந்த உலகில்...கொடுத்துச் செல்வோம் உண்மையான அன்பையும், நட்பையும்   

Thursday, October 4, 2018

நாடகப்பணியில் நான் - 76

"என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து மேலும் சில வசனங்கள்

1) இன்னிக்கு எத்தனைப் பெண்கள்..எங்களை முகநூலில் எவ்வளவு பேர் follow  பண்றாங்கன்னு பெருமைப்படறாங்க! எங்கக் காலத்திலே ஒரு பெண்ணை ஒருத்தர் follow பண்ணினாளே கிழிச்சிடுவோம்
அந்த follow வேற..இந்த follow வேற
பண்ரது follow.இதில எந்த followவான்னா என்ன

2) என் தூரத்து சொந்தம் ஒருத்தன் யூ எஸ்ல இருந்து வந்து இருக்கான்
யாரைச் சொல்ற
என் பையனைத்தான் சொல்றேன்
உன் பையன் உனக்குத் தூரத்து உறவா
இல்லையா பின்ன..வெளிநாட்டில இருக்கற பசங்க..இந்தியாவில இருக்கற பெற்றோருக்கு தூரத்து சொந்தம்தானே!

3) நீ எள்ளுன்னா நான் விதைச்சவன் நான்டா.நான் விதைச்ச இந்த "எள்" ஒரு சரியான இடத்தில போய்ச் சேர்ந்து, அத்னோட பிறவிப் பயனை அடையணும்னு நினைக்கிறேன்

4)அப்பா...உங்க பெற்றோர் உங்களுக்குக் கொடுத்தது intialஐத்தான்.ஆனா..நீங்க எங்க பெயருக்கு முன்னால intialஐயும் பெயருக்குப் பின்னால் ஒரு B.E., ன்னோ,M B B Sன்னு எழுத்துகளையும் சேர்த்துக் கொடுத்துடறீங்க

(வசனங்கள் இன்னமும் வரும்) 

Wednesday, October 3, 2018

நாடகப்பணியில் நான் - 74



சாதாரணமாக நாடகக் குழுக்களுக்கு, குறிப்பாக அமெச்சூர் குழுவினருக்கு, அவ்வப்போது யாரேனும் ஒரு நடிகரால் வர இயலாமல் போகிவிடும்.

அது போன்ற நேரங்களில், பிற நட்பு குழுக்கள் உதவியாக வரும்.அதாவது, அந்தக் குழுவில் நடிக்கும் நடிகர் ஒருவர், வர இயலாமல் போகும் நபரின் பாத்திரத்தை ஏற்று குறுகியக் காலத்தில் தயாராகி நடித்துக் கொடுப்பார்

அப்படி, பல சந்தர்ப்பங்களில் சௌம்யா குழுவிற்காக நடித்துக் கொடுத்தவர் மயூரப்பிரியாவின் முத்துக்குமரன் ஆவார்.

தவிர்த்து, அந்த நாட்களிலேயே எங்களது சௌம்யா குழுவின் "காயத்ரி மந்திரம்" நாடகத்தில் தில்லை ராஜனும், சங்கரும் (இன்றைய இயக்குநர்) நடித்துக் கொடுத்துள்ளனர்.

எஸ் பி ஐ முரளி சில நாடகங்களில் நடித்துக் கொடுத்துள்ளார்.சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகம் மதுரையில் நடந்த போது எம் பி மூர்த்தி உதவியுள்ளார்.

அவர்கள் அனைவருக்கு என் நன்றிகள்.

இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.

என்றும் அன்புடன் நாடகம் அரங்கேறியப் பிறகு, அடுத்த தேதிகளில் நடைபெறுமா? என்ற பிரச்னை வந்தது என்றேனே! அதை எளிதாகத் தீர்த்து வைத்தார் என் நண்பர்.அது என்ன தெரியுமா?

அந்நாடகத்தில் முக்கியமான கும்பகோணம் மாமா பாத்திரத்தில் முதல் நாளன்று நான் நடித்தேன்.

அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காவில் வசித்து வரும் எனது மகள் வீட்டிற்கு நான் செல்ல வேண்டிய நிலை.

அப்போது.குருகுலம் எம் பி மூர்த்தியிடம், நிலைமையை விளக்கிக் கூறி..அந்தப் பாத்திரத்தில் நடித்துத் தர முடியுமா? என்றேன்.

அவரும் உடனே தன் உதவிக் கரத்தை நீட்டினார்.

சாதாரணமாக ஓருரு காட்சிகளுக்கு மட்டுமே பிற நண்பர்கள் உதவுவர்.ஆனால்  மூர்த்தி..அந்த நாடகம் சபாக்களில் நடந்து முடியும் வரை நடித்துக் கொடுத்தார்.

இது போன்ற நண்பர்களை எண்ணும் போது எனக்கு வள்ளுவன் சொன்ன மழையே ஞாபகம் வருகிறது

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு

(கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறு கருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்)

அவருக்கு என் அன்பும் நன்றிகளும்

Tuesday, October 2, 2018

நாடபப்பணியில் நான் - 75

எனது "என்றும் அன்புடன்" நாடகத்திலிருந்து சில வசனங்கள்-

1)ஊர்ல இருக்கற முகம் தெரியாத நண்பர்கள் பிறந்த நாள், திருமணநாளை எல்லாம் ஞாபகம் வைத்திருக்கும் நாம் நம் தாய் தந்தையின் பிறந்த நாள்,திருமணநாளை நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை

2)பெத்தவங்க மேல அன்பும், பாசமும், பக்தியும் வைக்காதவன் முன்னால தெய்வமே வந்து நின்னாலும் அவனாலே அதைக் காணமுடியாதுன்னு வேதங்கள் சொல்லுது

3)தன் குழந்தைகளோட வருங்காலத் தேவைகளை மனசுக்குள்ளே கணக்குப் போட்டு..தன்னோட தேவைகளையும்,சுகங்களையும் ஆரம்ப நாட்களில் இருந்தே தியாகம் செய்யற புண்ணிய ஆத்மா அப்பாக்கள்தான்

4)எல்லா உறவுமே நீரில் மிதக்கற கட்டைகள் மாதிரிதான்.சந்தர்ப்பம் காரணமாக எல்லாம் ஒன்னா மிதக்குது.அப்புறமா..வாழ்க்கைங்கற தண்ணியோட வேகத்திற்கு ஏற்ப ஒன்னை ஒன்னு பிரியுது

5)மகாபாரதத்தில அபிமன்யூ பத்மவியூகத்தில சிக்கி வெளியே வரத் தெரியாம இறந்ததும், அர்ச்சுனன் அவனைக் காண பாசத்தோட சொர்க்கத்திற்குப் போனானாம்.அங்கு இருந்த மகன் அபிமன்யூவை நெருங்கினான்.அபிமன்யூவோட உணர்ச்சியில எந்த மாற்றமும் இல்லை.

அர்ச்சுனன், "மகனே! உன் அப்பா வந்து இருக்கேன்"னான்

அதுக்கு அபிமன்யூ, "ஓ அப்படியா! நான் எத்தனையோ ஜன்மங்கள் எடுத்து இருக்கேன்.நீ என்னோட எந்த ஜன்மத்து அப்பா? பிறப்பும், இறப்பும் பஞ்சபூதங்களால் ஆன உடலில் ஆன்மா சஞ்சரிக்கும் போது ஏற்படும் தோற்றங்கள்.ஏதோ ஒருமுறை நான் பிறப்பெடுக்க நீ காரணமா இருந்து இருக்க.அத்துடன் உன்னுடன் ஆன தொடர்பு முடிஞ்சுப் போச்சு.எனவே தற்போது தந்தைன்னு எனக்கு யாரும் இல்லை.நீங்க போகலாம்"னான்

(அடுத்த பதிவிலும் வசனங்கள் தொடரும்)