Tuesday, November 24, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்


பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..
பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக்
கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு
(முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..ஊர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.