Tuesday, May 31, 2011

வைரமுத்துவும்..விருதும்..





பூங்காற்று திரும்புமா(முதல் மரியாதை),சின்னச் சின்ன ஆசை(ரோஜா),போறாளே பொன்னுத்தாயி(கருத்தம்மா),முதல்முறை கிள்ளிப் பார்த்தேன்(சங்கமம்),தெய்வந் தந்த பூவே(கன்னத்தில் முத்தமிட்டால்) ஆகிய பாடல்களுக்கு தேசியவிருதை ஐந்துமுறை பெற்றவர் வைரமுத்து ஆவார்.

ஆறாவது முறையாக தென்மேற்கு பருவக்காற்று படப் பாடலான, 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்கு இம்முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

இது பற்றி கல்கி பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து..



ஆறுமுறை விருது பெற்றவன் ஒரு பாடலாசிரியன் எனக் கருதினால் அந்த மகிழ்ச்சியில் எல்லை சுருங்கிவிடும்.ஆறுமுறை விருது பெற்றது தமிழ் மொழி என்று கொண்டால் அந்த எல்லை பன்மடங்கு விசாலப்படும்.அப்படித்தான் இந்த விருதை புரிந்துக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.

ஆறு விருதுகள் வாங்க முக்கியமான காரணங்கள் உண்டு.ஆறு விருதுகள் வாங்கக் கூடிய அளவிற்கு நீண்ட பயணம் அமைய வேண்டும்.அந்தத் துறை செழிப்பாக இருக்க வேண்டும்,அதற்கு ஏற்ப படைப்பாளி ஈடு கொடுக்க வேண்டும். மாறுகிற தலைமுறையைப் புரிந்துகொண்டு, அந்தத் தலைமுறையோடு பயணம் செய்ய வேண்டும்.தன் உடல்,உள்ளம்,வாழ்வு மூன்றும் தாழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.தன்னத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.இவ்வளவு தகுதிப்பாடுகள் இருந்தால் தான், திரையுலகில் ஒருவன் சாதனை நிகழ்த்தி இருக்க முடியும்.இது வைரமுத்துவிற்கு மட்டுமல்ல், எல்லோருக்கும் பொதுவான இலக்கணம்.இயற்கையின் கொடை,சமூகத்தின் நேசம் இவற்றால் நான் அந்தப் பயணத்தில் என்னை இணைத்துக் கொண்டு இருக்கிறேன் என்பதுதான் இங்கு முக்கியமான செய்தி.



ஆறாவது முறையாக விருதினைப் பெறுகிறபோது எனக்கு ஒரு பரவசம்.இந்திய மொழிகளில் திரைப்படப் பாட்டு என்கிற துறையில் தமிழ் முன்னணியில் இருக்கிறது என அறிந்து என் இதயம் இன்னும் விரிந்தது.தமிழ் செம்மொழியாகப் பெருமை பெற்ற காலகட்டத்தில், அதற்கான ஆதாரங்களுள் ஒன்றாக இந்த விருதும் அமைவதாகக் கருதிப் பெருமைப்பட வேண்டும்.



ஆறாவது முறையாக விருது பெற்ற தமிழனுக்கு வாழ்த்துகள்.

Monday, May 30, 2011

தமிழகத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கக் காரணம்..தி.மு.க., வா?





நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தோற்கக் காரணம் என்ன என்பதை தமிழக வாக்காளர்கள் அனைவரும் அறிவர்.

இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் காங்கிரஸின் துரோகத்தை மறக்கமுடியுமா?

நோய்டாவில் விவசாயிகள் நிலம் கையகலப்படுத்தியதற்கு ஓடிய ராகுல்...தமிழகத்தின் அப்பாவி மக்கள் வேதனையையை ஏன் கண்டுக்கொள்ளவில்லை.

தமிழகத்தில் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை சேர்த்து...அடையாள அட்டை வழங்கினால் மட்டும் போதுமா?

நேற்று அப்படி திண்டுக்கல்லில் அடையாள அட்டை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் பேசுகையில்..'தமிழகத்தில்..எங்கள் கருத்துகளைக் கேட்டு மேலிடம் நடந்திருந்தால் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றிருக்கும் என்றார்.

அதாவது காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டிருந்தால்..வென்றிருக்கும் என்ற பொருள்பட.

அவர் மேலும் கூறுகையில் 'தி.மு.க. அமைச்சர்கள் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை புரிந்திருந்த ஊழலால் காங்கிரஸ் தோற்றது என்றுள்ளார்.



டிஸ்கி- ஐந்து இடங்களில் அவர்களுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்த தி.மு.க., விற்கு..இதுவும் வேண்டும்..இன்னமும் வேண்டும்

தேசிய விருதும்..வாலியும்..





இதுவரை வெளியாகியுள்ள திரைப்படங்களின் பாடல்களில் பாதிக்கும் மேல் வாலியும், கண்ணதாசனுமே எழுதியிருப்பார்கள்.

தேசியவிருதுகளின் வயது ஐம்பத்தெட்டு.ஆனால் தமிழ்த் திரையுலகம் பாடலுக்காக எட்டு விருதுகளையே பெற்றுள்ளது.

பாரத விலாஸ் படத்தில்..'இந்திய நாடு என் வீடு..இந்தியன் என்பது என் பேரு' என்று வாலி எழுதிய பாடல் ஒன்று உண்டு.

தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் பாடல் என்பதால், வாலிக்கு தேசிய விருது பரிந்துரைக்கப்பட்டு அவரைப் பற்றிய குறிப்புகள் கேட்டு ஃபிலிம் சேம்பருக்கு ஒரு கடிதம் அனுப்பினர்.ஆனால் வாலியோ பதில் அனுப்பவில்லை..அதற்கான காரணம்..வாலி சொன்னது..

'எனக்கு விருது தர வேண்டுமென்றால் அவர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.இல்லை..அந்தப் பாடல் நன்ராக இருக்கிறெதென்றால் அதை யார் எழுதியிருந்தாலும் விருதை அறிவித்திருக்க வேண்டும்

இத் தகவலை பழநிபாரதி அவர்கள் குங்குமம் இதழில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சொல்கையில்..'சென்ற ஆண்டு பின்னணி இசைக்காக இளையராஜா அவர்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. பழசிராஜா என்னும் படத்திற்காக.நான் ஒரு பூங்கொத்து வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்கச் சென்றேன்..அவர் சிரித்தபடியே கேட்டார்..

'இசைக்கும் விருதுக்கும் என்னப்பா சம்பந்தம்'



டிஸ்கி..விருதுகள் நம்மைத் தேடி வர வேண்டும்..நாம் அதைத் தேடிச் செல்லக் கூடாது

Thursday, May 26, 2011

நீ யார்..நான் யார்





உன்னைப் பற்றிச் சொல்

என்றாய்....

உன்னைப் பற்றி உனக்குத் தெரியாதா?

என்றிட்டேன்!

என்னுள் நீ இருக்கையில்

என்னைப் பற்றி எனக்கென்னத் தெரியும்

என்கிறாய்...

நீ யார்? நான் யார்?

என்றேன்...

நானே நீ

நீயே நான்

புதிர் போன்றதொரு

விடை..

Sunday, May 22, 2011

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை..(போஸ்ட் கார்ட் சிறுகதை)





தனது ஆறாவது வகுப்பு படிக்கும் மகன் ரமேஷ் தான் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என அவனது தந்தை கருணாகரனுக்கு மன வருத்தம்.

ஒரு நாள் அவனை அருகில் அமர்த்தி வைத்துக் கொண்டு..'அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்றும்..தந்தை சொல்லை குழந்தைகள் மதிக்க வேண்டும் என்றும்..தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்றும்..அவரது சொல்படி கேட்டால் வாழ்க்கையில் நன்கு முன்னேறலாம்' என அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான் கருணாகரன்.

ஆனால் அவன் சொல்லிக் கொண்டிருந்தானேத் தவிர மகன் ரமேஷின் கவனமெல்லாம்...டீ.வி.யிலேயே இருந்தது.

அப்படியென்ன டீ.வி.யி. என கருணாகரன் பார்த்தபோது ..டி.வி.யில் கலைஞர்..'சன் டீவி.பங்குகள் விற்று தயாளுவிற்கு வந்த பணத்தில்..கனிமொழிக்கு இரண்டுகோடி கொடுக்கப்பட்டது.அந்த பணத்தை ஒரு தந்தை என்ற முறையில் கலைஞர் டீவியில் முதலீடு செய்யச் சோன்னேன்.நான் அன்று சொன்னதை என் மகள் கேட்டதே..இன்று அவள் திகார் சிறைக்கு கொண்டுச் சென்றுவிட்டது' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

கருணாகரன் சொன்ன அறிவுரையைக் கேட்டுவிட்டு..இச் செய்தியையும் கேட்ட ரமேஷ்..தந்தை ஏறிட்டு நோக்க ..அந்த பார்வை பல அர்த்தங்களை தந்தையான கருணாகரனுக்கு உணர்த்தியது.

Thursday, May 19, 2011

கலைஞருக்கு மக்கள் ஓய்வு கொடுத்துவிட்டார்களா...





1967ல் தி.மு.க., காங்கிரசிடமிருந்து தமிழக ஆட்சியைக் கைப் பற்றியதும்..அன்றைய முதல்வர் பக்தவத்சலம்..'நாட்டில் விஷக்கிருமிகள் பரவிவிட்டன' என ஒரு அநாகரிக அறிக்கை அளித்தார்.

அந்த அளவிற்கு இல்லையாயினும்..கலைஞர் இம்முறை தேர்தல் முடிவுகள் வந்ததும்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என்று சொன்னதும் சற்று அநாகரிகமாகவே தெரிகிறது.

இந்தக் கேள்விக்கான பதிலுக்கு முன் 2001 சட்டசபைத் தேர்தலுக்குப் போனால்..

அன்று போட்டியிட்ட கலைஞர்..'இதுவே நான் நிற்கும் கடைசித் தேர்தல்' என்று போகுமிடமெல்லாம் சொல்லி ஆதரவைத் திரட்டினார்.ஆனாலும் அ.தி.மு.க., வே ஆட்சிக்கு வந்தது.கலைஞர் 'ஜெ' போலவே எதிர்க்கட்சி தலைவராகி..சட்டசபைக்குப் போவதையேத் தவிர்த்தார்.

பின் 2006ல் மக்கள் மீண்டும் கலைஞரிடம் ஆட்சியைக் கொடுத்தனர்.

இப்போது 2011 தேர்தல்..

இதுவே கடைசித் தேர்தல் என்று சொன்னவர் அதற்குப் பின் இரு தேர்தல்களைச் சந்தித்து விட்டார்.

ஆனால்..இம்முறை கலைஞர் ஆட்சிக்கு வரவேண்டிய கட்டாயம்..

இருப்பினும் சூழ்நிலைகள் காரணமாக 119 இடங்களிலேயே தி.மு.க., நின்றது.தகுதிக்கு அதிகமாகவே காங்கிரஸிற்கு 63 தொகுதிகள் ஒதுக்கியது.அதற்கான காரணம் உள்ளங்கை நெல்லிக்கனி.

ஆகவே மக்கள் தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தாலும்..தனிக்கட்சியாய் இம்முறை ஆளமுடியாது.

இந்நிலையில்..என்றுமே புத்திசாலி வாக்காளர்கள் அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க., வைத் தேர்ந்தெடுத்தனர்.

இனி தலைப்புக்கு வருவோம்..

பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவிய போதும்..கலைஞருக்கு வழக்கம் போல தோல்வியைத் தர மக்கள் விரும்பவில்லை.சட்டசபையில் அவர் தொண்டு மக்களுக்குத் தேவை என்பதை அறிந்து..அவரை இதுவரை இல்லாத அளவிற்கு 50000 வாக்குகளுக்குமேல் வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்துள்ளனர்.

பதவியில் இருந்தாலும் இல்லையாயினும் மக்களுக்கு தொண்டு செய்பவன் நான்..என அடிக்கடி சொல்லும் கலைஞர்..'மக்கள் எனக்கு ஒய்வு கொடுத்துவிட்டார்கள்' என சொல்லலாமா?

அப்படி மக்கள் நினைத்திருந்தால்..அவருக்கு வெற்றிக்கனியை தந்திருக்க மாட்டார்கள்.

ஆளும் கட்சியில் இருப்பதைவிட..எதிர்க்கட்சியாய் இருந்தால்..மக்கள் பிரச்னைகளை அதிகம் பேசலாம்..

ஆகவே..மக்கள் அதிகப் பொறுப்பையே உங்களுக்குத் தந்துள்ளனர்.

வழக்கம் போல சட்டசபையை புறக்கணிக்காமல்..கூட்டங்களுக்குச் சென்று மக்கள் தொண்டு ஆற்றட்டும் கலைஞர்.

ஜனநாயகத்தில் வெற்றி தோல்விகள் சகஜம் என்பதை பழுத்த அரசியல்வாதியான அவருக்கு நாம் நினைவூட்ட வேண்டாம் என்றே தோன்றுகிறது.

Wednesday, May 18, 2011

114 எம்.எல்.ஏ.,க்கள் கோடீஸ்வரர் ஆவது எப்போது ..

தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 234 எம்.எல்.ஏ., க்களில் 120 பேர் கோடீஸ்வரர்களாம்.

அதாவது 52 விழுக்காடு கோடீஸ்வரர்கள் ஆவர்.

இந்த 120 கோடீஸ்வர எம்.எல்.ஏ., க்களில் தி.மு.க., வில் தேர்ந்தெடுக்கப்பட்ட 23 பேரில் 75 விழுக்காடு கோடீஸ்வரர்கள்.

அடுத்தபடியாக காங்கிரஸ் 5 பேரில் மூவர் கோடீஸ்வரர்கள்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., க்களில் 146 பேரில் 55 விழுக்காடு கோடீஸ்வரர்களாம்.

பாவம்...234ல் 120 போக மீதம் 114 பேர்.

இவர்கள் கோடீஸ்வரர்கள் ஆவது எப்போது.

இவர்கள் பதவிகாலம் முடிவதற்குள்...அந்த இலக்கை எட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்.

Tuesday, May 17, 2011

தி.மு.க., தோற்றது யாரால்...



நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அலை வீச வில்லை.

தி.மு.க., வின் அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க., விற்கு வாக்களித்துள்ளனர்.

புள்ளிவிவரங்கள் படி அ.தி.மு.க.,கூட்டணி இத்தேர்தலில் பெற்ற வாக்குகள் 1,90,84,139

தி.மு.க., கூட்டணி பெற்ற வாக்குகள் 1,45,29,501 வாக்குகள்.

வாக்கு வித்தியாசம் சுமார் 45,00,000.

இந்த வித்தியாசமே அ.தி.மு/.க., கூட்டணி 203 தொகுதிகளில் வெற்றியும்..தி.மு.க., கூட்டணிக்கு 172 தொகுதிகளில் தோல்வியையும் தந்துள்ளது.

இந்த 45,00,000 வாக்காளர்கள் யார்...

எந்த ஒரு கட்சியையும் சேராத பொதுவானவர்கள்..ஐந்தாண்டுகள் ஆட்சியை மனதில் கொண்டு, பொறுமையுடன் இருந்து..தேர்தலில் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இம்முறை..ஊழல்,குடும்ப ஆட்சியைத் தவிர்த்து..

பலருக்கு காங்கிரஸ் கட்சியின் மீது கோபம் இருந்தது..இலங்கை தமிழர்கள் பிரச்னையில்...அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டு வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்.

தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது..வாளாயிருந்த கட்சியின் மீது கோபம்..

அதனால் தான் 63 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரசால் 34லட்சத்திற்கு சற்று அதிகமான வாக்குகளே பெற முடிந்தது.

இந்நிலையில்..ஆட்சி மாற்றத்தைத் தீர்மானித்தவர்கள்...எக்கட்சியும் சாரா பொதுமக்கள்..

இவர்கள்தான் ஒவ்வொருமுறையும் மாற்றத்தைக் கொண்டு வருபவர்கள்.

இங்கு வேறு ஒன்றையும் குறிப்பிட விரும்புகிறேன்..

தி.மு.க., போட்டியிட்ட தொகுதிகளில் சராசரியாக 42 விழுக்காடு வாக்குகள் வாங்கியுள்ளது.

ஆனால்..தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 35.6 விழுக்காடே வாக்குகள் வாங்கியுள்ளது.

ஏன் அப்படி?

தி.மு.க., வைக் கூட மன்னிக்கத் தயாராய் இருந்த மக்கள்..காங்கிரசை மன்னிக்க விரும்பவில்லை.தண்டிக்கவே விரும்பியுள்ளனர்.

Friday, May 13, 2011

மூக்கறுபட்ட காங்கிரஸ்...




தமிழ்நாட்டில்...நாங்கள் எந்த திராவிடக்கட்சியுடன் கூட்டணி வைக்கிறோமோ அவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள் என்று..தனிப்பட்டமுறையில் தன்னால் ஏதும் முடியாவிடினும் , இப்படிச் சொல்வதில் மட்டும்..அனைத்து தமிழக கோஷ்டி காங்கிரஸ்காரர்களிடமும் ஒற்றுமை இருந்தது..

பலவேளைகளில் அது உண்மையோ..என சில அரசியல் தலைவர்களும் எண்ணியதுண்டு..

ஆனால்..இந்த முறை..

அந்த காங்கிரஸுடன் கூட்டணி வைத்ததாலேயே தி.மு.க., மாபெரும் தோல்வியைச் சந்தித்தது.

தி.மு.க., குடும்பக் கட்சியாகிவிட்டதும்..இலவசமாக அனைவருக்கும் டீ.வி.கொடுத்து..பாமரனும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அறியவைத்ததும்...தி.மு.க., வின் ஹிமாலயத் தோல்விக்குக் காரணமாகிவிட்டன.

இப்போதும்..தில்லித் தலைவர்கள்..தோல்விக்கு ஊழல் மட்டுமே காரணமல்ல என்கின்றனர்..

எது எப்படியோ...தமிழகத்தில்..தி.முக., அ.தி.முக., என இரு கட்சிகளைவிட்டால் மாற்று இல்லை.

அதன்படி அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்துள்ளது.

முந்தைய ஆட்சிக் காலத்தில் தான் செய்த தவறுகளை உணர்ந்து...

தி.மு.க., விடம் மக்கள் என்ன குறையை உணர்ந்தார்கள் என அறிந்து..

தவிர்க்க வேண்டியவற்றைத் தவிர்த்து..

தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை ஏமாற்றாது..நல்லாட்சியை அ.தி.மு.க., இம்முறையேனும் தரும் என நம்புவோம்.

நம்பிக்கைதானே வாழ்க்கை.

Wednesday, May 11, 2011

கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா..?






மேற்கு வங்கத்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்ததும்..ஊடகங்கள் கருத்து கணிப்பை வெளியிடலாம் என்பதால்...அவை தங்களுக்குத் தோன்றிய விதங்களில் கருத்து கணிப்பை வெளியிட்டு வருகின்றன.இவற்றில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கக் கூடும் என பார்த்தால்..அதற்கு ஒரு தனி கருத்து கணிப்பு வேண்டும்.

ஆனால் இவற்றில் மேற்கு வங்கம் தவிர , மற்ற இடங்களில் இக் கணிப்பு தவறாகப் போகக்கூடும்.

இனி கருத்துகளைக் கேட்டு ஆகப் போவதென்ன..

அப்படியே தமிழகத்தைப் பொறுத்தவரை இக் கணிப்புகள் உண்மையாகுமானால்...ஒன்று மட்டும் நிச்சயம்..

தனித்து பெரும் கட்சியாய் அ.தி.மு.க., வே இருக்கும்.

தி.மு.க., பா.ம.க.,வுடனும், காங்கிரஸ் உடனும் கூட்டணி ஆட்சி அமைக்கலாம்..

ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பொறுத்து..காங்கிரஸ் தி.மு.க., வை கழட்டியும் விட்டு விடலாம்..அல்லது இவர்கள் உறவில் விரிசல் வரலாம்.

அப்போது அக் கட்சி அ.தி.மு.க., வை நெருங்கலாம்.

ஆகவே தி.மு.க., காங்கிரஸை நம்பி செயல்பட்டால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் நிலைதான்.

பா.ம.க., நிலை என்ன என அக்கட்சியினருக்கே தெரியாது..சந்தர்ப்பத்திற்கேற்றபடி நடக்கும்.

எது எப்படியோ..

மிண்டும் ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்காமல் இருந்தால்..சரி..
 

Monday, May 9, 2011

பெண்...







நேற்று அன்னையர் தினமாம்..

அதற்கென தனி தினம் எதற்கு..

அன்று மட்டும் தான் அன்னையைப் போற்ற வேண்டுமா?

நம் வாழ்வில்..எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும்..துன்பங்கள் இருந்தாலும்..அவற்றையெல்லாம் மறந்து..தினமும் ஒரு முறையேனும்..எங்காவது நான் அன்னையை நினைக்கிறோம்.

அப்படியில்லையென்றாலும்...காலிலோ கையிலோ சற்று வலி ஏற்படுமாறு அடி ஏற்பட்டால்..நம்மை அறியாது..நாம்  அழைப்பது அன்னையைத்தான்.

அம்மா...

அந்த சொல்லுக்குத்தான்...எவ்வளவு வலிமை..

அந்த சொல்தான் எத்தனை இனிமை..

அந்த சொல்லில்தான் சுயநலம் தெரிவதில்லை..



அம்மா மட்டுமா..

ஒரு பெண் நம் வாழ்வில்.....எங்கெங்கு தேவையோ ..அங்கெங்கு நமக்கு தோள் கொடுக்கிறாள்..

நான் சமீபத்தில் படித்தது..இது...



When I was born, A woman was there to hold me - my mother

When I grew as a child, A woman was there to care me, to play with me - my sister

When I went to school, a woman was there to help me to learn - my teacher

When I became depressed, whenever I lost, a woman was there to offer a shoulder - my wife

When I became tough, a woman was there to melt me - my Daughter

When I die, a woman is there to obsorb me in - my motherland

Sunday, May 1, 2011

கே.பாலசந்தரும்...நான் பெற்ற பால்கே விருதும்..


இயக்குனர் சிகரம் பாலச்சந்தருக்கு  தாதா சாஹேப் பால்கே விருது கிடத்தமைக்கு பாராட்டுகள்.

தமிழ்த்திரையுலகில் எம்.ஜி.ஆர்., படமான 'தெய்வத்தாய்' , சிவாஜிகணேசன் நடித்த "நீலவானம்" ஆகிய படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாலசந்தர்.

தமிழ் நாடக உலகில் இருந்து..படிப்படியாய் உயர்ந்து ..இயக்குநர் சிகரம் என்ற அளவில் போற்றப் பட்டவர்.

இவரது நாடகமான 'சர்வர் சுந்தரம்' ஏ.வி.எம்., தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம்.

இவர் இயக்கத்தில் வந்த ஏ.கே.வேலன் தயாரித்த நீர்க்குமிழியே முதல் படம்.அதற்கு பின் எதிர்நீச்சல்,நவக்கிரகம்,நாணல், மேஜர் சந்தரகாந்த் போன்ற நாடகங்கள் திரைப்பட மாயின.

எம்.ஜி.ஆரை.வைத்து எந்தப் படமும் இயக்காத இவர், சிவாஜியை வைத்து இயக்கிய ஒரே படம் 'எதிரொலி'

இவரது பெரும்பான்மையான படங்களில் ஜெமினி கணேசன் நடித்திருப்பார்.

வேற்று மொழிப் படங்கள் வெற்றி பெற்றால் அதைத் தமிழில் எடுக்கத் தயங்க மாட்டார்.உதாரணம்..ஹிந்தி படமான சத்யகம்..தமிழில் புன்னகை ஆயிற்று.தாமரை நெஞ்சம் வங்காளப்படம் ஒன்றின் கதை.காவியத் தலைவியும் ஒரு ஹிந்தி படக்கதையே.இவரின் மரோசரித்ராவும்..பின் ஹிந்தியில் வெளிவந்த ஏக் துஜே கேலியே வும் இன்றும் அனைத்து ரசிகர்களால் மறக்கமுடியா காவியங்கள்.

மற்றவர்கள் எழுதிய தமிழ் நாடகங்களையும் இவர் வெள்ளித்திரையில் உலவ விட்டுள்ளார்..

உதாரணம்..கோமல் சுவாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்' ஜோசப் ஆனந்தின் 'இரு கோடுகள்'

விசுவின் நாடகங்கள் பார்த்து..அவற்றை விசுவின் இயக்கத்திலேயே படமாக தயாரித்தவர்.அதே போன்று மௌலியின் அண்ணே அண்ணே படமும் மௌலியின் நாடகமே.கிரேசி மோகனின் நாடகமே 'பொய்க்கால் குதிரை'யானது.

இவரது இமாலய வெற்றிக்கு இவரது உதவியாளராய் இருந்த..அனந்து என்பவரின் பங்கும் அளப்பறியது.

கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி இருந்தாலும் ..இவர் படங்களில்தான் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்தது.

ரஜினிகாந்தை..'அபூர்வ ராகங்களில்' அறிமுகப் படுத்தியவர்.பின் சில படங்களில் அவரை வில்லனாக்கி அழகுப் பார்த்து..பின்னர் கதாநாயகன் ஆக்கியவர்.

எண்ணற்ற..நடிக, நடிகையரை அறிமுகப் படுத்தியவர்.

கவிதாலயா என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி..ரஜினி நடிக்க..வேறு வேறு இயக்குநர்கள் இயக்க பல வெற்றி படங்களைத் தயாரித்தவர்.

ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்களை..இவர் தயாரித்த முத்து படம் ஏற்படுத்தியது.

ரயில் சிநேகம்,பிரேமி போன்ற பல தொடர்களை சின்னத் திரையில் இயக்கியுள்ளார்.

இப்படி பன்முகம் கொண்ட பாலசந்தருக்கு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தமைக்கு ஒரு நாடக நடிகன்..நாடகத் தயாரிப்பாளன் என்ற முறையில் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இனி தலைப்பிற்கு வருவோம்...

எனது சௌம்யா நாடகக் குழுவின் ஆயிரமாவது நாடக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எனக்கு நினைவுப் பரிசினை 1989ல் வழங்கினார் இயக்குநர் சிகரம்.இதையே நான் பெற்ற பால்கே விருதாய் எண்ணுகிறேன்.





- இந்த சமயத்தில் ஏனோ...எஸ்.எஸ்.வாசன் நினைவில் வருகிறார்
டிஸ்கி