திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை.
மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா.கல்கி, ஏ.எஸ்.கே. அய்யங்கார், வெ.சாமிநாதசர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை விரித்துரைக்க வேண்டுமென்றால், "அக்கிரகாரத்து அதிசய மனிதர்'' என்று "வ.ரா.'' அவர்களைச் சிறப்பித்து எழுத் தோவியம் தீட்டிய அறிஞர் அண்ணாவின் தம்பி என்ற முறையில் "வ.ரா.'' மறைந்த பிறகும், எழுத்துத்துறை பிதாமகன் எனப்படும் "சாவி'' மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன், நான்!
1990ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, வ.ரா. அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதற்கான ஆணையினை அவர்களிடம் ஒப்படைத்தேன். 17.8.1990 அன்று கலைவாணர் அரங்கில் வ.ரா. அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடினோம்.
திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவனின் திருவுருவத்தைப் பலரும் பலவிதமாகச் சித்திரித்த நிலையில் ஒரே மாதிரி; அய்யனின் உருவத்தை வரைந்தளிக்க வேண்டுமென்ற பெருந்தமிழறிஞர்களின் கருத்தையேற்று; அனைவரும் ஒப்பும் வகையில் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அழகுற தீட்டித் தந்து, அதனை அரசின் வாயிலாகப் பிரசுரிக்கும் வகையையும் வழங்கிய ஓவியப் பெருமகனார் வேணுகோபால் சர்மா அவர்களைப் பெருமைப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கும் நிதியை வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு.
17.2.1985 அன்று நான் எழுதிய "குறளோவியம்'' நூல் வெளியீட்டு விழாவிற்கு வேணுகோபால் சர்மா அவர்களை தேடிப் பிடித்து அழைத்து வரச் செய்து அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக வழங்குவதாகக் கூறி அளித்தேன். பின்னர் 1989ஆம் ஆண்டு வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் 24.5.89 அன்று என்னைச் சந்தித்துக் கூறியதும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், 7.4.1990 அன்று அவருடைய குடும்பத்தாரைத் தலைமைச் செயலக த்திற்கு அழைத்து அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி மகிழ்ந்தேன். என்று கலைஞர் கூறியுள்ளார்