Saturday, January 26, 2019

தினம் ஒரு தகவல் - 1 ------------------------------------ (வள்ளுவனின் வாக்கிலிருந்து)


நம் நண்பர்களில் பலர், அவ்வப்போது.."எனக்கு மட்டும் ஏன் இப்படி சோதனைகள் வருகிறது" என்றும், "எனக்கு அதற்குக் கொடுப்பினை இல்லை" என்றும் எப்போதும் எதிர்மறையாகவே பேசிக்கொண்டும், சிந்தித்துக் கொண்டும் இருப்பதை நாம் காணலாம்.
உண்மையைச் சொல்வதானால், இவர்கள் வாழத் தெரியாதவர்கள்.
ஆண்டவன் இருக்கின்றான் என நம்பும் இவர்கள்,அந்த நம்பிக்கையே நம்மை வாழ்வில் உயர்த்திவிடும் என எண்ணாமல்..வாழ்வில் உயர நம்பிக்கையும், அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள்.
தனக்கு இணையாக வாழும் நண்பன், தன்னைவிட வசதிகள் படைத்தவனாய் இருந்தால், தனக்கு அப்படி ஒரு அதிர்ஷ்டம் இல்லை என பிதற்றுவர்.ஆனால், அந்த வசதியை அடைய அவன் பட்ட துன்பங்கள், வாழும் நெறி ஆகியவற்றை மறந்துவிடுவார்கள்.,எப்போதும் சோம்பித் திரிவர்.சோம்பல் படுபவன் வாழ்வில் உயர இயலாது.
வள்ளுவர் சொல்கிறார்..
"இலமென் றசையி இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்"
(வாழவழியில்லையே என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி செய்வாளாம்)

No comments: