
ஒரு செல்லுலர் கம்பெனியின் விளம்பரத்தை டி.வி.யில். பார்த்தேன்..எல்லாமே ஆன் லைனில் போனால்..மரங்கள் பிழைக்கும் என்பது போன்ற கருத்தை கொண்ட விளம்பரம் அது..
இது எந்த அளவு சாத்தியம் ..என்னும் சந்தேகம் என்னுள் இருந்து வந்தது..ஆனால் அது உண்மையே என்று உணர வைத்தது ஒரு செய்தி..
ஒரு டன் காகிதம் உற்பத்தி செய்ய 20 முதல் 24 மரங்கள் வரை வெட்டப்பட வேண்டிய சூழ்நிலை இருப்பதாக மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
CAT எனப்படும் காமன் அட்மிசன் டெஸ்ட் இந்த ஆண்டு ஆன்லைனில் நடத்தப் பட்டது.இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் மற்றும் இதர முன்னணி மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) படிப்பதற்கான தேர்வு இது.இதற்கான தேர்வு சமீபத்தில் ஆன்லைனில் நடத்தப் பட்டது.2.2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்..இதற்கான விண்ணப்பங்கள்,வினாத்தாள்,விடைத்தாள் ஆகியவற்றுக்காக 50 டன் காகிதங்கள் தேவை.
இந்த ஆண்டு ஆன்லைனில் தேர்வு நடந்ததால் கிட்டத்தட்ட ஆயிரம் மரங்கள் வெட்டப்படுவது தடுக்கப்பட்டுள்ளதாக ஐஐஎம் - ஐ சேர்ந்த தேர்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவு.
இம்முறையையே மற்ற தேர்வுகளிலும் நடைமுறைப் படுத்தினால் ஏராளமான மரங்கள் வெட்டப் படுவதைத் தடுக்க முடியும்.ஒரு மரம் வெட்டினால் ஐந்து மரங்கள் நடுங்கள் என்ற வறட்டு அறிக்கைகளும் குறையும்.
ஆனால்..ஆன்லைன் தேர்வு நடக்கையில் கணினி குளறுபடிகள் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்ளவேண்டும்.