Tuesday, November 10, 2009

கொஞ்சி விளையாடும் தமிழ் - 7

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.

அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர் ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம் படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில் சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.

கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின் வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும் புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார் கவிராயர்.

ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள் சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன் மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து துரத்துகின்றான்.மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம் வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்...

'உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர் கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக் குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர்.இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.' என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?

அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்

இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ - எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

- கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

அடுத்த பதிவில் சீதையின் காதலுணர்வை எப்படிக் காட்டியுள்ளார் எனப் பார்ப்போம்.

6 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். முதன் முறையாக படிக்கின்றேன். நன்றி.

மங்களூர் சிவா said...

அழகான பதிவு.

vasu balaji said...

ராம நாடகம் எனக்கு மிகப் பிடித்தமானது. காலையில் அழகாய்த் தமிழுடன் தொடங்க வைத்தமைக்கு நன்றி ஐயா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி சிவா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்