Wednesday, April 15, 2015

குறுந்தொகை-210



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)



திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

No comments: