Friday, February 11, 2011

இந்த வழக்குக்கு இணையான வழக்கே இல்லை - நீதிபதிகள்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைதான ஸ்வான் இயக்குனர் ஷாகித் உஸ்மான் பல்வா கலைஞர் டி.வியில் ரூ.214 கோடி முதலீடு செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இதை இன்னும் ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்த சிபிஐ உறுதிப்படுத்தவில்லை.


இது குறித்து சிபிஐ கூடுதல் எஸ்பி விவேக் பிரியதர்ஷினி தனது அறிக்கையை நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரிடம் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2009ம் ஆண்டில் பல்வாவுக்குச் சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தில் இருந்து கலைஞர் டி.விக்கு ரூ.214 கோடி பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது.

பல்வாவின் உறவினர்கள் இயக்குநர்களாக உள்ள டி.பி. ரியாலிட்டி குழுமத்தின் துணை நிறுவனங்களிடமிருந்து இந்த நிதி பெறப்பட்டு கலைஞர் டி.விக்கு தரப்பட்டுள்ளது.

இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ரூ.1,537 கோடிக்கு

2ஜி ஸ்பெக்ட்ரத்தை அப்போதைய அமைச்சர் ராசா ஒதுக்கினார். இதில் 45 சதவீதத்தை யுஏஇயைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துக்கு ரூ.4,200 கோடிக்கு ஸ்வான் விற்று லாபம் ஈட்டியது.

இந் நிலையில் ஸ்வானின் உரிமையாளரான டி.பி.ரியாலிட்டி ரூ. 214 கோடியை கலைஞர் டிவிக்கு முதலீடாகத் தந்தது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை 8 சதவீத வட்டிக் கடனாகவே வாங்கியதாகவும், பின்னர் சில பிரச்சனைகள் வந்ததால் அந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறியுள்ளது. இதை ஆவணங்கள் மூலம் உறுதியும்படுத்தியுள்ளது.

ஆனால், இந்தப் பணத்தை முதலில் வேறு வகையில் தந்துவிட்டு பின்னர் ஸ்பெக்ட்ரம் விவகாரம் சூடுபிடித்தவுடன் அதை கடனாக மாற்றிவிட்டதாகக் கூறும் சிபிஐ, தனது இந்தக் கூற்றை நிரூபிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந் நிலையில் ராசா, பல்வா ஆகியோர் தரும் தகவலை வைத்து கலைஞர் டி.வியின் நிர்வாகி சரத் குமாரிடமும் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றுபம் கூறப்படுகிறது. மேலும் ராசாவுக்கு டி.பி. நிறுவனம் தனது ரியல் எஸ்டேட் பங்குகளையும் செல்போன் நிறுவன பங்குகளையும் தந்திருக்கலாம் என்றும் சிபிஐ சந்தேகிக்கிறது. ஆனால், இதை உறுதிப்படுத்த ஆவணங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சிபிஐ தனது அறிக்கையை தாக்கல் செய்த பின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறுகையில், இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை.

இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் 'போர்ப்ஸ்' பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக் காட்டியுள்ளார். ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து

சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறுகையில், இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். ராசா பதவிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன?. தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி? என்றும் கேள்வி எழுப்பினர்.

இந் நிலையில் டி.பி. ரியாலிட்டிஸ் நிறுவன அதிபர் ஷாகித் பால்வாக்கும் தனக்கும் எந்தவித நட்புறவும் இல்லை என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தாருக்கு சொந்தமான நிறுவனத்தில் பால்வாவுக்கு பங்குகள் உள்ளன என்பதையும் சரத்பவார் மறுத்துள்ளார்.


நன்றி தட்ஸ் தமிழ்

7 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

Test

ஒதிகை மு.க.அழகிரிவேல் said...

என்னப்பா எப்ப பார்த்தாலும் 2ஜி 2ஜி -ன்னுகிட்டு 4ஜி அறிமுக படுத்துங்கப்பா

2ஜி மேட்டருல்லாம் அடிபட்டடும்.

goma said...

அடி ஆத்தே !!!!
இப்படியெல்லாமா நடக்கும் !
அநியாயமா இருக்கே!!!!.நான் ..இத்தனை நாளா சனங்க சும்மா கிடந்ததைச் சொன்னேன்.

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா தலை சுற்றுது கிர்ர்ர்ரர்ர்ர்ர்...............

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஒதிகை நிழல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Mano