Showing posts with label நிகழ்வுகள் - நகைச்சுவை. Show all posts
Showing posts with label நிகழ்வுகள் - நகைச்சுவை. Show all posts

Wednesday, January 27, 2010

திருமணங்களும்..அழைப்பிதழ்களும்

நம் வீட்டுத் திருமணங்களுக்கு நெருங்கிய உறவினர்களையும்...நம் நண்பர்களையும் அழைப்பதில் தவறில்லை.ஆனால் அதிகம் அறிமுகம் இல்லாத..அல்லது..திருமணமாகும் மணமகள் குடும்பத்திற்கோ,மணமகன் குடும்பத்திற்கோ சற்றும் தெரியாத ஒருவருக்கு அழைப்பிதழ் கொடுப்பது வீண் என்றே எண்ணுகிறேன்.

உதாரணத்திற்கு..சென்ற வாரம் என் நண்பர் ஒருவர்..அவரது தம்பி மகள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தார்.எனக்கு அவரது தம்பியையோ..அவர் குடும்பத்தினரையோ தெரியாது.

ஆயினும்..அழைப்பிதழ் கொடுத்தவர் என் நண்பர்..திருமணத்திற்கு போகவில்லையெனில் தப்பாய் எண்ணிவிடப் போகிறாரே என்று போனேன்.நண்பர் பெண்ணின் பெரியப்பா என்பதால்..மணமேடையில் மிகவும் சுறுசுறுப்பாக செயல் ஆற்றிக் கொண்டிருந்தார்.நான் எப்பொதும் சங்கோஜி..பேருந்தில் கூட சப்தம் போட்டு நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்க மாட்டேன்.நடத்துநருக்கு நான் இரண்டுமுறை கேட்டால் தான் காதில் விழும்..அந்த அளவிற்கு மென்மையாகப் பேசக்கூடியவன்.

கல்யாண வீட்டில் யாரையும் தெரியாததால்..ஒரு ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.அங்கு ஒவ்வொருவரும்..அடுத்தவரிடம் பேசிக்கொண்டும்..சிரித்துக் கொண்டும் இருந்தனர். எனக்கு உள்ளூர பயம்..யாராவது வந்து..பையன் வீட்டிற்கு சொந்தமா..பெண் வீட்டு சொந்தமா என்று கேட்டு விடுவார்களோ என்று.

அந்த பயத்திலேயே..காஃபி கொண்டுவந்து கொடுத்துக் கொண்டிருந்தவரிடம் கூட காஃபி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்..அப்படிப்பட்டவன் போய் டிஃபன் எங்கே சாப்பிடப் போகிறேன்.

நூறு ரூபாய் மொய் எழுதிவிட்டு..சாப்பிடப் போகலாம் என்று நினைத்தேன்.ஓட்டலில் சாப்பிட்டால் கூட நூறு ரூபாய் ஆகாதா என்று மனம் கணக்குப் போட்டது.

தாலி கட்டி முடிந்ததும்..தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..மேடையில் ஏறி நண்பரைப் பார்த்து கை கொடுத்துவிட்டு மொய் கவரை திணித்தேன்.நண்பர் மணப்பெண்ணிடம் என் பெயரைக் கூறி அறிமுகப் படுத்தினார்.'ஆமாம்..இவனை எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு என்னவாகப் போகிறது'என்று அந்தப் பெண் மனதில் எண்ணியபடியே..அரை சென்டிமீட்டர் வாயை அகற்றி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்தாற் போல இருந்தது.

பின் நண்பர் கண்டிப்பாய் சாப்பிட்டுட்டுப் போங்க..என்றார்.

சரி என தலையாட்டிவிட்டு..தனியாக டைனிங் ஹால் போக தயங்கி..வேகமாக வெளியே வந்து செருப்பை மாட்டிக் கொண்டேன்.(நல்ல வேளை..செருப்பு காணாமல் போகவில்லை)

நேரே அருகில் இருந்த ஓட்டலுக்குப் போனேன்..சாப்பிட்டேன்..இன்று மதிய சாப்பாடு இரு நூறு ரூபாய் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்..

வீட்டில்..கல்யாணத்திற்கு போனீங்களே தாம்பூலப் பை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது..என்று தெரியவில்லை..கல்யாணப் பரிசு பைரவன் கதையாய் இருந்தாலும் பூமாலையை கடையில் வாங்கிக் கொண்டு போகலாம்..தாம்பூலப் பைக்கு எங்கே போவது..