Thursday, August 23, 2012

தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்



மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.
நினைத்ததை செயலாக்க நினைத்த அவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தான். உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் சிறுவன் அலறத் துவங்கினான். அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரது மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்ப்டடான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் போதிலும் அவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

(நன்றி -தட்ஸ்தமிழ்)

Sunday, August 19, 2012

காதலும்..திருமணமும்...




ஓரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும், திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்..

அதற்கு அந்த ஞானி, 'அது இருக்கட்டும்..முதலில் நீ ரோஜா தோட்டத்திற்குப் போ..அங்கு உயரமான ரோஜாச் செடி எது என எண்ணுகிறாயோ, அதை எடுத்துக்கொண்டு வா..ஆனால் இரு நிபந்தனை, நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக்கூடாது' என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, 'எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி?' என்றார்.

சீடான் சொன்னான். 'குருவே..வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னை கவர்ந்தது.அதைவிட உயரமான செடி இருக்கக் கூடும் என தொடர்ந்து நடந்தேன்.ஆனால்..பின் தென்பட்டவை அனைத்தும் குட்டையான செடிகளே..வந்த வழியே திரும்பிவரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியை கொண்டுவர முடியாமல் போய் விட்டது'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் காதல்'..பின்னர் ஞானி சொன்னார், 'சரி போகட்டும்.அதோ அந்த வயலில் சென்று உனக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரியகாந்திச் செடியை பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலான ஒரு நிபந்தனை.ஒரு செடியைப் பிடுங்கிய பின் ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது'

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரியகாந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார், 'இதுதான் அந்த தோட்டத்தில் அழகான சூரியகாந்திச் செடியா?'

சீடன் சொன்னான், 'இல்லை.இதைவிட அழகான செடிகள் இருக்கின்றன.ஆனால் இம்முறை முதல்முறை கோட்டை விட்டதுபோல இந்த முறையும் விட்டுவிடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியை பிடுங்கி வந்து விட்டேன்.நிபந்தனைப் படி ஒரு செடியை பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன்பிறகு இதைவிட அழகான செடிகளை நான் பார்த்த போதும் பறிக்கவில்லை'

இப்போது ஞானி சொன்னார், 'இதுதான் திருமணம்'

(ஓஷோ)  

Friday, August 17, 2012

ராமனும்..மன்மோகனும்




ராமாயணத்தில் ஒரு கதை உண்டு..
ராமன் ஒரு சமயம் தாகம் எடுக்க தன்னிடம் இருந்த தனுசை கரையில் ஊன்றிவிட்டு சுனையில் தண்ணீர் பருகிவிட்டு..பின் ஊன்றிய தனுசை எடுக்கையில்..அதனடியில் ஒரு தவளை தனுசு தன் மீது ஊன்றியதால் மரணப்போராட்டத்தில் இருந்தது.அதைக்கண்டு வருந்திய ராமன்.."ஏ..தவளையே..நான் தனுசை ஊன்றும் போது நீ குரல் கொடுத்திருக்கலாமே' என்றார்.

அதற்கு..தவளை''ராமா..எனக்கு யாரேனும் தீங்கிழைத்தால்..'ராமா எனைக்காப்பாற்று' எனக் குரல் கொடுக்கலாம்..ஆனால் செய்வது ராமனே என்னும் போது நான் யாருக்கு குரல் கொடுக்கமுடியும்?' என்றதாம்.

காமன்வெல்த் ஊழல், 2ஜி 176000 கோடி ஊழல் என்றெல்லாம் சேதி வந்தபோது சம்பந்தப்பட்ட நபர்/அமைச்சர்களை பதவி விலகச்சொன்ன பிரதமர்..நிலக்கரி சுரங்க உழல் 186000 கோடி என்றபோது அச்சமயம் அத்துறையை தன்னிடம் வைத்திருந்ததால் பதவி விலக வேண்டாமா?

உனக்கொரு நீதி..மற்றவனுக்கு ஒரு நீதியா?


Wednesday, August 15, 2012

தீக்குள் விரல்..



வாழ்த்துச் சொல்லி

பூங்கொத்து கொடுக்கையில்

விரல்கள் தீண்டின

பூவினும் மெல்லிய

மலர் ஒன்றை


2) உனக்கு என்ன வேண்டும்

என்றேன்

கூலிங் கிளாஸ் என்றாய்

ஏறிட்ட என்னிடம்

என்னை நீ பார்க்கையில்

நீ அறியாது

உன்னை நான் பார்க்கலாமே

என்றன உன் கண்கள்


3)பிரியும் நாள்

கண்களின் நீர் துடைத்த

கைக்குட்டையை யாசித்தேன்

வரும் நாட்களில்

என் கண்ணீர் துடைக்க


4)தினமும் ஒருமுறை

உன்னை தழுவிட

அனுமதித்தாய்

அப்போது உணரவில்லை

சாவையும் ஒருநாள்

தழுவிட வேண்டுமென

Tuesday, August 14, 2012

விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி






 அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களை பெருமைப்படுத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று 66வது சுதந்திர தினம் கோலாகலமாகவும், உற்சாகத்துடனும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சர்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது முகாமிட்டுள்ள இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தேசியக் கொடியை ஏற்றி இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் விண்வெளியில் இந்தியாவின் தேசியக் கொடி பறந்து புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அப்போது சுனிதா குறிப்பிட்டார். சுனிதாவின் தந்தை குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். அவரது தாயார் ஸ்லோவேனியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான்கு மாத கால ஆய்வுப் பயணமாக தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார் சுனிதா என்பது நினைவிருக்கலாம். இது அவரது 2வது விண்வெளி பயணமாகும்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் சுனிதா வில்லியம்ஸ் பேசுகையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்தி தினத்தைக் கொண்டாடும் இந்தியாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா ஒரு அருமையான நாடு. அந்த நாட்டின் ஒரு அங்கமாக நானும் இருப்பதை பெருமையாக உணர்கிறேன்.
நான் ஒரு அரை இந்தியர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். எனது தந்தை குஜராத்தைச் சேர்ந்தவர். எனவே இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் எனக்குத் தெரியும். இந்த நாட்டின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்றார் சுனிதா.

உபரி தகவல்
இந்திய தேசியக் கொடி 22-7-1947 அன்று. தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது.நீள் சதுர அளவில் உள்ள கொடியில் காவி,வெள்ளை,பச்சை ஆகிய மூவண்ணங்கள் உள்ளன.கொடியின் நடுவில் நீல வண்ணத்தில் அசோக சக்கரம் 24 ஆரத்துடன் உள்ளது.இக்கொடியை உருவாக்கியவர் பிங்கிலி வெங்கையா என்பவர் ஆவார்.கொடியை கையால் நெய்த காதி துணியில் செய்ய வேண்டும்

Monday, August 13, 2012

ஊழல் ஒழிப்பு போராட்டங்களால் பயன் ஏதுமில்லை




 ஊழலுக்கு எதிரான ராம்தேவ், அன்னா ஹசாரே போராட்டங்களால் ஒரு பலனும் கிடைக்காது என்று பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரே, யோகா குரு ராம்தேவ் ஆகியோரின் உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டத்தால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த போராட்டம் காற்று நிரப்பப்படாத ஒன்று. இன்னும் 15 ஆண்டுகளுக்கு நாட்டில் ஊழல் நிறைந்திருக்கும். இந்தக் காலமாற்றத்தில் எந்தவிதமான நன்னெறியையும் எதிர்பார்க்க முடியாது.
இத்தகைய காலமாற்றத்தைக் கடந்து நாடு முன்னேறிச் செல்ல அறிவியல் சார்ந்த, நவீன கருத்துகளை ஊடகங்கள் வெளிப்படுத்த வேண்டும். மேலும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை நாட்டின் அனைத்து இடங்களிலும் பரவச் செய்ய வேண்டும். இதில் ஊடகங்கள் ஒன்றுக்கொன்று சமநிலையிலும், நவீனமயத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றார் கட்ஜு.

டிஸ்கி - இதைத்தான் பட்டுக்கோட்டையார் அன்றே சொல்லிவிட்டார்..'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என.

Saturday, August 11, 2012

இ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறார் ராஜபக்க்ஷே



''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்சே கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திய ஊடகமொன்றுக்கு  அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பில் அவர் இத்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது செய்தி....

இனி நாம்...

இந்த விஷயத்தில் அறிவுரைக் கூற இவர் யார் என்ற கோபம் நமக்கு எழுந்தாலும்...

அடப்பாவிகளா..ஆமையைவிட நிதானமாய் செயல்படும் மைய அரசைப் பார்த்து..இன்னும் நிதானம் தேவை என்கிறாரே..இதற்குமேல் எப்படி...என்று அதிசயிக்கிறோம்.

இது சம்பந்தமாக மைய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு நாயரையோ..மேனனையோ அனுப்பும் என பட்சி சொல்கிறது.

Tuesday, August 7, 2012

படிக்க வேண்டிய தினமணி தலையங்கம்




ஏனிந்தபோலித்தனம்

லாட்டரிச் சீட்டு வாங்காமலேயே தனக்குக் கோடி ரூபாய் பரிசு விழ வேண்டும் என்று நினைப்பவரை எள்ளிநகையாடும் நாம், விளையாட்டில் எந்தவித ஆர்வமும் காட்டாமல், ஒலிம்பிக் போட்டியில் மட்டும் பதக்கங்களை இந்தியா அள்ளி வர வேண்டும் என்று பேராசைப்பட்டால் எப்படி?
ஒலிம்பிக் தடகளப் போட்டிக்குத் தகுதிபெற்றுப் பங்கேற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 14-ஐத் தாண்டாதபோது, நிறையப் பதக்கங்களைக் கனவுதான் காண முடியுமே தவிர, நடைமுறையில் அது எப்படிச் சாத்தியம்?
இன்றைய தேதிவரை நாம் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ககன் நரங், விஜயகுமார் இருவரது வெற்றியால் ஒரு வெண்கலம், ஒரு வெள்ளி பெற்றோம். சாய்னா மூலம் ஒரு வெண்கலம் கிடைத்தது. மேரி கோம் அரையிறுதியில் நுழைந்துள்ளதால் வெண்கலம் உறுதி, தங்கம், வெள்ளி கிடைப்பது போட்டியைப் பொறுத்தது. ஆக, 13 விளையாட்டுகளில் பங்கேற்கச் சென்ற 83 பேர் கொண்ட இந்திய அணி இதுவரை பெற்றிருப்பது நான்கே நான்கு பதக்கங்கள்!
பாட்மிண்டன் போட்டியில் சாய்னா தங்கம் வெல்வார் என்று அவரது தரவரிசையைக் கருத்தில்கொண்டு நம்பிக்கை வைத்தோம். அவர் வெண்கலம்தான் பெற முடிந்தது. அடுத்த நம்பிக்கை கிருஷ்ணா பூனியா வட்டெறிந்து சாதனை நிகழ்த்துவார் என்று நம்பினோம். அவரால் ஏழாவது இடத்துக்குத்தான் வர முடிந்தது. இது இவர்களின் தவறு அல்ல. இவர்களது திறமையை மேலும் பட்டைதீட்டத் தவறிய இந்திய அரசின் தவறு. ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் இவர்களைத் திரும்பிப் பார்ப்பதும் மற்ற நேரங்களில் மறந்துவிடுவதும் இந்திய விளையாட்டுத் துறையின் தவறு.
ஒலிம்பிக்கில் மற்றவர்களோடு போட்டியிட்டு விளையாடி, தகுதித்தேர்வு நிலையிலேயே, அல்லது காலிறுதி, அரையிறுதியில் வெளியேறும் நம் இந்திய வீரர்களை, ஏதோ அவர்கள் தேசத் துரோகம் செய்துவிட்டதைப்போன்று கூனிக் குறுகிப் போகச் செய்கிறது நமது எதிர்பார்ப்புகள்.
அவர்கள் விளையாடத் தேவையான எதையும் செய்து கொடுக்காத இந்திய அரசை நாம் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்காமல், உலகத் தரத்துக்கு இணையாக ஆட இயலாமல் பின்தங்கிப் போன இந்திய வீரர்களின் குற்றஉணர்ச்சியைத் தூண்டி, கண்ணீர் சிந்த வைப்பதால் என்ன பயன்?
ஒலிம்பிக் சென்ற இந்திய வீரர்கள் விருதுகள் பெறாமல் திரும்பினால் அது அவர்கள் குற்றமல்ல. உலகத் தரத்துக்கு இணையான வீரர்களை உருவாக்கத் தவறிய இந்திய அரசின் குற்றம். விளையாட்டுப் போட்டியில் ஆர்வம் செலுத்தாமல், ஆனால், விளையாட்டுக்கான நிதிஒதுக்கீட்டில் முறைகேடு செய்வதில் மட்டும் ஆர்வம் காட்டும் அரசியல்வாதிகளின் குற்றம்.
தற்போது நான்கு விருதுகள் பெற்றவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு ரொக்கப் பரிசை அள்ளி வழங்கும். இதே ஆர்வத்தை விளையாட்டு மேம்பாட்டுக்காக, பயிற்சிக்காக அரசுகள் செலவிடுவதில்லை. இந்த நான்குபேரில் துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் சொந்தத் திறமையால் அதைச் சாதித்தனர். அந்த ஏகலைவர்களுக்கு அர்ஜுனா விருது நிச்சயம்.
ஒலிம்பிக் தடகளத்தில் இதுவரை இறுதிச்சுற்றில் பங்கேற்றவர்கள் மில்கா சிங், பி.டி.உஷா, எஸ்.ஸ்ரீராம், குர்பஜன் சிங், அஞ்சு பாபி ஜார்ஜ். இப்போது ஆறாவது நபராக பூனியா. ஆறே ஆறு பேர் மட்டுமே!
இந்த நிலைமைக்காக வருத்தப்படவும், வேதனைப்படவும் செய்யாத இந்தியர்கள், பதக்கங்களை நாம் வென்றெடுக்கவில்லை என்று வருத்தப்படுவதில் அர்த்தம் இல்லை.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் நல்ல பயிற்சிக்களம், பயிற்சியாளர், விளையாட்டுக் கருவிகள் ஊக்கத்தொகை போன்ற எதையுமே வழங்காமல், அதிலும்கூட ஊழல் செய்தால், நாம் விருதுகளை எப்படிப் பெறமுடியும்? பொறியியல் கல்லூரியிலும் மருத்துவக் கல்லூரியிலும் இடம் பெறுவதற்காக மட்டுமே விளையாட்டைப் பயன்படுத்தும் ஊழல்களால் எப்படி சர்வதேச விருது கிடைக்கும்?
பொருளாதார ரீதியில் 9-வது இடத்திலும் மக்கள் தொகையில் இரண்டாம் இடத்திலும் உள்ள இந்தியாவினால் 4 பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்ததை எண்ணி வருந்தும் இந்தியர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறார்கள்; இத்தகைய நிலைமைக்கு அரசுக்கு எந்த அளவுக்குப் பொறுப்போ அதே அளவு மக்களுக்கும் உள்ளது.
இந்தியாவில் எந்த நாளிலும் தொலைக்காட்சியில் காண நேர்ந்த விளையாட்டு, இந்தியர்களுக்கு எல்லா வீரர்களின் பெயரும் அத்துப்படியான விளையாட்டு கிரிக்கெட். நம் துரதிருஷ்டம், அந்த விளையாட்டு ஒலிம்பிக் போட்டியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் ஒன்றைத் தவிர, எந்த விளையாட்டைப் பற்றியும் என்றைக்கும் கவலைப்படாமல், ஒலிம்பிக் நேரத்தில் மட்டும் நமது வீரர்கள் தங்கப் பதக்கமும், வெள்ளிப் பதக்கமும் பெறவில்லையே என்று நாம் ஆதங்கப்படுவது போலித்தனம் அல்லாமல் வேறென்ன?
ஒவ்வொரு விளையாட்டிலும் பயிற்சிபெறத் தேவையான விளையாட்டுக் களம், சூழல், சிறந்த பயிற்சியாளர்கள் போன்ற அனைத்தையும் உறுதி செய்து, அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே வீரர்களைத் தயார்படுத்திட அரசாங்கத்தை வலியுறுத்துவது எப்படி நமது கடமையோ, அதேபோன்று தங்கள் குழந்தைகளை விளையாட அனுப்பி வைப்பதும் மக்களின் கடமை. குழந்தைகளுக்கு பல விளையாட்டுகளைக் காட்டி, அவர்களுக்கான விளையாட்டைத் தேர்வு செய்ய சுதந்திரம் தர வேண்டும். கிரிக்கெட்டும், செஸ்ஸýம் மட்டுமே விளையாட்டு என்கிற மனோபாவம் ஏற்பட்டிருப்பதில் பெற்றோருக்கும் பங்கு இருக்கிறது.
தங்கள் வீட்டுக் குழந்தைகளைப் பள்ளி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யாத எந்த ஒரு இந்தியனுக்கும், லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் விருதுகளை அள்ளி வரவில்லையே எனக் குற்றம் சொல்லும் தார்மிக உரிமை இல்லை!

Monday, August 6, 2012

தொடர்கதை.. (சிறுகதை)


நுனி இலையில் சாதம் மலைபோல வெடித்து கொட்டப்பட்டிருந்தது. அதைச்சுற்றி விதவிதமான பதார்த்தங்கள்.ஆனால் எதிலும் உப்பில்லை.

லேமினேட் செய்யப்பட்டிருந்த..படத்தில்..மாலையுடன்..அந்த இலையையும்,அதனருகே ஏற்றிவைத்திருந்த குத்துவிளக்கையும் பார்த்துக் கொண்டிருந்தார் சபேசன்..

'சபேசனின் ஆவி வந்து..இந்த படையலை சாப்பிட்டுவிட்டு..போங்கடா..நீங்களும்..உங்க சாப்பாடும் என வெறுத்து பூஉலகை விட்டு ஒடிவிடும்..'என்று சாஸ்திரிகள் சொல்லியபடியே..'அம்மா..நீங்கக் கூட வந்து பரிமாறலாம்' என்றார் மதுரத்திடம்.

மாட்டேன்..என்று தலையை ஆட்டி..மறுப்பு சொன்ன மதுரம்..'என்னங்க..நான் எப்படி சமைச்சுப் போட்டாலும்..நல்லாயிருக்குன்னு..நாக்கை சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுவீங்களே.. ..இப்படிப்பட்ட சாப்பாட்டை நான் போடமாட்டேன்'..ஆறடி சபேசனாக உலா வந்தவரான சபேஸனின்..ஓரடி படத்திடம் புலம்பினாள்.

சபேசனின்..காரியங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன.சாஸ்திரிகள் யாருக்கும் புரியாத..சமஸ்கிருதத்தில்..மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருக்க..மகன்கள் இருவரும்..அரைகுறையாக அவற்றை முணுமுணுத்துக் கொண்டிருந்தனர்.அதற்குள்..சபேசன் பற்றி நாமும் சற்று தெரிந்துக் கொள்வோம்.

சபேசன்....ஒரு தனியார் நிறுவனத்தில்..எழுத்தராக வேலை செய்து வந்தார்.ஆண் குழந்தை ஒன்று..பெண் குழந்தை ஒன்று.போனால் போகிறது..வேண்டாம் என நினைத்தும்..கொசுறாக இன்னொரு மகனும் பிறந்தான்.

ஆக..மூன்று குழந்தைகளுடன்..அவருக்கு வரும் சொற்ப சம்பளத்தில்..வாய்க்கும்..வயிற்றுக்குமான சண்டையுடன் அவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.ஆனாலும்..தம்மால் குழந்தைகளுக்கு எந்த சொத்தும் வைக்க முடியாது..என்பதால்..கல்வி சொத்தையாவது கொடுக்கலாம்..என தன் தகுதிக்கு மீறி மூத்தவனை..இஞ்சினீரிங்க படிக்க வைத்தார்.

பி.ஈ., மூன்றாம் ஆண்டின் போதே..காம்பஸ் இண்டெர்வியூவில்..பெங்களுருவில் உள்ள மென்பொருள்துறை கம்பெனி ஒன்று..இவனைத் தேர்ந்தெடுத்தது.

கை நிறைய சம்பளம்..இனி வாழ்வில் சற்று வசதியாய் இருக்கலாம்..என அவர் எண்ணியபோது...அவனிடமிருந்து ஒரு பெரிய கடிதம் வந்தது.

அதில்..அவனுடன் வேலை செய்யும்..சுதாவை திருமணம் செய்துக் கொண்டதாகவும்..அவனை மன்னிக்கும் படியும் எழுதி இருந்தான்.மேலும்..இருவருக்கும் கிடைக்கும் சம்பளத்தை கணக்கிட்டு...அலுவலகம் அருகிலேயே..ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டதாகவும்..அதன் மாதாந்திர தவணைத்தொகையே 30000க்கு மேல் ஆவதால்..குடும்பம் நடத்தவே சிரமப்படுவதாக எழுதி இருந்தான்.

கடிதம் கண்ட மதுரம்..நிலைகுலைந்து விட்டாள்...சபேசனோ..'மதுரம் கவலைப்படாதே!..ஆண்டவன்..நமக்கு சோதனையைக் கொடுத்தாலும்...இரு கைகளையும் கொடுத்திருக்கிறான்..கடைசிவரை உழைக்க" என்றார்...மேலும்..'நம் கையிலேயே ஐந்து விரல்களும்..ஒன்றாகவா இருக்கின்றன..நம்ம கடமையைச் செய்தோம்..அதற்கு பலனை எதிர்ப்பார்த்தது தவறு'என ஆறுதல் கூறினார்.தன் மனவருத்தத்தை வெளிக்காட்டாது.

இப்போது..அவர் கவனம்..அடுத்த பையன் மீது சென்றது...அவனையும்..நன்கு படிக்கவைத்தார்.அவனும் ஐ.ஏ.எஸ்.,தேறினான்.தில்லியில் வேலை.ஆனால் அவன் நடத்தையும்..முதல் மகனே பரவாயில்லை என்பதாய் இருந்தது.

முதல் மகனாவது..கல்யாணத்திற்கு முன் தந்தைக்கு தெரிவித்தான்.ஆனால்..இவனோ..திடீரென ஒரு நாள்..ஒரு பஞ்சாபி பெண்ணுடன் வந்தான்.அவளைத் திருமணம் செய்துவிட்டதாகக் கூறி..அலுவலக வேலை நிமித்தம் சென்னை வந்துள்ளதாகவும்..உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறிவிட்டு , கிளம்பிவிட்டான்.

இந்நிலையில் சபேசன்..வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.தனது முடிவுக்கு முன்னால்..தன் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து..தனக்கு வந்த ஓய்வு ஊதியத்தில்..தன் மகளின் திருமணத்தை முடித்தார். 

பின்..தங்களில் எஞ்சிய வாழ்நாளை எப்படித் தள்ளுவது..என்ற கவலை ஏற்பட..ஒரு வக்கீல் இடத்தில் டைபிஸ்ட் வேலை கிடைத்தது.அதில் வரும் வருமானம்...இருவர் வாழ்க்கையை ஓட்டவே சரியாய் இருந்தது.

சிலநாட்களாக..சபேசனுக்கு..கண் மார்வை மங்க ஆரம்பிக்க..கண் மருத்துவர் ஒருவரிடம் சென்றார்.இவர் கண்களை பரிசோதித்துவிட்டு..கேடராட் இருப்பதாகவும்...உட்னே அறுவைசிகிச்சை செய்யவேண்டும் என்றும் கூறினார்..அதற்கு சில ஆயிரங்கள் ஆகும் என்றும் கூறினார்.

கணவருக்குத் தெரியாமல்..இரு மகன்களுக்கும் கடிதம் எழுதினாள் மதுரம்..அதில்..உங்களுக்கு கல்வி ஒளி வழங்கியவருக்கு..கண்ணொளி வழங்குங்கள் என வேண்டினாள்.

வழக்கம் போல..இருவரும் ஏதேதோ சாக்கு கூறி..தங்களால் தற்போது இயலாது..என கூறிவிட்டனர்.

ஒருநாள் கண் சரியே தெரியாது..கத்திரி வெயிலில்..கால்கள் கொப்பளிக்க, வேக வேகமாக சாலையைக் கடக்கும் போது..வேகமாக வந்த பேருந்தில் அடிபட்டார்..மருத்துவ மனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே மரணம் அவரைத் தழுவியது.

அப்பா...உயிருடன் இருந்த போது..அவரை நல்லபடியாக..வைத்து காப்பாற்றத் தெரியாத..மக்கள்..அவர் இறந்ததும்..காரியங்களில் எந்த குறையும் வைக்கக் கூடாது என்று தீர்மானித்தனர்.

சபேசன் ஆவி போகும் வழியில்...தாகத்தால் தவிக்கக்கூடாது என கோ தானம் செய்யப்பட்டது..

வெயில் காலங்களிலும் வெறும் கால்களோடு நடந்தவரின் பாதங்களை கற்கள்..முற்களிடம் இருந்து காப்பாற்ற செருப்பு தானம் செய்யப்பட்டது.

உயிருடன் இருந்த போது கண்ணொளிக்கு உதவாதவர்கள்..போகும் வழியில் அவர் ஆவி தடுமாறக் கூடாது என விளக்குகள் தானம் செய்தனர்.

போகும் வழியில்..மழை ,வெயிலிலிருந்து காக்க..குடை தானம் செய்யப்படுகிறது..

போங்கடா..நீங்களும் உங்க தானங்களும்..எனக்கு ஏதும் தேவையில்லை..என படத்திலிருந்த அவர் சொல்வது மதுரத்திற்கு மட்டுமே கேட்டது.

இது போன்ற சபேசன் கதைகள்..என்றுமே தொடர்கதைகள்தான்.

Wednesday, August 1, 2012

மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள்: எஸ்.எம்.கிருஷ்ணா





கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்லுங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.

 பெங்களூர் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில், தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கே.ரகுமான்கான் மற்றும் நேரு யுவகேந்திராவின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள சலீம் அஹமது ஆகியோருக்கு பாராட்டு விழா பெங்களூர் டவுன் ஹாலில் புதன்கிழமை நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கலந்துகொண்டு, இருவரையும் பாராட்டி, கௌரவித்துப் பேசியது: கர்நாடக மக்கள் எதையும் எளிதில் மறக்கும் குணம் கொண்டவர்கள். அதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க, மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும்.

 காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்றும் வேலைகளைச் செய்யத் தெரியாது. மத்திய அமைச்சரவையில் 6 முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறோம். ஆனால் மஜத ஒரு முஸ்லிமுக்கு எம்எல்சி பதவி அளித்துவிட்டு, தங்கள் கட்சி முஸ்லிம் மக்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள கட்சி என்று பறைசாற்றிக்கொள்கிறது. கர்நாடகத்தில முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4.4 சவீதம் இடஒதுக்கீடு, நான் முதல்வராக இருந்தபோது தான் அமல்படு்த்தப்பட்டது.

 மஜத, பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்கும். தொடர்ந்து பாஜகவை குறைகூறும். பின்னர் இவர்களை ஆட்சியில் அமர்த்தியதற்கு எங்களை மன்னித்துவிடுங்கள் என்று மக்களிடம் நாடகமாடுவார்கள். முஸ்லிம் மக்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அமீது ஹன்சாரி திறமையானவர். அவருக்கு துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் நிறுத்தியிருக்கிறோம். காங்கிரஸ் என்றும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருக்கும். காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு பல்வேறு பதவிகளை அளித்து மகிழ்ந்துள்ளது. அதை மற்றக் கட்சிகளைப்போன்று வெளிப்படுத்திக்கொள்வதில்லை என்றார்.

மேலே சொன்னவை அமைச்சர் கிருஷ்ணா சொன்னது..

அவர் சொல்ல மறந்த அவரது சாதனை..

நான் கர்நாடக முதல்வராயிருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்காது தமிழகத்திற்கு காவிரி நீர் கொடுக்க மறுத்தவன்.அந்த அளவு இந்திய மக்கள் மீது அக்கறை கொண்டவன்.இதையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.


Tuesday, July 31, 2012

ரூபாய் பத்தாயிரம் பரிசுக் கதை..




ஒவ்வொரு ஆண்டும் 'அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியை' கல்கி வார இதழ் நடத்தி வருகிறது.பரிசு பெறும் முதல் கதைக்கு ரூ.10000 மும் இரண்டாம், மூன்றாம் பரிசுகளாக தலா 7500, 5000 வழங்கி வருகிறது.தவிர்த்து பிரசுரிக்க தேர்வான கதைகளுக்கும் அதற்கான சன்மானத்தை அளித்து வருகிறது.

இந்த ஆண்டிற்கான நடுவர்களாக வெ.இறையன்பு மற்றும் இயக்குநர்,நடிகை ரோகிணி ஆகியோர் பொறுப்பேற்று ஆசிரியர் குழுவினரோடு இணைந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாண்டு 10000 ரூ பரிசு பெறும் முதல் பரிசுக்கான  'போன்சாய் நிழல்கள்' தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.இதை எழுதியவர் செம்பை முருகானந்தம்.திருச்சியைச் சேர்ந்தவர்.
கதை இவ்வார கல்கியில் வெளிவந்துள்ளது.

கதை நடை..ஒருவர் கேள்விகளைக் கேட்க மற்றவர் பதில் சொல்வது போல அமைந்துள்ளது.கடைசியில் கேள்வி கேட்பவர் யார், பதில் சொல்பவர் யார் என்று இரண்டுவரிகளை படிக்கையில்...'ஆஹா...முதல் பரிசுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட கதை' என்று மனம் துள்ளல் போடுகிறது.

கதையை முழுதுமாக விமரிசப்பதுடன்..அதைப் படித்துப் பார்த்தால்தான் சுவையை அனுபவிக்கமுடியும்.

சிறுகதைகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.வாழ்த்துகள் கதாசிரியருக்கு மட்டுமல்ல..இக்கதை பரிசுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்கள் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கும்.

இதை சிறந்த கதையாக தேர்ந்தெடுத்த நடுவர்களின் கருத்து...

ரோஹிணி - தி.ஜா.வின் கதைகள் படிக்கும் போது யார், எங்கே, எவருடன் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள சில வரிகள் ஆகும்.அப்படியொரு தன்மை இந்தக் கதையில் பார்க்க நேர்ந்தது.இறையன்பு சுட்டிக்காட்டியிருப்பது போல் இந்தக் கதை இன்றைய காலத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது.

இறையன்பு - இன்றைய சூழலில் குழந்தைகளின் மனத்தில் அன்புடன் விதைக்கப்படும் கல்வி எவ்வளவு இனிய அனுபவமாக மாறும் என்பதை உணர்த்தும்  அழகான சிறுகதை.உயரிய உத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்தக்கதை அவாமிகுந்த பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படுத்தக்கூடியது.


டாஸ்மாக் கடைகளை மூட திட்டம்?




 


தமிழ்நாட்டுக்கு அதிக வருவாயை அள்ளிக் கொடுக்கும் மதுபானக் கடைகளை அடியோடு இழுத்து மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மத்திய அரசை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக உருவாக ஒரே வழி என்ன? என்று ஜெயலலிதா தமது ஆலோசகர்களிடம் விவாதித்திருக்கிறார். அப்போதுதான் தமிழ்நாட்டில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினால் நிச்சயம் பெண்களின் வாக்குகள் அனைத்துமே அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் முன்னுதாரணம் மிக்க அரசாக தமிழக அரசு திகழும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதனை முழு அளவில் ஜெயலலிதாவும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிச்சயமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்துவது என்ற முடிவில் ஜெயலலிதா உறுதியாக இருந்தாலும் டாஸ்மாக் அளவுக்கு வருவாய் தரக் கூடிய வழிகள் என்ன என்பதுதான் அவர் எழுப்பிய கேள்வி. இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தரவும் மூத்த அதிகாரிகளுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் முழுமையான அளவில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ள போதும் லாபம் ஈட்டக் கூடிய பட்ஜெட்டை வேளாண்துறை மூலம் சாதித்து வருகிறது அம்மாநில அரசு. குஜராத் அரசு எப்படியான வழிகளில் வருவாயைப் பெருக்குகிறது என்று ஆராயவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம்.
அனேகமாக ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்றோ அல்லது அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்றோ இதற்கான அதிரடி அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

(தட்ஸ்தமிழ்)

Monday, July 30, 2012

மீண்டும் பரிதாபம்-சென்னையில் ஸ்கூல் வேனில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி



 பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானதால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
சென்னையில் உள்ள ஜியோன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியானார். இதைத் தொடர்ந்து வேலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலும் பள்ளி வாகனத்தில் அடிபட்டு 2 மாணவிகள் பரிதாபமாக இறந்தார்கள். இந்நிலையில் சென்னையை அடுத்த திருமுல்லைவாயலில் ஒன்றரை வயது ஆண் குழந்தை பள்ளி வேனில் சிக்கி பலியானது.
அம்பத்தூர் அருகே உள்ள திருமுல்லைவாயல் அன்னனூர் பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் ஆனந்தன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி மீனா. அவர்களின் குழந்தைகள் சந்தோஷ் (6), சுதாகர் (3 1/2), சஞ்சய் (1 1/2). அதில் சந்தோஷும், சுதாகரும் அரும்பாக்கம் லிட்டில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கின்றனர்.
இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் தங்கள் தந்தையுடன் பைக்கில் பள்ளிக்கு சென்று வந்தனர். இந்நிலையில் அவர்களை பள்ளி வேனில் அனுப்ப அவர்களின் பெற்றோர் முடிவு செய்தனர். இன்று முதன் முதலாக பள்ளி வேனில் அவர்களை அனுப்பி வைக்க இருந்தனர். காலை 8 மணிக்கு வேன் வந்தது. அப்போது மீனா சஞ்சயை கீழே இறக்கிவிட்டுவிட்டு மற்ற 2 மகன்களையும் வேனில் ஏற்றினார்.
வேனும் கிளம்பியது. இதற்கிடையே குழந்தை சஞ்சய் தவழ்ந்து வேனுக்கு அடியில் சென்றதை யாரும் கவனிக்கவில்லை. டிரைவர் வேனை எடுத்ததும் குழந்தை பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானான். இதைப் பார்த்த மீனா கதறினார். உடனே வேன் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து வேனில் இருந்த குழந்தைகளை கீழே இறக்கிவிட்டு வேனை நொறுக்கினர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கூடியிருந்தவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(தகவல் தட்ஸ்தமிழ்)


Sunday, July 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ



டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பயணிகள் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணிக்கு நெல்லூர் ரயில் நிலையத்தை இந்த ரயில் வந்தடைந்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே எஸ் 11 என்ற கோச்சில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். அப்போது தீயில் கருகிய நிலையில் 25 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தீக்காயங்களுடன் 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால் எஸ் 11 கோச்சில் 72 பயணிகள் வந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
சம்பவ இடத்தில் நெல்லூர் ஆட்சியர் ஸ்ரீதர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தெற்கு ரயில்வே அதிகாரிகளும் நெல்லூர் விரைந்துள்ளனர்

கவிஞர் வாலிக்கு இது அழகா....




கவிஞர் வாலியின் பரம ரசிகன் நான்(கலாரசிகன்) என்பது எனது நண்பர்கள் அனைவருக்குமே தெரியும். மெட்டுக்குப் பாட்டுக்கட்டும் வித்தையைக் கர்ப்பத்திலேயே கற்றுத் தேர்ந்த வித்தகர் அவர் என்பதிலும், எதுகையும் மோனையும் அவரது கவிதைகளில் காட்டருவி போலத் துள்ளிக் குதித்து வந்துவிழும் என்பதிலும் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அகவை எண்பதைக் கடந்துவிட்டவர் கவிஞர் வாலி. "அவதார புருஷன்', "பாண்டவர் பூமி', "ராமானுஜ காவியம்', "கிருஷ்ண விஜயம்' போன்ற படைப்புகள் அவருக்குக் "காவியக் கவிஞர்' என்கிற பெயரை ஈட்டித் தந்திருக்கின்றன. மூன்று தலைமுறை கடந்து நான்காவது தலைமுறைக் கதாநாயகர்களுக்கும் சினிமாவில் மெட்டுக்குப் பாட்டெழுதிக் கொண்டிருக்கிறார்.
"துக்ளக்' வார இதழில் அவர் எழுதி வரும் "எனக்குள் எம்.ஜி.ஆர். ஒரு எக்ஸ்ரே தொடர்' பகுதியில் அவர் எங்கள் ஆசிரியர் சாவி சார் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அவதூறான செய்திகள், வயதும் அனுபவமும் அவரை ஏன் இன்னும் பக்குவப்படுத்தவில்லை என்கிற வருத்தத்தைத்தான் ஏற்படுத்தியது. கவிஞர் வாலி என்ன குறிப்பிட்டிருந்தார் என்பதைத் தெரிவிக்காமல் நான் மேலே எழுதினால் அதைப் படிப்பவர்களுக்குத் தலையும் புரியாது, வாலும் தெரியாது என்பதால் அதை மறுபதிவு செய்ய வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.
 ""கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்'' - இப்படி அந்தப் பத்திரிகையில் என்னை மறைமுகமாகக் குறிப்பிட்டுச் செய்தி வந்திருந்தது.
எனக்கு அளவற்ற ஆத்திரம் வந்தது. ஏனெனில், எம்.ஜி.ஆரோடு நான் பழகிய இருபத்தைந்து வருட நட்பில், இருபத்தைந்து தடவை கூட ராமாவரம் தோட்டத்துக்குள் போனது கிடையாது. அப்படியிருக்க, இப்படி "சாவி' எழுதியது அதர்மமல்லவா?
சில நாள்கள் கழித்து, "சாவி'யை மூப்பனார் வீட்டில் சந்திக்க நேர்ந்தது.
""சாவி சார்! வயசில நீங்க என்னைவிட ரொம்பப் பெரியவரு... இப்படி என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் எழுதலாமா? இப்படித்தான் என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, பாரதிராஜாவின் சொந்தப் படமான "புதிய வார்ப்புகள்' பூஜையன்னிக்கு, அருணாசலம் ஸ்டூடியோவிலே, ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்''.
இதுதான் கவிஞர் வாலி பதிவு செய்திருக்கும் சம்பவம். இது உண்மையா பொய்யா என்று தெரிந்துகொள்ள ஆசிரியர் சாவி சாரும் உயிரோடு இல்லை. மூப்பனாரும் காலமாகிவிட்டார்.
இப்படிக் கவிஞர் வாலி சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி அவரது கன்னத்தில் "பளார்' என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால் அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அதுபோலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது. அது போகட்டும்.
சாவி சார் ஆசிரியராக இருந்த பத்திரிகையில் அப்படி என்ன மோசமாக எழுதிவிட்டார்கள் என்று கவிஞர் வாலி கோபப்பட வேண்டும்? பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட ஒருவர் சில அவதூறுகளையும், விமர்சனங்களையும் தாங்கிக் கொள்ளத்தானே வேண்டும்? அப்போதே "நான் ஒன்றும் அரசவைக் கவிஞர் பதவிக்காக ராமாவரம் தோட்டத்துக்குப் போகவும் இல்லை, ஆசைப்படவும் இல்லை' என்று கவிஞர் வாலி மறுப்பு எழுதியிருக்கலாமே, அறிக்கை வெளியிட்டிருக்கலாமே, ஏன் செய்யவில்லை?
தன்னை விமர்சனம் செய்த பத்திரிகையாளரைக் கன்னத்தில் அறைந்தேன் என்று அகவை எண்பதில் பெருமை தட்டிக் கொள்ளக் கவிஞர் வாலி நாணிக் கூசியிருக்க வேண்டாமா? அவதார புருஷனையும், பாண்டவர் பூமியையும், கிருஷ்ண விஜயத்தையும் எழுதுவதற்காகப் படித்த ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும், பாகவதத்திலிருந்தும் கவிஞர் வாலி கற்றுக்கொண்டது அவ்வளவுதானா?
கவிஞர் வாலி விரும்பினாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், திரையுலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் எல்லோருக்குமே தெரிந்த உண்மை, கவியரசு கண்ணதாசனையும், புலவர் புலமைப்பித்தனையும், கவிஞர் முத்துலிங்கத்தையும் அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்த எம்.ஜி.ஆர்., கவிஞர் வாலியைப் "பத்மஸ்ரீ' விருதிற்குக்கூடப் பரிந்துரைக்கவில்லை என்பது. கருணாநிதி அரசால் பரிந்துரைக்கப்பட்டு 2007-இல்தான் அவருக்குப் பத்மஸ்ரீ விருது தரப்பட்டது என்பதுதானே உண்மை?
கவிஞர் வாலியால் தன்னைத் தாங்கிப் பிடித்த, மரியாதைக்குரிய பத்திரிகையாளர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்களே கூடத் தங்களை ஆசிரியர் சாவியுடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சாவி சாரின் உயரமும், பங்களிப்பும் எங்கே, இவர்கள் எங்கே?
வெகுஜனப் பத்திரிகைக்கு ஜெயகாந்தனை அழைத்து வந்தவர், கவியரசு கண்ணதாசனை தினமணி கதிரில் "அர்த்தமுள்ள இந்து மதம்' எழுத வைத்து அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர்; நாடகம், சினிமா என்று மட்டுமே இருந்த "சோ' சாரை "மை டியர் பிரம்மதேவா' நாடகத் தொடரை எழுத வைத்துப் பத்திரிகைப் பிரவேசம் செய்யப் பிள்ளையார் சுழி இட்டவர், நாங்கள் சாவி சாரின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவர்கள் என்று எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பா தங்கதுரை, சிவசங்கரி, பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு, மாலன் என்று ஒரு மிகப்பெரிய எழுத்தாளர் பட்டாளத்தால் மதிக்கப்பட்டவர் எங்கள் ஆசிரியரான சாவி சார்!
சொல்லப்போனால் சாவி சாருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் சாவி பத்திரிகையிலிருந்து விலகியவன்தான் நான். அதனால் அவர் எனது ஆசிரியர் இல்லாமலாகி விடுவாரா, இல்லை, அவரது குறைகள் அவரது நிறைகளை இல்லை என்றாக்கிவிடுமா?
திரு.வி.க.வுக்கும், கல்கிக்கும் பிறகு பத்திரிகை உலகில் ஒரு ஜாம்பவானாக வளைய வந்த ஆசிரியர் சாவியை இப்படித் தரக்குறைவாகச் சித்திரிக்கவும், தனது சொந்த மனமாச்சரியங்களையும், காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்துக்கொள்ள, கட்டுரைத் தொடர் எழுத முற்பட்டிருப்பதையும் பார்க்கும்போது நமது மதிப்பிலிருந்தும் மரியாதையிலிருந்தும் கவிஞர் வாலி சடசடவென்று சரிந்துவிடுகிறாரே...
சாவி சார் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நண்பராக இருந்தவர்தான். எம்.ஜி.ஆரைக் கடுமையாக விமர்சித்தவரும்தான். ஆனால், கடைசிவரை கருணாநிதியின் நண்பராகவே தொடர்ந்தவர். கவிஞர் வாலியைப்போல முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும்வரை அவரை "ஏ.எம் தொடங்கிப் பி.எம் வரை இமைமூடாப் பணி செய்யும் சி.எம்' என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே, முதல்வர் ஜெயலலிதாவை "ரங்கநாயகி' என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் அவருக்கு இருந்ததில்லை.
சாவி சார் கோபக்காரர்தான். அவருக்கும் குற்றம் குறை உண்டுதான். ஆனால் அவர் ஒரு தலைசிறந்த பத்திரிகையாசிரியர் என்பதில் சந்தேகமே இருக்க முடியாது. அவரது பாசறையில் தயாரான என்னைப் போன்றவர்களால், இறந்துவிட்ட அவரை வசைபாடுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
எழுபதுகளில் ஒரு நாள். மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் சங்கர ஜயந்தியை முன்னிட்டுக் கவிஞர் வாலியின் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அன்று கவியரசு கண்ணதாசன் உள்ளிட்டோர் அந்தக் கவியரங்கத்தை முதல் வரிசையில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருந்தனர். கவிஞர் வாலியின் கவியரங்கம் என்று சொன்னால் கால்கடுக்க நின்றாவது அதைக்கேட்டு ரசிப்பதுடன், எழுதி எடுத்து மனனம் செய்யும் அளவுக்கு நான் அவரிடம் பித்துக் கொண்டிருந்தவன்.
கவிஞர் வாலி தனது கவியரங்கக் கவிதையைத் தொடங்கினார்.
 "சாக்கடையில் விழுந்தாலும்
 சந்தனத்தில் விழுந்தாலும்
 எதுவுமே -
 ஒட்டிக் கொள்ளாமல்
 உள்ளது உள்ளபடியே
 எழுந்து வருகிறது -
 என்னுடைய நிழல்.
 நிழலுக்கு இருக்கும் - இந்த
 நிட்காமிய ஞானம் - என்
 உடலுக்கும் வாய்க்குமாயின்-
ஆதிசங்கரரைப் போல்
அடியேனுக்கும் -
கள்ளும் ஒன்று;
 காய்ச்சிய ஈயமும் ஒன்று!'
இது எனக்கு மனப்பாடம். நான் விசனிப்பதெல்லாம் அகவை எண்பது கடந்தும் கவிஞர் வாலிக்கு அந்த நிட்காமிய ஞானம் ஏன் வாய்க்கவில்லை என்பதுதான். இத்தனை காவியங்களைப் படித்தும், படைத்தும் கூட மறைந்தவர்களைப் பற்றிய அவதூறுகளைப் பதிவு செய்யக்கூடாது என்கிற நனி நாகரிகம் அவருக்குத் தெரியவில்லையே?
இந்த வாரம் வாசகர்களிடம் நான் படித்ததைப் பகிர்ந்து கொள்ளாமல் எனது நெஞ்சக் குமுறலைப் பகிர்ந்து கொள்வதன் காரணம், கவிஞர் வாலி போலல்லாமல், அவர் இருக்கும்போதே அவரைப் பற்றிய எனது ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட வேண்டும் என்கிற எண்ணமும், சாவி சார் பற்றிய தவறான பதிவுக்கு அவரால் தயாரான பத்திரிகையாளன் என்கிற முறையில் பதிலளித்தாக வேண்டும் என்கிற குரு பக்தியும்தான் காரணம்.
கவிஞர் வாலி தன்னைப் பற்றித் தானே ஒரு கவியரங்கத்தில் எழுதிய கவிதை இது. நான் மிகவும் ரசிக்கும் கவிஞர் வாலியின் வரிகளில் இதுவும் ஒன்று -

மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்பு நோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக் கோழி!

(நன்றி தினமணி)




Saturday, July 28, 2012

சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றால் என்ன...




இப்போதெல்லாம் பரவலாக பல அரசியல்வாதிகள் சொல்வது..'சட்டம் தன் கடமையைச் செய்யும்' ..

அப்படியென்றால் என்ன...

சட்டம் தவறு செய்பவரை முதலில் கைது செய்யும்..

கைது செய்யப்பட்டவர்..ஜாமினில் வெளிவருவார்..

வழக்கு நடைபெறும் ..பல ஆண்டுகள்..சில நூறு வாய்தாக்களுடன்..

சம்பந்தப்பட்டவர் குற்றவாளி என தண்டனை வழங்கப்பட்டு...அவர் மேல் முறையீடு செய்ய சில மாதங்களையும் கொடுக்கும்..

மேல் கோர்ட்டில் குற்றவாளியாய் கீழ் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டவர்..மேல் முறியீடு செய்வார்..வழக்கு நடக்கும்..

இதில் சாதகமாய் தீர்ப்பு இல்லையெனில்..பெஞ்ச், உயர்நீதிமன்றம், உச்ச நீதி மன்றம் என வழக்கு தொடரும்  ஆண்டு கணக்காய்..

இதனிடையில் சம்பந்தப்பட்டவர் அமரர் ஆகியிருப்பார்..அல்லது காவல்துறை சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கவில்லை என வழக்கு தள்ளுபடி செய்யப்படும்..

சட்டம் தன் கடமையைச் செய்த திருப்தியில் அனைவரும் இருப்பர்..


Friday, July 27, 2012

தமிழ்ப்படத்தைப் பார்த்து ஹாலிவுட் படம்...




கமல்ஹாசனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து சத்தம் போடாமல் ஒரு அரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. தன்னை அப்போது கடுமையாக விமர்சித்த விமர்சகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில் இது என்று கமல்ஹாசன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரில்லர் படம்தான் ஆளவந்தான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம். ஆனால் படம் முழுக்க கமல்ஹாசனின் உத்திகள், யோசனைகள், முயற்சிகளே தலை தூக்கியிருந்தன. கமல்ஹாசன் வில்லன் மற்றும் கதாநாயகன் வேடத்தில் நடித்திருந்தார். அதிலும் வில்லனாக நடிக்க அவர் தனது உடம்பை மிகப் பெரிய அளவில் எடை கூட்டியிருந்தார். இந்த எடை கூட்டல் முயற்சிகள் அவரது உடல் நலனில் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூட அப்போது பேசப்பட்டது.
ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு சங்கர் ஈசான் லாய் இசையமைத்திருந்தனர். பின்னணி இசையை மகேஷ் மகாதேவன் கவனித்திருந்தார்.
இப்படத்தின் கதை கமல்ஹாசனுடையது. 1984ம் ஆண்டு அவர் எழுதிய தாயம் கதையை அடிப்படையாக வைத்துத்தான் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருந்தார் கமல்ஹாசன்.
இப்படத்தில் வில்லனாக வரும் கமல்ஹாசனின் சண்டைக் காட்சிகள் வித்தியாசமான முறையில் அதாவது கிராபிக்ஸில் எடுக்கப்பட்டிருந்தன. அது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. அதேசமயம், இப்படம் பல விமர்சனங்களையும் கூட சந்தித்தது. ஆனால் அதுகுறித்து அப்போதும் சரி, பிறகும் சரி கமல்ஹாசன் அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் ஆளவந்தான் படத்திற்கு ஹாலிவுட்டிலிருந்து ஒரு அரிய ஊக்கம் கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தில் வில்லனின் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பை பார்த்து அசந்து போன ஹாலிவுட் டைரக்டர் குவென்டைன் டரன்டினோ தனது கில் பில் (Kill bill) திரைப்பட வரிசையில் காட்சிகளை அமைத்தாராம்.
இந்தத் திரைப்படம் 2003ம் ஆண்டு உருவானதாகும். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பதிப்பை 2003லும், இரண்டாம் பாகத்தை 2004ம் ஆண்டிலும் வெளியிட்டார் குவென்டைன். தனது 3வது பாகத்தை 2014ல் வெளியிடவுள்ளார்
ஆளவந்தான் படத்தில் இடம் பெற்ற அந்த வித்தியாசமான கிராபிக்ஸில் அமைந்த சண்டைக் காட்சிகள் புதிய முயற்சி என்று புகழாரம் சூட்டிய அவர் அதே பாணியில் தனது படத்திலும் காட்சிகளை அமைத்துள்ளாராம். இதற்காக ஆளவந்தான் படத்தையும், கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளாராம்.
சமீபத்தில் மும்பை வந்திருந்த அவர் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை சந்தித்துப் பேசியபோது இதுகுறித்துக் கூறினாராம் குவன்டைன்.
குவன்டைன் ஹாலிவுட்டில், பல்ப் பிக்ஷன், இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், ரிசர்வாயர் டாக்ஸ் உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.
ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்து ஹாலிவுட்டில் காட்சி அமைக்கப்பட்டிருப்பது குறித்து கமல்ஹாசன் கூறுகையில், ஆளவந்தான் வந்தபோது அதற்கு பல விமர்சனங்கள், சலசலப்புகள். விநோதமாக பார்த்தனர், பேசினர். எனது சுய மேதமையை வெளிப்படுத்த முயற்சித்துள்ளதாக விமர்சித்தனர். ஆனால் இப்போது திறமையான ஒரு ஹாலிவுட் டைரக்டரே இந்த உத்திக்கு அங்கீகாரம் அளித்துள்ளதால், இனி மேலாவது விமர்சகர்கள் என்னுடைய படங்களில் நான் மேற்கொண்ட முயற்சிகளை சரிவர புரி்ந்து கொள்வார்கள் என கருதுகிறேன் என்று கூறினார்.
ஆளவந்தானால் தான் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்து விட்டதாக பின்னர் இப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு புலம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(தகவல்-தட்ஸ்தமிழ்)


Thursday, July 26, 2012

உயர்நீதிமன்றம் தானாகவே முன் வந்து எடுத்துக்கொண்ட வழக்கு...





 ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.

இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இன்று வழக்காக எடுத்துக் கொண்டது. இன்று காலை நீதிமன்றம் கூடியதும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் நேரில் ஆஜரானார். அவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, 20 நாட்களுக்கு முன்புதான் அந்தப் பேருந்துக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் எப்சி கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி எப்சி அளித்தார்கள். யார் இதைக் கொடுத்தது. இதற்குப் பொறுப்பான அத்தனை ஆர்டிஓ அலுவலக அதிகாரிகளும் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று உத்தரவிட்டு நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் யார் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் கமுக்கமாக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் உயர்நீதிமன்றமே இதை தானாக முன்வந்து விசாரிக்க ஆரம்பித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Monday, July 23, 2012

பாக்கியராஜ் பதில்...




பாக்யா பத்திரிகை ஜூலை 27 ஆம் நாள் இதழில் கேள்வி பதில் பகுதியில் பாக்கிராஜின் இந்த பதில் எனக்கு பிடித்திருந்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஒரு உபயோகமான சொல்... இது கேள்வி..அதற்கான அவர் பதில்..

'விழித்திரு' ஏன் இதற்கு முக்க்யத்துவம் என்பது கீழே உள்ள விஷயத்தை படிச்சா புரியும்..

கிரேக்க நாட்டுச் சிற்பி ஒருவர், மனிதனிடம் வந்து போகும்  'சந்தர்ப்பம்' பற்றி வித்தியாசமாக படம் பிடித்துக் காட்டுகிறார். அதுதான் சந்தர்ப்பம் என்னும் சிலை.அந்த சிலைக்கு இரண்டு சிறக்கைகள் இருக்கும் முன்னந்தலையில் கூந்தலும், பின்னந்தலை வழுக்கையுமாக இருக்கும்.

'உனக்கு இறக்கை எதற்கு?'

நான் மக்களிடம் பறந்து செல்வதற்காக'

;முன்னந்தலையில் கூந்தல் எதற்கு?'

'மக்கள் என்னைப் பற்றி கெட்டியாக பிடித்துக் கொள்வதற்காக!'

'ஏன் பெருவிரலில் நிற்கிறாய்?'

"சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாதோரிடமிருந்து கண நேரத்தில் பறந்தோடி விடுவதற்காக!'

'பின்னந்தலை ஏன் வழுக்கையாக இருக்கிறது?'

"சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் என்னை மீண்டும் பற்றிப் பிடித்துக் கொள்ளாதிருப்பதற்காக"

சிற்பியின் கற்பனை எவ்வளவு அற்புதமானது பாருங்க..இது மூலமா நல்லதோர் பாடத்தை உலகுக்கு உணர்த்துகிறார்.ஒருமுறை சந்தர்ப்பம் நழுவி விட்டால், அதே சந்தர்ப்பம் மீண்டும் வரவே செய்யாது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்?


Friday, July 20, 2012

ஜாமீனுக்கே 100 கோடி லஞ்சமா..? அம்மாடி..





ஹைதராபா‌த்தில் சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்பாக கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்தனன் ரெட்டி, தனக்கு ஜாமீன் வழங்குவதற்காக நீதிபதிக்கு ரூ.100 கோடி லஞ்சம் தர முன்வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி பட்டாபிராமராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மற்றொரு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதியான லட்சுமி நரசிம்ம ராவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பின், அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளார்.

ஊழல் தடுப்புப் பிரிவு போலீசா‌ர் நடத்திய விசாரணையில், ஜனார்தன ரெட்டியின் உறவினரான தசரதராமி ரெட்டி, சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதிக்கு லஞ்சம் தருவதற்கு ஏற்பாடு செய்யும்படியும், ஜாமீன் வழங்க ஒப்புக்கொண்டால் ரூ.100 கோடி தருவதற்கு தயாராக உள்ளதாகத் தன்னிடம் கூறியதாக லட்சுமி நரசிம்ம ராவ் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.