Tuesday, December 30, 2014

2014 எனக்கு எப்படி....



எனது நாடகம் "சாலையோரப் பூக்கள்" குட்வில் ஸ்டேஜ் குழுவினரால் மேடை ஏற்றப்பட்டு..பல சபாக்களில் நடந்து வருகிறது.

தவிர்த்து, இவ்வாண்டு, நான் மிகவும் எளிமைப் படுத்தி எழுதிய, "மகாபாரதம்" திரு சிவராமன், திரு முருகன் ஆகியோர் ஊக்குவிப்பில் சூரியன் பதிப்பகத்தாரால், "மினியேச்சர் மகாபாரதம்' என்ற பெயரில் நூலாக  வெளிவந்துள்ளது

மற்றபடி 2014 ல் மனிதர்களுக்கு அவ்வப்போது வந்து போகும் சிறு சிறு உபாதைகளும்..துன்பங்களும் எனக்கும் வந்து , பின், இவன் இதற்கெல்லாம் பயப்பட மாட்டான் என விலகி ஓடின.

2015ல் செய்ய நினைப்பவை..

ஏற்கனவே,எனது ஐந்து நாடகங்கள் ஒரு பிரபல பதிப்பகத்தால் இவ்வாண்டு புத்தகமாக வர உள்ளது.

"தந்தையுமானவள்" என்ற நாடகம் ஏப்ரல் மாதல் மேடையேற உள்ளது.

வால்மீகி ராமாயணம்.. எளிய நடையில் எழுதி, முடிக்கும் நிலையில் உள்ளது.

ஐம்பெரும் காப்பியங்களையும் எளிமைப் படுத்தி  எழுத எண்ணம்.(முக்கிய நோக்கம்..சிலப்பதிகாரம் தவிர்த்து மற்றவை பெரும்பாலானோருக்கு தெரியாது என எண்ணுகிறேண்.ஆகவே இம்முயற்சி)

திரு சிவராமன் மாதிரியும், திரு முருகன் மாதிரியும் நண்பர்கள் கிடைத்தால் இவற்றையும் நூலாக வெளியிட எண்ணம்.

வார, மாத இதழ்கள், இணையத்தில் என எழுதிய 30க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் புத்தகமாக்க ஆவல்

பார்ப்போம்...

நமக்கும் மீறிய சக்தி ஒன்று உள்ளது..அது என் எண்ணங்களுக்கு ஒத்துழைக்குமா என்று.

மற்றபடி

2014க்கு விடை கொடுத்து 2015 வரை வரவேற்போம்...நமக்கு அதனால் ஒரு வயது கூடுகிறது என்றாலும்.

அனைத்து நண்பர்களுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.

என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

குறுந்தொகை-184



தலைவன் கூற்று
(தன்னை இடித்துரைத்த பாங்கனை நோக்கி, “சிற்றூரிடத்திற் செல்பவர் யாரும் தலைவியின் கண்வலையிற் படுவர்; என் நெஞ்சம் அதிற்பட்டது”என்று கூறியது.)

நெய்தல் திணை- ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்

இனி பாடல்-

அறிகரி பொய்த்த லான்றோர்க் கில்லை
 
குறுக லோம்புமின் சிறுகுடிச் செலவே
 
இதற்கிது மாண்ட தென்னா ததற்பட்
 
டாண்டொழிந் தன்றே மாண்டகை நெஞ்சம்

மயிற்க ணன்ன மாண்முடிப் பாவை
 
நுண்வலைப் பரதவர் மடமகள்
 
கண்வலைப் படூஉங் கான லானே.


                           -ஆரிய வரசன் யாழ்ப் பிரமதத்தன்.

   உரை-


    மயிலினது பீலிக்கண்ணைப் போன்ற, மாட்சிமைப்பட்ட முடியையுடைய பாவை போல்வாளாகிய, நுண்ணிய வலையையுடைய நெய்தனிலமாக்களுடைய மடமையையுடைய மகளது, கண்வலையின் கண் ஆண்டுச் செல்வார் அகப்படுகின்ற கடற்கரைச் சோலையினிடத்து, எனது மாட்சிமைப்பட்ட தகுதியையுடையநெஞ்சம்,  இப்பொருளுக்குஇப்பொருள் ஏற்ற மாட்சியை யுடையது, என்று ஆராயாமல், அக்கண் வலையின்கண்ணே பட்டு, அக்கானலினிடத்தே தங்கியது,  அறிவான் அமைந்தவர்கட்கு, தாம் கண்டறிந்ததொன்றைமறைத்துப் பொய்க்கரி கூறும் இயல்பு இல்லை; ஆதலின்யாம் கண்டறிந்த இதனை உண்மையாகக் கொள்க; அச்சிற்றூரினிடத்துச் செல்லுதலை, அடைதலைப் பரிகரிமின்.


  (கருத்து) நீவிர் ஆண்டுச் சென்றால் இங்ஙனம் கழறீர்.

 

Saturday, December 27, 2014

குறுந்தொகை-183



தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வரவும் அவன் வாராமையால் தலைவி ஆற்றாளென்று எண்ணி வருந்திய தோழியை நோக்கி, “கார் காலத்துக்குரிய அடையாளங்களை அவர் கண்டு என்னை நினைந்து வருவர்” என தலைவி உரைத்தது)
படத் தலைவி கூறியது.)

முல்லைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
சென்ற நாட்ட கொன்றையம் பசுவீ
   
நம்போற் பசக்குங் காலைத் தம்போற்
   
சிறுதலைப் பிணையிற் றீர்ந்த நெறிகோட்
   
டிரலை மானையுங் காண்பர்கொ னமரே

புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை
   
மென்மயி லெருத்திற் றோன்றும்
   
கான வைப்பிற் புன்புலத் தானே.

                   - ஔவையார்

உரை-

மழை பெய்வதற்கு முன் பொலிவழிந்திருந்த காயாவினதுமலர்கள் பொருந்திய பெரிய கிளை,  மழை பெய்தபின் மெல்லிய மயிலினது கழுத்தைப் போலத் தோன்றும்,  காட்டிடத்தையுடைய புல்லிய நிலத்தின்கண், எம்மைப் பிரிந்து சென்று தங்கிய நாட்டிடத்துஉள்ளனவாகிய, கொன்றையின் அழகிய செவ்வி மலர்கள்,  நம்மைப் போலப் பசலை நிறத்தையடையும் கார்ப் பருவத்தில், சிறிய தலையையுடைய பெண் மானிடத்தினின்றும் நீங்கிய,  நெறிந்த கொம்பையுடைய ஆண்மானையும், நம் தலைவர், காண்பரோ; (காணார்.)



    (கருத்து) கார்காலம் வந்ததை அறிந்து தலைவர் விரைவில் வந்துவிடுவர்.

   

குறுந்தொகை-182




தலைவன் கூற்று
(தன் குறையைத் தோழி மறுத்தாளாக, “தலைவியும் இரங்கிக்குறைநயந்திலள்; தோழியும் உடம்படவில்லை; ஆதலின் இனி மடலேறுவேன்” என்பதுபடத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் மாதங்கீரன்

இனி பாடல்-

 
விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடல்
   
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
   
வெள்ளென் பணிந்துபிற ரெள்ளத் தோன்றி
   
ஒருநாண் மருங்கிற் பெருநா ணீக்கித்

தெருவி னியலவுந் தருவது கொல்லோ
   
கலிழ்ந்தவி ரசைநடைப் பேதை
   
மெலிந்தில ணாம்விடற் கமைந்த தூதே.


                            -மடல் பாடிய மாதங்கீரன்.

 உரை-

அழகு ஒழுகி விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி,நம்மால் நெஞ்சம் நெகிழ்ந்திலள்,  நாம் அத் தலைவியினிடத்துவிடுதற்கு அமைந்த தூது,  சிறந்தஉச்சியையுடைய பனையின் கண், முதிர்தலையுடைய பெரிய மடலாற் செய்த குதிரைக்கு, மணிகள் அணிந்த பெரிய மாலையை, முறைமையோடு அணிந்து,  நாம் வெள்ளிய என்பை அணிந்துகொண்டு, பிறர் இகழும்படி அம்மடல் மாவின்மேல் தோன்றி,  ஒரு நாளில், பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் கண் செல்லவும் தருவதோ?

 
    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

   

Thursday, December 25, 2014

பண்பற்ற இறைவன்-( தமிழ் இலக்கியம் )


வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த இப்பாடலாசிரியர் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கக் கூடும்.

 இனி பாடல்-

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

                    -  பக்குடுக்கை நன்கணியார்.


உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்ள வேண்டும்.


அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாவுப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல்,

இதைத்தான் கண்ணதாசனும், நமக்கும் கீழே வாழ்பவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்றாரோ?!

குறுந்தொகை-181



தலைவி கூற்று
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)


குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கிள்ளி கிழார்

இனி பாடல்-

 
இதுமற் றெவனோ தோழி துனியிடை
   
இன்ன ரென்னு மின்னாக் கிளவி
   
இருமருப் பெருமை யீன்றணிக் காரான்
   
உழவன் யாத்த குழவியி னகலாது

பாஅற் பைம்பயி ராரு மூரன்
   
திருமனைப் பலகடம் பூண்ட
   
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.

                           - கிள்ளி கிழார்.

உரை-



பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடைய பெண்ணெருமையானது,  உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல்,  பக்கத்திலுள்ள பசிய பயிர்களை,  மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது, செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளைமேற்கொண்ட, பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு,  புலவிக்காலத்தினிடையே தலைவர் இத்தகையரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய, இதனாற் பயன் யாது?

   

    (கருத்து) தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம்செய்வோமாக.

Wednesday, December 24, 2014

லிங்கா,,,, எச்சரிக்கை - இது விமரிசனம் இல்லை..

           
     

சாதாரணமாக ரஜினி படம் என்றாலே நான் முதல் வாரத்திலேயே பார்த்து விடுவது வழக்கம்.லிங்கா படத்தையும் அப்படித்தான் பார்க்க நினைத்தேன்.சில எதிர்மறையான விமரிசனங்கள் வந்தபடியால்..இப்படத்தைப் பார்ப்பதை சற்றுத் தள்ளி வைத்தேன்.

(முக்கியக் காரணம்..படத்தைப் பார்த்து நாம் ஏதாவது விமரிசிக்கப் போக...ராதாரவியின் வசைச்சொல்லுக்கும், பிடிக்காவிட்டால் எழுந்து போக வேண்டியதுதானே என்ற ரவிகுமார் சொல்லுக்கும் பயந்துதான்...தாமதாகப் பார்த்தேன்..என நான் சொல்லாவிடினும், உங்களுக்கு எல்லாம் தெரியாதா என்ன.)

ஆனால், படத்தைப் பார்த்ததும், இப்படத்தைப் பார்ப்பதை ஏன் தள்ளி வைத்தேன்? அது தவறுதான் என உணர்ந்தேன்.

இப்படம் ஏமாற்றத்தையாத் தந்தது...இல்லை...கண்டிப்பாய் இல்லை..

என் முதல் பாராட்டு...கே.எஸ்.ரவிகுமாருக்கு....அவரது மற்றப் படங்களைப் போலவே..இதிலும் மக்களைக் கட்டிப்போட்டு விட்டார்.ஆரம்பத்திலிருந்து..சற்றும் தொய்வில்லாமல்..படம் செல்கிறது.(ஆனால், அடுத்தடுத்து என்ன நடக்கும் என குழந்தைகள் கூட சொல்லிவிடும்)

இப்படத் தயாரிப்பில், எவ்வளவு தொழில் நுட்பக் கலைஞர்கள் உழைப்பு இருக்கிறது..கேவலம்..120 ரூபாயைக் கொடுத்துவிட்டு..அவர்கள் உழைப்பை எல்லாம் துச்சமாக மதித்து..ஒரே வார்த்தையில்..படம் நன்றாய் இல்லை என விமரிசிப்பது எவ்வளவு பெரிய தவறு?

ஒளிப்பதிவாளர் ரத்னகுமாருக்கு என் அடுத்தப் பாராட்டு. அட்டகாசமாய் விளையாடியுள்ளது இவரது காமிரா.

அவரது திறமைக்கு சமமாக சவால் விடும் கலை இயக்குநர் அமரனுக்கு அடுத்த பாராட்டு.

ஏ.ஆர்,ரஹ்மான், வைரமுத்து, கபிலன், நடன இயக்குநர் ஆகியோரும் ஏமாற்றவில்லை.பாராட்டுதலைப் பெறுகிறார்கள்.

இந்த படம் ரஜினி ரசிகர்களை மட்டுமல்ல..என்னைப் போன்ற பொது ரசிகனையும் ஏமாற்றவில்லை.

மொத்தத்தில்...படத்தில் குறைகள், காதுலே பூ சுத்தும் அளவிற்கு லாஜிக் மீறல்கள் என இருந்தாலும்...கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய ரஜினி படமாய் திகழ்கிறது என உறுதியாய் சொல்லலாம்.


குறுந்தொகை-180



தோழி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியை நோக்கி, “அவர்சென்ற விடத்தில் தாம் கருதிச் சென்ற பொருளைப் பெற்றனரோ; இலரோ;பெற்றனராயின் உடனே மீண்டு வருவார்” என்று தோழி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கச்சிப்பேட்டு நன்னாகையார்

இனி பாடல்-
 
பழூஉப்பல் லன்ன பருவுகிர்ப் பாவடி
   
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
   
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன
   
பைத லொருகழை நீடிய சுரனிறந்

தெய்தினர் கொல்லோ பொருளே யல்குல்
   
அவ்வரி வாடத் துறந்தோர்
   
வன்பராகத்தாஞ் சென்ற நாட்டே.



                           -கச்சிப்பேட்டு நன்னாகையார்.



நம்மைப் பிரிந்த தலைவர்,  பேயின் பற்களைப் போன்ற,  பருத்த நகங்களை யுடைய பரவிய அடிகளைப்பெற்ற,  பெரியகளிற்றுத் திரளின் வரிசையினது தலைவன் வந்து கைக்கொள்ளின், அழிந்து,பாத்தியின்கண் வீழ்ந்த கரும்புகளின்,  கணுக்களின் இடையே யுள்ள பகுதியைப் போன்ற, வருந்துதலையுடைய ஒற்றைமூங்கில்,  ஓங்கிய,  பாலைநிலத்தைக் கடந்து, வன்னெஞ்சினராக,  தாம் போனநாட்டினிடத்து,  பொருளைஅடைந்தாரோ இல்லையோ?

    (கருத்து) தலைவர்தாம் தேடிச் சென்ற பொருளைப் பெற்றாரோ,இலரோ?

 

      (யானையின் கால் நகத்திற்குப் பேயின் பல்: ஓப்புமை)

இயக்குநர் சிகரமே..போய் வா..

                                   

தமிழ்த் திரையுலகில், எம்.ஜி.ஆர்., படம்., சிவாஜி படம்., என நடிகர்கள் பெயரைச் சொல்லி படங்கள் வந்த காலகட்டத்தில் முதன் முதலாக இது ஸ்ரீதர் இயக்கிய படம்,என்றும் இது பாலசந்தர் இயக்கிய படம் என்றும் ரசிகர்களைச் சொல்ல வைத்த வர்கள் ஸ்ரீதரும், பாலசந்தரும்.

பாலசந்தர் படங்களில் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்களையும் ரசிகர்கள் மறக்க முடியாவண்ணம் பாத்திரப் படைப்புகள் அமைக்கப்பட்டது பாலசந்தரின் வலிமையாகும்.

அரங்கேற்றம் லலிதா, அவள் ஒரு தொடர்கதை கவிதா, தாமரை நெஞ்சம் கமலா, எதிர் நீச்சல் மாது, நீர்க்குமிழி சேது,புதுப் புது அர்த்தங்கள் மணிபாரதி, என்றுஇப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு மாதிரி....வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டவை.

தமிழ்த்திரையுலகின் இயக்குநர் சிகரம் ...

நாடக உலகிலிருந்து திரைக்கு வந்தவர்..ஆனாலும் கடைசி வரை நாடக மேடையை மறக்காதவர்.

எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் மூலம் கதை வசனகர்த்தாவாக அறிமுகமான இவர், சிவாஜி நடித்த நீலவானம் படத்திற்கும் கதை வசனம் எழுதினார்.பிறகு நடிகர் திலகம் நடிக்க எதிரொலி என்ற படத்தை இயக்கினார்.

நீர்க்குமிழி மூலம் இயக்குநர் ஆனவர் இவர்.முதல்படமே இப்படி பெயர் உள்ளதே என்ற போது..அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று சொன்ன பகுத்தறிவாளர் இவர்.

இவர் இயக்கத்தில் வெற்றி பெற்ற படங்கள்..

நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர் கதை, மன்மத லீலை, அவர்கள், புன்னகை, சிந்து பைரவி,மூன்று முடிச்சு,உன்னால் முடியும் தம்பி,தப்புத் தாளங்கள், அச்சமில்லை அச்சமில்லை, வறுமையின் நிறம் சிவப்பு,இரு கோடுகள், தண்ணீர் தண்ணீர் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.ஏக் துஜே கேலியே ஹிந்தியும், மரோசரித்ரா தெலுங்கும் வரலாற்று புகழ் பெற்றவை.

அவர் இழப்பு தமிழ்த் திரையுலகில் ஈடு செய்ய முடியா இழப்பு.

இயக்குநர் சிகரமே! போய் வா...சினிமா உள்ளவரை உன் பெயர் இருக்கும்.

தமிழ் நாடகம் உள்ளவரை உன் பெயர் அதில் நிலைத்திருக்கும்.

சுகமாய்ப் போய் வா.என கண்ணீர் பெருக உன்னை அனுப்பி வைக்கிறோம்

Monday, December 22, 2014

வறுமையும்...பட்ட காலிலேயே படுதலும்.. (கொஞ்சி விளையாடும் தமிழ்)


சனிப் பெயர்ச்சி.
உன் ராசிக்கு முதல் சனி..இரண்டரை வருஷம்.உடம்பு படித்தும்...பண நஷ்டம் ஏற்படும்.
அவன் ராசிக்கு மத்திய சனி..பரவாயில்லை.சமாளிக்கும் அளவு துன்பங்கள் இருக்கும்.
இவனுக்கோ...பொங்குசனி..அப்படியே வீட்டில் செல்வம் பொங்கும் என்றெல்லாம்..
சனிப் பெயர்ச்சியின் போது சொல்லுவர்.
ஆனால் இப்பதிவு அதுஅல்ல.

வறுமைக் குறித்து.

ஒருவருக்கும் துன்பம் ஏற்பட்டால்..அவருக்கு தொடர்ந்து துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.பட்ட காலிலேயே படும் என்பது ஒரு சொல வடை,.

அப்படி ஒருவருக்கு துன்பம் வருகிறாம்.

இராமச்சந்திர கவிராயர் என்னும் கவி ஒருவர் ஒருவனுக்கு அடுக்கடுக்காய் வரும் துன்பத்தை...அந்த அவலத்தை சற்று நகைச்சுவையுடன் கூறும் பாடலைக் கேளுங்கள்.

"ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியார் மெய்நோக அடிமை சாக

,மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே"


அவன் வீடு வயல் வெளி சூழ்ந்த பண்ணை வீடாம்.அவன் வீட்டில் பசு ஒன்று கன்றை ஈன்ற போது கொட்டித் தீர்த்தது மழை.அந்த மழையில்..அவன் வீடு இடிந்து விழுகிறது.வீட்டினுள் சென்று பார்த்தால், மனைவி படுகாயப்பட்டுள்ளாள்.அவன் அவளை மீட்க உதவிக்கு வேலைக்காரனைக் கூப்பிடுகிறான்.ஆனால் அவனோ வீட்டு இடிபாடுகளில் சிக்கி பிணமாகியுள்ளான்.அவனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.அப்போது ஞாபகம் வருகிறது..மழையால் மண் ஈரமாய் இருக்கும் போதே விதைநெல்லைத் தெளித்துவிட்டால்..வரும் காலம் வயிற்றுப்பாட்டிற்கு கவலை இல்லை.ஆகவே விதை நெல்லை தெளிக்க ஓடுகிறான்.(மனைவியை யாரையாவது பின் உடன் அழைத்து வந்து காப்பாற்றலாம் என்ற எண்ணம் வேறு)..ஆனால் செல்லும் வழியிலேயே, இவனுக்குக் கடன் கொடுத்தவன் எடுத்துச் சென்ற விதை நெல்லைக் கடனுக்கு பதில் பிடுங்கிச் செல்ல,அந்த வேளையில், பக்கத்து ஊரில் நெருங்கிய சொந்தம் இறந்து விட்டான் என்ற சாவு செய்தியை ஒருவன் கொண்டு வர..அப்போது..அவன் எப்போதோ அழித்திருந்த விருந்தினர் கூட்டம் வர..அச்சமயம் அவன் காலை ஒரு பாம்பு கொத்த..அதனால் அவன் கண்கள் இருள..அச்சமயம், அரசன் அவன் வரி செலுத்தவில்லை என அதை வசூல் செய்ய ஆளை அனுப்ப, அதே சமயம் வரி கொடுக்கும் போதே..கோவில் குருக்கள் அவன் தர வேண்டிய தட்சணை பாக்கியையும் கேட்க..கண் மூடுகிறான் அவன்.

(இப்படியெல்லாம் நடக்குமா? என்று வினவாமல் பாடலை மட்டும் ரசிக்கவும்)

குறுந்தொகை-179



தோழி கூற்று
(பகலில் வந்து தலைவியோடு அளவளாவிய தலைவனை நோக்கி,“எம் ஊருக்கு வந்து இரவில் தங்கிச் செல்வாயாக” என்று தோழி கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் குட்டுவன் கண்ணன்

இனி பாடல்-
 
கல்லென் கானத்துக் கடமா வாட்டி
   
எல்லு மெல்லின்று ஞமலியு மிளைத்தன
   
செல்ல லைஇய வுதுவெம் மூரே
   
ஓங்குவரை யடுக்கத்துத் தீந்தேன் கிழித்த

குவையுடைப் பசுங்கழை தின்ற கயவாய்ப்
   
பேதை யானை சுவைத்த
   
கூழை மூங்கிற் குவட்டிடை யதுவே.


                               -குட்டுவன் கண்ணன்.



கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமாவை(ஒருவகை விலங்கு) நீ அலைப்ப, பகற் பொழுதும் மங்கியது;  நாய்களும் நின்னுடன் வேட்டையாடி இளைப்பை அடைந்தன; போகற்க; உயர்ந்த மலைப்பக்கத்தில், இனிய தேனிறாலைக்கிழித்த, கூட்டமாகிய பசிய மூங்கில்களின் குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய,  பேதைமையையுடைய யானை,  தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய,  உச்சியின் இடையே உள்ளதாகிய, அஃது எமது ஊராகும்.


    (கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.

Sunday, December 21, 2014

குறுந்தொகை-178



தோழி கூற்று
(தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக்கண்டு, ‘‘இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில் தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற உமது விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்” என்று கூறி இரங்கியது.)


மருதம் திணை- பாடலாசிரியர் நெடும்பல்லியத்தை.

இனி பாடல்-

அயிரை பரந்த வந்தண் பழனத்
   
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
   
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
   
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்

தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக்
   
கரிய மாகிய காலைப்
   
பெரிய நோன்றனிர் நோகோ யானே.


                                       நெடும்பல்லியத்தை.

உரை-

 அயிரைமீன் மேய்தற்குப்பரந்த, அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து, அழகை மேற்கொண்டமலரையுடையனவாகிய,  உள்ளே துளையையுடைய திரண்ட தண்டையுடைய, ஆம்பலைப் பறிப்போர்,  புனல்வேட்கையை அடைந்தாற் போல,  இத்தலைவியின் நகிலினிடையே துயிலப்பெற்றும், நடுங்குதலை யொழிந்தீர்அல்லீர்; யாம் ,கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி,  நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில், பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்;  யான் அதனை யறிந்து வருந்துவேன்.



    (கருத்து) நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்பு நான் நன்கறிந்திலேன்.

.

    நீரில் வளர்ந்த ஆம்பலைப் பறிப்போர் விடாயுற்ற காலத்தில் எளிதிற் பருகுதற்கு அண்மையில் நீர் இருப்பவும் நீரை வேட்டு விரைந்தாற் போல, நும் வேட்கையை முற்றுவிக்கும் தலைவி இடையறாது உம் அருகிலே இருப்பவும் நீர் விரைந்தீர் என்றாள். இதனால் தலைவனது காம நிலை உரைக்கப்பட்டது.

Friday, December 19, 2014

குறுந்தொகை-177



(தலைவன் மாலைக்காலத்தில் வருவானென்று தோழி தலைவிக்குக்கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்-

கடல்பா டவிந்து கானன் மயங்கித்
   
துறைநீ ரிருங்கழி புல்லென் றன்றே
   
மன்றவம் பெண்ணை மடல்சேர் வாழ்க்கை
   
அன்றிலும் பையென நரலு மின்றவர்

வருவர்கொல் வாழி தோழி நாந்தப்
   
புலப்பினும் பிரிவாங் கஞ்சித்
   
தணப்பருங் காமந் தண்டி யோரே.


                        -உலோச்சன்

உரை-

   தோழி , கடலானதுஒலி அடங்க, கடற்கரைச் சோலை மயக்கத்தையுடையதாக,  துறையையும் நீரையும் உடைய கரிய கழி,  பூக்கள் கூம்பியதனால் பொலிவழிந்தது; மன்றத்தின் கண் உள்ள அழகிய பனைமரத்தினது, மடலின் கண்ணே பொருந்திய வாழ்க்கையையுடைய,  அன்றிற் பறவையும், மெல்ல,  கூவும்; முன்புநாம் தம்மைப் புலந்தாலும்,  அவ்விடத்துப் பிரிதலை அஞ்சி,  நீங்குதற்கரிய காம இன்பத்தை,  அலைத்தும்பெற்றவராகிய, தலைவர், இன்று வருவர்.



    (கருத்து) தலைவர் இன்று வருவர்.

Thursday, December 18, 2014

குறுந்தொகை-176



தோழி கூற்று
(தலைவனைத் தலைவி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்னுங்கருத்தினால், “பல நாள் இங்கே வந்து பணிந்த சொற்களைக் கூறிச்சென்றதலைவன் இப்பொழுது எங்கே இருக்கின்றானோ? அவனை நினைந்து என் நெஞ்சம் கலங்குகின்றது” என்று அவளுக்கு இரக்கம் உண்டாகும்படிதோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வருமுலையாரித்தி


இனி பாடல்.

 
ஒருநாள் வாரல னிருநாள் வாரலன்
   
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றியென்
   
நன்னர் நெஞ்ச நெகிழ்த்த பின்றை
   
வரைமுதிர் தேனிற் போகி யோனே

ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
   
வேறுபுல னன்னாட்டுப் பெய்த
   
ஏறுடை மழையிற் கலிழுமென் னெஞ்சே.


                                      -வருமுலையாரித்தி.

உரை-

 ஒருநாள் வந்தானல்லன்; இரண்டு நாட்கள் வந்தானல்லன்;  பல நாட்கள் வந்து,  பணிவைப் புலப்படுத்தும் மொழிகளைப் பல்காற் கூறி,  எனது நன்மையையுடைய நெஞ்சத்தை இரங்கச் செய்தபிறகு,  மலையினிடத்தில் முதிர்ந்து வீழ்ந்த தேனிறாலைப் போலப் போயினவனும்,  நமக்குப் பற்றுக் கோடாகிய எந்தையுமாகிய தலைவன், எங்கே இருக்கின்றானோ?  வேற்றுப் புலங்களையுடைய நல்ல நாட்டிற்பெய்த, இடியேற்றையுடைய மழைநீர் கலங்கி வருவது போல, என் நெஞ்சு கலங்கும்.

Sunday, December 14, 2014

மூன்று பீர் பாட்டில்களும் நட்சத்திர விருந்தும் (சிறுகதை)




கையில் இருந்த பணத்தை எண்ணினான்..முத்து

மீண்டும் எண்ணினான் ...அதேதான் இருந்தது.ஐநூறு ரூபாய்.

இன்றைக்கு டாஸ்மாக் போயிட வேண்டியதுதான்.நாளைக்குப் போனால்..காந்தி ஜெயந்தி..கடை இருக்காது என்பதால்..மக்கள் இரண்டு நாட்கள் முன்னதாகவே சரக்கை வாங்கி கை இருப்பில் வைத்து விடுவார்கள்.சமயத்தில்.. கடைசியில் வருபவர்களுக்கு ஸ்டாக் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

அப்படியெல்லாம் சொல்லி விடக்கூடாது என ஆண்டவனை எல்லாம் வேண்டிக்கொண்டு..டாஸ்மாக் கடையில் வரிசையில் நின்று மூன்று பீர் பாட்டில் வாங்கினான்.

**** **** **** ***

'என்னங்க..போன மாச வாடகையே பாக்கி..வீட்டு ஓனர் வந்து கத்திட்டுப் போனார்.

பால் காசு கொடுத்தாத் தான் பால் கொடுப்பேன்னு சொல்லிட்டார் பால்காரர்..குழந்தைக்கு பால் இல்லை 'என்றாள் பாக்கியலட்சுமி.

'ம்..ம்..' என்றான்.

அப்படின்னா என்ன அர்த்தம்ங்க..என்றாள்

அடச்சே..மனுஷனுக்கு வீட்டிலே நிம்மதி இல்ல..ஏண்டா வரோம்னு இருக்கு

அப்படி சொன்னா எப்படி..கையில இருந்த பணத்திலே டாஸ்மாக்குக்குப் போய் தொலைச்சுட்டீங்க..வீட்டு ஞாபகமே இல்லை உங்களுக்கு..குழந்தைகள் எல்லாம் நான் யாருக்கோவா பெத்தேன்..உங்களுக்குத் தானே..அப்ப அவங்களுக்கான செலவு பத்தியும் யோசிக்கணும்

என்னடி சொன்னே..என்றபடியே அவள் கன்னத்தில் பளார் என அறைந்தான்..பின் வாங்கிவந்த பீர் பாட்டிகளை ஜாக்கிரதையாக உள்ளே கொண்டு சென்று வைத்தான்.

***** ***** ****** *****

'முத்து..எவ்வளவு பணத்தோட வந்திருக்க?'

'..கையில நூறு ரூபாயும்..கொஞ்சம் சில்லறையும் தான் இருக்கு'

'என்ன முத்து.. நீயே இப்படிச் சொன்னா எப்படி..முப்பது அடி தலைவர் கட் ஆவுட்டுக்கு பீர் அபிஷேகம் பண்ணனும்னா எவ்வளவு பீர் வேணும்..அதைத்தவிர படத்துக்கு டிக்கட் இரு நூறு ரூபாய்' என்றவாறு தலையைச் சொறிந்தான்..லோகல் தலைவன்.

'இல்ல தலைவா..என்னால முடிஞ்சது மூணு பீர் வாங்கியாந்திருக்கேன்'

'அப்படியா..சரி..சரி..அந்த அண்டாவுலபோய்க் கொட்டு..படத்துக்கு துட்டு இல்லேனா படம் அப்புறம் பார்த்துக்கலாம்'

படம் பார்க்க முடியா..ஏமாற்றம் அடைந்த முத்து..பீரை அண்டாவில் கொட்டிவிட்டு..தன் தலைவன் நடித்த படத்தை முதல் நாள் பார்க்க முடியாத துக்கம் தாளாது ..கையில் இருந்த காசுக்கு கள்ள சாரயத்தை வாங்கி குடித்துவிட்டு..அந்த நடிகர் நடத்த படம் வெளியாகும் தியேட்டரின் நடைபாதையில் வீழ்ந்து கிடந்தான்..

**** ***** **** *****

குழந்தை பசியால் பாலுக்கு கத்தியது. சத்தான உணவில்லாததால் பால் சுரக்காத வற்றிப் போன தன் மார்பை குழந்தை சுவைக்க அதன் வாயில் திணித்தாள் பாக்கியலட்சுமி.

**** ***** ***** *****

தன் படம் வெற்றியடைந்த சந்தோஷத்தைக் கொண்டாட பிரபலங்களுக்கு ஐந்து நட்சத்திர ஓட்டலில் விருந்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்

Friday, December 12, 2014

குறுந்தொகை-175


தலைவி கூற்று
(தலைவன் பிரிந்திருந்த காலத்து ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, “நீ ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று தோழி வற்புறுத்தினாளாக, “நான் வருந்துகின்றேனல்லேன்; ஊரார் யாது கூறினும் கூறுக” என்று தலைவி சொல்லியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் உலோச்சன்

இனி பாடல்-
 
பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி
   
உரவுத்திரை பொருத திணிமண லடைகரை
   
நனைந்த புன்னை மாச்சினை தொகூஉம்
   
மலர்ந்த பூவின் மாநீர்ச் சேர்ப்பற்

கிரங்கேன் றோழியிங் கென்கொ லென்று
   
பிறர்பிற ரறியக் கூறல்
   
அமைந்தாங் கமைக வம்பலஃ தெவனே.



                                 -உலோச்சன்.


உரை-


    தோழி-,  செவ்வியை யுடைய தேனை விரும்பி, பல வண்டுக்கூட்டங்கள், உலாவுதலையுடைய அலைகள் மோதிய,  செறிந்தமணல் அடைந்த கரையின் கண் உள்ள,அலைத் துவலையால் நனைந்த புன்னை மரத்தினது,  பெரிய கிளையின்கண் கூடுகின்ற, மலர்ந்த மலர்களையும்,  கரிய நீரையுமுடைய,  கடற்கரைத் தலைவன்பொருட்டு,  வருந்தேன்;  இவ்விடத்து இவள் ஏன் இங்ஙனம் ஆயினளென்று,  பிறர் பிறர் அறியும்படி கூறிதல்,  அவர்களுடைய மனம் அமைந்தபடி அமைக; அவர்கள் கூறும் அம்பல், என்ன துன்பத்தைச் செய்வதாகும்?

 

    (கருத்து) ஊரவர் கூறும் பழிமொழியை யான் அஞ்சேன்.


     (“தலைவன் என்னைப் பிரிந்தானென நான் வருந்தினேனல்லேன்; ஆயினும் என்னையறியாது என்பால் வேறுபாடுகள் உண்டாகின்றன. அது கண்டு பிறர் கூறுவன கூறுக; அவற்றால் என் காமம் வலியுறுமே யன்றி எனக்கு வரும் ஏதமொன்றில்லை” என்றாள்.)

Thursday, December 11, 2014

குளித்த மரங்கள்

                           

மழை

குளிப்பாட்டி விட்டதும்

வெயில் வந்து

துவட்டி விட்டதும்

மர இலைகளின்

பளிச்சிடும் ஆரோக்கிய

பசுமை

குறுந்தொகை-174



தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரியக் கருதியிருப்பதையுணர்ந்து கூறிய தோழியை நோக்கி, “பாலை நிலத்து வழிகள் கடத்தற்கரியன வென்று எண்ணாமல் என்னை அவர் பிரிந்து சென்றால், உலகத்தில் பொருள்தான் பெற்றகுரியது போலும்! அருள் யார் பாலுமின்றி ஒழிவது போலும்!”என்று தலைவி கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-

 
பெயன்மழை துறந்த புலம்புறு கடத்துக்
   
கவைமுட் கள்ளிக் காய்விடு கடுநொடி
   
துதைமென் றூவித் துணைப்புற விரிக்கும்
   
அத்த மரிய வென்னார் நத்துறந்து

பொருள்வயிற் பிரிவா ராயினிவ் வுலகத்துப்
   
பொருளே மன்ற பொருளே
   
அருளே மன்ற வாருமில் லதுவே.


                                  -வெண்பூதி.

 

   உரை-
 தோழி -, பெய்தலையுடையமழை, பெய்யாது நீங்கிய,  தனிமைமிக்க பாலை நிலத்தில்,  கவைத்தமுள்ளையுடைய கள்ளியினது,  காய்வெடிக்கும் பொழுது விடும் கடிய ஒலியானது, நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய ஆணும் பெண்ணுமாகிய இரட்டைப் புறாக்களைநீங்கச் செய்யும், அருவழிகள், கடத்தற்கரியன வென்று கருதாராகி, நம்மைப்பிரிந்து, பொருளைத்தேடும் பொருட்டு நம் தலைவர் பிரிவாராயின், இந்த உலகத்தில்,  நிச்சயமாக, செல்வமே உறுதிப் பொருளாவது;  அருள்தான்,  தன்னை ஏற்றுக் கொள்வார்யாரும் இல்லாதது.



    (கருத்து) அருளுடையாராயின் என்னைப் பிரிந்து செல்லல் தகாது.

Wednesday, December 10, 2014

தமிழனுக்கு....பாரதியார்

                                 

தமிழா...தெய்வத்தை நம்பு..உனக்கு நல்ல காலம் பிறக்கும்.

உனது ஜாதியிலே உயர்ந்த அறிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்.தெய்வக் கவிகள்,சங்கீத வித்வான்கள் ,கை தேர்ந்த சிற்பிகள்,பல நூல் வல்லுனர்கள்,தொழில் வல்லுனர்கள்,தேவர்கள் உன் ஜாதியில் மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள் நம் நாட்டுப் பெண்களெல்லாம் சக்தி யின் அவதாரமாக பிறந்திருக்கிறார்கள்.ஒளி,சக்தி,வலிமை,வீர்யம்,கவிதை,அழகு,மகிழ்ச்சி ஆகிய நலங்களெல்லாம் உன்னைச் சாருகின்றன.
ஜாதி வேற்றுமையை நீ வளர்க்கக்கூடாது.ஜாதி இரண்டொழிய வேறில்லை என்ற பழந் தமிழ் வாக்கியத்தை வேதமாகக்கொள்.
பெண்களை அடிமை என்று எண்ணாதே...முற்காலத்தில் தமிழர்கள் தம் மனைவியை 'வாழ்க்கைத்துணை'என்றுள்ளனர்.ஆத்மாவும்,சக்தியும் ஒன்று..ஆணும்..பெண்ணும் சமம்.வேதங்களை நம்பு.புராணங்களைக் கேட்டு பயனடைந்துக்கொள்.புராணங்களை வேதங்களாக்க நினைத்து மடமைகள் பேசி,விலங்குகள் போல நடந்து கொள்ளாதே.

தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க்கதைகள் மித மிஞ்சிவிட்டன.உன் மதக் கொள்கைகள்,லௌகீகக் கொள்கைகள்,வைதீக நடை எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை விரித்து ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு.வீட்டிலும்,வெளியிலும்,தனிமையிலும்,கூட்டத்திலும் எதிலும் எப்பொழுதும் நேர்மை இருக்க வேண்டும்.உண்மை இருக்க வேண்டும்.நீயும் பிறரை வஞ்சிக்காதே..பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது.பிறர்..பிறரை வஞ்சிப்பதையும் தடு.எல்லாப் பேறுகளையும் விட உண்மைப் பேறுதான் பெருமை கொண்டது.உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர்.உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர்.உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி.உண்மை பரமாத்மாவின் கண்ணாடி.ஆதலால் தமிழா..எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும்படி செய்.
தமிழா..எழுதிப்படிப்பெதெல்லாம் மெய்யுமில்லை..எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை.முந்தைய சாஸ்திரம் தான் மெய்..பிந்தைய சாஸ்திரம் பொய். என்று தீர்மானம் செய்துக் கொள்ளாதே..காலத்துக்கும்..உண்மைக்கும் எதிரிடையாக ஒரு கணக்கு ஏற்பட்டிருக்கிறதா? தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி ..மூடர்கள் உப்பு நீரைக் குடிக்கிறார்கள். என பஞ்சத்தந்திரம் நகைக்கிறது.
இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பன.இவற்றுள் அறம் என்பது கடமை.அது உனக்கும்,உன் சுற்றத்தாருக்கும்,பிறர்க்கும் நீ செலுத்த வேண்டிய கடமை.பிறர் என்பதில் வையகம் முழுதும் அடக்கம்.கடமையில் தவறாதே.

பொருள் என்பது செல்வம்.நிலமும்,பொன்னும்,கலையும்,புகழும் நிறைந்திருத்தல்.நல்ல மக்களைப் பெறுதல்,இனப்பெருமை சேருதல்,இவையெல்லாம் செல்வம்.இச் செல்வத்தைச் சேர்த்தல்மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
இன்பம் என்பது இனிய பொருள்களுடன் உயிர் கலந்து நிற்பது.பெண்,பாட்டு,கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது,இவ்வின்பங்களெல்லாம்...தமிழா..உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக.உன்னுடைய
நோய்களெல்லாம் தீரட்டும்.உன் வறுமை தொலையட்டும்.பஞ்ச பூதங்களும் உனக்கு வசப்படட்டும்.நீ எப்போதும் இன்பம் எய்துக.
வீடாவது...பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது.'வீடு"என்ற சொல்லுக்கு விடுதலை என்று பொருள்.மேற் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோர்க்கு ஈசன் தானாகவே வீட்டு நிலை அருள் செய்வான். தமிழா..உன் புருஷார்த்தங்கள் கை கூடட்டும்.



பாரதி- தமிழன்

குறுந்தொகை-173



தலைவன் கூற்று
(பாங்கியிற் கூட்டத்தின்கண் தலைவன் தோழியிடம் குறையிரப்ப அவள் மறுத்தாளாக, “இனி மடலேறும் பரிகார மொன்று இருத்தலால், அது செய்ய நினைந்து நான் செல்கின்றேன்” என்று அவன் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் மதுரைக் காஞ்சிப் புலவன்


இனி பாடல்-
 
பொன்னே ராவிரைப் புதுமலர் மிடைந்த
   
பன்னூன் மாலைப் பனைபடு கலிமாப்
   
பூண்மணி கறங்க வேறி நாணட்
   
டழிபட ருண்ணோய் வழிவழி சிறப்ப

இன்னள் செய்த திதுவென முன்னின்
   
றவள்பழி நுவலு மிவ்வூர்
   
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமா ருளெனே.



                                      -மதுரைக் காஞ்சிப் புலவன்.
உரை-

     பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய பூக்களை நெருங்கக்கட்டிய,  பலவாகிய நூல்களையுடைய மாலைகளை அணிந்த,  பனங்கருக்கால் உண்டாக்கப்பட்ட மனச் செருக்கையுடைய குதிரையை, அதன் கழுத்திற் பூட்டிய மணி ஒலிக்கும்படி ஊர்ந்து, நாணத்தைத் தொலைத்து, மிக்க நினைவையுடைய உள்ளத்தேயுள்ள காமநோய், மேலும் மேலும் மிகுதியாக,  இன்னாளால் உண்டாக்கப்பட்டது இக்காம நோயென்று யான் கூற,  அக்கோலத்தைக் கண்ட இவ்வூரி லுள்ளார்,  எல்லோர்க்கும் முன்னே நின்று,  தலைவியினது பழியைக் கூறுவர். அங்ஙனம் உள்ளதொரு பரிகாரத்தை அறிந்திருத்தலால்,  இவ்விடத் தினின்றும்,  போகும் பொருட்டு உள்ளேன்.



    (கருத்து) நான் இனி மடலேறுவேன்.

Monday, December 8, 2014

குறுந்தொகை-172



தலைவி கூற்று
(வரைவிடை வைத்துத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘இவள் ஆற்றாள்’ எனக் கவன்ற தோழியை நோக்கி, அவர் என்னைப் பிரிந்து அங்கே எங்ஙனம் இருப்பார்? என்மனம் மிக வருந்துகின்றது” என்று தலைவி கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் நன்னாகையார்


இனி பாடல்-

தாஅ வஞ்சிறை நொப்பறை வாவல்
   
பழுமரம் படரும் பையுண் மாலை
   
எமிய மாக வீங்குத் துறந்தோர்
   
தமிய ராக வினியர் கொல்லோ

ஏழூர்ப் பொதுவினைக் கோரூர் யாத்த
   
உலைவாங்கு மிதிதோல் போலத்
   
தலைவரம் பறியாது வருந்துமென் னெஞ்சே.


                                -கச்சிப்பேட்டு நன்னாகையார்.

உரை-

    தோழி வலியையுடைய அழகிய சிறையையும்,  மென்மையாகப் பறத்தலையும் உடைய,  வௌவால்கள்,பழுத்த மரங்களை நினைத்துச் செல்லும்,  தனியரானார்க்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நான் தனியாக ஆகுமாறு,  இங்கு என்னை  பிரிந்த தலைவர், தனிமையை உடையராகவும்,  இனிமையை யுடையரோ?  ஏழு ஊரிலுள்ளார்க்குப் பொதுவாகிய தொழிலின் பொருட்டு, ஓர் ஊரின்கண் அமைத்த,  உலையிற் செறித்த துருத்தியைப் போல,  எல்லையை யறியாமல்,  வருத்தத்தை அடையும்.

   
(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்த தனிமையினால் துன்புறு வாரென்று என் நெஞ்சம் வருந்துகின்றதே யன்றி எனது தனிமைத் துன்பத்தைக் குறித்தன்று.

Sunday, December 7, 2014

குறுந்தொகை-171



தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளீட்டப் பிரிந்த காலத்தில் அயலாரை மணமுடிக்க எட்க்கும் முயற்சி முயற்சி பயன்படாதொழியும்” எனத் தலைவி கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர்  பூங்கணுத்திரையார்

இனி பாடல்-

காணினி வாழி தோழி யாணர்க்
   
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
   
மீன்வலை மாப்பட் டாஅங்
   
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.


                          -பூங்கணுத்திரையார்

உரை-

    (ப-ரை.) தோழி- இப்பொழுது பார்ப்பாயாக;  புதுவரவாகிய,  மிக்க புனலையும்,  அடைந்த கரையையுமுடைய, ஆழமான குளத்தின்கண் அமைத்த,  மீனுக்குரிய வலையின்கண், விலங்கு அகப்பட்டாற் போல,  அயலாரிடத்து,  வரைவுக்குரிய மணமுடிக்கும் இம் முயற்சி,என்ன பயனுடைத்து?

 

    (கருத்து) அயலார் மணந்து கொள்வதால் பயனொன்று மில்லை.

Saturday, December 6, 2014

குறுந்தொகை-170




தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்க பொருளிட்ட தலைவியைப் பிரிந்த காலத்தில் அவனது பிரிவை தாங்கமாட்டாள் எனக் கவலையுற்ற தோழிக்கு, “தலைவனது நட்புக் கெடாதென்பதை நான் அறிந்துள்ளேன்; . அதனால் நான் உறுதி நீங்கேன்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கருவூர் கிழார்

பலருங் கூறுகவஃ தறியா தோரே
 
அருவி தந்த நாட்குர லெருவை
 
கயநா டியானை கவள மாந்தும்
 
மலைகெழு நாடன் கேண்மை

தலைபோ காமைநற் கறிந்தனென் யானே.


                                  -கருவூர் கிழார்.

உரை-

  தோழி, நான், அருவியால் தரப்பட்ட, காலத்தில் விளைந்த கொத்தையுடைய -ஆழமான நீர்நிலையை ஆராய்கின்ற யானையானது,  கவளமாக உண்ணும், மலைகள் பொருந்திய நாட்டையுடைய தலைவனது நட்பு, கெடாமையை,  நன்றாக, அறிந்துள்ளேன்.  அதனை, அறியாதோர் பலரும் தமக்குத் தோன்றியவற்றைக் கூறுக.



    (கருத்து)தலைவன் என்னை மணமுடிப்பான் என துணிவுடன் உள்ளேன்.

Friday, December 5, 2014

குறுந்தொகை-169



தலைவி கூற்று
(தலைவன் தன்பால் பரத்தைமை இல்லையென்று தலைவியினிடம் கூறித் தெளிவிக்குங் காலத்து, தலைவி, “எம் உயிர் நீங்குவதாக!” என்று கூறியது.)

மருதம் திணை - பாடலாசிரியர்  வெள்ளி வீதியார்.

இனி பாடல்-

சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டிற்
   
றெற்றென விறீஇயரோ வைய மற்றியாம்
   
நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே
   
பாணர், பசுமீன் சொரிந்த மண்டை போல

எமக்கும் பெரும்புல வாகி
   
நும்மும் பெறேஎ மிறீஇயரெம் முயிரே.



                             -வெள்ளி வீதியார்.


யாம் நும்மோடு மகிழ்ந்து சிரித்த தூய வெள்ளிய பற்கள், பாலை நிலத்திற் செல்லும் யானையினது,  மலையைக் குத்திய கொம்பைப் போல, விரைவாக, முறிவனவாக;  எமது உயிர், பாணர் தாம் பிடித்த பச்சை மீனைப் பெய்த மண்டையைப் போல,  எமக்கும் பெரிய வெறுப்பைத் தருவதாகி, உம்மையும் யாம் பெறேமாய் அழிக.


     (கருத்து) இனி, நும்மோடு அளவளாவுதலினும் இறத்தல் நன்று.

பாணர் மீன் பிடித்துத் தமக்குரிய மண்டையிலே இட்டு வைத்தல் மரபு. (மண்டை -வாயகன்ற மண்பாத்திரம்; ) ‘அம்மண்டை மீன் நாற்றத்தைப் பெற்று வேறொன்றற்குப் பயன்படாதது போல எம் உயிர் எமக்கே வெறுப்புத் தருவதாயிற்று; நுமக்கும் இனிப் பயன்படேம்; இது கழிக’ என்றாள்.
    தலைவனது பரத்தைமையால் மிக்க சினம் கொண்டவளாதலின் தலைவி இங்ஙனம் கூறினாள்.


9மருதத் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்துப் பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்வான். இத்தகு பரத்தைமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்வாள் தலைவி)

Thursday, December 4, 2014

குறுந்தொகை-168



தலைவன் கூற்று

(பொருள் தேடத் துணிந்த நெஞ்சை நோக்கி, “தலைவியைப் பிரியின் உயிர்வாழ்தல் அரிது” என்று தலைவன் கூறியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் சிறைக்குடியாந்தையார்

இனி பாடல்-


மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகை
 
இரும்பனம் பசுங்குடைப் பலவுடன் பொதிந்து
 
பெரும்பெயல் விடியல் விரித்துவிட் டன்ன
 
நறுந்தண் ணியளே நன்மா மேனி

புனற்புணை யன்ன சாயிறைப் பணைத்தோள்
 

மணத்தலுந் தணத்தலு மிலமே
 
பிரியின் வாழ்த லதனினு மிலமே.

என்பது பொருள்வலிக்கும் நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

 
                                                -சிறைக்குடி யாந்தையார்.


உரை-

நெஞ்சே, தலைவி, நல்ல மாமையையுடைய மேனி,  மாரிக்காலத்தில் மலரும் பிச்சியினது,  நீர் ஒழுகும்கொழுவிய அரும்புகளில்,  பெரிய பசிய பனங் குடையில்,பலவற்றை ஒருங்கே வைத்து மூடி,  பெருமழை பெய்தலையுடைய விடியற் காலத்தே, விரித்துவிட்டாற் போன்ற,  நறுமையையும் தண்மையையும் உடையவள்; நீரில் விடும் தெப்பத்தைப் போன்ற,  வளைந்த சந்தினையுடைய பருத்த அவள் தோள்களை, பொருந்துதலும், பிரிதலும், இலம் . பிரிவேமாயின்,  உயிர் வாழ்தல், அதனைக் காட்டிலும், இல்லேம்.

 
    (கருத்து) தலைவியைப் பிரிதல் அரிது.

Wednesday, December 3, 2014

குறுந்தொகை-167



செவிலித்தாய் கூற்று
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்று வந்த செவிலி நற்றாயினிடத்தில், “தலைவி தலைவன் உவக்கும்படி அட்டு உண்பிக்கின்றாள்” என்று கூறியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர் கூடலூர் கிழார்

இனி பாடல்

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
 
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
 
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
 
தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்


இனிதெனக் கணவ னுண்டலின்
 
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே.



 
                                         -கூடலூர் கிழார்.



முற்றிய தயிரைப் பிசைந்த,  காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரலை,  துடைத்துக் கொண்ட ஆடையை, துவையாமல் உடுத்துக் கொண்டு,  குவளை மலரைப் போன்ற மையுண்ட கண்களில், தாளிப்பினது புகை மணப்ப, தானே துழாவிச் சமைத்த,  இனிய புளிப்பையுடைய குழம்பை, கணவன், இனிதென்று உண்பதனால்,  தலைவியின் முகமானது, நுண்ணிதாக மகிழ்ந்தது.



    (கருத்து) தலைவி தன் தலைவனுக்கு வேண்டியவற்றை அவன் மகிழும்படி செய்துவருகின்றாள்.

 

Tuesday, December 2, 2014

குறுந்தொகை-166




தோழி கூற்று
(தாய் முதலியோருடைய பாதுகாப்பின்கண் தலைவி இருத்தலால் தலைவன் அவளைக்கண்டு அளவளாவுதல் அரிதாயிற்றாக, அதனால் உண்டான துன்பத்தைக் குறிப்பிப்பாளாகி, மரந்தையூர் சிறந்ததாயினும் தனிமையினால் வருத்தந் தருவதாகின்றதென்று தோழி கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் கூடலூர் கிழார்

இனி பாடல்-

தண்கடற் படுதிரை பெயர்த்தலின் வெண்பறை
   
நாரை நிரைபெயர்ந் தயிரை யாரும்
   
ஊரோ நன்றுமன் மரந்தை
   
ஒருதனி வைகிற் புலம்பா கின்றே.


                                     -கூடலூர் கிழார்.


 குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால்,  வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய,  ஊராகியமரந்தை, தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது;  தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின்,  வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.

 

    (கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.

    (வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.

குறுந்தொகை-165




தலைவன் கூற்று
(தோழியினிடம் இரந்து நின்றும் உடம்பாடு பெறாத தலைவன் தலைவிபாற் சென்ற தன் நெஞ்சை நோக்கி, “ஒருமுறை விரும்பி அறிவிழந்தாய்; மீண்டும் விழைகின்றாய்!” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பரணர்

இனி பாடல்-

 
மகிழ்ந்ததன் றலையு நறவுண் டாங்கு
   
விழைந்ததன் றலையு நீவெய் துற்றனை
   
அருங்கரை நின்ற வுப்பொய் சகடம்
   
பெரும்பெய றலையவீந் தாங்கிவள்

இரும்பல் கூந்த லியலணி கண்டே.




                                  -பரணர்.


 நெஞ்சே, ஏறுதற்கரிய கரையில் நின்ற, உப்பைச் செலுத்துகின்ற வண்டி,  பெரிய மழை பொழிந்ததனால், அழிந்ததுபோல, இவளது கரிய கூந்தலின், இயற்கை அழகைக் கண்டு, மறுக்கப்பட்டோமென்று அன்பு ஒழியாயாய்க் காமத்தால் நான் அழிந்து,  கள்ளுண்டு அறிவிழந்து களித்ததன் மேலும், கள்ளை உண்டாற்போல், நீ, ஒருமுறை விரும்பியதன் பின்னும்,  விருப்பத்தை அடைந்தாய்.



    (கருத்து) நீ தலைவியோடு அளவளாவ விரும்பல் மயக்கத்தின் பாற்பட்டது.

( கள்ளுண்டார் அறிவிழந்து நின்று களித்தல் ஒருமுறை கள்ளுண்டு மீட்டும் உண்ணும் வேட்கையைக் காமமுடையார் நிலைக்கு உவமை )

Sunday, November 30, 2014

குறுந்தொகை-164



காதற் விலைமகள் கூற்று
(தலைவி தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட விலைமகள் தலைவிக்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழியை நோக்கிக் கூறுவாளாய், “தலைவி குறை கூறுதற்குரிய குற்றம் உடையேமெனின் எம்மைக் கடல் வருத்துக” என்று சொல்லியது.)

 மருதம் திணை-பாடலாசிரியர் மாங்குடி மருதன்

இனி பாடல்-

கணைக்கோட்டு வாளைக் கமஞ்சூன் மடநாகு
 
துணர்த்தேக் கொக்கின் றீம்பழங் கதூஉம்
 
தொன்றுமுதிர் வேளிர் குன்றூர்க் குணாது
 
தண்பெரும் பவ்வ மணங்குக தோழி

மனையோண் மடமையிற் புலக்கும்
 
அனையே மகிழ்நற்கியா மாயின மெனினே.

 
                                                  -மாங்குடி மருதன்.



  தோழி. தலைவி தன் அறியாமையாற் புலப்பதற்குக் காரணமாகிய அத் தன்மையேமாக, தலைவன் மகிழ.  நாம் ஆயினோமாயின்,  திரண்ட கொம்பையுடைய வாளை மீனினது,  நிறைந்த கருப்பத்தையுடைய மடப்ப மிக்க பெண்ணானது,  கொத்தையுடைய தேமாவினது,  உதிர்ந்த இனிய பழத்தை, கவ்வுதற்கிடமாகிய, மிகப் பழைய வேளிருக்குரிய,  குன்றூருக்குக் கிழக்கின் கண்ணுள்ளதாகிய, தண்ணிய பெரிய கடல்,  எம்மை வருத்துவதாக.

 
    (கருத்து) தலைவி அறியாமையால் எம்மைக் குறைகூறுகின்றாள்.

Saturday, November 29, 2014

குறுந்தொகை-163




தலைவி கூற்று
(தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.)

நெய்தல் திணை- பாடலாசிரியர் அம்மூவன்

இனி பாடல்-

யாரணங் குற்றனை கடலே பூழியர்
 
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
 
மீனார் குருகின் கானலம் பெருந்துறை
 
வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


                                 -அம்மூவன்.

 

    (ப-ரை.) கடலே, பூழி நாட்டாரது, சிறிய தலையையுடைய,  வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற,  மீனை உண்ணும் கொக்குகளையுடைய,  சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து,  வெள்ளிய பூவையுடைய தாழையை,  அலைகள் அலைக்கின்ற, நடு இரவிலும்,  நினது ஆரவாரம் செவிப்படும்;  நீ யாரால் வருத்த மடைந்தாய்?



    (கருத்து) கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?

தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறியது இது. நள்ளிரவிலும் துயிலாமல் ஆரவாரம் செய்யும் கடலையும் தன்னைப் போன்றதெனக் கருதி,நான் ஒரு தலைவனால் வருந்துவது போல, நீயும் ஒரு தலைவனால் வருந்துகிறாய் போலும்! அத்தலைவன் யார்?” என்று வினவினாள்.

Friday, November 28, 2014

குறுந்தொகை -162


முல்லைத் திணை- பாடலாசிரியர் கருவூர் பவுத்திரன்

இனி பாடல்-

கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
   
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
   
முல்லை வாழியோ முல்லை நீநின்
   
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை

நகுவை போலக் காட்டல்
   
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே.

.
                             -கருவூர்ப் பவுத்திரன்.


உரை-

 முல்லையே,  நீ வாழ் வாயாக.  முல்லையே,  மேகத்தாற் பாதுகாக்கப் பெற்ற,  நீரையுடைய அகன்ற முல்லை நிலத்தின்கண், பலர் தம் இல்லத்திற் புகும் ஒளியிழந்த மாலைக் காலத்தில்,  நீ நினது சிறிய வெள்ளிய அரும்புகளினால்,  புன்னகை கொண்டாய்; தலைவியரைப் பிரிந்த தனிமையை யுடையோர்பால், எள்ளி நகைப்பாய் போலக் காட்டுதலாகிய இது நினக்குத் தகுமோ?

 
    (கருத்து) நான் தலைவியைப் பிரிந்தமையை இகழ்ந்து என்னைச் சிரிப்பதுபோல் இம்முல்லைக் கொடிகள் பூத்தன.

Friday, November 21, 2014

குறுந்தொகை-161



தலைவி கூற்று
(தாய் உறங்காமல் விழித்திருந்தமையால் தலைவன் இரவில் வந்தும் அவனைக் காணுதற்கு இயலாத தலைவி மறுநாள் அவன் வந்து மறைவில் நிற்பதை யறிந்து, “நேற்று அன்னை விழித்திருந்தாள். தலைவன் வந்தா னென்பதை யான் உணர்ந்தும் பயனிலதாயிற்று” என்று தோழியை நோக்கிக் கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் நக்கீரர்.

இனி பாடல்-
   
பொழுது மெல்லின்று பெயலு மோவாது
   
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப்
   
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி
   
அன்னா வென்னு மன்னையு மன்னோ

என்மலைந் தனன்கொ றானே தன்மலை
   
ஆர நாறு மார்பினன்

   
மாரி யானையின் வந்துநின் றனனே.


                            -நக்கீரர்.

   

    (ப-ரை.) தோழி,  சூரியனும் விளக்கம் இலனாயினன்; மழையும்,  ஒழியாமல், பேய்கள் கண்ணை அடிக்கடி கொட்டி நடுங்கும்படி, வேகமாகப் பெய்யும்;  அதற்கு மேல்,  தாயும், புலிப்பற் கோத்த தாலியை யணிந்த, புத்ல்வனைத் தழுவி அன்னையே யென்று என்னை விளிப்பாள்; அப்பொழுது, தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன்,  மழையில் நனைந்த யானையைப் போல, இவ்வீட்டுப்புறத்தே வந்து நின்றான்; !  அவன் எதனைச் செய்ய மேற் கொண்டானோ!

 

    (கருத்து) நேற்றுக் காப்புமிகுதியால் தலைவனைக் காணப்பெற்றேனில்லை.

   

   

Thursday, November 20, 2014

குறுந்தொகை-159


தோழி கூற்று
(தலைவன் கேட்கும் அருகிலேயே நின்றானாக, “தலைவியின் துயரத்தை உணர்ந்து இரங்காதாரை யுடையதாயிற்று இவ்வூர்” என்று கூறும் வாயிலாகத் தலைவியை இற்செறிக்கக் கருதி யிருப்பதைத் தோழி அவனுக்குப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.

இனி பாடல்-

தழையணி யல்கு றாங்கல் செல்லா
   
நுழைசிறு நுசுப்பிற் கெவ்வ மாக
   
அம்மெல் லாக நிறைய வீங்கிக்
   
கொம்மை வரிமுலை செப்புட னெதிரின

யாங்கா குவள்கொல் பூங்குழை யென்னும்
   
அவல நெஞ்சமொ டுசாவாக்
   
கவலை மாக்கட்டிப் பேதை யூரே.


                -வடம வண்ணக்கன் பேரிசாத்தன்.
உரை-.

 இந்தப் பேதைமையையுடைய ஊர்,  தழையை அணிந்த பெண்மையை,  பொறுத்தலாற்றாத,  நுணுகிய சிறிய இடைக்கு,  துன்பம் உண்டாகும்படி,  அழகிய மெல்லிய மார்பகம் நிறையப் பருத்து, பெருமையையும் தேமலையும் உடைய நகில்கள்,  செப்போடு மாறுபட்டன; பூத் தொழிலையுடைய குண்டலத்தை யணிந்த தலைவி,  என்ன துன்பத்தையுடையள் ஆவளோ,   என்று எண்ணும் கவலையையுடைய நெஞ்சத்தோடு,  ஏனென்று கேளாத,  கவலையையுடைய மாக்களை உடையது.


    (கருத்து) என்தாய் முதலியோர் என் நிலையை உணர்ந்திலர்.

Wednesday, November 19, 2014

குறுந்தொகை-160



தலைவி கூற்று
(பொருளீட்ட சென்ற தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை மணந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி மணப்பது யாங்ஙனம்?” என்று கூறியது)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகன்.

இனி பாடல்-
 
நெப்பி னன்ன செந்தலை யன்றில்
 
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
 
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
 
கையற நரலு நள்ளென் யாமத்துப்

பெருந்தண் வாடையும் வாரார்
 
இஃதோ தோழிநங் காதலர் வரைவே.

                           -மதுரை மருதன் இளநாகன்.

   உரை-

தோழி - நெருப்பைப்போன்று சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து ஒலிக்கின்ற செறிந்த இடையிரவையுடைய பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் உதிர்க்காலத்திலும் தலைவர் வரவில்லை.தலைவர் மணந்த் கொள்வேன் என்பது இதுதானா?



    (கருத்து) தலைவர் இன்னும் வந்திலர்; மணப்பார் எனக் கருதுதல் எங்ஙனம்?

 

Tuesday, November 18, 2014

குறுந்தொகை-158



தலைவி கூற்று
(தலைவன் இரவுக்காலத்தில் வந்து அளவளாவுங்காலத்து ஒரு நாள் பெருமழை உண்டாயிற்றாக, அவனது வரவுக்குத் தடை நிகழுமோவென அஞ்சிய தலைவி அவ்வச்சத்தைத் தலைவன் வந்த பின்னர் அம்மழையை நோக்கிக் கூறுவாளாய் அவன் கேட்பக் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
   
நெடுவரை மருங்கிற் பாம்புபட விடிக்கும்
   
கடுவிசை யுருமின் கழறுகுர லளைஇக்
   
காலொடு வந்த கமஞ்சூன் மாமழை
   
ஆரளி யிலையோ நீயே பேரிசை

இமயமுந் துளக்கும் பண்பினை
   
துணையில ரளியர் பெண்டிரிஃ தெவனே.

                           -ஒளவையார்.

    உரை-
ஊயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள,பாம்புகள் படம் எடுக்கின்ற மிக்க வேகத்தையுடைய இடியேற்றினது இடிக்கும் முழக்கத்துடன் கலந்து காற்றோடு வந்த நிறைந்த நீராகிய சூழையுடைய பெரிய மழையே, இயல்பாகவே உன்னிடம் நிறைந்த இரக்கத்தைநீ இப்போழுது பெறவில்லையோ?பெரிய புகழையுடைய இமயமலையையும் அசைக்கின்ற தன்மையினையுடையாய், நின்னால் அலைக்கப்படும் மகளிர் துணைவரை பெற்றிலர்.ஆதலின், இரங்கத்தக்கார்.இங்கனம் நீ பெய்து அலைத்தல் எதன் பொருட்டு?



    (கருத்து) இதுகாறும் தலைவர் வாராமையின் இப்பெருமழையினால் அவர் வரவு தடைப்படுமோ வென்று அஞ்சினேன்.

    (வி-ரை.) தலைவன் பெருமழையினால் துன்புறுவானோ வென்றும் வாரானோ வென்றும் அஞ்சிய தலைமகள் தான் அங்ஙனம் அஞ்சியதை இதனால் தலைவனுக்கு உணர்த்தினாள்.
   

மல்லிகா மறைந்தாளா?

                 



சித்ராவோ

சிரித்து மகிழ்கிறாள்

அஞ்சலியோ

அலுவலகம் கிளம்பிவிட்டாள்

சந்தியாவோ

சமையலில் ஈடுபட்டுவிட்டாள்

மல்லிகாவோ

மரணப் படுக்கையில்

வேறு வேறு சேனலில்

வேறு வேறு

மெகாசீரியல் காட்சிகள்

இரைச்சலாக

தெரு முழுவதும்


Monday, November 17, 2014

யாதெனின்..யாதெனின் (சிறுகதை)



என் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது.

'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர்.

நான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..

நான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..

ஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..

'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்..

'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா?' என்றார்.

ஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்..

தமிழக வீரர் மரணம்

என்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..

தனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில் இறந்ததாகவும்...குறிப்பிட்டிருந்தது.

மேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

'கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில் கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு' என்றார் ஆசிரியர்.

என் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.
*** *** *** ****

பூங்குளம்..

பிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத் தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று
வடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான் இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்...பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில் சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை?

கிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும் சிறுவர்களை பார்த்தோம்.தமிழக ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. ...

ஒரு சிறுவனைக் கூப்பிட்டு..'தம்பி..பட்டாளத்துக்கு போனாரே..தனசேகர்..அவர் வீடு எது?' என்றேன்.

பையன்...ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை...கை காட்டினான்.

அங்கு சென்றவன்..'ஐயா..ஐயா..' எனக் குரல் கொடுக்க...

வயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..'யாரு' என்றார்.

'ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச் சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்' என்றேன்.

'என்னத்த சொல்றது..தம்பி..' என்றபடியே ஆரம்பித்தார் அவர்.

'நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப் போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம் கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன் கூட பேசறதில்லையாம்.

ஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர் இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான் வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமா?ன்னாராம். ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல படலியா?

அவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.

அவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.

சாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன் சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.' ஏண்டா ......பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.

அன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய் பார்த்தேன்...முதக்கறானான்னு..ம்...காணும்..எங்க போனான்னு தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.

கொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.

அவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை தேத்திக்கிட்டேன்.'

இந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி...

'என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க..மனுஷனைத் தொடக்கூடாதாம்' என்றேன்..

அதற்கு..அவர்..'அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே தம்பி வாங்கறாங்க' என்றார்.

அப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.

'அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன் அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம்.அப்படின்னு சேதி இருந்தது.

தம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..

சேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன் செத்து..அவனுக்கும்...எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி'



அதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..

ஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித் தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.

குடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள் இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.

பின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.

அன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.

அடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

குண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம் செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.

அந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..'டேய்..நீ சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..' என அழ ஆரம்பித்தார்.

இப்போது எனக்கு ஒன்று புரியவில்லை...

உடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்.......ஏன்?

ஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க...

உயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா?

நாங்கள் கிளம்பினோம்..அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.

Sunday, November 16, 2014

மழையே வந்து போ!

                                 


மழை வேண்டி

அமிர்தவர்ஷிணி இசைப்போம்

கழுதைக்கு மணம் முடிப்போம்

யாகங்கள் செய்வோம்

நீ வந்து விட்டாலோ

மூன்று நாட்களுக்கு மேல்

வேண்டா விருந்தாளி ஆவாய்

சீரியல் பார்க்கையில்

வந்த விருந்து போல..

சபிக்கப்படுவாய்

குறுந்தொகை-157


தலைவி கூற்று
(பூப்பு எய்திய தலைமகள் அதனை மறைத்துக் கூறுவாளாய், “வைகறை வந்தது; இனித் தலைவனைப் பிரியநேருமென்று அஞ்சுகின்றேன்” என்று சொல்லியது.)

மருதம் திணை- பாடலாசிரியர் அள்ளூர் நன்மூலன்

இனி பாடல்-
.  
குக்கூ வென்றது கோழி யதனெதிர்
   
துட்கென் றன்றென் றூய நெஞ்சம்
   
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
   
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.


                     -. அள்ளூர் நன்மூலன்.

உரை-

கோழி ,குக்கூ என்று கூவியது.அதற்கு நேரே எனது தோளை மணந்த தலைவரை பிரியச் செய்யும் வாளைப்போல விடியற் பொழுது வந்ததென்று எனது குற்றமற்ற நெஞ்சம் அச்சத்தை அடைந்தது

 

    (கருத்து) தலைவனை இனிப் பிரிந்திருத்தல் வேண்டுமென்று அஞ்சுகின்றேன்.

 (தலைவிதான் பூப்பெய்தியதை வெளிப்படையாகக் கூறாதொழிந்தாள். துட்கென்றன்று - துட்கென்றது; துட்கு - அச்சம். தலைவனோடு ஒன்றுபட்டுப் பிறிதொரு நினைவின்றி யமைந்ததாதலின் தூய நெஞ்சாயிற்று.

    பூப்புக்காலமாகிய மூன்றுநாளும் தலைவியினதுசொற்கேட்கும் அணிமையிலிருத்தலையன்றி அளவளாவுதல் அறநெறியன்றாதலின் பூப்பு, தலைவனைத் தோள் தோயாமற் பிரிப்பதாயிற்று;)

Saturday, November 15, 2014

குறுந்தொகை- 156



தலைவன் கூற்று
(தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, "நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை" என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்

இனி பாடல்-

பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
   
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
   
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
   
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே

எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
   
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
   
மருந்து முண்டோ மயலோ விதுவே.
.
                     -பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன்.

உரை-

செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது நல்ல பட்டையை நீக்கிவிட்டு, அதன் தண்டோடு ஏந்திய தாழ்கின்ற கரகத்தையும், விரத உணவையுமுடைய வேதத்தையறிந்த நின்னுடைய அறிவுரைகளுள் பிரிந்த தலைவியரையும், தலைவர்களையும் சேரச் செய்யும் தன்மையையுடைய பரிகாரமும் உள்ளதா.இது மயக்கத்தால் வந்ததாகும்

      (கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.

 

    (பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று).

Friday, November 14, 2014

குறுந்தொகை-155


தலைவி கூற்று
(தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்தமை யறிந்த தலைவி, "இன்னும் அவர் வந்திலர்" என்று கூறி வருந்தியது.)

முல்லைத் திணை- பாடலாசிரியர்  ஒரோடகத்துக் காரத்தனார்

இனி பாடல்-

முதைப்புனங் கொன்ற வார்கலி யுழவர்
   
விதைக்குறு வட்டி போதொடு பொதுளப்
   
பொழுதோ தான்வந் தன்றே மெழுகான்
   
றூதுலைப் பெய்த பகுவாய்த் தெண்மணி

மரம்பயி லிறும்பி னார்ப்பச் சுரனிழிபு
   
மாலை நனிவிருந் தயர்மார்
   
தேர்வரு மென்னு முரைவா ராதே.
                       
                       - ஒரோடகத்துக் காரத்தனார்.)

உரை-

பழங்கொல்லையை உழுத மிக்க ஆரவாரத்தையுடைய உழவர்களுடைய, காலையிலே விதையை விதைக்கும் பொருட்டு எடுத்துச் சென்ற சிறிய வட்டிகள் விதைத்து விட்டு வீட்டிற்கு மீளும் பொழுது மலர்கள் நிறையும்படி மாலைப் பொழுது வந்தது.மெழுகால் செய்த கருவில் அமைத்து ஊதுகின்ற கொல்லனுலையின்கண் பெய்து இயற்றிய பிளவுபட்ட வாயையுடைய மணிகள் மரங்கள் நெருங்கி வளர்ந்த குறுங்காட்டிடத்துஒலிக்கும்படி அருவழியைக் கடந்து மாலைக் காலத்தில் மிக விருந்து நுகரும் பொருட்டு வரும் தலைவருடைய தேர் வருகின்றதென உரை வந்திலது


 (கருத்து) மாலைக் காலம் வந்தும் தலைவர் வந்திலர்.

Thursday, November 13, 2014

குறுந்தொகை-154



தலைவி கூற்று
(பொருளீட்டும் பொருட்டுத் தன்னைப் பிரிந்து சென்ற தலைவனை நினைந்து, “என்னைப் பிரிந்து நெடுந்தூரத்தில்தங்கும் வன்மையை அவர் எங்ஙனம் பெற்றார்?” என்று தலைவி தோழியை நோக்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் மதுரை சீத்தலைச் சாத்தன்.

இனி பாடல்-
 
யாங்கறிந் தனர்கொ றோழி பாம்பின்
   
உரிநிமிர்ந் தன்ன வுருப்பவி ரமையத்
   
திரைவேட் டெழுந்த சேவ லுள்ளிப்
   
பொறிமயி ரெருத்திற் குறுநடைப் பேடை

பொரிகாற் கள்ளி விரிகா யங்கவட்டுத்
   
தயங்க விருந்து புலம்பக் கூஉம்
   
அருஞ்சுர வைப்பிற் கானம்
   
பிரிந்துசே ணுறைதல் வல்லு வோரே.

                              -மதுரை சீத்தலைச் சாத்தன்.

  உரை-

பாம்பினது உரி மேலெழுந்தாற்போன்ற கானல் விளங்குகின்ற நண்பகற் காலத்தில் இரையை விரும்பி மேலெழுந்து சென்ற ஆண்பறவையை நினைத்து, புள்ளிகளையுடைய மயிர் பொருந்திய கழுத்தையும், குறுக அடியிடும் நடையினையும் உடைய பெண் புறாவானது பொரிந்த அடியையுடைய கள்ளியினது வெடித்த காயையுடைய அழகிய கிளையில் விளங்கும்படி இருந்து தனிமை தோன்றும்படி கூவுகின்ற கடத்தற்கரிய வழியையுடைய இடமாகிய பாலை நிலத்தை கடந்து நெடுந்தூரத்தில் தங்குதலில் வன்மையுடைய தலைவர் , அவ்வன்மையை எவ்வாறு தெரிந்து கொண்டனர்,

 

(கருத்து) தலைவர் என்னைப் பிரிந்து எங்ஙனம் ஆற்றியிருக்கின்றனர்?

Wednesday, November 12, 2014

மனஉறுதி

                         


மரத்தினடி கொத்தும்

மரங்கொத்திகள்

கிளைக்கு கிளை தாவும்

குரங்கினங்கள்

கூடுகட்டி முட்டையிட்டு

வம்சம் காக்கும் புள்ளினங்கள்

பூத்திருக்கும் பூக்களின்

மகரந்தம் சுவைக்கும் வண்டினங்கள்

அசைந்து கொடுப்பதில்லை


குறுந்தொகை-153


தலைவி கூற்று
(தலைவன் மணமுடிக்காது நெடுங்காலம் வந்து அளவளாவுதலால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “இனி அவரை வாரற்கவென்று கூறுவாயாக” என, தோழி தலைவியை, “அங்ஙனம் கூறுதற்குக் காரணம் யாது?” என வினவ, “அவர் வரும் வழியின் ஏதமறிந்து எனக்கு ஆற்றாமை உண்டாகின்றது” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை-பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-

குன்றக் கூகை குழறினு முன்றிற்
   
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
   
அஞ்சும னளித்தெ னெஞ்ச மினியே
   
ஆரிருட் கங்கு லவர்வயிற்

சார னீளிடைச் செலவா னாதே.

                            -கபிலர்

உரை-

என் நெஞ்சம்- குன்றிலுள்ள பேராந்தை ஒலித்தாலும், முற்றத்திலுள்ள பலாமரத்தினது பெரிய கிளையினிடத்து ஆண் குரங்கு தாவித் துள்ளினாலும் அச்சத்தை முன்பு அடையும். அது கழிந்தது. இப்பொழுது செல்லுதற்கரிய இருளையுடைய இருளில் அவரிடத்தே மலைச்சாரற் கண்ணுள்ள நெடுவழியில் செல்லுதலை நீங்காது.அது இரங்குதற்குரியது.


   
 கருத்து- தலைவர் இரவில் வருதலின், ஆற்றின் ஏதம் அஞ்சி வருந்துகின்றேன்,

Tuesday, November 11, 2014

குறுந்தொகை-152



(தலைவன் நெடுங்காலம் வராது இருந்தமையால் வருந்திய தன்னை இடித்துரைத்த தோழியை நோக்கி முன்னிலைப் புறமொழியாக, “என்னை இடித்துரைப்போர் காமத்தின் தன்மையையும் தலைவர் உடனுறைவதன் இன்றியமையாமையையும் உணர்ந்திலர்” என்று தலைவி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கிளி மங்கலங்கிழார்

இனி பாடல்-
   
யாவது மறிகிலர் கழறு வோரே
   
தாயின் முட்டை போலவுட் கிடந்து
   
சாயி னல்லது பிறிதெவ னுடைத்தோ

   
யாமைப் பார்ப்பி னன்ன

காமங் காதலர் கையற விடினே.

                   -கிளி மங்கலங்கிழார்

உரை-

தாய்முகம் நோக்கி வளருந் தன்மையையுடைய ஆமையின் பார்ப்பைப் போலத் தலைவரைப் பல்காற் காண்டலால் வளருந்தன்மையையுடைய காமமானது,அவர் நாம் செயலறும்படி நம்மைப் பிரிந்து கைவிட்டால், தாயில்லாத முட்டை கிடந்தபடியே அழிவது போல உள்ளத்துள்ளே கிடந்து மெலியினன்றி வேறு என்ன உறுதியை உடையது? என்னை இடித்துரைப்போர் இதனைச் சிறிதேனும் அறிந்திலர்..


(கருத்து) தலைவர் விரைவில் வராவிடின் காமம் பயனற்றுக் கெடும்.

     (வி-ரை.) விரைவில் வந்து தன்னை மணப்பதற்கான முயற்சியைத் தலைவன் செய்யும்படி அவனைத் தூண்டாமல் தன்னைக் கடிந்த தோழியை வேறுபடுத்திப் படர்க்கையாற் கூறினாள்; முன்னிலைக் கண் உள்ள தோழிக்குப் படர்க்கையாற் குறிப்பாக உணர்த்தினமையின் இது முன்னிலைப் புறமொழி).

    கழறுதல் - இடித்துரைத்தல்.

     தாயில்லாத முட்டை அத்தாயால் இடப்பட்டும் அடுத்தடுத்துப் பாதுகாத்தலை இழப்பதால் குஞ்சாகும் பயனைப் பெறாதது போல, தலைவனால் உண்டான காமம் அவன் அவளை மணந்து உடன் வாழாமையால் இல்லறப் பயனைப் பெறாததாகிறது..


Monday, November 10, 2014

குறுந்தொகை-151


தலைவன் கூற்று
(பொருள் தேடிவரும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்லத் துணிந்த தன் நெஞ்சை நோக்கி, “பாலைநிலம் செல்லுதற்கு அரிதென்று கருதாமல் தலைவியைப் பிரிந்து செல்லுதல் நம் இளமைக்கு முடிவாகும்”என்று கூறித் தலைவன் வருந்தியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் தூங்கலோரி

இனி பாடல்-


வங்காக் கடந்த செங்காற் பேடை
   
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
   
குழலிசைக் குரல குறும்பல வகவும்
   
குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது

மறப்பருங் காதலி யொழிய
   
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.


                                -தூங்கலோரி.

     உரை-

நெஞ்சே! ஆண் வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால் தனித்த சிவந்த கால்களையுடைய பெண் பறவை ,புல்லூறென்னும் பறவை தன்னிடம் இரையாகக் கொள்ளும் பொருட்டு வீழ்ந்ததாக தம்முடைய கணவனாகிய ஆண் பறவையைக் காணாமல் வேய்ங்குழலினிது இசையைப் போன்ற குரல்களை உடையவனாய் குறிய பல ஒலிகளால் அழைக்கும் குன்றைப் பொருந்திய சிறிய வழிகள் கடத்தற்கு அரியன வென்று எண்ணாமல் மறத்தற்கரிய நம் தலைவி இங்கே தங்க நான் செல்வேனென்று துணிவது இங்கே நம் இளமைப் பருவத்திற்கு முடிவாகும்.



     (கருத்து) இளமை பயனற்றுக் கழியுமாதலின், யான் தலைவியைப் பிரிந்து செல்லேன்.


     இளமைக் காலத்தே தலைவியோடிருந்து இன்புற வேண்டும்; பொருள் தேடச் சென்றால் அது முற்றும் வரையில் பிரிவு நேர்வதால் அதற்குள் இளமை கழியும்; இளமை கழியுமேல் அவ்வின்பம் கைகூடாதென்று கருதியவனாதலின், இறப்பலென்பது இளமைக்கு முடிவென்றான்.

Saturday, November 8, 2014

குறுந்தொகை-150



தலைவி கூற்று
(தலைவன் இரவில் தலைவியை சந்திக்க விரும்ப அதை தோழி தலைவிக்கு  தெரிவிக்க, தலைவி, “தலைவர் மார்பு நினைத்தால் காமநோய் மிகுதற்குக் காரணமாக உள்ளது; அவரை அணைத்தால் அந்நோய் நீங்குதற்குக் காரணமாக உள்ளது” என்று தோழிக்குக் கூறும் வாயிலாகத் தான் அவனை சந்திக்க சம்மதத்தைத் தெரிவித்தது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மாடலூர் கிழார்

இனி பாடல்-


சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
 
வான மீனின் வயின்வயி னிமைக்கும்
 
ஓங்குமலை நாடன் சாந்துபுல ரகலம்
 
உள்ளி னுண்ணோய் மல்கும்
 
புல்லின் மாய்வ தெவன்கொ லன்னாய்.

                            -மாடலூர் கிழார்.

  உரை-

தோழி...மரத்தின் உச்சியிற் பரணின் மீது இருக்கும் குறவன் கொளுத்திய நன்மணமுள்ள புகையையுடைய கொள்ளியானது வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல இடந்தோறும் ஒளியை வீசும் ஓங்கிய மலைநாட்டையுடைய
தலைவனது பூசிய சந்தனம் வீசும் மார்பினை, நான் நினைத்தால் என் உள்ளத்தில் காமநோய் பெருகும்.அம்மார்பை நான் அணைத்தால் அந்நோய் இல்லையாதல் ஆச்சரியிமான ஒன்று.

     (கருத்து) தலைவனைக் கண்டு அளவளாவினாலன்றி என் நோய் தீர்வதில்லை.

   

குறுந்தொகை-149



தலைவி கூற்று
(தோழி தலைவனுடன் போகவேண்டுமென்று கூறத் தலைவி அவனுடன் செல்லுதலால் நாண் அகலுமென்று இரங்கிக் கூறியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் வெள்ளி வீதியார்

இனி பாடல்-
 
அளிதோ தானே நாணே நம்மொடு
   
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
   
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
   
தீம்புன னெரிதர வீய்ந்துக் காஅங்குத்

தாங்கு மளவைத் தாங்கிக்
   
காம நெரிதரக் கைந்நில் லாதே.


                     -வெள்ளி வீதியார்

     உரை-

(தோழி) நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது, இனிமேல் வெள்ளிய பூவையுடைய கரும்பினது உயர்ந்த மணலையுடைய சிறிய கரை ,இனிய நீர் நெருங்கி அடித்தலால் அழிந்து வீழ்ந்தாற் போல தடுக்கும் வரையில் தடுத்து காமம் மேன்மேலும் நெருக்க என்பால் நில்லாது போய்விடும்.அஃது இரங்கத்தக்கதாகும்

Friday, November 7, 2014

குறுந்தொகை-148




தலைவி கூற்று
(தலைவன்  வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் இளங்கீரந்தையார்


இனி பாடல்-

 
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
   
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
   
காசி னன்ன போதீன் கொன்றை
   
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்

காரன் றென்றி யாயிற்
   
கனவோ மற்றிது வினவுவல் யானே.

                            -இளங்கீரந்தையார்.

     உரை-

செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளையுடைய சிறிய அடியிங்கண் விளங்கிய தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய,பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை பருவத்தையும் கார்காலமெனக் கூறுவாய் ஆனால், அப்படிச் சொல்வது கனவா? எனக் கேட்பேன்..நீ சொல்வாயாக!
   

     (கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.

Thursday, November 6, 2014

இறைவனுக்கு மனம் என்ன கல்லா...

                   

டாக்டர் புரூனோ

கள்ளமில்லா வெள்ளை மனம்..அவர் அணியும் உடையைப் போலவே..

எந்த வேறுபாடும் இன்றி..அனைவரிடமும் நண்பனாகவே பழகுபவர்..

செருக்கின் விலை என்ன எனக் கேட்பவர்..

உதவி என்று அழைத்திட்டால்...நேரம்..காலம்...தனது வேலைகள் அனைத்தும் மறந்து ஓடோடி வருபவர்.

ஒருசமயம்...அவருக்கு நான் தொலைபேசி, 'உங்களால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?' என்று கேட்டேன்.உடன் அவர் தந்த பதில், "என்ன இப்படிக் கேட்கிறீர்கள்.."புரூனோ! இந்த வேலை செய்யுடா..என கட்டளையிடுங்கள்" என்றார்'

சற்று படித்தாலே போதும்..ஆர்பாட்டம் செய்யும் மானிடரிடையே இப்படி ஒரு முத்து..

அப்படிப்படவர்க்கு...மக்கள் சேவையே முக்கியம் என்று இருந்தவர்க்கு ஏன் இந்த சோதனை..வேதனை..

 டாக்டர் தொழில் செய்பவர் குறித்து யாரேனும் குறை சொன்னால் பொங்கி எழுவாயே! புரூனோ..இப்பொழுது உனக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வேன்?

இறக்கும் வயதா உன் துணைக்கு...வாழ்வில் நாம் இருவர்..நமக்கு இருவர்...என ஆசைப்பட்டது தவறா..அதற்கு..இப்படி ஒரு தண்டனையா..

இறைவன் இருக்கின்றானா? இருந்தால்..அவன் யாருக்குத் துணையாய் இருக்கின்றான்?

நல்லவர்களுக்கு இல்லையா?

ஆம்..என்றால்..அவனைத் தூக்கி எறிவோம்..

கல் மனம் கொண்டவன்..ஆண்டி ஆனால் என்ன?ஆண்டவன் ஆனால் என்ன?

(புகைப்படம் உதவி - அபி அப்பா)

குறுந்தொகை-147



தலைவன் கூற்று
(தலைவன் தலைவியைப் பிரிந்து சென்ற இடத்துத் துயிலும் பொழுது அவளைக் கனவில் கண்டு பிரிவாற்றாமற் சொல்லியது.)

பாலைத் திணை- பாடலாசிரியர் கோப்பெருஞ் சோழன்

இனி பாடல்-


வேனிற் பாதிரிக் கூன்மல ரன்ன
 
மயிரேர் பொழுகிய வங்கலுழ் மாமை
 
நுண்பூண் மடந்தையைத் தந்தோய் போல
 
இன்றுயி லெடுப்புதி கனவே

எள்ளா ரம்ம துணைப்பிரிந் தோரே.

என்பது தலைமகன் பிரிந்தவிடத்துக் கனாக் கண்டு சொல்லியது.

   
                                              -கோப்பெருஞ் சோழன்

   உரை-
வேனிற்காலத்தில் மலரும் பாதிரியினது வளைந்த மலரினத் துய்யைப் போன்ற மயிர் எழுந்து படர்ந்த அழகு ஒழுகும் மாமையையும், நுண்ணிய தொழிலையுடைய ஆபரணத்தையும் உடைய தலைவியை கொணர்ந்து கொடுத்தாயைப்போல
இனிய துயிலினின்றும் எழுப்புகிறாய்.மனைவியைப் பிரிந்தோர் உன்னை இகழார்..கனவே




     (கருத்து) தலைவியைக் கொணர்ந்து காட்டிய கனவிற்கு என்ன கைம்மாறு செய்வேன்!



.

Wednesday, November 5, 2014

கனவு காண்பேன் கண்ணா...

               


அவள்

கனவை

விரும்புகிறாளாம்

நனவில்

நடக்காதவை

கனவில் நடப்பதால்..

ஊர்

முதிர் கன்னி என்கிறது

அவளை


குறுந்தொகை-146



தோழி கூற்று
(தலைவன் சான்றோரைத் தலைவியின் சுற்றத்தாருடன் மணம் பேசி வர விடுப்ப, தன்தமர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை நம் இனத்தார்/சுற்றம் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக” என்று தோழி கூறியது.)


குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் வெள்ளிவீதியார்

இனி பாடல்-

 
அம்ம வாழி தோழி நம்மூர்ப
   
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
   
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
   
நன்றுநன் றென்னு மாக்களோ

டின்றுபெரி தென்னு மாங்கண தவையே.

.                          -வெள்ளிவீதியார்.


   

உரை-

தோழி..கேள்...அவ்விடத்திலுள்ள நம்மைச் சார்ந்த குழுவில் உள்ளோர், தண்டைப் பிடித்த கையினரும், நரையையுடைய
தலைக்கண் துகிலையுடைவருமாகிய நன்று..நன்று எனக்கூறும் தலைவன் தமரோடு இந்நாள் நீங்கள் வரப்பெற்றமையால் பெருமையுடையதென்று முகமன் கூறுவர்.ஆதலால், நம் ஊரினிடத்து பிரிந்தவர்களைச் சேர்த்து வைப்போர் இருந்தனர்.


     (கருத்து) தலைவன் வரைவை நமர் ஏற்றுக் கொண்டனர்.


Thursday, October 30, 2014

அழும் நீர்

         

வேகமாய்

தண்ணீர் வீழ்ந்ததில்

உண்டாகின

பல நீர்க்குமிழிகள்

அவை நொடியில்

பிரியப் போவதை எண்ணி

பாத்திரத்தினுள் வீழ்ந்த

நீர் அழுதது


குறுந்தொகை -145


தலைவி கூற்று
(தலைவன் பொருளீட்ட பிரிந்து சென்றது நீடிக்க அதனால் துன்பமுற்ற தலைவி தோழியை நோக்கி, “என்துன்பத்தை அறியாமல் துயிலுகின்ற மாக்களை யுடைமையால் இச்சிறுகுடி எனக்கு தங்குமிடமில்லை” எனக் கூறித் தன் ஆற்றாமையைப் புலப்படுத்தியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் கொல்லனழிசி
   

இனி பாடல்-

.  
உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடி
   
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி
   
ஆனாத் துயரமொடு வருந்திப் பானாட்
   
டுஞ்சா துறைநரொ டுசாவாத்

துயிற்கண் மாக்களொடு நெட்டிரா வுடைத்தே.


                                       =கொல்லனழிசி.

   உரை-

கடல் துறை பொருந்திய இந்தச் சிற்றூர் , கடற்கரையையுடைய சேர்ப்பனது கொடுமையை நினைந்து மிகுகின்ற துன்பத்தோடு துயரமுற்று நடுநிசியில் துயிலாமல் தங்குவாரை..ஏன்? எனக் கேட்காத துயிலுதல் பொருந்திய கண்களையுடைய மாக்களோடு நெடிய இரவை உடையது.அதனால் இது நாம் தங்கியிருக்கும் ஊர் அன்று


      (கருத்து) தலைவர் இல்லாமையால் இவ்வூர் நமக்கு இனி உறையும்பதி அன்று.

Tuesday, October 28, 2014

குறுந்தொகை-144



செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனாளாக, அவளைப் பிரிந்த செவிலித்தாய், “ஆயமகளிரோடு பிரிவின்றி விளையாடும் என் மகள் இப்பொழுது பாலைநிலத்திலே பரல் தன் அடிகளை வருத்தா நிற்க எம்மைப் பிரிந்து சென்றனள்” என்று கூறி வருந்தியது.)

பாலைத் திணை -பாடலாசிரியர் கோடங்கொற்றன்

இனி பாடல்-
 
கழிய காவி குற்றுங் கடல
   
வெண்டலைப் புணரி யாடியு நன்றே
   
பிரிவி லாய முரியதொன் றயர
   
இவ்வழிப் படுதலு மொல்லா ளவ்வழிப்

பரல்பாழ் படுப்பச் சென்றனண் மாதோ
   
சென்மழை தவழுஞ் சென்னி
   
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

                   - கோடங்கொற்றன்

     உரை-

கழியினிடத்து மலர்ந்த காவிமலர்களைப் பறித்தும், கடலிலுள்ள வெள்ளிய தலையையுடைய அலையின்கண் விளையாடியும் மிக தன்னுடன் என்றும் பிரிதலில்லாத ஆயத்தார் தத்தமக்கு உரிய விளையாட்டைப் புரிய, இவ்விடத்துப் பொருந்துதலுக்கும் உடம்படாளாகி விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய வானத்தளவும் உயர்ந்த விளக்கத்தையுடைய குறுக்கிடும் மலைகளையுடைய நாட்டில் அப்பாலை நிலத்தில்
பருக்கைக்கற்கள் தன் பாதத்தின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி போயினள்.



     (கருத்து) தலைவி நம்மைப் பிரிந்து தலைவனுடன் சென்றனள்.

தியாகம்

           



பென்சில்

செய்யும் தவறெல்லாம்

அழித்து

அழியும்

அழிப்பானுக்கு

இணையுண்டோ

எத்தியாகமேனும்


குறுந்தொகை-143



தோழி கூற்று
(தலைவன் வரைபொருட்காகப் பிரிந்தவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் நம்முடைய வருத்தத்தை யறிந்து இரங்கும் தன்மை யுடையவர்; ஆதலின் அவர் விரைவில் வருவர்; நின் மேனிப் பசப்பு அவர் வரவால் நீங்கிவிடும்” என்று தோழி கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்

இனி பாடல்-
 
அழிய லாயிழை யழிபுபெரி துடையன்
   
பழியு மஞ்சும் பயமலை நாடன்
   
நில்லா மையே நிலையிற் றாகலின்
   
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்

கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
   
தங்குதற் குரிய தன்றுநின்
   
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே.


                          -  மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன்.

     உரை-

தெரிந்து அணிந்த அணைகலங்களையுடையாய் பயனையுடைய மலைநாட்டுக்குத் தலைவன் நம்மைப்போல இரங்குதலை மிக உடையவன், பழியையும் அஞ்சுவான் நில்லாது அழியும் தன்மையே இவ்வுலகில் நிலைபெற்றதாதலின் நிலை பெறுதலையுடைய நல்ல புகழை விரும்பிய நீதியையுடைய நெஞ்சையுடைய ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல நினது அழகு ஒழுகும் மேனியில் பரவிய பசலை தங்குவதற்கு உரிமை உடையதன்று.ஆதலால் நீ வருந்தாதே!


      (கருத்து) தலைவன் நம்பால் இரங்கி விரைவில் வந்து வரைந்து கொள்வான்.



( ‘நீ தலைவரைப் பிரிந்து இரங்குதலைப் போலவே அவரும் நின்னைப் பிரிந்தமையால் இரங்குவர்’ )
 
 (‘நின் பசப்புத் தங்குதற்குரியதன்று’ என்றதனால் போவதற்குரிய தென்பது பெறப்படும்: தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவிக்குப் பசலை உண்டாவதும், அவனோடு பொருந்திய காலத்தில் அது நீங்குவதும் மரபு;)  

Monday, October 27, 2014

குறுந்தொகை-142


தலைவன் கூற்று
(தலைவியைப் பால் வயத்தனாகிக் கண்டு அளவளாவி நீங்கும் தலைவன், “என் உள்ளம் தலைவியினிடத்தே உள்ளது; இதனை அவள் அறிந்தனளோ, இலளோ!” எனக் கூறியது.)

குறிஞ்சித் திணை - பாடலாசிரியர் கபிலர்


இனி பாடல்-

 
சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
   
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
   
தானறிந் தனளோ விலளோ பானாட்
   
பள்ளி யானையி னுயிர்த்தென்

உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே.

                       -கபிலர்

     உரை-

நடு இரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போல பெரு மூச்சு விட்டுக் கொண்டு என் நெஞ்சம் ,நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும் அவளிடத்திலேயே இருக்கின்றது.சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்து மாலையைக் கட்டி, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வீழும் கிளிகளை ஓட்டுகின்ற, பூவைப் போன்ற கண்களையுடைய பேதையாகிய அத்தலைவி இதனை அறிவாளோ? மாட்டாளோ?


     (கருத்து) என் உள்ளம் தலைவியின்பால் உள்ளது.

 . (தனது நெஞ்சம் அவளிடத்தே பொருந்தியிருப்பதை அறியாமையின், ‘பேதை’ என்றான்.)

Saturday, October 25, 2014

குறுந்தொகை-141



தலைவி கூற்று
(இராக்காலத்தே வந்து ஒழுகா நின்ற தலைவன் கேட்கும் அண்மையனாக, அவன் வரும் வழியினது ஏதத்தை அஞ்சிய தலைவி தோழியை நோக்கி ‘நீ தலைவரிடம், இனி இரவில் வாரற்க; எம் தாய் எம்மைத் தினைப்புனங்காக்கும்படி கூறியுள்ளாள்; ஆதலின் அங்கே வருகவென்று உணர்த்தின் என்ன குற்றம் உளதாகும்?” என்று கூறியது.)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரைப் பெருங் கொல்லன்.

இனி பாடல்-
 
வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
   
செல்கென் றோளே யன்னை யெனநீ
   
சொல்லி னெவனோ தோழி கொல்லை
   
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த

குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
   
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
   
ஆரிரு ணடுநாள் வருதி
   
சார னாட வாரலோ வெனவே.

                            -மதுரைப் பெருங் கொல்லன்.

  உரை-

(தோழி) மலைப்பக்கத்தையுடைய நாட...கொல்லையிலுள்ள நெடிய கையையுடைய யானையினது கடிய பகையினால்
வருந்திய குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற செவ்வியைப் பார்த்திருக்கும்..வருதற்கரிய இருளையுடைய நடு யாமத்தில் வருகின்றாய்.அப்படி வருதலை ஒழிப்பாயாக!வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை விளைந்த தினையிடத்துப் படாமற் கடியும் பொருட்டு நம் தாய் செல்வீராக என்றாள்.என தலைவனுக்குக் கூறின் குற்றம் என்ன? (நீ சொல்வதில் தவறில்லை)
   
   
     (கருத்து) தலைவரை இனிப் பகலில் சந்திக்க வரும்படி நீ சொல்ல வேண்டும்.

Friday, October 24, 2014

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தமிழ்த் திரையுலகின் பழம் பெரும் நடிகரும், அழகாம உச்சரிப்புடன் தமிழ் பேசியவருமான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இன்று நம்மிடையே இல்லை.
அவரைப் பற்றி "தமிழா தமிழா" வில் நான் எழுதியுள்ளதை கீழ்கண்ட சுட்டியில் பார்க்கவும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக

http://tvrk.blogspot.com/2009/02/blog-post_08.html