Showing posts with label _ TVR. Show all posts
Showing posts with label _ TVR. Show all posts

Thursday, April 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 54

கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே


பதவுரை-

உண்- கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற

ஆ - பசு இனங்கள் (வாழ்கின்ற)

முலை - முல்லை நிலத்திற்கு

உ - தலைவனாகிய திருமாலின்

மை - கருமை நிறத்தையும்

மைந்து  - வலிமையும்

ஆசு - உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)

அரண் - கோட்டையாக உள்ள

அம்பர் - கடலில் ஒளிர்ந்திருக்கின்ற அசுரர்களின்

உயிர் - ஜீவனை

சேர் - மாய்த்து

உள்= தேவர்களின் உள்லத்தில் இருந்த

நாம் - அச்சத்தை

உளையும்- போக்கி அழித்த

ஐ- தெய்வமே


மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்

சர் - உழணத்தை உடைய அக்னி தேவன்

அண் - சேர்ந்திருக்கும்

நம் - நம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய

அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்

உண் - மிகுதியாகப்

ஆம் - பெருகும்

முலையும் - கற்புடமைக்கும்

ஐ- அழகிய

மை - அஞ்சனம் தீட்டிய

தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்

சர - விழிகளின்

நந்தனமும் - கிருபைக்கும்

ஒப்பில்- ஒப்புவமை இல்லாத

உண்ணாமலை உமை - உண்ணாமுலை என் கிற பெயர் கொண்ட பார்வதியின்

மைந்தா - குமரனே

சரண்..சரண்..உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்



பொழிப்புரை -

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொரூபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் ,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதிதேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்


Monday, April 16, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன் நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்

களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்"கயல் மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு தருகின்றது