
(புகைப்படம்- நன்றி..சென்னை ஆன்லைன் .காம்)
இயக்குநர் வசந்த பாலனுக்கு,
வணக்கம்.
இன்னமும் வெயிலின் தாக்கம் தீராத நிலையில்..அங்காடித் தெரு சென்றேன்..
அடடா..என்னவொரு அற்புதமான அழகான தெரு..செதுக்கி..செதுக்கி..நகரசபையாலும்..நீர்வளத்துறையாலும்,தொலைபேசித் துறையினராலும்..தோண்டி அப்படியே போட்டுச் சென்ற தெருவாய் இல்லாமல்..வழ வழ என வழுக்கிச் செல்லும் தரமான தெருவாய் உள்ளது.
இன்னொரு உண்மைச் சொல்வதானால்..எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடோடு செயல்படும் இணைய தள பதிவர்கள் அனைவரையும் கிட்டத்தட்ட ஒருமித்த கருத்துடன் எழுதவைத்த சாதனையை உங்கள் அங்காடித் தெரு செய்துள்ளது.
இதுவரை எந்த ஒரு திரைக்கதை ஆசிரியனும்..இயக்குநரும் தொடாத களம் இது.
பல சமயம் இது போன்ற கடைகளுக்கு விஜயம் செய்துள்ள நாம் ..வாங்கும் பொருளிலேயே கவனம் செலுத்தியுள்ளோம்.இனி நம்மை கவனிக்கும் விற்பனைப் பெண்ணையோ ..பையனையோ கவனிக்க வேண்டும்..அவர்கள் கண்கள் சொல்லும் ஆயிரம் கதைகளை..என்றே தோன்றுகிறது.
திரைப்படத்தில்..சிறு வயதில் வேலைக்கு வந்து..நாள் முழுதும் நின்று..நின்று..கால்கள் பாதிக்கப்பட்டு கடை வேலையை இழந்த நபரின் கால்களைப் பார்க்கையில்..விழியோரம் கண்ணீர் கரை தட்டுகிறது
தன்னைக் காதலிப்பவன் அவன் வேலையைக் காத்துக்கொள்ள..பொய் சொல்லி இவளை நான் காதலிக்கவில்லை என்று கூற..'அந்தக் கடவுள்தாண்டா சாட்சி..அந்தக் கடவுள்தாண்டா சாட்சி' எனக் கதறியபடியே..மேலேயிருந்து கீழே விழுந்து மடியும் பெண்...கரை தட்டிய கண்ணீரை..சற்று வெளியேற்றுகிறாள்.அருமையான ஒரு நடிப்பு..ஒரு துணைப் பாத்திரமிடமிருந்து..
தன் அண்ணன் வேலை செய்யும் கடையின் பையை..கொண்டு செல்லும் தம்பதியரைத் தொடர்ந்துச் சென்று..'என் அண்ணன் வேலை செய்யற கடை..அந்தப் பையை தர்றீங்களா?" ன்னு..கேட்டு வாங்கி(நம்ம சென்னையானா போம்மா..போ..என விரட்டியிருப்பர் அந்த தம்பதிகள்)..அந்தப் பையை மார்போடு இணைத்து ஓடும் சிறுமி..கண்ணீரை முழுதும் நம்மிடமிருந்து வெளியேற்றுகிறாள்.
குள்ளனின் மனைவி..தனக்குக் குழந்தை தன் கணவன் போல பிறந்திருப்பதுக் கண்டு பேசும் வசனங்கள்..கூசாமல் வசை பாடும் நபர்களுக்கு ஒரு சாட்டையடி.

தன் தங்கையத் தேடி நாயகி..நாயகனுடன் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் செல்வதும்..அவள் கௌஹாத்தி போகையில் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவிலும்.திரும்புகையில் ஷேர் ஆட்டோவிலும் நாயகி வருவது போலக் காட்டுவது..இயக்குநர்..எந்த ஒரு சின்ன இடத்திலும் கவனக் குறைவாக இல்லை என்பதைக் காட்டுகிறது.
பழையத் துணியை தோய்த்து..தேய்த்து..புதிது போல செய்து பத்து ரூபாய்க்கு விற்பவன்.......எப்படி இப்படி வசந்தபாலன்!!!!!!
இஸ்லாமிய நண்பர், கண் தெரியாதவர், பிச்சைக்காரன் போல அனைத்து பாத்திரங்களும் மனதில் நிற்பது..இயக்குநருக்கு வெற்றி.
'நீ யாருன்னு கேட்டா...சிரிச்சேன்' "விக்கத் தெரிஞ்சவந்தான் வாழத் தெரிஞ்சவன்'..அவன் என்.....கசக்கினான்..போன்ற இடங்களில் ஜெயமோகன் தெரிகிறார்.
கால்களை இழந்து நாயகி..மருத்துவ மனையில் படுத்திருக்கும் போது...காப்பகத்தில் சேர்க்க வருபவர்கள்..இவளிடமும் வருவார்கள்..அப்போது கணவன் நான் என நாயகன் சொல்வான்..என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்த போது...சற்றென..நாயகன் 'நாம கல்யாணம் பண்ணிப்போம்' என சொல்லும் போது..அதில் கூட சின்ன டுவிஸ்ட்.
அண்ணாச்சியாய் நடித்தவர்.(பழ.கருப்பையா).இனி அரசியல் பேசாமல்..நடிப்பில் கவனம் செலுத்தலாம்.மேனேஜராய் நடித்த வெங்கடேஷ் கச்சிதம்.
ஆமாம் கதையில் குறையே இல்லையா? சிறு சிறு குறைகள் ஆங்காங்கு இருந்தாலும்...நிறைகள் அதிகம் இருப்பதால் மறக்கப்படுகின்றன.ஆனாலும்..திரைக்கதை இடைவேளைக்குப் பிறகு சிறிது தொய்கிறது..அதில் இன்னும் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் ஆரம்பத்தில் கவிதை பாடும் கால்கள்...கடைசியில்..உஷ்..மனம் கனக்கிறது.
இதுபோல ஒரு கிளைமாக்ஸ் தேவையா? என்று சிந்திக்கையில்...
தேவை என்றே தோன்றுகிறது...சினிமேடிக்...என்று சொல்லமுடியாது. ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்று எண்ணத் தோன்றுகிறது.இனி மறைமுகமாக உழைத்து முன்னுக்கு வருவார்கள் வாழ்வில் எனக் கொள்ளவேண்டும்.
150 கோடி பட்ஜெட் படத்தை சன் டீ.வி.க்கு தாரை வார்த்துவிட்டு..குறைந்த பட்ஜெட்டில் இது போன்ற அருமையான படத்தை எடுத்த ஐங்கரன்..கருணாமூர்த்தி,அருண் பாண்டியன் பாராட்டுக்குரியவர்கள். இனி இது போன்று பல படங்கள் அந்த நிறுவனத்திலிருந்து வரட்டும்.
மொத்தத்தில்..படம்..அருமை..என்று சொல்வதைவிட..அதிகப்படியான பாராட்டுக்கு தமிழில் வார்த்தையைத் தேடிக்கொண்டிருக்கிறேன்..
கிடைத்ததும்...அஞ்சலிக்கும்,மகேஷுக்கும்,உங்களுக்கும்,ஜெயமோகனுக்கும் ,கலை இயக்குநருக்கும் தெரிவிக்கிறேன்..
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்..
அன்புடன்
T.V.ராதாகிருஷ்ணன்