Showing posts with label இலக்கியம் -குறள் - காதல். Show all posts
Showing posts with label இலக்கியம் -குறள் - காதல். Show all posts

Monday, March 22, 2010

வள்ளுவனும் கண்ணழகும் - 3

முந்தைய பதிவு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்..அதாவது நம் மனம் நினைப்பதை முகம் காட்டிவிடுமாம்.

'அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் ' என்பார் வள்ளுவர்.

கண்ணாடி எப்படி தன் எதிரில் உள்ளதைக் காட்டுகிறதோ..அதுபோல ஒருவரின் முகம் அவர் மனதில் உள்ளதைக் காட்டிவிடும்.

ஆனால்..காதலியைப் பொறுத்தமட்டில் காதலனைத் தெரியாதவனைப் போல் தன் காதலை மறைத்துக் கொண்டு கடுமொழியால் சாடுவாளா..மனதில் அவன் மேல் கோபம் இல்லாமல் அன்புக் கொண்டு(இங்கு அவள் முகம் அவள் மனதில் உள்ளதைக் காட்டுவதில்லை) ஆனால்..நீண்ட நேரம் அவ்வாறு இல்லாமல் அவளே தன் அன்பையும் வெளிப்படுத்துவாளாம்.

உறாஅ தவர்போற் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்

என்கிறார்.

காதலனைக் கண்டதும்..சுடு மொழி கூறுவாளாம்.. பகை உணர்வு இருக்காதாம்..ஆனால்..பகைவனைப் பார்ப்பது போல பார்ப்பாளாம்..அவனைத் தெரியாதது போல நடிப்பாளாம்..இதெல்லாம் காதலி..அவள்பால் அன்பு கொண்ட காதலனிடம் அடையாளம் காட்டும் குறிப்புகளாம்..

'அவளா சொன்னாள்..இருக்காது..அப்படி எதுவும் நடக்காது..' என திரைநாயகன் பாடுவது நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன் றுற்றார் குறிப்பு

இப்படியெல்லாம் தனக்கு ஏன் நடக்கிறது எனப் புரியாமல் காதலன் தவிப்பான்..அவன் தவிப்பை புரிந்துக் கொண்டாலும் வெளிக்காட்டமாட்டாள்..அவன் அவளைப் பார்க்கையில் பரிவுடன் நகைப்பாளாம்
(மனதிற்குள் பெருமிதம்?)அப்படிச் சிரிக்கையில் ஒரு புதிப் பொலிவுடன் தோன்றுவாளாம்..(சிரித்து..சிரித்து என்னை சிறையிலிட்டாய்..என்று பாடாத குறை)

அசையியற் குண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

நேற்றுவரை நீ யாரோ..நான் யாரோ..இன்று முதல் நீ வேறோ நான் வேறோ என்று காதலர்கள் இருந்தாலும்..அவர்களுக்கிடையே ஒரு இயல்பு உண்டாம்..அதாவது பொது இடத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் தெரியாது போல இருப்பார்களாம் ..அந்நியரைப் பார்ப்பது போலப் பார்த்துக் கொள்வார்களாம்.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலர் கண்ணே உள

எவ்வளவு எளிமையாகச் சொல்லியிருக்கிறார்!!

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து விடுமாயின்..வாய்ச் சொற்கள் தேவையில்லை என்பதை..

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல

கண்களே எல்லாவற்றையும் சொல்லிவிடுமாம்..

இதைத்தான்..கம்பன்..'அண்ணலும் நோக்கினான்..அவளும் நோக்கினாள்' என்கிறார்..ஒருவருடன் ஒருவர் கண்கள் பேசியபின்..வில்லை உடைப்பது ராமனுக்கு என்ன பெரிய வேலையா என்ன?

(கண்ணழகு தொடரும்)