Monday, February 26, 2018

நாச்சியார் திருமொழி -3

மத்தநன் னறுமலர் முருக்கமலர்
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கி
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து
வாசகத் தழித்துன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கோவிந்த னென்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கட வாணனென்னும்
விளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே

மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்தமலர்
முருக்கமலர் கொண்டு - (கல்யாண) முருங்கை மலர் கொண்டு
முப்போதும் முன்னாடி வணங்கி(த்)- மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று- உண்மையில்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து- மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை-(நீ  சொன்ன சொல் காப்பாற்றுபவன் எனும் எண்ணத்தை) உனை நெஞ்சிலிருந்து அகற்றி
வைதிடாமே- உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை-மலர்க் கொத்துக் கொண்ட அம்புகள் தொடுத்து
கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி- கோவிந்தன் என அதில் பெயரினை எழுதி
வித்தகன்- பல வித்தைகள் கற்றவன்
வேங்கடவாணன் என்னும்- வேங்கடவன் என்ற பெயர் பெற்ற
விளக்கினில் புக என்னை-(என் வாழ்விற்கு வெளிச்சம் தரும்)விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே- எய்து விடேன்

(தனக்குக் கிடைத்த) ஊமத்த மலர், முருங்கை மலர் கொண்டு மூன்று பொழுதும் அவனது திருவடிகளை வணங்கி தொழுதவனை, பொய்யானவன். சொன்ன சொல் தவறியவன் என திட்டிவிடும் முன்னர் பூங்கணையைத் தொடுத்து வேங்கடவனிடம் என்னைப் புக வைத்துவிடு என் கிறார்

(முதல் இரண்டு பாடல்களில் கெஞ்சும் தோரணையில் சொன்னவர், இதில் சற்றே மிரட்டல் பாணியில் சொன்னது ரசிக்க வைக்கிறது)

No comments: