Friday, November 27, 2015

கொஞ்சி விளையாடும் தமிழ்



நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

No comments: