Tuesday, November 22, 2011

அன்னா ஹசாரேயும்..குடிமகன்களும்..




நம்மை ஒருவர் மதிக்கிறார் என்று தெரிந்தால் அவர்களிடம் மேலும் மேலும் பேசி மதிப்பை இழப்பவர்கள் நம் மக்கள்.இது அனைவருக்கும் பொருந்தும்.

அப்படி ஒரு நிலைக்கு இவர் வந்துள்ளாரோ..? என்று தோன்றுகிறது.

மது அருந்துபவர்கள் அனைவரையும் தெரு விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும்..என்றுள்ளார் அன்னா ..இரண்டாம் மஹாத்மா என சிலரால் அழைக்கப்படுபவர்..

அவரது கிராமத்தில் குடிகாரர்களை இப்படித்தான் தண்டித்து திருத்தியதாகக் கூறியுள்ளார்.இது தவறிழைக்கும் குழந்தைகளை பெற்றோர் அடித்துத் திருத்துவது போலத்தான் என்றுள்ளார். இன்று அம்மா..அப்பாக்கள் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பதை இவர் அறியவில்லையா?

இன்று அரசுக்கு வருமானம் வரும் துறையாக உள்ளது மது. அதைசரியென்று சொல்லவில்லை.மது அருந்துவது நல்ல பழக்கம் இல்லைதான்.உடலுக்கு தீங்கு விளைவிப்பதுதான்.அதற்கு குடிமகன்களை குறை சொல்லி என்ன பயன்.

தொழிற்சாலைகளையும்..கடைகளையும் திறந்துவிட்ட அரசைக் கண்டிக்கட்டும்..அதற்கான போராட்டமும் நடத்தட்டும்.அதை விடுத்து நுகர்வோரை ஏன் குறை சொல்ல வேண்டும்.

அரசாங்கத்திற்கு பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் இதை எந்த ஒரு அரசும் தடைசெய்யாது..அப்படி அரசு ஒரு முடிவெடுக்குமேயாயின் குடிமகன்கள் ஏன் குடிக்கப் போகிறார்கள்.ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை இழப்பவர் இருப்பார்களா??

வேண்டாத விஷயங்களில் அன்னா தலையிடுவாராயின்..அவரது ஊழல் ஒழிப்பு போராட்டத்திற்கான ஆதரவையும் அவர் கொஞ்சம்..கொஞ்சமாக இழக்க நேரும்.

டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.


அது குறித்து தட்ஸ்தமிழுக்கு வைகோ அளித்த பேட்டி:

http://tamil.oneindia.in/news/2011/11/22/tamilnadu-vaiko-s-special-interview-on-dam-99-aid0136.html


Monday, November 21, 2011

சபாநாயகர் வாடகை பாக்கி ரூ. 1.98 கோடி





லோக்சபா சபாநாயகர் மீரா குமார் குடும்பத்தினர் கடந்த 1986ம் ஆண்டு முதல் வசித்து வரும் பங்களாவுக்கான வாடகை பாக்கியாக 1 கோடியே 98 லட்சத்து 22 ஆயிரத்து 723 ரூபாய் தர வேண்டும் என்று மத்திய நகர்ப்புற அமைச்சகத்தின், எஸ்டேட்ஸ் பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கு பில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது கூறியுள்ளது.

பாபு ஜெகஜீவன் ராம் மறைவுக்குப் பின்னர் அவரது மகளான மீரா குமார் மற்றும் ஜெகஜீவன் ராமின் குடும்பத்தினர், கடந்த 1986ம் ஆண்டு கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள 6ம் எண் பங்களாவில் தொடர்ந்து வசித்து வந்தனர். அன்று முதல் அவர்கள் இதுவரை வாடகை பாக்கியாக ரூ. 1,98,22,723 வைத்துள்ளனர். இதுதொடர்பாக பில் தயாரிக்கப்பட்டு மீரா குமாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்..அவர்கள் குடும்ப வட்டாரத்தில் அந்த வீட்டை எப்போதோ காலி செய்து விட்டதாகவும் , அவ் வீட்டிற்கு இப்போது குடிநீர்,கழிவு நீர் இணைப்புக் கூட கிடையாது என்றும் தெரிவிக்கப் பட்டது

டிஸ்கி- பாபு ஜெக ஜீவன் ராம் வருமான வரி பாக்கியாக 10 லட்சம் வைத்திருந்தார்.மத்திய அமைச்சராய் இருந்த அவரிடம் இது பற்றி அப்போது கேட்டபோது தான் மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.


Sunday, November 20, 2011

மகேந்திரனும்..முள்ளும் மலரும்..




சாதாரணமாக நான் அதிகம் டீவி பார்ப்பதில்லை..ஆனால் சென்ற சனிக்கிழமை ரிமோட்டை வைத்துக் கொண்டு இந்தச் சேனல்..அந்தச் சேனல் என நான் தாவிக்கொண்டிருந்த போது..பாலிமெரில் மதியம் இரண்டுமணிக்கு முள்ளும் மலரும் படம் ஒலி/ஒளி பரப்பானது.

பார்த்து நீண்ட நாட்கள் ஆனதால்..அதைப் பார்க்கத் தீர்மானித்தேன்..

அடடா..இன்றும் பார்க்க படம் எவ்வளவு அருமையாக இருக்கிறது..ஃபடாபட், ஷோபா, ரஜினி மூவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளார்கள்..என்றால் இளையராஜாவின் இசை மனதை மயிலிறகால் வருடிக் கொடுத்தாற்போல இருந்தது..ராஜா ராஜாதான்.(நித்தம் நித்தம்,ராமன் ஆண்டால் என்ன< அடிப் பெண்ணே..அப்புறம் தி கிரேட்'செந்தாழம் பூவில்)

 கல்கி வெள்ளிவிழா ஆண்டில்..உமாசந்திரன் எழுதி பரிசு பெற்ற நாவல்தான் முள்ளும் மலரும்.அதை அருமையாய் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார் மகேந்திரன்.

திரையுலகம் இந்த இயக்குனரை சரியாக உபயோகித்துக் கொள்ள வில்லையோ.

எம்.ஜி.ஆர்., அவர்கள் இவரிடம் தான் பொன்னியின் செல்வன் படம் எடுக்கப் போவதாகக் கூறி அதற்கான திரைக்கதை,வசனம் எழுதச் சொன்னார்.ஆனால் ஏனோ எம்ஜியார் அதை படமாக எடுக்கவில்லை.

பின்னர் மகேந்திரன், நாம் மூவர்,சபாஷ் தம்பி, பணக்காரப் பிள்ளை ஆகிய படங்களுக்குக் கதை எழுதினார்.பின் முக்தா ஃபிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நிறைகுடம்..இதற்கான கதை மகேந்திரன்தான்.திரைக்கதை,வசனம் சோ. மகேந்திரன் பின்னர் சோ விடம் படத்தில் கிளைமாக்ஸ் நாசம் பண்ணிவிட்டீர்கள் என்றார்.மகேந்திரனின் இந்த நேரிடையான பேச்சு சோ வைக் கவர..தனது துக்ளக் பத்திரிகையில் இவரை உதவி ஆசிரியர் ஆக்கினார்.துக்ளக்கில் சினிமா விமரிசனங்களை இவர் எழுதினார்.பின்னர் தங்கப்பதக்கம் இவரது கதை வசனத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.ஆனாலும் தான் நினைத்த சினிமா இதுவல்ல என்று மகேந்திரன் நினைத்தார்.

இந்நிலையில் வேணு செட்டியார் முள்ளும் மலரும் படத்தை எடுக்க நினைத்தார்.அதற்கு மகேந்திரன் போட்ட ஒரே நிபந்தனை..படத்தை என் இஷ்டத்திற்கு எடுக்க விட வேண்டும் என்றுதான்.செட்டியார் இப்படத்தை இன்னொரு பாசமலர் என நினைத்து இதற்கு,'ரஜினி சரிப்படுவாரா?' என்று கேட்டாராம்.'ரஜினியின் திறமை எனக்குத்தான் தெரியும்' என்றார் மகேந்திரன்.ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் இந்தப் படம் ஓடாது என இதில் அக்கறை காட்டவில்லையாம்.300 அடி காட்சி எடுக்க கமல்தான் உதவினாராம்.

படம் வந்ததும்..முதல் இரண்டுவாரம் சைலண்டாக இருந்தது.தயாரிப்பு தரத்திலும் விளம்பரம் இல்லை.ஆனால் இரண்டு வாரத்தில் பார்த்த மக்கள் நல்ல படம் என விமரிசிக்க படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பின்னர் மகேந்திரனின் படங்கள், 'உதிரிப் பூக்கள்' பூட்டாத பூட்டுகள்' ஆகியவை வந்து அவருக்கு தமிழ்த் திரையுலகில் அற்புத இயக்குநர்களில் ஒருவர் என்னும் இடத்தை அளித்தது.

முள்ளும் மலரும் பற்றி போட்டு விட்டு படத்தை விமரிசக்கவில்லையே என்கிறீர்களா...

முதல் காரணம் இப்படத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள்..

இன்னொரு காரணம் பாதாம் அல்வா நன்றாக இருக்கிறது என்றால்..எப்படி..அதை சுவைத்துப் பார்த்தால் தானே தெரியும்..அதுபோலத்தான் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும்.


Saturday, November 19, 2011

கொலையாளி கிடைப்பானா...ஜோசியம் கேட்ட போலீசார்




சங்கரன் கோவில், திருவேங்கடம் அருகே நடுவப்பட்டி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளி ராமராஜ் என்பவர் கடந்த மாதம் 25 ஆம் தேதி நள்ளிரவு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.திருவேங்கடம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளி யார் என்று விசாரணை மேற்கொண்டனர்.ஆனால் அவர்கள் பற்றி துப்பு ஏதும் கிடைக்காததால் எஸ்பி விஜயேந்தி பிதாரி உத்தரவின் பேரில் 6 தனிப்படை அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் வங்கி செயலாளர் மற்றும் ஊழியர்கள், ஊர் பிரமுகர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் எவ்வித துப்பும் துலங்கவில்லை. இதையடுத்து தனிப்படையில் உள்ள சில போலீசார் எட்டயபுரம் அருகே கீழஈரல் பகுதியில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் குறிசொல்லும் சோதிடர் ஒருவரை சந்தித்து இந்த கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் சிக்குவார்களா என்று கேட்டுள்ளனர்.

இது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை மட்டுமல்லாமல் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திறமையாக புலனாய்வு செய்து குற்றவாளியைப் பிடிக்காமல் இப்படி குறி கேட்டு போனால் எப்படி என்று பொதுமக்கள் புலம்புகின்றனராம்.


Friday, November 18, 2011

பேருந்து கட்டண உயர்வுக்கு கலைஞரே காரணம் - மக்கள்




தமிழகத்தில் பேருந்து கட்டணம், பால்விலை மற்றும் மின் கட்டணங்கள் ஒரே சமயத்தில் ஏற்றப்பற்றுள்ளது போல இதுவரை நடந்ததில்லை எனவும், இது சம்பந்தமாக ஜெ புது வரலாறு படைத்துள்ளதாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்..பேருந்து கட்டணங்கள் ஏற..முழுக் காரணம் கலைஞரே என மக்கள் கருதுகின்றனர்.ஒரு சாரார் கலைஞர் மீது அதிருப்தியையும் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில்,'கலைஞர் ., அவரது ஆட்சியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை..அப்படி அவர் உயர்த்தியிருந்தால்..கலைஞர் செய்த செயல் அது என ஜெ இன்று அந்த உயர்வை திரும்பப் பெற்றிருப்பார் எனக் கூறுகின்றனர்.

ஆகவே இந்த ஏற்றத்திற்கு..முழு பொறுப்பும் கலைஞரே சேரும் என்கின்றனர் மக்கள்.


Thursday, November 17, 2011

பஸ் கட்டண உயர்வு நியாயமானதா..?




பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.வெளியூர் செல்லும் பேருந்துகளை விடுத்து..மக்கள் தினசரி வேலைக்குப் போக உபயோகிக்கும் பஸ் கட்டண உயர்வு நியாயமா..என்று பார்ப்போமாயின்....

நியாயம் என்றே தோன்றுகிறது..

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு..இக்கட்டண உயர்வு வருகிறது.2001ல் முதல் மூன்று கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.அதன் பிறகு பல முறை டீசல் விலை உயர்வு, ஊழியர்கள் ஊதியம், போனஸ், உதிரி பாகங்களின் உயர்வு என பல பல மடங்குகள் உயர்ந்து விட்டன.

அன்று ஆட்டோ குறைந்த பட்சம் அதே தூரத்திற்கு இருபது ரூபாய் கேட்டார்கள்..இன்று அதே தொலைவு 40 முதல் ஐம்பது ரூபாய் ஆகிறது.

பணவீக்கத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் உள்ளூர் கட்டண உயர்வு நியாயமானதாகவேத் தோன்றுகிறது..

ஆனால் என்ன..சாதாரணக் கட்டணப் பேருந்தைக் குறைத்து..எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் என அதே தடத்தில் பேருந்துகளை அதிகம் இயக்கி..மக்களை ஏமாற்றக் கூடாது..

அதை செய்யாவிடில்..இந்த ஏற்றம் ஒப்புக்கொள்ள வேண்டிய ஒன்றே..

பால் விலை ஏற்றம்..கொஞ்சமும் ஏற்க முடியாது..

அனைத்து மக்களுக்கும்..குறிப்பாக ஏழைகளுக்கு வாங்கும் நிலையில் உள்ள ஒரே ஊட்டச்சத்து பால் மட்டுமே..ஏழைக்குழந்தைகளும் ஹார்லிக்ஸ், காம்ப்ளான் என் ஆசைப்படமுடியாமல்..வெறும் பால் மட்டுமே குடிக்கக் கிடத்ததே என்னும் திருப்தியுள்ள நிலையில்..அதன் அநியாய ஏற்றம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

மேலும்..அது அட்டைதாரர்களுக்கு 6 ரூபாய்க்கு மேல் ஏறியுள்ளது.பெரும்பாலோர் மாதம் மொத்த பணத்தைக் கொடுத்து அட்டை வாங்க முடியாதவர்கள்.மேலும் ஆவின் அட்டை வழங்குவதை வேறு நிறுத்திவிட்டது.இந்நிலையில் வெளியில் அட்டை இல்லாதோர் 17 விலையுள்ள பாலை 22 ரூபாய்க்கு வாங்குகிறார்கள்.அவர்கள் இனி 28 முதல் முப்பது வரை கொடுக்க வேண்டியிருக்கும்..இது இன்று எல்லா அத்தியாவசியப் பொருள்களும் ஏறியுள்ள நிலையில் முடியாத காரியம்.மேலும் கொள்முதல் விலையை 2 ரூபாய் ஏற்றிவிட்டு மக்கள் தலையில் 6 ரூபாய் ஏற்றுவது எந்த வகையில் நியாயம்.

ஆகவே அரசு உடனடியாக பால் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்.தேவையானால்..குடிமகன்களிடமிருந்து சற்று அதிகம் பெற்று, அதை ஆவினுக்கு மானியமாக அரசு வழங்கலாம்.

இனி மின் உயர்வு..

இல்லாத ஒன்றிற்கு ஏற்றம்.தவிர்த்து சென்ற வருடம் தான் மின்கட்டணம் உயர்ந்துள்ளது.

மின்வாரியத்தின் வருவாய், ஊழியர் சம்பளம்.,உபகரணங்கள் விலை.ஆகியவற்றை ஆய்வு செய்து..சேமிக்க வேண்டியவற்றை சேமித்து..ஊழலை ஒழித்து, திருட்டு மின்சாரம் எடுப்பதைத் தடுத்து நிறுத்தினாலே ஓரளவு நஷ்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

இலவச மிக்சி,கிரைண்டர்,லேப்டாப்,மலைப்பிரதேசங்களில் இண்டக்சன் அடுப்பு..இதையெல்லாம் இலவசமாகக் கொடுத்துவிட்டு..மின் உயர்வையும் கொண்டுவந்தால் என்ன அர்த்தம்.

பெட்ரோல், கேஸ் ஆகியவற்றிற்கு மானியம் வழங்குவது போல மின் தேவைக்கும்..ஒரு குறிப்பிட்ட அளவிற்குள் இருந்தால் (மாதம் 200 யூனிட் என்பது போல) அவர்களுக்கு உயர்வு கூடாது.

மேலும்..இதை நிரந்தரமாகத் தீர்க்க நமது மானிலம் தன்னிறைவு அடைய வேண்டும்.வேறு மாநிலங்களிலிருந்து அதிக விலைக்கு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.அதற்கான முயற்சியில் அரசு இறங்கட்டும்.

விலையில்லா அரிசியை விலை கொடுத்து வாங்குபவர்களுக்கும் வழங்கி..அவர்கள் அதை வாங்காததால்..அதை கள்ளச் சந்தையில் கடத்தும் சமூக விரோதச் செயல் நிறுத்தப் பட வேண்டும்.உண்மைத் தேவை உள்ள அட்டைதாரர்களுக்கே இலவச அரிசி வழங்க வேண்டும்.

இதுபோன்றவற்றில் அரசு கவனம் செலுத்தினால்..அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை ஏற்றும் அவசியம் ஏற்படாது.


டிஸ்கி- 42 சதவிகிதம் மின் திருட்டு இந்தியாவில் நடக்கிறது ..இது செய்தி

அழகிரி பதவி விலக வேண்டும்...




இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன்..செய்தியாளர்களிடம் கூறியதாவது..

கூடங்குளம் அணு உலையை கட்டியது மத்திய அரசு.அதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தது மாநில அரசு.அதை நடத்துவதா...வேண்டாமா என்பதை இந்த இரு அரசுகளும் முடிவு செய்யட்டும்.ஆனால் மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டியது இவ்வரசுகளின் கடமையாகும்.

தமிழக மீனவர் பிரச்னைகளில் மத்திய அரசு தீர்வு காணவில்லை. இந்த அரசில் திமுகவும் கூட்டாக உள்ளது. இதை எதிர்க்க வேண்டியது நமது அரசியல் கடமை உள்ளது. எனவே இது குறித்து பரிசீலனை செய்ய திருவாரூரில் நவம்பர் 24 முதல் 26ம் தேதி வரை கட்சியின் கூட்டம் நடைபெறும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் நிலை என்பது இலங்கை, இந்தியா மீது மறைமுக போர் தொடுத்துள்ளதைப் போன்றது, என்றார்.

மேலும்..உர விலை உயர்வுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

உர விலையை உயர்த்தி கேபினட் அமைச்சரவை முடிவு செய்த பிறகு, அந்த துறையின் அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். கேபினட் அமைச்சரவை தான் உர நிறுவனங்கள் விலைகளை உயர்த்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்தது. இது கூட தெரியாமல் அமைச்சர் மு.க.அழகிரி இருக்கின்றார். இதற்காக அவர் தனது பதவியை விட்டு விலக வேண்டும்.

Wednesday, November 16, 2011

அப்துல் கலாமுக்கு மக்கள் தொண்டனின் திறந்த மடல்!







அறிவியல் மாமேதையும், முன்னாள் குடியரசுத் தலைவருமான மேதகு அப்துல் கலாம் அவர்களே,
பொக்ரானில் அணுகுண்டு சோதனை வெடிப்பு நடத்தப்படுவதற்கு முன்நின்றவர் நீங்கள். அதன் மூலம் அணுயுகத்தில் இந்தியா அடியெடுத்து வைப்பதற்குக் காரணமாக இருந்தீர்கள். உலகின் அணுவிஞ்ஞானிகளில் தலைசிறந்தவராகவும் நீங்கள் திகழ்கிறீர்கள்.
அணுவிஞ்ஞானியான நீங்கள் இந்தியாவின் குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றபோது பெருமிதம்கொண்ட தமிழர்களில் நானும் ஒருவன்.
கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நீங்கள் தலையிட முடிவு செய்தபோது அந்தப் பகுதி மக்களின் உணர்வுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு நல்லதொரு முடிவுக்கு வருவீர்கள் என நம்பினோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சென்று பார்வையிட்டு, அதன் பிறகு அதனருகிலேயே போராடிக்கொண்டிருக்கும் மக்களைச் சந்திக்காமல் நாளிதழில் நான்கு பக்கம் வரும் அளவுக்கு நீண்டதொரு அறிக்கையைக் கொடுத்துள்ளீர்கள்.
கூடங்குளத்தைப் பார்வையிட்ட அன்று இரவோடு இரவாக இந்த அறிக்கையை எழுதி மறுநாள் வெளியிட்டிருக்க முடியாது. நீங்கள் கூடங்குளம் வருவதற்கு முன்னாலே அறிக்கையை எழுதிவிட்டு அதற்குப் பின்னால் கூடங்குளம் அணு உலையைச் சோதனை செய்ததில் ஏதாவது அர்த்தம் உண்டா?
அந்த அறிக்கையில் முதலாவதாக மக்களின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் நியாயமான சந்தேகங்களை வகைப்படுத்தி, அந்தச் சந்தேகங்களை நிவர்த்தி செய்வது மிகவும் முக்கியம் என குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் குறிப்பிட்டபடி செய்தீர்களா? கூடங்குளத்திலும் சுற்றிலும் வசிக்கும் மக்களைச் சந்திக்காமல், அவர்களின் உணர்வுகளையும் சந்தேகங்களையும் எப்படிப் புரிந்துகொண்டீர்கள்?
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கை விபத்துகளால் ஒரு சிறிதும் பாதிக்கப்படாத அளவுக்கு கூடங்குளம் அணு உலையில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பெருமையுடன் உறுதி தந்திருக்கிறீர்கள். அவ்வாறு சொல்லும்போதுகூட கூடங்குளத்தில் மிகப்பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று கூறியிருக்கிறீர்களே தவிர, பூகம்பம் வரவே வராது என அறுதியிட்டு உறுதிதர உங்களால் இயலவில்லையே ஏன்?
இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி அணு உலை அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் 30 கி.மீ. சுற்றளவில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடாது. அப்படி 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் அணு உலையை அமைக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விதி உங்களுக்குத் தெரியாமல் வகுக்கப்பட்டிருக்க முடியாது.
கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் 30 கி.மீ. சுற்றளவில் 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வாழ்கிறார்கள். இந்திய அரசின் ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு எதிராகக் கூடங்குளம் அணுமின் நிலையம் நிறுவப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த விதிமுறையை ஆணையம் வகுத்ததற்கே காரணம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக மக்கள் 30 கி.மீ. அப்பால் தப்பிச் செல்வதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான். அணு உலையில் விபத்தே ஏற்படாது என்பது உண்மையானால் இந்த விதியை வகுக்க வேண்டிய அவசியம் என்ன?
அணு உலையில் உபயோகப்படுத்தப்பட்ட திடக்கழிவுகளைப் பாதுகாப்பது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறீர்கள். நீங்கள் கூறாமல்விட்ட ஓர் உண்மை என்னவென்றால் கூடங்குளம் அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பதற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதை அணு உலையை நிறுவுவதற்கு 17 ஆயிரம் கோடிதான் முதலீடு, ஆனால், அதன் ஆயுள்காலம் முடிந்தபிறகு புதைப்பதற்கு 20 ஆயிரம் கோடி செலவாகும். இந்தச் செலவுகளையெல்லாம் மொத்தமாகக் கூட்டினால் மின்சார உற்பத்திச் செலவு அணு உலையில் மிகமிக அதிகம். அணு மின்சாரம் மலிவாகக் கிடைக்கிறது என்கிற தங்கள் கூற்று அடிபட்டுப் போகிறது.
இந்தியா 2030-ம் ஆண்டுக்குள் எரிசக்தி சுதந்திரம் பெற வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஆண்டுக்கு 5 சதவீத வளர்ச்சியை நாம் எட்டினால்கூட 2030-ம் ஆண்டுக்குள் 4 லட்சம் மெகாவாட்தான் உற்பத்தி
செய்ய இயலும். ஆனாலும் இந்த 4 லட்சம் மெகாவாட்டில் 50 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை அணுமின் உலைகள் மூலம் மட்டுமே பெற முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் இன்றைக்கு நம் நாட்டில் அணுசக்தியின் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் 5 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. எனவே, மீதமுள்ள 45 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தைப் பெறுவதற்கு அணுசக்தியைத் தவிர, வேறு வழியில்லை என்றும் கூறியிருக்கிறீர்கள்.
இந்தியாவில் அணு ஆற்றல் துறையின்கீழ் வரும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுக்கான அமைப்பு, நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் 23 விழுக்காடு சேமிக்க முடியும் எனக் கூறியுள்ளதை நீங்கள் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை? திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட பல பெரிய தொழில் நிறுவனங்கள், அதன் மூலம் பெருமளவு மின்சேமிப்பைச் செய்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த இந்த நிறுவனங்கள் 2,194 மெகாவாட் அளவு மின்சாரத்தைச் சேமித்திருக்கின்றன என்ற உண்மையைக் கூறுவதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்.
கூடங்குளம் அணுமின் நிலைய மின்சக்தித் திறனைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தித் திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர் என மின்னணுவியல் துறை பேராசிரியர் முனைவர் வே. பிரகாஷ் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 2011 முதல் 2015-க்குள் 19 ஆயிரம் மெகாவாட் மின்சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறை.
இந்தியாவில் கிடைக்கும் தோரியத்தைப் பயன்படுத்தி இந்திய அணுசக்தித் துறையில் மின் உற்பத்தியில் தன்னிறைவை அடைய முடியும் என்று கூறிவிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பம் உலகில் எங்கும் இல்லை. அப்படிப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, எதிர்காலத்தில் இதை நாம் பயன்படுத்த முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
யுரேனியத்தைக் காட்டிலும் 15 சதவீதம் அதிகமாக வெப்பம் கடத்தும் ஆற்றல் கொண்டது தோரியம் என்றும் குறைந்த கதிரியக்கக் கழிவைக் கொடுக்கக்கூடியது தோரியம் என்றும் அணு ஆயுதம் செய்ய இயலாத தோரியம் என்றும் நீங்களே உங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.
அப்படியானால் யுரேனியத்தின் கதிரியக்கம் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். எனவேதான் தோரியத்தைப் பயன்படுத்தி மின்உற்பத்தி செய்வது பற்றிய ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை, வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது எனக் கூறும் நீங்கள் அந்த ஆராய்ச்சி முற்றுப் பெறும்வரை பொறுத்திருக்கக்கூடாதா? அதற்குள் அவசரப்பட்டு ஆபத்தான கதிரியக்கத்தைப் பரப்பும் யுரேனியத்தைப் பயன்படுத்தி கூடங்குளம் அணு உலையைச் செயல்பட வைப்பதற்கு அவசரப்படுவது ஏன்?
கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களுக்கு ரூ. 200 கோடி செலவில் "புரா' திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதாவது நகர்ப்புற வசதிகளை கிராமப்புறங்களில் ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டமாகும்.
1988-ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் உலை குறித்து இந்தியாவுக்கும் சோவியத் நாட்டுக்குமிடையே உடன்பாடு கையெழுத்தாயிற்று. 22 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. கூடங்குளம் பகுதி மக்கள் மீது 22 ஆண்டுகாலமாக ஏற்படாத கரிசனம் மத்திய அரசுக்கு இப்போது திடீரென ஏற்படுவானேன்?
22 ஆண்டுகாலத்துக்கு மேலாக வறட்சியான அந்தப் பகுதியின் வளர்ச்சியிலோ, ஏழ்மை நிறைந்த அந்த மக்களின் முன்னேற்றத்திலோ, இந்திய அரசுக்குக் கொஞ்சமும் கவலை ஏற்படவில்லை. அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம் மக்களைச் சரிக்கட்டத்தானே இந்தப் "புரா' திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது?
அணு சக்தி என்பது இறைவன் மனித குலத்துக்குக் கொடுத்தது. அதை வரம் ஆக்குவதும் சாபம் ஆக்குவதும் மனித குலத்தின் கையில்தான் உள்ளது. எனவே, கூடங்குளத்தின் மூலமும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ள அணுமின் நிலையங்களின் மூலமும் உற்பத்தியாகும் அணு மின்சாரம் கண்டிப்பாக நமக்குத் தேவை என உங்கள் அறிக்கையில் அழுத்தம் திருத்தமாக வற்புறுத்தி இருக்கிறீர்கள்.
ஆனால், இந்திய அரசின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணன் கைக்கா, நரோரா, தாராபூர், கல்பாக்கம் மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள அணு உலைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ ஊழியர்களின் கவனக்குறைவினாலேயோ அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு கதிர்வீச்சு அதிக அளவில் வெளிப்பட்டு உள்ளது என்றும், கதிர்வீச்சுக்கு உள்ளான கடினநீர் வெளியேறி சுற்றுச்சூழலில் கலந்துள்ளது என்றும் பகிரங்கமாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்திய அரசிடமிருந்தோ அணுசக்தி ஆணையத்திடமிருந்தோ உங்களிடமிருந்தோ அவருக்கு இதுவரை எத்தகைய பதிலும் கூறப்படவில்லையே அது ஏன்?
இனி தமிழ்நாட்டின் மின் பற்றாக்குறைப் பிரச்னைக்கு வருவோம். தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்லவேண்டுமானால் அதற்கு அவசியமான கட்டமைப்பு மின்சாரம் ஆகும். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் 2,000 மெகாவாட் மின் உற்பத்தி, இன்னும் சில ஆண்டுகளில் 4,000 மெகாவாட் மின்உற்பத்தி அணு மின்சாரம் மூலம் நடைபெற இருக்கிறது என்பது தமிழகத்துக்கு மிகப்பெரிய செய்தியாகும். கிட்டத்தட்ட 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு திருநெல்வேலி மாவட்டத்துக்கு வர வாய்ப்புள்ளது. இந்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 50 சதவீத மின்சாரம் தமிழகத்துக்குக் கிடைக்க இருக்கிறது எனவும் தமிழக மக்கள் நாவில் தேனைத் தடவ முயற்சி செய்திருக்கிறீர்கள்.
உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவை அளித்த தீர்ப்புகளுக்குப் பின்னாலும் காவிரி நீரைத் தமிழகத்துக்குத் தர மறுக்கும் கர்நாடகத்துக்கும், முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளத்துக்கும், பாலாற்றை வழிமறிக்கும் ஆந்திரத்துக்கும் கூடங்குளம் மின்சாரத்தில் பாதி அளிக்கப்பட இருக்கிறது.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியாகப் போகும் மின்சாரத்தில்
50 % மட்டுமே தமிழகத்துக்கு அளிக்கப்படும் என்பதை பெரிய வாய்ப்புப்போல கூறியிருக்கிறீர்கள். மீதமுள்ள மின்சாரம் பிற தென்மாநிலங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஆனால், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதன் விளைவாக உருவாகும் அபாயம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இது என்ன நியாயம்?
ஏற்கெனவே நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்த மூன்று அண்டை மாநிலங்களுக்கும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 26 கோடி யூனிட் மின்சாரம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறை நாள் ஒன்றுக்கு 22 கோடி யூனிட்தான் ஆகும் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுமையும் தமிழகத்துக்குக் கொடுத்தால் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு அவசியம் இருக்காதே.
தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறையைப் போக்க பன்னாட்டு நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை தாங்களே மின்நிலையங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு வகுத்துள்ள திட்டத்தின்படி 3,000 மெகாவாட் உற்பத்தித் திறன்கொண்ட 5 அனல்மின் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க முடியும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறைக்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு இலவசமாகவும் பிறகு குறைந்த கட்டணத்திலும் மின்சாரம் வழங்கப்படுவதும்தான் காரணமாகும். பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தமாகவே அனல் மற்றும் காற்று மின்உற்பத்தியைச் செய்துகொள்ள வேண்டும் என வற்புறுத்தப்பட வேண்டும். அரசு உற்பத்தி செய்யும் மின்சாரம் மக்கள் பயன்பாட்டுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
காவிரியில் பெருகிவரும் வெள்ளத்தால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவைத் தடுக்கவும், வளம் பெருக்கவும் கரிகாலன் கல்லணையைக் கட்டினான். ஆனால், மக்களுக்கு அபாயத்தை அளிக்கும் கூடங்குளம் அணு உலைக்காக வாதாடும் நீங்கள் கரிகாலனையும் கல்லணையையும் எடுத்துக்காட்டாகக் காட்டுவது சற்றும் பொருத்தமற்றதாகும்.
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக உங்களைப் பலிகடா ஆக்கியிருக்கிறார்கள். அதை நீங்கள் ஏன் உணரவில்லை என்பதுதான் வியப்பாக இருக்கிறது.
S.Thalapathy,B.E.,

கலைஞர் டிவி சொத்துக்களை முடக்க நடவடிக்கை?






சட்டவிரோத நிதிப்பரிமாற்றத்தின் கீழ் கலைஞர் தொலைக்காட்சியின் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஸேகான் நிறுவனம் மற்றும் சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு எதிராகவும் சொத்துக்களை முடக்கும் உத்தரவை அமலாக்கப் பிரிவு பிறப்பிக்க உள்ளது.

முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாகித் பல்வாவுக்கு சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி மற்றும் இதர 4 நிறுவனங்களின் ரூ 223.55 கோடி சொத்துக்களை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது கலைஞர் டிவி, குஸேகான் மற்றும் சினியுக் பிலிம்ஸ் ஆகிய 3 நிறுவனங்களின் சுமார் 13.5 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tuesday, November 15, 2011

பாக்கியராஜின் அட்டகாசமான பதில்...




பாக்யா பத்திரிகையில் வரும் பாக்கியராஜ் கேள்வி பதில்கள் சுவாரசியமானவை.இந்த வார இதழில் வந்த ஒரு கேள்விக்கான பதிலை நான் மிகவும் ரசித்தேன்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

கேள்வி- பெண்கள் மனதை கடல் ஆழத்துக்கு ஒப்பிடுவது எதனால் ? (பதில் அசைவமாக இருக்க வேண்டும்)

பதில்- பொதுவா சில பெண்கள் மனசுலே இருக்கிறதை கண்டு பிடிக்க முடியாதுன்னு சொன்னா சுவாரஸ்யமாக இருக்காது.அதனால நீங்க கேட்ட அசைவ மேட்டரா சொல்றேன்.

ப்ரியாங்கிற நல்ல அழகிய பெண் கார்த்திக் அப்படிங்கற வாலிபனைக் காதலிச்சா.அவனை மணம் முடிக்க விரும்பி தன் தந்தைகிட்ட அச்செய்தியை தெரிவிச்சா.அவரோ,'நீ அவனை மணக்க இயலாது.கார்த்திக் உனக்கு அண்ணன் முறை! ஆனால், உன் அம்மாவுக்கு இவ்விஷயம் தெரியாது.அவளிடம் இது குறித்து மூச்சு விடாதே' ன்னாரு.

ப்ரியாவும் ஒரு நல்ல மகளா கார்த்திக்கை மறந்துட்டு, ரகுங்கற வாலிபனை மணக்க முடிவு செஞ்சு தந்தையிடம் வந்து கூறினப்ப, அவர் மறுபடியும், 'ஐயோ, நீ ரகுவையும் மணமுடிக்க இயலாது.அவனும் உனக்குச் சகோதரன் முறைதான்.தயவு செய்து இதை உன் அம்மாவிடம் சொல்லிவிடாதே!'ன்னு தடை விதிச்சுட்டாரு.

தன் தாயிடம் போய் ஆலோசனைக் கேட்பதைத் தவிர வெறு மார்க்கம் இல்லன்னு உணர்ந்த ப்ரியா, தாயிடம் போனாள்.மகளின் பிரச்னையை ஏற்கனவே அறிந்திருந்த ப்ரியாவின் தாய், 'என் கண்ணே! கார்த்திக் அல்லது ரகு, இவர்களில் யாரை மணந்தால் நீ மகிழ்ச்சி அடைவாயோ, அவனை மணந்து கொள்ளலாம்! ஏனெனில்,, உன் அப்பா எனக்குத்தான் கணவர்.நான் அறிந்தவரை உன்னுடன் அவருக்கு உறவுமுறை கிடையாது!' ன்னு குண்டைத் தூக்கி போட்டாங்களாம்.

டிஸ்கி - இந்த பதிலில் உள்ள நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள்

Monday, November 14, 2011

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது...




யாகூ இணைய தளம் சர்வ தேச அளவில் பள்ளிப் படிப்பும் முடிக்காமல் வெளியேறிய 14 சாதனையாளர்களை பட்டியலிட்டிருக்கிறது.அவர்களில் சச்சின் மற்றும் ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானியும் உண்டு.

இது அதி முக்கியமான செய்தியாய் இல்லாவிட்டாலும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை சிந்திக்க வைக்கும் செய்தியாக இதை நினைக்கலாம்.

இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை இடையில் கைவிட்டவர்கள்.பள்ளிகளும், கல்லூரிகளும் வெற்றிக்கு என நிர்ணயித்துள்ள மதிப்பெண்களைப் பெற முடியாமல் போனதால் இவர்கள் வாழ்வு என்ன ஸ்தம்பித்துவிட்டதா..?இவர்கள் உத்வேகத்துடன் அவரவர் விரும்பிய துறையில் ஈடுபட்டு வெற்றி கண்டு சாதனையாளர்கள் ஆகவில்லையா?

சச்சின் கல்லூரியில் கால் வைத்ததில்லை.ஆப்பிள் கம்ப்யூட்டர் ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியில் சேர்ந்து பின் அதற்கு முழுக்குப் போட்டுவிட்டு வெளியேறியவர்.தனது பெரிய குடும்பத்தின் பொருளாதார நிலையை முன்னிட்டு 16 வயதிலேயே கிளார்க் வேலைக்கு சென்றுவிட்டவர் ரெலையன்ஸ் நிறுவனத்தின் மறைந்த அதிபர் திருபாய் அம்பானி.ஒரு டிகிரி கூட இல்லாமல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தவர் பில் கேட்ஸ்.கல்லூரியில் இரண்டாம் ஆண்டு முழுக்குப் போட்டுவிட்டு வந்தவர் ஆரக்கிள் நிறுவன இணைய நிறுவனர் லோரி எல்லிசன்.திரைப்படக்கல்லூரியில் படிக்க தகுதி இல்லை என நிராகரிக்கப்பட்டவர் ஜூராசிக் பார்க் படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பர்க்..

பள்ளிப்படிப்புக்கும் சாதனைக்கும் பெரிதாக எந்தத் தொடர்பும் தேவையில்லை.

பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் மதிப்பெண்கள் அங்கே கற்ற கல்வியின் அளவுகோலே தவிர பெற்றுக்கொண்ட மாணவனின் தன்னபிக்கையின் உரைகல் அல்ல.தேர்வில் தோற்ற மாணவர்கள் லாயக்கற்றவர்கள் என்ற ஏளன மனப்போக்கு மாறவேண்டும்

தோல்வி அடைந்தால் மனமுடைந்து தற்கொலை அளவிற்கு மாணவர்கள் ஏன் போக வேண்டும்..ஏட்டுப் படிப்பில்லையேல் வேறு எனக்கான துறையில் என்னால் பிரகாசிக்க முடியும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு குழந்தைகளின் உள்ளத்திலும் விதைக்க வைக்க வேண்டியது பெற்றோர் கடமை.அதை விடுத்து மாணவர்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் தன்னம்பிக்கையை கிள்ளி எறியக் கூடாது.

இது சம்பந்தமாக ஆசிரியர்களுக்கும் பங்கு உண்டு.ஆசிரியர்கள் விருப்பு, வெறுப்பு இன்றி அனைத்து மாணவர்களிடமும் பழக வேண்டும்.அவர்கள் உள்ளத்தில் உறுதியை வளர்க்க வேண்டும்.தோல்வியே வெற்றியின் படிக்கற்கள் என உணர்த்த வேண்டும்.

அதைவிடுத்து..ஆசிரியர்களே..பெற்றோரே...குழந்தைகளின் மீது உங்கள் கோபத்தைச் செலுத்தி..அவர்களை கோழைகளாக ஆக்கிவிடாதீர்கள்.அவர்களிடம் என்ன திறமை உள்ளது என அறிந்து அவர்களை அதில் ஈடுபடுத்துங்கள்.    

Sunday, November 13, 2011

2ஜி விசாரிக்கும் நீதிபதி...




2ஜி வழக்கை விசாரித்துவரும் நீதிபதி ஓம் பிரகாஷ் சைனி அவ்வளவாக பேசமாட்டாராம்.இவரது பேனாதான் பேசுமாம்.

57 வயதாகும் இவர் முதலில் காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராய் இருந்தாராம்.தில்லி போலீசின் 1981 பேட்சைச் சேர்ந்த 100 எஸ்,ஐ,.களில் இவர் மட்டுமே சட்டத்தின் மீது தீவிர நாட்டம் கொண்டிருந்தாராம்.'இந்தியத் தண்டனைச் சட்டம் குறித்து எங்கள் எல்லோருக்கும் நடைமுறை ஞானம் அவசியம்.ஆனால் சைனி மட்டுமே சட்டத்தைப் படித்தார்' என்கிறார் இவர் நண்பர் ஒருவர்.ஹரியானாவைச் சேர்ந்த சைனி பின் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தேர்வு எழுதி தேர்வானார்.

2ஜி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டபோது அந்தப்பணிக்கு மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சைனி.

இதற்கு முன் காமென்வெல்த்  விளையாட்டு ஊழல் வழக்கை இவர்தான் விசாரித்தார்.எல்லோரையும் கம்பி எண்ண வைத்தார்.

2ஜிக்கு முன் சைனி தீர்ப்பளித்த வழக்கு..செங்கோட்டையில் துப்பாக்கி சூடு பற்றிய வழக்கு.அந்த வழக்கில் முகம்மது ஆரிஃபிற்கு தூக்குத் தண்டனையும் வேறு ஆறு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கினார்.

இதில் தீர்க்கமான முடிவுடன் இவர் செயல்பட்டார்.

ஆரிஃபிற்கு இவர் அளித்த மரணதண்டனை..பின்னர்  தில்லி உயர்நீதி மன்றம் மற்றும் உச்ச நீதி மன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இவர் அதை கண்டு கொள்வதில்லை.

'கனிமொழி விவகார்த்தில் அவரது வழக்கறிஞர்களின் வாதத்தை இவர் அனுதாபத்தோடு செவிமடுப்பது போலத் தோன்றினாலும்..அது பொய்த்தோற்றமே' என்கிறாராம் ஒரு வழக்கறிஞர்.


Friday, November 11, 2011

கூடங்குளம் மின்சாரம் இலங்கைக்கா..




சென்னையில் நேற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய வைகோ

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கலாமை மறைமுகமாக விமரிசித்தார்.

கூடங்குளம் பற்றி பக்கம் பக்கமாய் அறிக்கை வெளியிடும் சில பெரியவர்கள் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் கேரளாவையும்,தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கையையும் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை என்றுள்ளார்.

இதற்காக கரிகாலன் கட்டிய கல்லணை பாதுகாப்பாகத்தானே இருக்கிறது என்றெல்லாம் பேசி வருகிறார்கள். இப்படி அணு மின் நிலையத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பெரிய மனிதர்கள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தை கண்டிப்பதில்லை. தமிழகத்துக்காக குரல் கொடுப்பதில்லை. இலங்கை கடற்படையினரால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்தும் அந்த பெரியவர்கள் கருத்து தெரிவிப்பதில்லை

தமிழகத்தை அனைத்து நிலைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து மின்சாரம் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. இந்தத் தகவலை நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு அறிவித்துள்ளது என்றார் வைகோ.

Thursday, November 10, 2011

டி ஐ ஜி ஒரு மெண்டலா..!!!???




அரசாளும் கட்சிகளிடம் பணிபுரியும் அதிகாரிகள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காது.

இதற்கான ஒரு உதாரணம்..

உத்தரபிரதேசத்தில் ஒரு ஐ பி எஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதியைப் பாருங்கள்.இவர் மாநில தீயணைப்பு படையின் தலைவராக இருந்தவர் டி.டி.மிஸ்ரா இப்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.மிஸ்ராவை சந்திக்க மஃப்டியில் வெளியே நிற்கும் போலீசார் யாரையும் அனுமதிப்பதில்லை.

காரணம்....

தீயணைப்புத் துறைக்கு சாதனங்கள் வாங்க அனுமதி கோரும்  ஃபைல் ஒன்று சென்ற வாரம் மிஸ்ராவின் ஒப்புதல் கையெழுத்துக்கு வந்தது.படித்துப் பார்த்தவர்,'இந்தத் துறையில் எல்லாமே ஊழல்.கருவிகள் தரமாக இல்லை.அநியாய விலைக்கு வாங்கப்படுகிறது.தாறுமாறாக லஞ்சம் புரள்கிறது' என எழுதினார்.

மேலதிகாரிக்கு தகவல் போனதும் குறிப்பை திருத்தி எழுத உத்தரவு வந்தது.மறுத்துவிட்ட மிஸ்ரா,'என் இருபது வருட சர்வீஸில் இந்த மாதிரி ஊழல் அரசை நான் பார்த்ததில்லை.எங்கு திரும்பினாலும் லஞ்சம்.தவறை சுட்டிக்காட்டினால் உயிருக்கு ஆபத்து' என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

செய்தியாளர்கள் சென்றதும், அரைமணி நேரத்தில். போலீஸ்காரர்கள் வந்து அவரை கட்டயப்படுத்தி அழைத்துச் சென்று மனநல மருத்துவ மனையில் சேர்த்துவிட்டனர்.

'மிஸ்ராவிற்கு மனநலம் பாதித்துள்ளது, ஆகவே கண்டபடி உளறுகிறார்.அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுகிரது' என மாயாவதி அரசு அறிவித்தது.

தவிர்த்து, 'அவர் மன நலம் பாதிக்கப்பட்டவர் தான்' என குடும்பத்தினரிடம் எழுதி வாங்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்தது அரசு.

எந்த மாநிலமானால்..என்ன..ஆளும் கட்சிக்கு சாத்கமாக அதிகாரிகள் செயல் பட்டால்..ஓகே..இல்லவிட்டால் மிஸ்ரா கதிதான்.

ஆனால் அதே சமயம் சாதகமாக செயல்படும் அதிகாரிகள்..மாநிலத்தில் அரசு மாறினால்..அவஸ்தை பட நேரிடும்..

இந்தியாவில் அரசு அதிகாரிகளாய் இருப்பவர்கள் ..ஐயோ பாவம்..என்ற நிலைதான்.

எதிர்காலத்தில் ஜனநாயகம் என்னவாகுமோ என கவலைப்படுபவர்கள் இதைப் பற்றியும் கவலைப்பட்டால் நல்லது.

Wednesday, November 9, 2011

சாதியும் - பே பால் நிறுவனமும்




 சென்னை யில் உள்ள அமெரிக்க நிறுவனமான பே பால் தனது நிறுவன ஊழியர்களுக்காக டும் டும் டும் என்ற ஆண்டு விழா நிகழ்ச்சியை அறிவித்தது.இந் நிகழ்ச்சியின் கரு 'இந்திய பாரம்பரிய திருமணம்'

இதற்காக இந் நிறுவன ஊழியர்கள் ஆறு அணிகளாக பிரித்தனர்.

அவற்ரில் மூன்றின் பெயர் தமிழ் நாட்டின் ஐயர்கள்,குஜராத் பட்டேல்கள், வங்காள பானர்ஜிகள்.

அதாவது அந்தந்த மாநில உயர் சாதியின் பெயரால் இந்தக் கொண்டாட்டங்களை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

ஏற்கெனவே சாதி வெறி தலைவிரித்தாடும் தமிழகத்தில், இந்த பன்னாட்டு நிறுவனத்தின் இந்த செய்கையை, சேவ் தமிழ்ஸ் என்ற அமைப்பு வன்மையாகக் கண்டித்ததோடு, உடனடியாக இந்தப் பெயர்களை நீக்க வேண்டும், பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியது. மேலும், சம்பந்தப் பட்ட நிறுவன வாயிலில் தங்கள் எதிர்ப்பைக் காட்டும் வகையில்  இந்த அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து பேச்சு நடத்தினர். இதைத் தொடர்ந்து தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, பகிரங்க மன்னிப்பு கோரியது பேபால் நிறுவனம்.

அலுவலக விழாவில் சாதிப் பெயரை பயன்படுத்தப் போவதில்லை என்றும், இதற்காக ஊழியர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக அதிகாரபூர்வமாக கடிதம் ஒன்றை காவல் துறையினர் முன்னிலையில் சேவ் தமிழ் இயக்கத்தினரிடம் ஒப்படைத்தனர்.

இதைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த சாதிப் பெயர் தாங்கிய விளம்பர தட்டிகளையும் அகற்றிவிட்டனர்.


 

Tuesday, November 8, 2011

நடுவீதியில் நிற்கவைத்து மன்மோகன்சிங்கை விசாரிப்போம்!



கொஞ்சங்கூட  இரக்கமற்ற  இப்படியொரு பிரதமரை இதுவரை  தேசம் கண்டிருக்காது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை ஒருபுறம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அடித்தட்டு மக்களுக்குத் தங்கள்  அன்றாட வாழ்க்கையே சுமையாக, மூச்சுத் திணறுகிறார்கள்.  எரிகிற தீயில் எண்ணெயாக மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு இருக்கிறது. கடும் எதிர்ப்புகள் பலதரப்பில்லும் இருந்து எழுந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் மன்மோகனோ, “எரிபொருட்களுக்கு இனியும் மானியம் கொடுக்க முடியாது ” என்று முகத்தில் அறைகிற மாதிரி பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் இருந்துகொண்டு இந்திய மக்களுக்கு பதில் சொல்கிறார். அதோடு நிறுத்தவில்லை. இனி டீசல், கேஸ், மண்ணென்ணெய் போன்ற எரிபொருட்களின் விலைகளும் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்காது, அவற்றையும் கைவிடத் திட்டமிட்டு இருப்பதாக அறிவிக்கிறார்.
சென்ற ஜூன் 2010ல் பெட்ரோல் விலை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைவிடப்பட்டு, சந்தைக்கு  திறந்துவிடப்பட்டது. அதன் பின்புதான் 13 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 15 மாத காலத்தில் 23 ருபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.200/- ஆக உயர்ந்துவிடும் என்கிறார்கள். கேட்டால், சர்வதேசச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வு என்றும், ஆயில் கம்பெனிகளுக்கு தொடர்ந்து நஷ்டம் எனவும் கதையளந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆயில் கம்பெனிகளின் நஷ்டத்தைச் சரிகட்ட விலைகள் அவ்வப்போது உயர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.   மக்களின் பணத்தை தாங்களாகவே எடுத்துக்கொள்ள முதலாளிகளுக்கு உரிமம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுதான்  ‘சந்தைக்குத் திறந்துவிடுவதன்’ சூத்திரம்.  மக்களிடமிருந்து ஆயில் கம்பெனிகள்    தங்கள் ‘நட்டத்தை சரிகட்ட ’ இப்படிக் கொள்ளை அடிக்கலாமாம். ஆனால் எதிர்காலமே  இடிந்துபோயிருக்கும் மக்களுக்கு அரசு மானியம் கொடுக்கக் கூடாதாம்.  இதுதான் ‘பொருளாதார சீர்திருத்தங்களின்’ சூட்சுமம்.  ஆனால்  இந்த ஆயில் கம்பெனிகள் ஒவ்வொரு வருடமும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.
மன்மோகன்சிங் திட்டமிட்டபடி டீசல், மண்ணெண்ணெய், கேஸ் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை சந்தைக்கே விட்டால் என்னவாகும் என்பதை கற்பனை செய்யவே பயங்கரமானதாய் இருக்கிறது. அரசின் இந்த முடிவை நியாயப்படுத்திப் பேசும்போது, மன்மோகன்சிங் கொட்டிய வார்த்தைகள் கொழுப்பெடுத்தவை. “நமது வாய்ப்புகளுக்கு மேல் வாழ்வதற்கு ஆசைப்படக் கூடாது. பணம் ஒன்றும் மரத்தில் காய்க்கவில்லை.” என்று சொல்ல எத்தனை நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும்? மக்கள் வாழ்வதற்கான வாய்ப்புகளையெல்லாம் ஒவ்வொன்றாக பறித்துவிட்டு, அவர்களை ஓட்டாண்டிகளாக்கிவிட்டு, ‘இனி நீங்கள் செத்துத் தொலையுங்கள்” என்றுதானே அவர் சொல்கிறார்?
சாமானிய மக்களுக்கு  அவர்கள் உழைப்பதற்கான குறைந்தபட்ச ஊதியமே கிடைக்காதபோது, பணம் எப்படி அவர்களுக்கு மரத்தில் காய்க்கும்.  உடலும் உள்ளமும்தான் காய்த்துப் போகிறது. ஆனால் முதலாளிகளுக்கு இந்த தேசத்தின் தூண், துரும்பு அனைத்திலும் பணம்  காய்த்துக்கொண்டே  இருக்கிறது. அப்படிக் காய்த்தவைதான்  சுவீஸ் வங்கிகளில் கோடி கோடியாய் கொட்டி வைக்கப்படுகிறது. மேலும் மேலும் என வெறிகொண்டு  காடு, மலை, கடல் என எல்லாவற்றையும் சுருட்டப்பார்க்கிறது. எம். பிக்களை விலைக்கு வாங்க முடிகிறது. ஹெலிகாப்டர்கள் வந்திறங்கும் மாடிகளோடு நூறு கோடியில், இருநூறு கோடியில்  ஆடம்பர பங்களாக்கள் கட்டப்படுகின்றன. சுரண்டியேப் பெருத்த அவர்களுக்கு சிறு சிராய்ப்பு ஏற்பட்டாலும்  துடிப்பவைதான் மன்மோகன் வகையறாக்களின் சதையும் இரத்தமும்.
நேரடியாக மக்களிடமிருந்து வராமல் உலகவங்கியிலிருந்து புறவாசல் வழியாக பிரதமராகி உட்கார்ந்துகொண்டு இப்படியான வசனங்களை பேசிக்கொண்டு இருக்கிறார் மன்மோகன்சிங். சந்தைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அல்லும் பகலும் யோசிப்பவருக்கு, அதற்காகவே உயிர் வாழ்பவருக்கு  இந்த தேசம் சுதந்திரமாக இருக்க வேண்டும், இந்த தேசத்தின் அனைத்து மக்களும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்?
இந்த ஏகாதிபத்திய எடுபிடி நடத்தும் ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து  நடுவீதியில் நிற்க வைத்து  மன்மோகன் வகையறாக்களுக்கு ஒருநாள்  தீர்ப்பெழுதுவார்கள் மக்கள். அதுவரை லோக்பால் மசோதாவில் பிரதமரை விசாரிக்கலாமா, வேண்டாமா என அவர்கள் பேசிக்கொண்டு இருக்கட்டும்.
S.Thalapathy,B.E.,

280,NORTH MASI STREET,
MADURAI - 625 001. 
PHONES : 0452 - 2621 767,
Mobile : 98430 - 50198

(நன்றி மாதவராஜ்)

Monday, November 7, 2011

அழகிரி எங்கே இருக்கிறார்....-விஜய்காந்த்





பக்ரீத் பண்டிகைக்காக குர்பானி வழங்கும் நிகழ்ச்சி தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.அப்போது விஜய்காந்த் பேசுகையில்..மழை காரணமாக சென்னை நகர் முழுதும் கொசுத்தொல்லை அதகரித்து விட்டது.ஆனால் மாநகராட்சி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

அவர் மேலும் பேசுகையில்..

பால்,பெட்ரோல்,காய்கறி விலை உயர்ந்துள்ளது.இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறார்.எத்தனையோ பிரச்னைகள் இருக்கையில் நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன?

கருணாநிதியை விரட்டவே கூட்டணியில் சேர்ந்தோம்.நாங்கள் எதிர்க்கட்சியாய் இருக்க விரும்புகிறோம்..எதிரிக்கட்சியாய் அல்ல.

நான் சட்டசபைக்கு வரவில்லை என்று கேட்பவர்..கடந்த ஆட்சியில் சட்டப்பேரவைக்குப் போனாரா?

தமிழக மீனவர் பிரச்னையில் கருணாநிதி செய்தது போல இவரும் கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார்..

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி அரசு கண்டு கொள்ளவில்லை.தமிழகத்திலிருந்து கிடைக்கும் அந்நிய செலவாணி தொகையை தமிழகத்திற்கே மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும்.

இன்றைக்கு உரம் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.அந்த துறையின் அமைச்சர் மு.க.அழகிரி எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.உரத்தின் விலையைக் குறைக்க அவர் என்ன செய்யப் போகிறார்..  - என்றுள்ளார்.


சன் டீவிக்கு இரண்டாம் இடம்...





சன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது.

தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. நிகழ்ச்சிகளை வழங்கும் விதம், துல்லியம், மக்கள் மனதைப் படித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வழங்குவது, அனைவரிடமிருந்தும் தனித்துவத்துடன் தனித்து நிற்பது என பல பிளஸ் பாயிண்டுகள் இதற்குக் காரணம்.

ஆனால் முதல் முறையாக சன் நியூஸ் சானல் 2வது இடத்திற்குப் போயுள்ளது. அதுவும் நேற்று புதிதாக பிறந்த புதிய தலைமுறை சானல், சன் நியூஸ் சானலை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புதிய தலைமுறை தரப்பில் கூறுகையில், தொலைக்காட்சி பார்வையாளர்களை கணக்கிடும் ஏசி நீல்சன் நிறுவனத்தின் TAM கணக்கீட்டின்படி, தமிழகத்தில் கடந்த 8 வாரங்களாக முன்னேறி, சென்ற வாரம் ஜிஆர்பி எனப்படும் மொத்த மதிப்பீட்டுப் புள்ளிகளில் 35.94 என்ற அளவை புதிய தலைமுறை எட்டி, முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் நியூஸ் சானலுக்கு 31.24 புள்ளிகள் கிடைத்துள்ளனவாம். ஜெயா பிளஸ் 3வது இடத்திலும், கலைஞர் செய்திகள் 4வது இடத்திலும், ராஜ் நியூஸ் 5வது இடத்திலும், என்டிடிவி ஹி்ண்டு 6வது இடத்திலும் உள்ளன.

தகவல் தட்ஸ்தமிழ்

Sunday, November 6, 2011

தினமலர் என்னும் அழகு மங்கை..




தினமலர் பத்திரிகையில் உடன்பிறப்பு என்ற பெயரில் ஒரு கட்டுரை இரு தினங்களுக்கு முன் எழுதப்பட்டிருந்தது.

அது குறித்து கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

'பாகுமொழி பேசுவது கண்டு,கேட்டு என் உடன்பிறப்புகள் யாரும் ஏமாறமாட்டார்கள்.எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.

அந்தக் கட்டுரையின் உள்நோக்கத்தை உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள்.ஏனெனில் அந்தப் பத்திரிகை நம்மைக் கொஞ்சி மகிழ்வது பூதகி, கண்ணனைக் கொஞ்சி மகிழ்வது போல நடித்து அவனைக் கொல்லவே துணிந்தாள் என்று பாரதத்தில் ஒரு கிளைக்கதை உண்டு, அந்தக் கிளைக்கதையின் தலையாய கதாபாத்திரமான பூதகியின் பாத்திரத்தைத்தான் அந்த நாளேடு தாங்கிக்கொண்டு புறப்பட்டிருக்கிறது என்றால் அதில் துளியளவும் தவறில்லை.

அழகிய மங்கை உருவில் வந்து தாய்ப்பாசம் காட்டுவது போல நடித்து, கண்ணனை பாலருந்தச் சொல்லி அவனை கொன்றுவிட முயன்ற பாதகியாம் பூதகிக்கும், இன்று பசப்பு மொழி பேசி நம்மிடையே கசப்புணர்வை வளர்த்து, கழகத்தை வீழ்த்திட பகற்கனவு காணும் படுபாவிகள் சிலருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.அந்தப் படுபாவி பத்திரிகை வடிவத்திலேயே நம்மிடையே வருவர்,அந்த விஷ நாகங்களில் ஒன்று பச்சைப் பாம்பு வடிவெடுத்து, பச்சை வண்ண பசுங்கிளையில் தன்னை மறைத்துக் கொண்டு, பாகுமொழி பேசுவதுக் கண்டு..கேட்டு..உடன்பிறப்புகள் யாரும் ஏமாற மாட்டார்கள்.எச்சரிக்கையாகவே இருப்பார்கள்..'என்று கூறியுள்ளார்.