வள்ளுவனும்..கண்ணழகும் என்று மூன்று இடுகைகள் எழுதியதும்..அதைவிட இத் தலைப்புப் பொருத்தம் என்பதால்.தலைப்பை மாற்றியுள்ளேன்
மெய்,வாய்,கண்,மூக்கு,செவி என ஐம்புலன்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பவள் பெண் என்கிறார் வள்ளுவர்..
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள
வளையல் அணிந்த வடிவழகியிடம் கண்டு மகிழவும், கேட்டு மகிழவும்,தொட்டு மகிழவும்,முகர்ந்துண்டு மகிழவும் ஆன ஐம்புலன்களுக்குமான அழகு நிறைந்துள்ளது.
ஒருவருக்கு ஏதேனும் நோய் வருமேயாயின்..மருத்துவரிடம் செல்வார்..அவர் நோய் தீர மருந்துகள் தருவார்..ஆனால் ஒருவன் காதல் வயப்பட்டு காதல் நோயால் வருந்துவானாயின்..அந்த நோயை எந்த மருத்துவராலும் தீர்க்கமுடியாதாம்.அந்நோய் உண்டாக என்ன காரணமோ..அந்தக் காரணமேதான் நோயையும் தீர்த்து வைக்குமாம்.அந்தக் காரணம்..அந்நோய் தீர்க்கும் மருந்து.. அவனது காதலியேயாம்.
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்னோய்க்குத் தானே மருந்து
நோய்களைத் தீர்க்க பல மருந்துகள் உள்ளன..ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள்
இந்திரலோகம் என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்..ரம்பை,ஊர்வசி,மேனகை போன்ற பேரழகிகள் அங்கு உள்ளதாகக் கதை உண்டு.ஆனால்..அப்படிப்பட்ட பேரழகிகள் நிறைந்த இடத்தை
விட அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில் கொள்வது..இனிமையானதாம்.
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு
தாமரைக்கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அது என்ன..அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல ..அவ்வளவு இனிமையானதா..?
நெருப்பை நாம் நெருங்கினால் சுடும்..அதை விட்டு நகர்ந்தால் சூடு தெரியாது..ஆனால் காதலியோ அதற்கு நேர் எதிர்மாறானவளாம்.
நீங்கின் தெறூஉம் குறுகுங்காள் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக்கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள்..என்கிறார்.
ஒரு பொருளை நாம் விரும்புகிறோம்..அந்தப் பொருள் நாம் விரும்பும்போதெல்லாம் நமக்குக் கிடைத்தால் எவ்வளவு சந்தோஷப்படுவோம்..அதுபோன்ற இன்பத்தை..ஒவ்வொருமுறை காதலியின் தோள்களில் சாயும்போதும் உணரலாமாம்.இதையே...
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்
என்கிறார்...
விருப்பமான பொருள் ஒன்று..விரும்பிய பொழுதெல்லாம்..நம்மிடம் வந்து நமக்கு இன்பம் அளித்தால் எப்படியிருக்குமோ ..அதுபோன்று..பூ முடித்த காதலியின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன.
(தொடரும்)