Tuesday, October 11, 2011

பிரதமருக்கு 'ஜெ' எழுதிய காட்டமான கடிதம்



இலங்கை கடற்படையினராலும்,விஷமிகளாலும் தமிழக மீனவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் சம்பவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

பாக் ஜலசந்தியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் போதெல்லாம் தொடர்ந்து தாக்கப் படுகின்றனர்.
இது தமிழக அரசுக்குப் பெரும் கவலை அளிப்பதாக உள்ளது.

பாக் ஜலசந்தியில் காலம் காலமாக தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இதுதான் அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது என்பது தாங்கள் அறிந்திருக்க முடியும். தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்புக்கு தமிழக அரசு உயர்ந்தபட்ச முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2011ம் ஆண்டு மே மாதம் எனது தலைமையிலான அரசு அமைந்த பின்னர் 16 முறை தமிழக மீனவர்களை இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர் என்பதை மிகுந்த வருத்தத்துடன் உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

7.6.2011 அன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டனர். பின்னர் எனது அரசு உரிய நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து 17.6.2011 அன்றுதான இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மீண்டும் 20.6.2011 அன்று 5 படகுகளில் சென்ற 23 மீனவர்களை இலங்கைப் படையினர் பிடித்துச் சென்றனர். மீண்டும், இதுகுறித்து உங்களது கவனத்திற்கு நான் கொண்டு வந்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இப்படி தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை பிடித்துச் செல்வதும், துன்புறுத்துவதும், சித்திரவதை செய்வதும், தாக்குவதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. இதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

இலங்கைக் கடற்படையினரும் சரி, இலங்கையைச் சேர்ந்த விஷமிகளும் சரி தொடர்ந்து மாறி மாறி இவ்வாறு தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவங்களில் ஒரு மீனவர் படுகாயமும் அடைந்துள்ளார். மீனவர்ளின் பல்வேறு உடமைகளை இலங்கைத் தரப்பினர் சூறையாடியுள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் குறிப்பாக நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்தான் இதுபோல தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைப் படையினரால் அல்லது விஷமிகளால் தாக்கப்படுவோமோ என்ற பயத்தில்தான் இவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் துர்பாக்கிய நிலை நிலவுகிறது.

8.10.2011 அன்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் என்னை சென்னை வந்து சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களையும், சித்திரவதை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் நான் விரிவாக விளக்கிக் கூறினேன். ஒருபக்கம் இந்திய, தலைவர்களுடன் பேசிக் கொண்டே மறுபக்கம் இலங்கைத் தரப்பினர் தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து இலங்கையிடம் கண்டிப்புடன் எடுத்துக் கூறுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

ஆனால், அதே நாளில், அதாவது 8.10.2011 அன்று மாலை ரஞ்சன் மத்தாய் கொழும்பு சென்றடைந்த நிலையில், இலங்கைப் படையினர் தமிழக மீனவர்களை கடலில் விரட்டியடித்துள்ளனர், தாக்கியுள்ளனர். மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்தத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அனைத்து மீடியாக்களிலும் செய்தி வெளியாகியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

தாங்கள் உடனடியாகஇந்த விவகாரத்தில் தீவிரமாக தலையிட்டு இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும், எச்சரிக்கை விடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் தாக்கி வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழக மீனவர்கள் தாங்கள் பாரம்பரியாக மீன் பிடித்து வரும் பாக். ஜலசந்தி பகுதியில் எந்தவித இடையூறும் இல்லாம்ல் மீன் பிடிக்க வகை செய்ய வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதலை நான், பாகிஸ்தான், சீனப்படையினர் இந்தியப் படையினர் மீது நடத்தும் தாக்குதலுக்கு சமமாக பார்க்கிறேன். அதேபோலவே மத்திய அரசும் கருத வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது தேசியப் பிரச்சினை என்பதை இப்போதாவது மத்திய அரசு உணர வேண்டும். இது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, இந்தியா தொடர்பான பிரச்சினை என்பதை தாங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


4 comments:

baleno said...

ஒருபக்கம் இந்திய தலைவர்களுடன் பேசிக் கொண்டே மறுபக்கம் இலங்கைத் தரப்பினர் தமிழக மீனவர்களை தாக்கி வருவது குறித்து இலங்கையிடம் கண்டிப்புடன் எடுத்துக் கூறுமாறு அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
-பிரதமருக்கு 'ஜெ' எழுதிய காட்டமான கடிதம்

T.V.ராதாகிருஷ்ணன் தயவு செய்து உண்மையின் மறுபக்கத்தின் ஒருபகுதியையும் பாருங்கள்.நன்றி.

www.bbc.co.uk/tamil/india/2011/10/111009_fishermenattacked.shtml

www.virakesari.lk/news/head_view.asp?key_c=33612

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாணயத்தின் மறு பக்கமும் கண்டேன்.இவற்ரில் எது நாணயம் என கண்டறிந்து சம்பந்தப்பட்ட அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிப்பட்ட மனிதர்கள் சட்டத்தை கையில் எடுப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
தங்கள் வருகைக்கு நன்றி

aotspr said...

"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்பது தேசியப் பிரச்சினை என்பதை இப்போதாவது மத்திய அரசு உணர வேண்டும். இது தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, இந்தியா தொடர்பான பிரச்சினை என்பதை தாங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா."

இனியாவது மீனவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படுமா.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்