Showing posts with label தமிழ் -காதல் -குறுந்தொகை. Show all posts
Showing posts with label தமிழ் -காதல் -குறுந்தொகை. Show all posts

Tuesday, January 19, 2010

கொஞ்சி விளையாடும் தமிழ் - 12

காதலன்..காதலி..ஒரு மாலை நேரம்....அருவி சலசலத்து ஓடும் மனத்திற்கு ரம்மியமான சூழலில் சந்திக்கிறார்கள்..காதலில் மூழ்கியிருக்கும் வேளையில் ..உணர்ச்சி வசப்பட்டு..உடலுறவு கொண்டு விடுகிறார்கள்.சாதாரணமாக காதலர்களுக்கு நிலவு சாட்சியாக அமைவதுண்டு.இங்கு அதுவும் இல்லை.

காதலன் பிரிந்து செல்கிறான்..ஆனால் அவளோ தவறு செய்து விட்டதாக நினைக்கிறாள்.நாளைக்கு ஏதேனும் விரும்பத்தகாதது நடந்தால் சாட்சி சொல்லக் கூட யாரும் இல்லை.இழப்பின் வெளிப்பாடை
குறிஞ்சி நிலப் பெண் பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
(கபிலர் - குறுந்தொகை 25)


தவறு நடந்து விட்டது..அப்போது யாரும் இல்லை அந்தத் திருடன் (காதலன்) மட்டும் தான் இருந்தான்.நாளை நான் இல்லை என அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்.நாங்கள் கூடிய போது தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன் ஆரல் மீனுக்காக ஓடும் நீரில் காத்திருந்த கொக்கு மட்டுமே இருந்தது என்கிறாள். கொக்கு மட்டுமே சாட்சியாம்.

இப்பாடல் குறுந்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்.