Tuesday, February 14, 2012

ராசாவை சந்தித்த முன்னாள் மந்திரிகள்





திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை திஹார்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவை
நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியும், வேலுவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராசாவை கிட்டத்தட்ட திமுக கைவிட்டு்
விட்டதாகவே கூறப்படுகிறது. காரணம், அவரை முக்கியத் தலைவர்கள் யாரும் கடந்த பல மாதங்களாக போய்ப் பார்க்கவில்லை.
தனது மகள் கருணாநிதி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் மட்டுமே கட்சித் தலைவர் கருணாநிதி சில முறை திஹார் சிறைக்கு வந்து போனார்.

இந்த வழக்கில் ராசா மட்டுமே இதுவரை ஜாமீன் கோராமல் இருக்கிறார். இதற்கான காரணம் என்ன என்று சரியாகத் தெரியவில்லை.
வெளியில் வந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால்தான் ராசா ஜாமீனில் வெளியே வர மறுத்து வருவதாக ஒரு தரப்பு கூறுகிறது.
 திமுக தலைமையுடன் அவர் மனஸ்தாபததில் இருப்பதாகவும் ஒரு கருத்து உள்ளது.

இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சர்கள் பொன்முடி,எ.வ.வேலு ஆகிய இருவரும் நேற்று திடீரென டெல்லி வந்தனர்.
 பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு சிபிஐ கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு ஆஜராவதற்காக வந்திருந்த ராசாவை இருவரும் சந்தித்துப் பேசினர்.

திமுக தலைமை எடுத்துள்ள சில முக்கிய முடிவுகளை அவர்கள் ராசாவிடம் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பதவி உயர்வும், கனிமொழிக்கு முக்கியப் பதவியையும் கொடுக்க திமுக தலைமை முடிவு
செய்திருப்பதாக பேச்சு இருந்து வருகிறது. கனிமொழிக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவியைத் தருவது என்ற முடிவில்
திமுக தலைமை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அந்தப் பதவியை வகித்து வருபவர் ராசா.

கனிமொழிக்கு இந்தப் பதவியைத் தருவதற்கு வசதியாக, ராசா அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திமுக தலைமை விரும்புவதாக தெரிகிறது.
 இதுதொடர்பாகவே ராசாவை, பொன்முடியும், வேலுவும் நேரில் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது.

(தகவல் தட்ஸ்தமிழ்)


No comments: