Thursday, April 9, 2020

விபரீத ஆசை (ஓரு பக்கக் கதை)

ஒவ்வொருவருக்கு..ஒவ்வொரு விபரீத ஆசை இருக்கும்.

அதுபோல சங்கருக்கு ஒரு ஆசை உண்டு..தான் இறந்தால் அது செய்தியாக ஊடகங்களில் வரவேண்டும் என்று.

அவனுக்கு நிரந்தரமாக எந்த வேலையும் இல்லை.திரைப்படங்களில் நடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

இந்நிலையில் ஒருநாள் அவன் என்னிடம் வந்து, "கணேசா...எனக்கு ஒரு படத்துல நடிக்கற சான்ஸ் கிடைச்சு இருக்கு" என்றான்.

நான் உண்மையிலே மகிழ்ந்து ,"யார் படம்?" என்றேன்.

பிரபல கதாநாயகன் ஒருவரின் பெயரைச் சொன்னான்.

நாட்கள் கழிந்தன.

அவன் சொன்ன திரைப்படம் வந்தது.அவனுடன் போய்ப் பார்த்தேன்.அதில் ஒரு காட்சியில், கதாநாயகனுக்குத் திருமணவிழா காட்சி.."பார்..பார்.நான் வருவேன்" என்றான்.

அக்கட்சியும் வந்த்து.நான் பார்த்தேன்..திருமணத்திற்கு வந்தவர்களிடையே இவனும் அமர்ந்திருப்பது போல இருந்தது.

உடன் காமெரா கோணம் மாற, "என்னைப் பார்த்தியா?" என்றான்.

அவன் மனம் நோகக்கூடாது என்பதற்காக "பார்த்தேன்" என்றேன்.

பின் சில மாதங்கள் அவனை நான் பார்க்கவில்லை.

ஒருந்தாள்...தினசரி ஒன்றில் "பிரபல தமிழ் நடிகர் மரணம்" என்ற தலைப்புச் செய்தியைப் பார்த்து பத்திரிகை வாங்கினேன்..

அதில்...

"பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் சங்கர் மரணம் என்றும்.அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்தி போட்டுவிட்டு...இவர் (அந்த பிரபல நடிகர் நடித்த திரைப்படப் பெயரைப் போட்டுவிட்டு) இந்த படத்தில் பிரகாசுடன்  நடித்துள்ளார்" என்று போட்டிருந்தது.

எது எப்படியோ.."நான் இறந்தால் ஊடகங்களில் செய்தியாக வரவேண்டும்" என்ற அவன் ஆசை நிறைவேறியது ஒரு விதத்தில் மகிழ்ச்சியை அளித்தது. 

No comments: