Saturday, March 23, 2013

ஆனந்தவிகடனும்...ஓவியங்களும்...

                 
                         (சாவியின் 'வாஷ்ங்டனில் திருமணம்' தொடருக்கு கோபுலுவின் ஓவியம்)

வார, மாத இதழ்களில்..பல கதைகளைப் படிக்கும் முன் , அக்கதைகளுக்கு வரையப்பட்ட ஒவியங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்தால், உடனடியாக வாசித்துவிடும் இயல்புடையவன் நான்.அப்படி தத்ரூபமாக வரையும் ஒவியத்தையும், ஓவியர்களையும் என்னைப்போல ரசிப்பவர்கள் பலர் இருக்கக் கூடும்.

நான் சிறுவனாக இருக்கையில், .வரையப்பட்ட ஓவியத்தில் இருந்த ஓவியர் பெயரை மறைத்துக் கொண்டு, அந்த ஓவியத்தை வரைந்தவர் யார் எனக் கேட்டால் சரியாக சொல்லிவிடுவேன்.

அப்படி மனம் கவர்ந்த ஓவியர்களில், கோபுலு ஒருவர்.தில்லானா மோகனாம்பாளுக்கு இவர் வரைந்த மோகனாவும், ஷண்முக சுந்தரமும் இன்னமும் கண்களில் நிற்கின்றன.ஜெயகாந்தனின் 'பாரீசுக்குப் போ' வில் கோபுலுவின் சித்திரப் பங்கும் பேசப்பட்டது.

அதேபோன்று, பொன்னியின் செல்வனுக்கு, மணியம் வரைந்த ஓவியங்களும், பின்னர் அதேத்தொடர் வந்தபோது மணியன் செல்வன் வரைந்த ஓவியங்களும் மறக்க முடியாதவை.

கல்கியில், நா.பா. கதைகளுக்கும், கி.ராஜேந்திரன் கதைகளுக்கும்..வினு போட்ட ஓவியங்கள் சிறப்பு.வினு வரைந்த அனுமார் ஓவியம் ஒன்று, இன்னமும் பல வீடுகளின் பூஜை அறையை அலங்கரித்துள்ளது.

மாயா, லதா, கல்பனா, சிம்ஹா, என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது, .ஓவியங்களை நினைக்கையில். குமுதத்தில்,வர்ணம் வரைந்த ஓவியங்களில்...யதார்த்தம் இருக்கும்.பின்னர் இதே பத்திரிகையில் சுஜாதா கதைகளுக்கு ஜெயராஜ் ஒவியங்கள் மெருகூட்டின.மாருதி வரைந்த பெண்கள் அழகோ அழகு.

இப்படி..சங்கீதம் மட்டுமல்ல, தொடர்கதைகள் மட்டுமல்ல..ஒவியங்களும் நம்மை மனம் கவர வைத்தவை.

கலைமகளில்..ஜி.கே.மூர்த்தியின் லைன் டிராயிங்க் அருமை.

கல்கண்டில்..தமிழ்வாணன் கதைகளுக்கு..'ராகி' வரைந்த ஓவியங்களில் ''சங்கர்லால்' உண்மையான பாத்திரமாக திகழ்ந்தார்.

இன்றைய பத்திரிகைகளிலும்..பலர் சிறப்பாக அப்பணியை ஆற்றிவருகின்றனர்.ஆனால்...இந்த வார விகடனில்...கண்னைக் கவ
ர்ந்த வகையில்..'தள்ளாடும் தமிழகம்..திண்டாடும் டாஸ்மாக்' கட்டுரைக்கும், ராஜுமுருகனின்'வட்டியும் முதலுக்கும்' ஓவியம் தீட்டியுள்ள ஹாசிப் கானின் ஓவியங்கள் எவ்வளவு தத்ரூபமானவை.புத்தகத்தை மடித்து வைத்தாலும்..இவை..கண்களை விட்டு அகல மறுக்கின்றன.

ஹேட்ஸ் ஆஃப்...ஹாசிப் கான்.

(டிஸ்கி...தெய்வப் படங்களையும், கோவில்களையும், ஓவியம் மூலம் கண்முன் கொணர்ந்த ஓவியர்களை இவ்விடுகையில் ஸேர்க்கவில்லை)

வார இதழ்கள்- ஓவியம்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவியத்தில் எத்தனை நுணுக்கம்...!!!