Monday, July 9, 2012

எப்படி இருந்த பிரணாப்...! இப்போது இப்படி..




பழம்பெரும் எழுத்தாளர், பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார், எழுதியுள்ள பியான்ட் தி லைன்ஸ் என்ற சுயசரிதையில் மெளன்ட்பேட்டன் முதல் மன்மோகன் சிங் வரை பல தலைவர்கள் குறித்த பல அரிய தகவல்களை தொகுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி குறித்து நய்யார் குறிப்பிட்டுள்ள ஒரு சுவாரஸ்யமான தகவல்..
அப்போது நான் ஸ்டேட்ஸ்மென் பத்திரிக்கையில் ரெசிடென்ட் எடிட்டராக இருந்தேன். எனக்கு பிரணாப் முகர்ஜியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தனது வீட்டுக்கு வர வேண்டும் என்றும் தன்னுடன் டீ சாப்பிட வேண்டும் என்றும் அவர் அழைத்தார். அப்போது அவர் எந்த அரசுப் பதவியிலும் இல்லை.
நான், எனது மனைவியுடன் பிரணாப் வீட்டுக்குச் சென்றேன். அவரது வீட்டுக்குள் போனபோது ஹாலில் எந்தவிதமான பர்னிச்சரையும் பார்க்க முடியவில்லை. உட்காரக் கூட போதுமான சேர்கள் இல்லை, ரொம்ப ரொம்ப குறைவான சேர்களே இருந்தன. வீட்டில் வேலைக்காரர்கள் கூட யாரும் இல்லை. வீடு முழுக்க எளிமை நிரம்பி வழிந்தது. நான், எனது மனைவி மற்றும் பிரணாப் ஆகிய மூவரும் தரையில்தான் அமர்ந்தோம். பேசிக் கொண்டே டீ சாப்பிட்டோம்.

பிரணாப் முகர்ஜியின் மனைவி ஒரு டான்ஸர். ஆனால் அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருந்தார். பிரணாப் என்னிடம் பேசுகையில், தனது மனைவிக்கு ஒரு நல்ல விளம்பரத்தைத் தேடித் தருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். அப்போதுதான் தெரிந்தது, ஏன் என்னை அவர் கூப்பிட்டார் என்று.
சில வருடங்கள் ஓடின. 'மிசா' முடிந்திருந்த நேரம். இப்போது மீண்டும் பிரணாப் முகர்ஜியை சந்தித்தேன். அதே பிரணாப் முகர்ஜிதான், ஆனால் வீடுதான் மாறிப் போயிருந்தது. வீடு நிறைய ஸ்டைலான பர்னிச்சர்கள் நிரம்பி வழிந்தன. விலை உயர்ந்த தரை விரிப்புகள் பளபளவென தரைகளை அலங்கரித்தன. எங்கு பார்த்தாலும் ஆடம்பரம் கொட்டிக் கிடந்தது. அப்போது பிரணாப் வர்த்தகத்துறை அமைச்சராக இருந்தார்....!!

(நன்றி தட்ஸ்தமிழ்)


No comments: