Wednesday, May 17, 2017

தமிழ் இலக்கியம் - இன்னா நாற்பது



உள்ளே புகுமுன்...

தமிழில், தமிழையும், புலவர்களின் பாடல்களையும் சுவைக்க பல நூல்கள் உள்ளன.அவற்றில், என்னால் முடிந்தவற்றை அனைவரும் ரசிக்கும் வகையில், ருசிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இத்தொடர்

இதில் நான் பதியும் பாடல்களை படியுங்கள், ரசியுங்கள்...

முதலில்  "இன்னா நாற்பது:

நாற்பது என்னும் எண் தொகையில் குறிக்கப் பெறும் நூல்கள் நான்கு.. அவை...

கார் நாற்பது,களவழி நாற்பது,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை.இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும், இன்பம் தரும் செயல்களையும் உரைக்கின்றன.

இன்னா நாற்பதில், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, அவை இன்னா எனக் கூறுதலால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

இந்நூல் ஆசிரியர் கபில தேவர்

கடவுள் வாழ்த்தில், சிவபெருமான், பலராமன்,திருமால், முருகன் என அனைத்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளது சிறப்பு..

இனி கடவுள் வாழ்த்து...

கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.



முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

இனி அடுத்த பாடல்கள் அடுத்த பதிவில்.

No comments: